திருவிடைமருதூர்  மகாலிங்கேசுவரர் கோவில்

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்க தலத்தின் பரிவார தலங்கள்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இறைவியின் திருநாமம் பிரகத் சுந்தரகுஜாம்பிகை.

இத்தலம் மகாலிங்கத் தலம் எனவும் இதனைச் சுற்றியுள்ள ஒன்பது தலங்களை இதன் பரிவாரத் தலங்கள் என்றும் சொல்வர். ஒரு சிவாலயத்தில் மூலவராக விளங்கும் லிங்கம், அவருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் நந்தி, சுற்றுப்பிரகாரத்தில் பிரதட்சணமாகச் சென்றால் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ் கந்தர், சண்டேச்வரர், பைரவர், நடராஜர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. ஐதீகப் பிரகாரம் மூலவரைத் தரிசித்து வணங்கியபின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோஷ்ட தெய்வங்களைத் தரிசித்தால்தான் சிவதரிசனம் பூர்ணமாகப் பூர்த்தியாகும் என்பது நமது பண்டைய மரபு மற்றும் சாஸ்திரமாகும்.

இந்த ஆகம முறைப்படி, ஒரு ஆலயம் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டுமோ அதேபோல் சோழ நாட்டையே ஒரு சிவாலயமாக்கி, அதன் நடுநாயகராகத் திருவிடை மருதூர் உறை மகாலிங்கத்தை மூலவராக்கி இருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் மூலவரான மகாலிங்கத்தை கர்ப்பக்கிரகமாக நோக்கினால், இவ்வாலயத்தின் ஏனைய பரிவார மூர்த்திகள் இருக்க வேண்டிய திசைகளில் உள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திவ்ய ஷேத்ரமாக விளங்குவதைப் பார்க்கலாம். இவை அனைத்துமே ஆகம விதிப்படி எந்தெந்தப் பரிவார மூர்த்திகள் எந்தெந்தத் திசைகளில் இருக்க வேண்டுமோ, அவ்வூரில் உள்ள அந்த ஆலயம் அவ்வாறே விசேஷ தலமாக அமைந்திருக்கிறது. அந்த பரிவாரத் தலங்களும், அத்தலத்து மூர்த்தியும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1 - நந்தி - திருவாவடுதுறை.

2- சோமாஸ்கந்தர் - திருவாரூர்.

3- தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.

4 - விநாயகர் - திருவலஞ்சுழி.

5 - முருகன் - சுவாமிமலை.

6 - சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.

7 - நடராசர் - தில்லை.

8 - பைரவர் - சீர்காழி.

9 - நவக்கிரகம் - சூரியனார் கோயில்.

இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக விளங்குகிறது.

Read More
குத்தாலம் சோழீஸ்வரர் கோவில்

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில்

கையில் அமிர்த கலசத்துடன் காட்சி தரும் பாதாள சனீஸ்வரர்

கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. இறைவன் திருநாமம் சோழீஸ்வரர் . இத்தலத்தில் பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி என்ற திருநாமத்துடன் இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாமிக்கு திராட்சை சாறு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நிச்சயதார்த்தம் செய்த பிறகு, பிரச்னையின்றி திருமணம் நடக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். தீ தொடர்பான பணியில் இருப்பவர்கள் ஆபத்து வராமல் இருக்கவும், உஷ்ணத்தால் நோய் ஏற்பட்டவர்கள் நிவர்த்திக்காகவும் இங்கு வழிபடுகிறார்கள்.

அமிர்த கலச சனீஸ்வரர்

மகரிஷிகள், தேவர்கள் சிவனை வழிபட்ட தலம் இது. இவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, சனீஸ்வரர் அவர்களை கையில் அமிர்த கலசம் ஏந்தி வரவேற்றாராம். இந்த அமைப்பிலேயே காட்சி தருவதால் இவர் அமிர்த கலச சனீஸ்வரர் என்றும், பாதாளத்திலிருந்து சுயம்புவாக தோன்றியதால், பாதாள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.

இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பரிகார தலமென்பதால், இங்கு நவக்கிரக சன்னதி இல்லை.

சனிதோஷ பரிகாரத் தலம்

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட நளமகாராஜன், நிவர்த்திக்காக சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று, சுவாமியை வழிபட்டான். அவன் இத்தலம் வந்தபோது, இங்கிருந்த பாதாள சனீஸ்வரரையும் வணங்கி, தனக்கு அருளும்படி வேண்டினான். சனீஸ்வரர் அவனிடம் திருநள்ளாறு தலத்தில் தோஷ நிவர்த்தியாகும் என்று கூறியருளினார். மகிழ்ந்த நளன், திருநள்ளாறு சென்று தோஷ நிவர்த்தி பெற்றான். சனி தோஷ பரிகார தலமான இங்கு சனிப்பெயர்ச்சியன்று பரிகார மகா யாகம் நடக்கும். சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இவரை வழிபட்டு வரலாம்.

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

சகல தோஷங்களையும் விலக்கும் ஞானபைரவர்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை.

காசி, காளஹஸ்தி, திருக்கைலாயம் போன்ற ஸ்தலங்களுக்கு சமமான தலம்தான் இந்த கீழமங்கலம் சிவாலயம் . சனி பகவானுக்கு குருவாக இருந்து உபதேசித்த ஞானபைரவர் காசியில் உள்ளார். அது போல இத்தலத்திலுள்ள ஞானபைரவர் எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் சிவாகமத்தை கையில் வைத்து சனி பகவானுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் உள்ளார். இங்கு மேற்கு திசையை நோக்கி சனி பகவான், கூப்பிய கைகளுடன் நின்ற கோலத்தில் தனது வலது காதால் தனது குரு, ஞானபைரவர் உபதேசத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த தலத்திற்கு வந்து வணங்கினால் காலத்திற்கும் சனியினால் வரக்கூடிய தீமைகள் வராது. என்றும் நன்மையே விளையும். ஏனெனில் இங்கு சனி பகவான் தனது குருவின் ஆணையை மீறி சிவபக்தர்களை தொந்தரவு செய்யமாட்டார். இத்தலத்தில் நித்திய சிவ அக்கினியுடன், ஜோதியுடன் இருப்பவர் பைரவர் மட்டுமே. அதனால் முதல் தீபம் இவருக்கு ஏற்றிய பிறகுதான் மூலஸ்தான சன்னதி மூர்த்திகளுக்கு தீபம் ஏற்ற வேண்டும். மடப்பள்ளியில் பிரசாதம் செய்வதற்கும் பைரவரிடம் இருந்துதான் அக்கினி எடுத்து செல்லவேண்டும். இந்த ஆலயத்தில் உள்ள ஞான பைரவர் சம கலைச் சந்திரனைச் சூடி இருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும் அனைத்து கிரக தோஷங்களும் இத்தல ஞான பைரவரை வழிபட்டால் விலகும் என்பதால், இத்தலம் எல்லா தோஷத்திற்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.

ஞானபைரவருக்கு ராகு காலம், எமகண்டம், தேய் பிறை அஷ்டமி போன்ற நாட்களிலும் சிறப்பு அபிசேகமும், சிறப்பு அலங்கார தீப ஆராதனையும் வெகு விமரிசையாக நடக்கிறது. அன்று மட்டும் சுமார் ஆயிரம் பக்தர்கள் வந்து, இத்திருக் கோவிலில் அருள் கடாட்சம் கொடுக்கும் ஞான பைரவரை வணங்கி நல்லருள் பெற்றுச் செல்கின்றனர்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

2. இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/t638e9awnfbxrh8k2wyt4ha975ee4w

3. அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்

https://www.alayathuligal.com/blog/yxaj24gw2t24a2hp7wxemwy49y2zs5

Read More
திருக்கள்ளில்  சிவாநந்தீஸ்வரர் கோவில்

திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்

சக்தி தட்சிணாமூர்த்தி

சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில். இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள். இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர். இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.

இக்கோவிலில் சிவபெருமான், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் ஏடு மற்றும், அமுதக் கலசத்தை ஏந்தியபடியும், அம்பாளை அணைத்தபடியும் காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார். பிருகு முனிவர் சிவனையே மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒரு சமயம் சிவனைப் பார்க்க, இவர் கயிலாயம் சென்றபோது, ஈசன் பார்வதியுடன் அமர்ந்திருந்தனர். அருகில் சென்ற பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கி அவரைச் சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதிதேவிக்கு கோபம் உண்டானது. இவர் தன்னையும் சேர்த்து வணங்கவேண்டும் என்று கூறி ஈசனுடன் நெருங்கி அமர்ந்தார். பிருகு முனிவர் வண்டு உருக்கொண்டு, சிவனை மட்டும் சுற்றி வந்தார். அப்போது ஈசன், சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக, தன்னின் இடபாகத்தை சக்திக்கு அளித்தார். இவ்வடிவமே அர்த்தநாரீஸ்வரர் கோல வடிவம். இக்கோலத்தைக் கண்டும் பிருகு முனிவர்க்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. பிருகு முனிவர் பூலோகத்தில் சிவத் தல யாத்திரை மேற்க் கொண்டபோது, கள்ளி வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூசித்த சுவாமியை கள்ளிச்செடியிலுள்ள மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது ஈசன் அவர் முன் தோன்றி, சிவமும் சக்தியும் ஒன்றே! சக்தி இல்லாமல் சிவம் இல்லை. சிவம் இல்லாமல் சக்தியும் இல்லை. என்று உபதேசத்தைக் கூறிவிட்டு, அம்பாளை தன் மடியில் அமரவைத்து சக்தியுடன் இணைந்த தட்சிணாமூர்த்தியாக காட்சி கொடுத்தார்.

இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்து நலன்களையும் அடையலாம். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

Read More
சின்னமனூர்  லட்சுமிநாராயணர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சின்னமனூர் லட்சுமிநாராயணர் கோவில்

வயிற்று வலி தீர்க்கும் பெருமாள் திருமஞ்சனத் துண்டு

தேனியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ள சின்னமனூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது லட்சுமிநாராயணர் கோவில். 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

குருவாயூரப்பன் தோற்றத்தில் பெருமாள்

ஒரு சமயம் சேர மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, 'லட்சுமி நாராயணர்' என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.

கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், கழுத்தில் சாளக்கிராம மாலையும், நான்கு திருக்கரங்களில் சங்கு சக்கரமும், அபய ஹஸ்தத்துடன் தான ஹஸ்தமும் திகழக் காட்சி தருகிறார். பெருமாள், குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், இங்கும் லட்சுமிநாராயணர் கையில் வைத்திருக்கும் சந்தனத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள்.

பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் சிறப்பு

ஒரு சமயம் இக்கோவிலில், ஆஞசநேயருக்கு தனிச் சன்னதி அமைத்து அதில் அவருடைய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய முற்பட்டார்கள். அப்போது ஆஞ்சநேயரைத் தன் அருகிலேயே பிரதிஷ்டை செய்து விடும்படி பெருமாள் ஒரு பக்தரின் மூலம் உத்திரவிட்டாராம். பொதுவாக ராமபிரானுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர், இங்கு பெருமாளுடன் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பாகும்.

வயிற்று வலி தீர பெருமாளுக்கு திருமஞ்சனம்

வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள், தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர். பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், வயிற்று வலி நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள்.

தீராத நோய் மற்றும் அடிக்கடி உடல் வலி வந்து அவதிப்படும் பக்தர்கள் ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாளின் திருப்பாதத்தில் 9 மிளகுகளை வைத்து வழிபட்டுப் பெற்றுக்கொண்டு, அவற்றைத் தினமும் ஒன்று வீதம் சாப்பிட, தீராத நோயும் தீரும்; உடல் வலி அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயம் செழிக்க, தங்கள் வயலில் நெல் விதைக்கும் முன்பாக சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்துச் செல்கிறார்கள்.

Read More
சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவில்

சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவில்

வேற்று மதத்தினரும் செவ்வாய் தோஷம் நீங்க வழிபடும் தேவாரத் தலம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள தேவாரத் தலம் சிறுகுடி. இறைவன் திருநாமம் சூட்சுமபுரீஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை, தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு மங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோவில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது.

தல வரலாறு

ஒருமுறை கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில் பார்வதி பெற்றி பெற்றாள் அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார் கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான காட்சி கொடுத்து அவளை மீண்டும். ஏற்றுக்கொண்டதாக தல புராணம் கூறுகிறது. கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர். அது மருவி தற்போது, 'சிறுகுடி' என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள். மணலால் பிடித்த லிங்கம் என்பதால், அபிஷேகம் செய்வதில்லை. மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது. சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்துகொண்டதால் இத்தழும்புகள் உண்டானது.

செவ்வாய்தோஷ நிவர்த்தி தலம்

செவ்வாய் பகவான் வந்து வணங்கி விமோசனம் பெற்றதால், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு நிவர்த்தி தரும் தலமாக விளங்குகின்றது. பெரும்பாலும் மாங்கல்ய தோஷம், கடன்தொல்லை, பயம், சண்டை சச்சரவு, வாகன விபத்து, ரத்தம் சம்பந்தமான நோய்கள், மாரடைப்பு, தீயினால் ஏற்படும் காயங்கள் அனைத்தையும் நீக்கி, அருள்தரும் மங்களநாதராக சுவாமி இருக்கிறார்.

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து செல்கிறார்கள். மேலும் புதிதாக வீடு கட்டுபவர்களும் தாங்கள் கட்டும் வீடு மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மங்களாம்பிகை ஏற்படுத்திய மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்களநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.

செவ்வாய்தோஷம் உடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவசியம் வந்து வணங்கவேண்டிய கோயில் இது. வேற்று மதத்தினர்கள்கூட இங்கு வந்து செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவதைப் பார்க்கலாம்.

Read More
கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில்

கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில்

சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேஸ்வரர்

தஞ்சையிலிருந்து சாலியமங்கலம் வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில், சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் கோயில் வெண்ணி. இறைவன் திருநாமம் வெண்ணிகரும்பேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. கரிகால் சோழன், பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி வாகை சூடிய இடம் என சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'வெண்ணிப் பரந்தலை' என்ற ஊர் இதுதான்.

கரும்பு கட்டாலான ஈஸ்வரர்

சோழ மன்னன் முசுகுந்த சக்கரவர்த்திதான் தேவேந்திரனிடமிருந்து தியாகராஜ சுவாமியைப் பெற்று வந்து திருவாரூரில் பிரதிஷ்டை செய்தவர். ஒருமுறை திருவாரூரில் இருந்து தஞ்சைக்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் இரு முனிவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். ஒரு முனிவர், 'இந்த இடம் கரும்புக் காடாக இருப்பதால், இதன் தல விருட்சம் கரும்பு' என்றும், மற்றொருவர், 'இல்லையில்லை. இது நந்தியாவட்டம் (வெண்ணி) நிறைந்த இடம். எனவே, நந்தியாவட்டம்தான் தல விருட்சம்' என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர். இவர்களுடைய விவாதத்தைக் கேட்ட மன்னர், 'இந்த இடத்தில் ஆலயமே இல்லையே. இவர்கள் இருவரும் தல விருட்சம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே!' என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென ஓர் அசரீரி ஒலித்தது. 'கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவட்டம்!' என்று இறைவனின் குரல் ஒலித்தது.சிவலிங்கம் கிடைத்த இடத்தில் உடனே கோயில் கட்ட முடிவு செய்தார் உடனடியாக அந்த இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது, லிங்க பாணம் வெளிப்பட்டது. அப்படித் தோண்டும்போது மண்வெட்டியால் விழுந்த வெட்டுத் தழும்புதான் இப்போதும் அவருடைய திருமேனியில் காணப்படுகிறது. சக்கரவர்த்தி. லிங்கம் இருந்த இடத்தில், அடியில் தோண்டத் தோண்ட அந்த பாணம் போய்க்கொண்டே இருந்ததாம். எனவே, சிறிது உயரமாகவே கட்டலாம் என நினைத்து, 20 அடி உயரத்தில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்.

கருவறையில் கரும்பே உருவாய் காட்சி தருகிறார் மூலவர். 'திருமேனி கரும்புக் கட்டுடைத்து' என்று திருமூலர் பாடியுள்ளபடி, கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கேற்றாற்போல், கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர் இந்த மூலவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது. பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, சதுர் அஸ்த்ர (நான்கு மூலைகளை உடைய சதுர) வடிவமுடையது. இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது. மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால், கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால், அபிஷேகம் கூட மூலவரின் திருமேனியை ஒற்றி எடுப்பதுதானாம்.

சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை

சித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார். 'ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்' என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால், இன்றைய விலை வாசியில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம்/சர்க்கரை கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை.

அமெரிக்காவில் மிக பிரபலமான, இதயநோய் நிபுணர் ஒருவர் சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமியைத் தரிசித்து சென்றார். அமெரிக்கா சென்றதும் வழக்கமான சுகர் டெஸ்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு, வழக்கத்துக்கு மாறாகக் குறைந்திருக்கின்றதென்று ரொம்ப ஆச்சர்யப்பட்டார்களாம். சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் கரும்பேஸ்வரரை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை அவர் எடுத்துக் கொள்கிறார் என்பது நம்பிக்கை.

Read More
திருப்பாசூர் வாசீஸ்வரர்  கோவில்

திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில்

11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சபை

திருவள்ளூலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பாசூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட சிறப்பினை உடையது. 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருத்தலம் இரண்டாம் கரிகால்சோழனால் கட்டப்பட்டது. கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் சிலர் ஒரு பெரிய நாகத்தைக் குடத்தில் இட்டு அவனுக்கு அனுப்ப, இங்குள்ள வாசீஸ்வர சுவாமி பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம் இது என்கிறது கோயில் தலபுராணம்.

இந்தக் கோவிலின் கருவறையில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாய் சதுர வடிவ ஆவுடையாரோடு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமான் சந்நிதிக்கு வலப்புறமாக அம்பாள் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் என ஒரே வரிசையில் சிவபெருமான் குடும்ப சமேதராக காட்சி அருள்கிறார்.

பிரச்னைகள் தீர்க்கும் மாலைப் பிரார்த்தனை

இங்கு சிறப்பு அம்சமாக ஒரு சந்நிதியில் 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. இந்த விநாயகர்களுக்குத் தேங்காய் மாலை , வாழைப்பழம், அருகம்புல் மாலை ஆகியன சமர்ப்பித்துப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் எந்தத் துன்பமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ வழி செய்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கல்யாண தடை, குழந்தையின்மை, குடும்பச் சிக்கல்கள் முதலிய பிரச்னைகளுக்கு 11 நெய் தீபம் ஏற்றி 11 தேங்காயை மாலை, 11 வாழைப்பழ மாலை, அருகம்புல் மாலை ஆகியனவற்றை இங்குள்ள விநாயகருக்கு சாத்தி வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது நம்பிக்கை.

வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய சிவபெருமான்

திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.

அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.

அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.

Read More
திருநறையூர் ராமநாத சுவாமி கோவில்

திருநறையூர் ராமநாத சுவாமி கோவில்

சனி பகவான் குடும்ப சமேதராய் காட்சியளிக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருநறையூர் ராமநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தனி.

தசரதர் தனக்கு ஏற்பட்ட நீண்ட கால நோய் தீர, இத்தல இறைவனையும், சனி பகவானையும் வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். இது ராமேஸ்வரம், ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்துக்கு இணையானது என்கிறார்கள்.ராவணனிடம் போரிட இலங்கை செல்லுமுன் ராமன் வணங்கிச் சென்ற கோயில் இது என்றும், தன் தந்தை தசரதர் வழிபட்ட இங்கு, போரில் வெற்றி வீரராகத் திரும்பி வந்த ராமர், தீர்த்தக்குளம் ஒன்றை வெட்டி, அதில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் நீராடி, இங்குள்ள இறைவனை வழிபட்டு ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அதனால் இத்தல ஈசன் ராமநாதசுவாமி ஆனார்.

இந்த ராமநாத சுவாமி கோவில், சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவிலாக கருதப்படுகிறது. மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய் மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார். இவர்களை வணங்கிய நிலையில், காட்சியளிக்கிறார், தசரதர்.சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது. மூலவருக்கு கொடிமரம் இல்லாமல் சனி பகவானுக்கு கொடிமரம், பலிபீடம் மற்றும் காக வாகனம் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட கால நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது. சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனி பகவானின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.

இத்தலத்தில் உள்ள திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில் பற்றிய முந்தைய பதிவு

மகாலட்சுமி மழலையாய் அவதரித்த தேவாரத்தலம்

https://www.alayathuligal.com/blog/mb5tbfg25mz9x8ldjdbnxaewpe5w4l

Read More
காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில்

ஆதிகாமாட்சி அம்மன் கோவில் - அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே, குமரக்கோட்டம் கோவிலையும் ஒட்டினாற்போல், கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு ஆதிபரமேசுவரி, ஆதிகாளிகாம்பாள் என்ற திருநாமங்கள் உண்டு.

தேவர்களுக்கு தொல்லை தந்த அசுரர்களை காளியாக உருவெடுத்து வதம் செய்தாள் அன்னை. அதனால் இத்தலம் காளி கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக அம்பிகையின் சன்னதி முகப்பில் துவாரபாலகியர்தான் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் முன் மண்டபத்தில் துவார பாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவாரபாலகியரும் இருக்கின்றனர்.

கருவறையில் ஆதிகாமாட்சி தென் திசை நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறாள். அவளுடைய நான்கு கரங்களில், மேற் கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தியிருக்கிறாள். வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் கபாலமும் ஏந்தி காட்சி தருகிறாள். காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை இருக்கிறது.

ஆதிகாமாட்சி சன்னதியின் முன் மண்டபத்தில் சக்தி லிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இது ஒரு அபூர்வமான சிவலிங்கம் ஆகும். இதை 'அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமைய, வெள்ளிக்கிழமை காலை 10.30- 12 மணிக்குள் (ராகு காலம்) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் அபிஷேகம் செய்து தீபமேற்றுகின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நைவேத்யம் செய்து வணங்குகின்றனர்.

Read More
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில்

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில்

ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்

விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநாவலூர். இறைவன் திருநாமம் பக்தஜனேஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி அம்மை.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி ஆல மரத்தின் கீழ், அமர்ந்த நிலையில்தான் காட்சிகொடுப்பார். கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக விளங்குவதால் குருதட்சிணாமூர்த்தி என்று அழைக்கபடுவார். மேலும் படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமாரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் ஞானம் போதிக்கும் நிலையில், சின் முத்திரை தரித்த கோலத்தில் அவர் காட்சி கொடுப்பார்.

ஆனால், இக்கோவில் சன்னதியில் கோஷ்ட மூர்த்தியாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில், வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு அதிசயத்தக்கது. வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாதது.

சுந்தரர் பூராட நட்சத்திரத்தில் இங்கே இருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றுகொண்டார் என சொல்லப்படுகிறது. இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். எனவே இவரை பூராட நட்சத்திர அன்பர்கள் வழிபட்டால், அவர்களுக்கு நன்மை உண்டாகும்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

பக்தனுக்காக மடப்பள்ளியில் சமையல் செய்த மீனாட்சி அம்மன்

மிகவும் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில், இறைவன் சொக்கநாதரும் அன்னை மீனாட்சியும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் குறித்த செய்திகள் பலவும், புராணங்களிலும் வரலாற்றிலும் காணப்படுகின்றன. மதுரை நகரைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாவம்சம் என்ற நூலிலும் மதுரை பற்றிய தகவல் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ரோமாபுரியை ஆண்ட அகஸ்டசிடம் தம் தூதரை அனுப்பிய வரலாறு உள்ளது.

அன்னை மீனாட்சியால் நடந்த அற்புதங்கள் ஏராளம். அந்த அற்புத நிகழ்வுகளுக்குச் சான்றாக இப்போதும் பல பொருள்கள், இடங்கள் உள்ளன. அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நலமளிக்கும் தெய்வமாகவே அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார். தன் பக்தனுக்காக மீனாட்சி அம்மன் மடப்பள்ளியில் சமையல் செய்த அற்புத நிகழ்வை இப்பதிவில் காணலாம்.

ஒருகாலத்தில், மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளியில் ஸ்ரீநிவாசன் என்பவர் பணி புரிந்தார். மீனாட்சி அம்மன் மேல் தீவிர பக்தி கொண்டவர். அம்பிகைக்கு சமர்பிக்கப்படும் தினசரி நைவேத்திய உணவுகளை தயாரிப்பது அவர் வழக்கம். அன்னையின் அருளால், நைவேத்தியம் சமைப்பதைப் போலவே, அருந்தமிழில் கவிதை சமைக்கவும் திறன் பெற்றிருந்தார். அங்கயற்கண்ணியின் மீது அருந்தமிழில் பாடல்கள் இயற்றினார். ஒருநாள் இரவு உறங்கப்போவதற்கு முன் அவர், மறுநாள் அதிகாலையில் சமைக்க வேண்டியிருந்ததால், மீனாட்சி அம்மனை நோக்கி, 'என்னை சீக்கிரம் எழுப்பிவிடம்மா' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார். அயர்ந்து உறங்கிவிட்டார். உழைத்த களைப்பில் உறங்கும் குழந்தையை எழுப்ப எந்த அன்னைக்கு மனம் வரும்? ஸ்ரீநிவாசனை எழுப்பாமல், மீனாட்சி அம்மனே நைவேத்தியங்களை அவருக்கு பதிலாகச் சமைத்து வைத்தார். இரவில் சமைக்க வெளிச்சம் வேண்டுமல்லவா, அதற்காகத் தன் மூக்குத்தியை, கழற்றிவைத்தவள், உலகத்தவருக்கு ஸ்ரீநிவாசனின் பக்தியின் பெருமையை உணர்த்த அந்த மூக்குத்தியை தடயமாக அதை விட்டுப் போனாள்.

மறுநாள் காலையில் கோவில் சிப்பந்திகள் எழுப்பி விட்ட பிறகுதான் ஸ்ரீநிவாசன் எழுந்தார். தாம் பிரசாதங்கள் தயாரிக்காமல் உறங்கி விட்டோமே என்று பதைப்புடன் எழுந்தவருக்கு அங்கு பிரசாதங்கள் தயார் நிலையில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார்.

பின்னர் நைவேத்திய உணவு பொருட்கள் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு நெய்வேத்தியம் ஆனது. அதன் பின்னர் கற்பூர ஆரத்தி நடக்கும் போதுதான் அம்மனின் முகத்தில் மாணிக்க மூக்குத்தி இல்லாததைக் கண்டு கவலையும் பதட்டமும் அடைந்தார்கள். தொலைந்த மூக்குத்தியை தேடத் தொடங்கினார்கள். அப்போது அம்மன் சன்னதியில் ஒரு அசரீரி கேட்டது. 'யாரும் கவலைப்பட வேண்டாம். என் மகன் ஸ்ரீநிவாசன் உடல் அசதியால் என்னை எழுப்பச் சொல்லி விட்டு உறங்கச் சென்றான். அவனை காலையில் எழுப்பி விட நானே சென்றேன். அவன் அயர்ந்து உறங்குவதை கண்டு, அவனை எழுப்ப மனமில்லாமல் நான் மடப்பள்ளிக்குச் சென்றேன். மடப்பள்ளியில் வெளிச்சம் இல்லாததால் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் எனது நைவேத்தியங்களை நானே சமைத்தேன். குழந்தை உறங்குவதை கண்ட தாய் அவனை எழுப்புவாளோ? அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது. மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள். அங்கு எனது மூக்குத்தி இருக்கும்' என்று அசரீரி ஒலித்தது. மீனாட்சி அம்மனின் திருவிளையாடலை நினைத்து அங்கிருந்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

Read More
சென்னை கந்தசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சென்னை கந்தசாமி கோவில்

வேத மந்திரங்களால் முருகன் விக்கிரகத்தை சீர் செய்த அற்புதம்

சென்னை பாரிமுனைப் பகுதியிலுள்ள ராசப்ப தெருவில் அமைந்ததுள்ளது, சுமார் 450 ஆண்டுகள் பழமையான கந்தசாமி கோவில். மூலவர் கந்தசாமி. உற்சவர் முத்துக் குமாரசுவாமி. சிதம்பர சுவாமி , பாம்பன் குமரகுரு பரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிய தலம்.

தல வரலாறு

வேளூர் மாரிச்செட்டியார்,பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற முருக பக்தரகள், ஒவ்வொரு கிருத்திகையன்றும, சென்னையிலிருந்து திருப்போரூக்கு நடைப் பயணமாகச் சென்று திருப்போரூர் கந்தசாமியை வழிபடும் வழக்கம் உடையவர்கள். அப்படி ஒரு சமயம், 1673ம் ஆண்டு மார்கழி மாதம் கிருத்திகையன்று, திருப்போரூர் கந்தசாமியை வணங்கி விட்டு சென்னை திரும்பும் வழியில், செங்கண்மால் ஈசுவரன் கோவில் என்ற இடத்தில் அசதியில் படுத்து உறங்கி விட்டார்கள். அப்போது அவர்கள் இருவர் கனவிலும் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள், இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப் பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஒரு போலவே கனவு வந்தபடியால்,வந்து சொன்னது முருகனே என்று மகிழ்ந்தார்கள். சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள் அருகில் முருகன் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும்வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்திலேயே முருகருக்கு கோவில் கட்டினார்கள்.

சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

உற்சவர் முத்துக் குமாரசுவாமி

ஒரு சமயம் , முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கோயிலுக்கு உற்சவ விக்கிரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர் . சிற்ப சாஸ்திரத்தில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரைத் தேர்வு செய்தனர் . சிற்பியிடம், உற்சவ முருகனாகப் பஞ்சலோகத்தில் விக்கிரகம் ஒன்றை வார்த்துக் தரும்படி ஒப்படைத்தனர் . சிற்பியும் புடம் போட்டு எடுத்தபின், வார்ப்படத்தைப் பிரித்தபோது விக்கிரகம் 'மினு மினு' வென மின்னியது . அதன் ஒளிச் சிதறல்கள் கண்களை கூசச் செய்தது . ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள் போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் அனைவருமாகச் சேர்ந்து சிற்பியிடம், சிற்பம் நல்லா வந்திருக்கிறது ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.

சிற்பியும், சரி! துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்கிரகத்தைத் தொட்டார் . அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாங்கியவர் போல் தூரப்போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பியை தூக்கி வைத்து ஆசுவாசப்படுத்தி, என்ன ஆயிற்று ஐயா என்றனர். சிற்பியோ, என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது என வாய் குழறி குழறிக் கூறினார் . இந்த விக்கிரகம் நீறு பூத்த அனலாக இருக்கிறது. இதைச் சுத்தம் செய்யும் தகுதியோ, சக்தியோ எனக்கில்லை என்றார். என்னால் முடியாது என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.அந்த விக்கிரகத்தை தீண்டப்பயந்து வழிப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பாக வைத்துப் பூட்டி விட்டனர் . இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.

ஒருநாள் காசியிலிருந்து சாம்பையர் எனும் துறவி கந்தக்கோட்டம் வந்தார். அவர் மூலவரை தரிசித்து முடித்தவுடன் உற்சவர் எங்கே என்று விசாரித்தார். அவருக்கு உற்சவர் இருந்த பெட்டியை காண்பித்தனர். கொஞ்ச நேரம் அந்த விக்கிரகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாம்பையர், மயக்கம் போட்டு விழுந்தார். பிறகு எழுந்தவர் சந்தோஷத்தில், மூலவருக்கு எவ்வளவு சான்னித்தியம் உள்ளதோ, அதே சாந்நித்தியம் இந்த உற்சவர் சிலைக்கும் உள்ளது என்று சொன்னார். இப்படி அமைவது மிக மிக அபூர்வம் என்றார். ஆத்ம சக்தியினால் மட்டுமே இந்த உற்சவரை சுத்தம் செய்யமுடியும். எந்த கருவிகளாலும் சுத்தம் செய்ய முடியாது என்றார். அவரே சிலையின் முன் அமர்ந்து வேத மந்திரங்களை சொல்லி அந்த சிலையை சுத்தம் செய்தார். அவர் உற்சவர் திருமேனியில் இருந்த பிசிறுகளையெல்லாம் நீக்கினார். ஆனால் முகத்தில் இருந்த பிசிறுகளை நீக்க முடியவல்லை. இன்று நாம் உற்சவராக தரிசிப்பது இந்த பொன்னிற முருகனைத்தான். ஆனால் முகத்தில் மட்டும் பிசிறுகள் இருக்கும்.

Read More
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

தினமும் பகலில் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்

தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருநல்லூர் என்னும் தலம் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.

இத்தலத்து இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர்,தன் லிங்கத் திருமேனியின் நிறத்தை தினமும் பகல் பொழுதில், 5 முறை மாற்றி காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியின் நிறம் ஆறு நாழிகைக்கு(144 நிமிடம்) ஒரு முறை மாறுகிறது.முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறம், அடுத்த 6-12 நாழிகையில் இளம் சிவப்பு, அடுத்த 12-18 நாழிகையில் தங்கம், அடுத்த 18-24 நாழிகையில் நவரத்தின பச்சை, அடுத்த 24-30 நாழிகையில் இன்ன நிறமென்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.

சிவபெருமானின் சடாரி சாற்றப்படும் ஆபூர்வ நடைமுறை

பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

திருநல்லூா் கோவில் குளத்தின் தனிச் சிறப்பு

சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்

108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த பல சிறப்பு அம்சங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

01. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் 'ஏழு பிரகாரங்களுடன்., ஏழு மதில்களை' கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

02. ஏழு 'பெரிய' பெருமை உடைய

1) பெரிய கோவில்

2) பெரிய பெருமாள்

3) பெரிய பிராட்டியார்

4) பெரிய கருடன்

5) பெரியவசரம்.

6) பெரிய திருமதில்

7) பெரிய கோபுரம்

இப்படி அனைத்தும் 'பெரிய' என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

03. ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சியார்கள்

1) ஸ்ரீதேவி

2) பூதேவி.

3) துலுக்க நாச்சியார்

4) சேரகுலவல்லி நாச்சியார்

5) கமலவல்லி நாச்சியார்

6) கோதை நாச்சியார்

7) ரெங்க நாச்சியார் ஆகியோர்

04. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்

1) விருப்பன் திருநாள்

2) வசந்த உற்சவம்

3) விஜயதசமி

4) வேடுபரி

5) பூபதி திருநாள்

6) பாரிவேட்டை

7) ஆதி பிரம்மோத்சவம் ஆகியவை

05.ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்

1) சித்திரை

2) வைகாசி

3) ஆடி

4) புரட்டாசி

5) தை

6) மாசி

7) பங்குனி

06. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்

1) சித்திரை

2) வைகாசி

3) ஆவணி

4) ஐப்பசி

5) தை.

6) மாசி

7) பங்குனி

07. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

08. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் (30 நாட்களும்) தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

09. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். 'ராமாவதாரம் ஏழாவது' அவதாரமாகும்.

10. இராப்பத்து ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.

1) கோடை உற்சவம்

2) வசந்த உற்சவம்

3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை

4) நவராத்திரி

5) ஊஞ்சல் உற்சவம்

6) அத்யயநோத்சவம்

7) பங்குனி உத்திரம்

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

1) பொய்கையாழ்வா, பூதத்தாழ்வார், பேயாழ்வார்

2) நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார்

3) குலசேகராழ்வார்

4) திருப்பாணாழ்வார்

5) தொண்டரடிப் பொடியாழ்வார்

6) திருமழிசையாழ்வார்

7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்

13. இராப்பத்து 'ஏழாம் திருநாள்' நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால் அன்று மட்டும் ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 'ஏழு கோபுரங்கள்' உள்ளன.

1) நாழிகேட்டான் கோபுரம்

2) ஆர்யபடால் கோபுரம்

3) கார்த்திகை கோபுரம்,

4) ரங்கா ரங்கா கோபுரம்

5) தெற்கு கட்டை கோபுரம் – I

6) தெற்கு கட்டை கோபுரம் – II

7) ராஜகோபுரம்

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்

2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்

3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்

4) அத்யயநோற்சவம் ~

5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.

6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.

7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.

1) பூச்சாண்டி சேவை.

2) கற்பூர படியேற்ற சேவை.

3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.

4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.

5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.

6) தாயார் திருவடி சேவை.

7) ஜாலி சாலி அலங்காரம்

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்

1) நவராத்ரி மண்டபம்.

2) கருத்துரை மண்டபம்

3) சங்கராந்தி மண்டபம்,

4) பாரிவேட்டை மண்டபம்

5) சேஷராயர் மண்டபம்

6) சேர்த்தி மண்டபம்.

7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப் பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கும் தனி சன்னதி உள்ளது

1) ராமானுஜர்

2) பிள்ளை லோகாச்சாரியார்

3) திருக்கச்சி நம்பி

4) கூரத்தாழ்வான்

5) வேதாந்த தேசிகர்

6) நாதமுனி

7) பெரியவாச்சான் பிள்ளை

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ‘ஏழு முறை’ சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்

1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்

2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்.

(3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்

4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்

5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்

6) பூபதி திருநாள் ~ தை மாதம்

7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்

1) யானை வாஹனம் ~ சித்திரை, தை, மாசி

2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை, தை, பங்குனி

3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை, தை, பங்குனி

4) இரட்டை பிரபை ~ சித்திரை, மாசி, பங்குனி

5) சேஷ வாஹனம் – சித்திரை, தை, பங்குனி

6) ஹனுமந்த வாஹனம் – சித்திரை, தை, மாசி

7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை, தை, மாசி

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாஹனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம்.,

ஹனுமந்த வாஹனம்.,

சேஷ வாஹனம்.,

சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள் தங்கத்திலும், யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~ ஆகிய ஏழு வாஹனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது இல்லை.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை

1) தச மூர்த்தி

2) நெய் கிணறு

3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்

4) 21 கோபுரங்கள்

5) நெற்களஞ்சியம்

6) தன்வந்தரி

7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

Read More
ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்

மூலஸ்தானத்தில் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வடமேற்கே சுமார் 1 கி.மீ. தூரத்தில், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது தசாவதார கோவில்.

ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி, ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை எறறு, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம்தான் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோவிலாகும்.இக்கோவில் மூலஸ்தானத்தில் பெருமாள் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்தத் தோற்றத்தில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்மர் ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்கு சக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில் அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீகிருஷ்ண அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும் கல்கி அவதாரம்,குதிரைவாகனத்தில், கேடயம் கத்தியுடனும் காட்சியளிக்கிறார்கள். மச்ச (மீன்) கூர்ம (ஆமை) அவதாரங்கள் அவதார நிலையிலேயே மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளன. இங்குள்ள உற்சவ மூரத்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.

பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருககு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே இருப்பது தனிசிறப்பாகும். பத்து அவதாரங்களுக்கும் ஒரு கலசம் வீதம், விமானத்தில் பத்து கலசங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானம் செவ்வக வடிவில் இருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

கிரக தோஷ நிவர்த்தி தலம்

இங்குள்ள ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு கிரகத்தின் தலைவராகக் கருதப்படுகிறது. குறிப்பாக மச்ச-கேது, கூர்ம-சனீஸ்வரர், வராக-ராகு, நரசிம்மா-செவ்வாய், வாமன-குரு, பரகராம-சுக்கிரன், ராம-சூரியன், கிருஷ்ணன்-சந்திரன், பலராமன்-மாந்தி, கல்கி-புதன் ஆகிய கிரக தோஷங்களை நிவர்த்தி செய்கின்றனர். அதனால், கிரக தோஷமுடையவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் இக்கோவிலை வழிபட்டு பலன் பெறலாம்.

Read More
பவானி சங்கமேஸ்வரர் கோவில்
அம்மன் Alaya Thuligal அம்மன் Alaya Thuligal

பவானி சங்கமேஸ்வரர் கோவில்

அம்பிகைக்கு தந்தக் கட்டில் காணிக்கையாக அளித்த ஆங்கிலேய கலெக்டர்

ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும் உள்ள தேவாரத் தலம் பவானி சங்கமேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சங்கமேஸ்வரர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் சிறந்த பரிகாரத்தலங்களில் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. . பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் கூடுதுறையில், ஆண்டு தோறும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்பணம், கரும காரியம் போன்றவைகளை செய்து செல்கின்றனர். பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. இங்கு கோபுரமே இலிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.

இத்தலத்து அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.

இக்கோவிலின் அம்பிகை வேதநாயகிக்கு, ஆங்கிலேயர் ஒருவர் தந்தக் கட்டில் காணிக்கையாக அளித்திருக்கிறார். அதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது. சுமார் 220 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில், வில்லியம் காரோ என்பவர் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட வில்லியம் காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து வில்லியம் காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். வில்லியம் காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.ஒரு முறை வில்லியம் காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு, திடுக்கிட்டு விழித்து எழுந்த வில்லியம் காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே வில்லியம் காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு பழைய சோறு (அதாவது முதல் நாள் சமைத்து இரவு தண்ணீர் ஊற்றிய அன்னம்) நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2

2. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்

மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது எழுந்தருளியிருக்கும் அபூர்வக் காட்சி

திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள எண்கண் தலத்தில் அமைந்துள்ளது, ஆதிநாராயண பெருமாள் கோவில்.

பொதுவாக, பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று நிலைகளிலும், சிறப்பம்சமாக நடந்த நிலை எனப்படும் திரிவிக்ரம அவதார நிலையிலும் தரிசனம் தருவார். பெருமாளின் எதிரே பெரிய திருவடியான கருடாழ்வார், நின்ற நிலையில் கைகூப்பியபடி காட்சி தருவார். திருவிழாக் காலங்களில் உற்ஸவ மூர்த்திகள் மட்டும் கருடாழ்வாரின் மீதேறி கருட வாகனராக சேவை சாதிப்பார்.

ஆனால் இந்த எண்கண் திருத்தலத்தில், பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் தரிசிக்கும் வகையில், மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்று மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ள அமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது. இங்கே கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். உற்சவர் ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

ஒருசமயம் பிருகு முனிவர் இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அச்சமயம் சிங்க வேட்டைக்கு வந்த சோழ மன்னன் படைகள் எழுப்பிய கூச்சலால் அவர் தவம் கலைந்தது. அதனால் சோழ மன்னனின் முகம் சிங்க முகமாக மாற சபித்து விட்டார். தனது செயலை எண்ணி வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினான்.

மனம் இரங்கிய பிருகு முனிவர், 'தைப்பூசத் திருநாளில், விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றில் நீராடி, எண்கண் எனப்படும் இந்தத் தலத்தில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்து வழிபட்டால், அப்போது, பெருமாள் கருடன் மீதமர்ந்து காட்சி தருவார். மயில் மீது முருகனும் அமர்ந்து காட்சி தர, சாப விமோசனம் கிட்டும். அதன்பின்னர்,பெருமானுக்கு சிம்ம, ரிஷப, மயூர, அன்ன, மேஷ வாகானாதிகள் உள்பட 108 வாகனங்கள் அமைத்து பெருவிழாவை நடத்த வேண்டும்' என்றார். அதன்படி சோழனும் பெருமாளை நினைந்து மனமுருகி வழிபட்டு வந்தான்.

சோழ மன்னனின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்க்கும் விதத்தில், பெருமாள் கருட வாகனத்தில் பறந்து வந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். முருகனும் மயில் மீது அமர்ந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். அதன்மூலம், மன்னனின் சிங்க முகம் மாறி பழைய நிலை அடைந்தான்.

சோழனுக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சி கொடுத்த அதே அமைப்பில் சோழ மன்னன் பெருமாளுக்கு இங்கே கோயில் எழுப்பினானாம். எனவே இங்கே கருவறையில் மூலவர் பெருமான் கருட வாகனத்தில் அமர்ந்த நிலையில் நித்திய கருடசேவையாக பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கின்றார்.

மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்

பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததன் காரணமாக இத்தலம் மிருகசீர்ஷ நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட வாகனத்தில் தோன்றி மிருக சீரிட நட்சத்திரக்காரர்களின் நட்சத்திர தோஷத்தை நீக்குவதாக ஜதீகம்.

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வழிபாடு செய்ய வேண்டும்.

Read More
வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவில்

செவ்வாய் தோஷம் நீக்கும் பரிகாரத் தலம்

சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் வைத்தீஸ்வரன் கோயில். இறைவன் திருநாமம் வைத்தீஸ்வரன். இறைவியின் திருநாமம் தையல்நாயகி. வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்பது ஐதீகம்.

பொதுவாக, சிவாலயங்களில் சிவ சன்னதிக்கு முன் இடது பக்கமாக நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயிலில் நவக்கிரகங்கள் நேர்க்கோட்டில் வக்கிரமில்லாமல், வரிசையாக ஈஸ்வரன் சன்னதிக்கு பின்புறம் தத்தம் நோய் தீர ஒரே வரிசையில் நேர்க்கோட்டில் நின்று வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். முன்னொரு காலத்தில் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்து விட்டு வைத்தியநாத சுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதை அடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைலநாயகி என்று பெயர் வந்தது.அங்காரகனின் வெண்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாயிற்று. அங்காரகன் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். குஷ்ட நோயினால் அவதியுற்ற அங்காரகனுக்கு சிவ பெருமான் வைத்தியராக வந்திருந்து, நோய் நீக்கிய தலம் என்பதால் இக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் என்றாயிற்று.

செவ்வாய் தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்தாலே தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, துவரை அன்னம் நைவேத்தியம் செய்து வழிபடுவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும். இதனால் தோஷம் நீங்கும். குறிப்பாக, செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணத் தடைகள் அகலும். கல்யாண வரம் கைகூடி வரும்.

வரம் தரும் அங்காரக ஸ்தோத்திரம் :

பூமிபுத்ரோ மஹாதேஜா ஜகதாம் பயக்ருத்ஸதா

வ்ருஷ்டிக்ருத் வ்ருஷ்டி ஹாதாச பீடாம் ஹரதுமே குஜ;

இதை, தினமும் சொல்லி வந்தாலே தோஷங்கள் விலகிவிடும். செவ்வாய் பகவானின் பலத்தையும் அருளையும் பெற்றுவிடலாம். முக்கியமாக, செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகனை, முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண வரன் தேடி வரும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

 1. முருகப்பெருமானும் யானையும் விளையாடும் நரி ஓட்டம் நிகழ்ச்சி

 https://www.alayathuligal.com/blog/la2rny36apf65rfnws4fzwcbfkpk6r

 2. தையல்நாயகி அம்மன்

https://www.alayathuligal.com/blog/gchp68lgler8gnn79yt582zf62s6wr

Read More