விநாயகர்

விநாயகர் சிவபெருமான் பார்வதியின் மூத்த மகன் ஆவார்.இவர், யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக விளங்குபவர். விநாயகரே முழு முதற்கடவுள் ஆனதால், எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியம் வெற்றிகரமாக எந்த தடையும் இன்றி நிறைவேற விநாயகரை முதலில் வழிபடுகிறோம்.ஆலயங்களில் கூட, உள்ளே நுழைந்ததும் நாம் வணங்குகிற முதல் தெய்வம், முதல் கடவுள் விநாயகப் பெருமானாகத்தான் அமைந்திருக்கிறார். இவரை வழிபட ஆலயத்திற்குச் சென்றுதான் வழிபட வேண்டும் என்பதில்லை.அரசமரத்தடி, குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி, தெருமுனை போன்ற இடங்களில் இருந்து கொண்டு நமக்கு அருள் பாலிக்கிறார் பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது, மண், பசுஞ்சாணம், மஞ்சள், அரைத்த சந்தனம், வெண்ணீறு, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத்தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நம் கிராமப்புறங்களில் சொல்லுவார்கள். புற்றுமண், அரைத்தமாவு ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். நாம் இவரை சாதாரண தோற்றத்தில் உருவாக்கினாலும் நம் ஆலயங்களில் இவர் பல அதிசயமான அபூர்வமான தோற்றங்களில் காட்சி கொடுக்கிறார். விநாயகர் ஆலயங்களைப் பற்றிய கதைகளையும் தகவல்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்..
சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட கருங்கல் பலகணி
கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான குத்துவிளக்குகள்
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள திருவலஞ்சுழி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள வலஞ்சுழிநாதர் கோவில் என்று அழைக்கப்படுகின்ற, தேவாரப்பாடல் பெற்ற, சிவன் கோவில் வளாகத்தில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடல் நுரையாலான வெள்ளை நிற பிள்ளையார் எழுந்தருளி உள்ளார். வெள்ளை நிற பிள்ளையார் சன்னதி தேர் வடிவில் அமைந்துள்ளது. தேர்ச்சக்கரம் சற்றே புதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த வாயிலின் மேலே விதானத்தில் கருங்கல்லால் ஆன வேலைப்பாடு அழகாக உள்ளது. சுற்றிவரும்போது வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கையைக் காணமுடியும்.
வெள்ளை விநாயகர் கோவிலின் தூண் மண்டபமும், கருவறையும் அழகான வேலைப்பாடுகளுடன் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது.இந்த சன்னதியில் உள்ள சிற்பத் தூண்களும், சிற்ப நுணுக்கம் மிகுந்த அடைவுகளும் உலகச் சிறப்பு வாய்ந்தன. தூண்களின் அமைப்பு வித்தியாசமாகக் காணப்படுகிறது. தூண்களைக் கடந்து உள்ளே போகும்போது கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான குத்துவிளக்குகள் காணப்படுகின்றன. இந்த குத்துவிளக்குகள் இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும்.
புகழ்பெற்ற கருங்கல் பலகணி
வெள்ளை விநாயகர் சன்னதியின் எதிரில், புகழ்பெற்ற திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (கருங்கல் ஜன்னல்) இங்கே உள்ளது. கோஷ்டங்களில் காணப்படும் கருங்கல்லால் ஆன ஜன்னல்களும் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன. அக்காலத்தில் கோவில் கட்டுவதற்கு சிற்பிகள் எழுதித்தரும் ஒப்பந்தப் பத்திரத்திற்கு முச்சிளிக்கா என்று பெயர். அதில் அவர்கள் முக்கிய நிபந்தனையாக விதிப்பது என்னவென்றால், திருவலஞ்சுழி கோவில் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை, கடாரம் கொண்டான் கோவில் மதில், தஞ்சைப் பெரிய கோபுரம், திருவீழிமிழலை கோவிலுள் உள்ள வௌவால்நத்தி மண்டபம் போன்ற வேலைப்பாடுகள் தவிர, வேறு எந்த வேலைப்பாடும் செய்து தர முடியும் என்று குறிப்பிடுவார்களாம். இவ்வாறாக நிபந்தனை விதிக்கும் அளவு மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டதாக அந்த வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன.
சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட திருவலஞ்சுழி கருங்கல் பலகணி 9 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த கருங்கல் பலகணி மிகச் சிறந்த தத்துவங்களை உள்ளடக்கியது. இந்தப் பலகணியில் 4 தூண்களும், 111 கண்களும், 49 மலர்களும், 24 கர்ண துவாரங்களும், 10 யாளிகளும் உள்ளன. மூன்று பாகங்களாக குறுக்குவாட்டில் ஒரே கல்லினாலும், நெடுக்குவாட்டில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கற்களினாலும் அமைக்கப்பட்டுள்ளது.
நெடுக்குவாட்டு கற்கள் மும்மூர்த்திகளையும், மூன்று தத்துவங்களையும், 4 தூண்கள் 4 யுகங்களையும், 111 கண்கள் மந்திரங்களையும், 49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றையும், 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகள், அஷ்ட ஐஷ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும், 10 யாளிகள் எட்டு திசைகளுடன் பாதாளம் மற்றும் ஆகாசம் என 10 திக்கு நாயகர்களையும் குறிப்பதாக உள்ளன.
ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இருக்கும் அரிய காட்சி
திருமணத்தடை நீக்கும் மாப்பிள்ளை சுவாமி விநாயகர்
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது வெள்ளீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி அமைந்துள்ள சப்த விடங்க சிவ தலங்களில் இக்கோவிலும் ஒன்று . அசுரகுரு சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை கொடுத்த தலம் இது என்பதால், மூலவருக்கு வெள்ளீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதனால், இக்கோவில் கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தலமாக விளங்குகிறது .
இக்கோவிலில், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் சித்தி, புத்தி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார். இவருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. அவருக்கு முன்பாக செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கி இருக்கிறார். இப்படி ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இந்த ஒரு தலத்தில் மட்டும்தான்.
இந்த மாப்பிள்ளை சாமிக்கு நான்கு மாலைகள் கொண்டு வந்து பூஜை செய்து, ஒரு மாலையை பிரசாதமாக வீட்டிற்கு கொண்டு சென்றால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கோத்பவ வலம்புரி விநாயகரின் தோற்றமானது அபூர்வமான ஒன்றாகும். இவர் சிவலிங்க உருவம் கொண்டு, அதில் நான்கடி உயர திருமேனியுடன், புடைப்புச் சிற்பமாக வலம் சுழித்த துதிக்கையுடன் காட்சி தருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இப்படி சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
துணையிருந்த விநாயகர் (கரிகால சோழன், தன் அரசினை மீட்க உதவிய விநாயகர்)
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பனையூர். இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், அழகியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
இக்கோவிலில் தனிச்சன்னதியில் துணை இருந்த விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இந்த விநாயகர் இப்பெயரை பெறுவதற்கு பின்னால், சோழ நாட்டு வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உள்ளது.
முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது. அவனது தாய்மாமன் 'இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான்.
பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால், இத்தல விநாயகர் 'துணையிருந்த விநாயகர்' என்னும் பெயர் பெற்றார்.
ஆலயத்துளிகள் இணையதளத்தின் 1250ஆம் நாள் பதிவு
மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்கும் மூன்று விநாயகர்கள்
வேண்டுதல் நிறைவேற செய்யப்படும் நிறை பணி வழிபாடு
தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் இடையே அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமதானபுரம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று, அச்சிட்டுப் பதிப்பித்த, தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்ட உ. வே. சாமிநாதையர் பிறந்த ஊர் இது.
இக்கோவிலில் சிவன் மூலவராக இருந்தாலும், இங்கே முக்கியமானவரும், விசேஷமானவரும். வரப்பிரசாதியாகவும் விளங்குபவர் விநாயகர் தான். இக்கோவிலில் மூன்று விநாயகர்கள் ஒரே வரிசையில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் பிரம்மா, விஷ்ணு சிவபெருமான். அம்சமாக விளங்குவதால் இவர்களுக்கு மும்மூர்த்தி விநாயகர்கள் என்று பெயர். பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று இந்த மூன்று விநாயகர்களுக்கு செய்யும் நிறை பணி வழிபாடு என்பது இக்கோவிலில் மிகவும் பிரசித்தம். உத்தியோகம் கிடைக்க, திருமணம் கைகூட, விவசாயம் சிறக்க, தொழில் வளர்ச்சி அடைய போன்ற பிரார்த்தனைகளை பக்தர்கள் மனதில் வைத்து அபிஷேகங்கள் செய்து ஒரு தேங்காய் அளவுக்கு 108 கொழுக்கட்டைகள் செய்து, படைத்து வேண்டிக் கொண்டால், நினைத்ததை விரைவில் நிறைவேற்றி அருளுகிறார்கள் இந்த மும்மூர்த்தி விநாயகர்கள். வேண்டுதல் நிறைவேற செய்யப்படும் இந்த வழிபாட்டிற்கு, 'நிறை பணி வழிபாடு' என்று பெயர்.
பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அபிஷ்ட வரத மகா கணபதி
தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள திருவையாறில் அமைந்துள்ளது அபிஷ்ட வரத மகா கணபதி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் புராணச் சிறப்பு உடையது. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி தருவதால், இவருக்கு அபிஷ்ட மகா கணபதி என்ற பெயர் ஏற்பட்டது. அபிஷ்டம் என்ற சொல்லுக்கு, 'கோரிக்கை' என்று பொருள். இவருக்கு காரிய சித்தி விநாயகர் என்ற பெயரும் உண்டு.
இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது. அப்பர் பெருமானுக்கு இக்கோவிலில் தனிச்சந்ததி உள்ளது.
திருவையாறு வழியாக வந்த காவேரி அவ்வூரின் அழகு கண்டு அங்கேயே தங்கி விட்டாள். காவிரியை மணக்க விரும்பிய சமுத்திரராஜன், இத்தலத்து அபிஷ்ட வரத மகா கணபதியை பூஜித்தார். அவருடைய கோரிக்கையை ஏற்ற கணபதி, அவருக்கு காவேரியை திருமணம் செய்து வைத்தார். அதனால் இக்கணபதியை தரிசித்தால், திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருமணம் அல்லது வேறு எந்தச் செயலிலும் தடைகள் ஏற்பட்டாலும், இவருடைய ஆசீர்வாதத்தால் கடக்க முடியும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவிலுக்குச் சென்று, 'காரிய சித்தி மாலை' பாராயணம் செய்வது நன்மைகளையும் செழிப்பையும் தரும்.
பிரம்மாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில், தாமிரபரணி நதிக்கரையில் மிகவும் பழமையான, பிரம்மாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்துடன் காட்சி அளிக்கும் இவர் ஐந்தரை அடி உயர திருமேனி உடையவர் முப்புரி நூல் அணிந்து, பேழை வயிற்றுடன் அமர்ந்து இருக்கிறார். கூரையில்லாமல் வேப்பமரத்தடியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகருக்கு கூரை போட முயற்சிக்கையில் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அதனால் கூரை போடுவதற்கு அமைக்கப்பட்ட நான்கு கல் தூண்கள் அப்படியே இன்றளவும் உள்ளன. இந்தப் பிள்ளையாருக்கு எண்ணெய்க் காப்பு செய்ய வேண்டும் என்றால் பத்து லிட்டர் எண்ணெய் தேவைப்படும். வஸ்திரம் அணிவிக்க எட்டுமுழ வேஷ்டி வேண்டும். இரண்டு பேர் சேர்ந்துதான் வஸ்திரம் சாத்துவார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகருக்கு, முக்குறுணி (18 படி) அளவு அரிசியை மாவாக்கி, பெரிய அளவில் ஒரே ஒரு மோதகம் செய்து படைப்பார்கள்.
கிணற்றின் மேல் எழுந்தருளி உள்ள விநாயகர்
விநாயகரை கடலில் தூக்கி போட்டாலும், மீண்டும் தானாக வந்து கோவிலில் அமர்ந்த அதிசயம்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில். தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம், வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த புதுச்சேரி. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் மருவி, மணக்குள விநாயகர் ஆனது.
தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் அமைந்திருக்கின்றது. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் இப்போதும் நீர் சுரந்து கொண்டிருக்கிறது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது. இது முன்காலத்தில் ஒரு குளமாவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஒயிட் டவுன் எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; மணற் குளம் சென்று அதற்கு பெயர். இதன் அருகில் கோவில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்' எனப் பெயர் பெற்றார். 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் அவ்வப்போது உற்சவங்களையும் நடத்தி வந்தனர். பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உற்சவம் போன்ற வைபவங்களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.
ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற, பிரெஞ்சுக்காரர்கள் திட்டமிட்டனர். கோவிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்வது பிடிக்கவில்லை. இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே விநாயகர் சிலை கடலில் போடப்பட்டது. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோவிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது. மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டு போய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார். மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோவிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்' என்றும் அழைக்கிறார்கள்.
புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் , இந்த விநாயகரை போற்றி; 'நான்மணிமாலை' என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக் கோவில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோவில் இந்த கோவில் மட்டுமே.
பிரார்த்தனை
இக்கோவிலில், இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டினரும் பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் இவற்றிற்காக இங்கு வழிபடுகிறார்கள். 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற
திருவிழா
விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்
விநாயகர் சதுர்த்தி திருவிழா
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. 10 நாட்கள்
நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கற்பக விநாயகருக்கு ராட்சதக் கொழுக்கட்டை
படைக்கப்படுகின்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்
பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செய்வார்கள். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். தேரோட்டம் நடைபெறும் அதே நேரத்தில் மூலவர் கற்பக விநாயகருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்குறுணி கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்யம் செய்வார்கள். 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து சுட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு, மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவார்கள். பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து, மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வார்கள். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர், நகரத்தார். ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து பிரசாதமாகக் கொடுப்பர்கள்.
பூவை விழுங்கும் விநாயகர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இறைவன்
திருநாமம் புராதனவனேசுவரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.
இக்கோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியை வலம் வரும் இடத்தில், பூவிழுங்கி விநாயகர் என்ற பெயரில் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார்.
அம்மன் சன்னதியை வலம் வருவோர் இவரது செவியில் உள்ள துவாரங்களில் தமது வேண்டுதல்களை மனதில் நினைத்து பூக்களை வைக்கிறார்கள். காதில் வைக்கப்படும் பூவை இவ்விநாயகர் காதுக்குள் இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். காரியங்கள் நிறைவேறாது என்றால் செவிகளில் வைத்த பூக்கள் அப்படியே வைத்தவாறே இருக்கும்.பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூ வைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த விநாயகரால் இத்தலத்தின் பெயரே பூவிழுங்கி விநாயகர் கோவில் என்றே மருவி வருகிறது.
மூலவர் விநாயகருடன், சிவபெருமானும் கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ராஜகணபதி விநாயகர் கோவில். இந்த கோவிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு வலது பக்கம் சிவபெருமானும், இடது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். இப்படி மூலவர் கணபதிக்கு இரு புறமும் சிவபெருமானும், கிருஷ்ணரும் உடன் எழுந்தருளி இருக்கும் கோலத்தை நாம் எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இத்தலத்து சிவபெருமான் திருநாமம் நாகலிங்கேசுவரர். கிருஷ்ணரின் திருநாமம் சந்தான கோபாலகிருஷ்ணன்.
இந்த ராஜ கணபதிக்கு அபிஷேகம் செய்து அவரை ஏழு அல்லது ஒன்பது முறை வலம் வந்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, இவருக்கு மஞ்சள் காப்பு செய்வித்தும், தேங்காய் மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.
கோடி விநாயகர்களை வழிபட்ட பலனைத் தரும் கோடி விநாயகர்
கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பந்தாடுநாயகி. இங்கு இறைவன் சிவபெருமானின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பரிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஒரு தடவை இளவரசன் ஒருவனுக்கு பத்திரயோகி முனிவர், கடும் சாபம் கொடுத்தார். இதன் காரனாமாக அவரது தவவலிமை குன்றியது. இதனால் வருந்தியவர் பரிகாரம் தேட முற்பட்டார். பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவனை வழிபட்ட அவர் கொட்டையூருக்கும் வந்தார்.
இங்கு அமுத கிணற்று நீரில் பத்திரயோகி முனிவர் நீராடி, சிவனாரை மலர்களால் அரச்சித்து, வழிபட்டு கோவிலை வலம் வந்து வணங்கினார். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. பத்திரயோகி! கோடி தலங்களுக்குச் சென்று கும்பிட வேண்டாம். இந்தத் தலமே பெரும்பேற்றைத் தரும். இந்த லிங்கமே கோடி லிங்கம். இந்த தீர்த்தமே கோடி தீர்த்தம். இந்த விநாயகரே கோடி விநாயகர் என்று அசரீரி ஒலித்தது.
பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடி விநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர், வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இந்த கோடி விநாயகரை வழிபட கோடித் தலங்களுக்குச் சென்று, கோடி விநாயகர்களை வழிபட்ட பெரும்பலன் கிடைக்கும். இவர் தன்னை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார்.
மொட்டைத் தலையுடன், நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ பால விநாயகர்
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவார தலமான திருவெண்ணெய்நல்லூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஏமப்பூர். இத்தலத்து இறைவன் திருநாமம் வேதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் பால குஜாம்பாள். தேவார வைப்புத் தலமான இக்கோவில், 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலில் நந்தி, மூலவரை நோக்கி இல்லாமல் கோபுர வாயிலை நோக்கி அமைந்திருப்பது சிறப்பாகும். கருவறை வாயிலில் இருக்கும் துவாரபாலகர்கள் சுதை வடிவில் இல்லாமல், கருங்கல் சிற்பமாக இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், கருவறையின் பின்புறம் லிங்கோத்பவர் தான் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில், லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில், சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவது, வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு அமைப்பாகும்.
இக்கோவில் மகாமண்டபத்தில் எழுந்தருளி உள்ள விநாயகர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பொதுவாக விநாயகர் தலையில் கிரீடத்துடனும், அமர்ந்த கோலத்திலும் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில், தலையில் கிரீடம் இல்லாமல் மொட்டைத் தலையுடனும், வலது கரத்தில் தந்தம், இடது கரத்தில் மோதகத்தையும் தாங்கி நின்ற கோலத்தில், பால விநாயகராகக் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.
பிரார்த்தனை
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரத்தலமாக இக்கோவில் விளங்குகின்றது. மேலும் தங்கள் ஜாதகத்தில், ஆயுள் ஸ்தானம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரணபயம், எம்பயம் போக்கும் தலமாகவும் விளங்குகின்றது.
ஒட்டிய வயிறுடன் காட்சி தரும் விநாயகர்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். இத்தலத்திற்கு திருமெய்ஞானம் என்ற பெயரும் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை.
பிரணவ விநாயகர்
பொதுவாக விநாயகப் பெருமான் பெரிய வயிறுடன் தான் தோற்றமளிப்பார். ஔவையார் தனது விநாயகர் அகவலில் விநாயகப் பெருமானின் தோற்றத்தை விவரிக்கையில் 'பேழை வயிறு' என்று அவருடைய பெருத்த வயிற்றை குறிப்பிட்டு இருப்பார். ஆனால் இக்கோவிலில் விநாயகர், ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, 'பிரணவ விநாயகர்' என்று அழைக்கிறார்கள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை இத்தலத்தில் உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருக்கின்றது. படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் விநாயகர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
விநாயகர் திருமேனியில் நவக்கிரகங்கள்
சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டுச்சாலையில் ( திருமலைவையாவூர்,வேடந்தாங்கல் செல்லும் வழி) 4 கி.மீ. தொலைவில், அமிர்தபுரி என்ற ஊரில் நவக்கிரக விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சுமார் 8 அடி உயரமுள்ள பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். . இந்த விநாயகப் பெருமானின் உடலமைப்பில் நவகிரகங்களும் இடம் பெற்றுள்ளது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். விநாயகப் பெருமானின் நெற்றிப் பகுதியில் சூரிய பகவான், தலைப்பகுதியில் குரு பகவான், வயிற்றுப்பகுதியில் சந்திர பகவான், வலதுமேல் கரத்தில் சனி பகவான், கீழ் கரத்தில் புத பகவான், இடது மேல் கரத்தில் ராகு பகவான், கீழ் கரத்தில் சுக்கிர பகவான், வலது காலில் செவ்வாய் பகவான், இடது காலில் கேது பகவான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
நவக்கிரகங்களைப் பூஜித்த பலன் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும், நவக்கிரகத் தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவகிரக விநாயகருக்குப் பின்புறம் ஸ்ரீயோக நரசிம்மர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான சந்நிதிகள் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை எனலாம்.
காக்கா பிள்ளையார்
நாகப்பட்டினம் சட்டநாத சுவாமி கோவிலின் உப கோயிலாக, அதன் எதிரே நீலா மேல வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோவில்.
இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை அடைய எண்ணம் கொண்டு, முனிவரின் குடிலின் அருகே காக்கை உருவெடுத்து கரைந்தான். கௌதம முனிவரும் பொழுது விடிந்ததாக எண்ணி வெளியே சென்றுவிட இந்திரன் கௌதம முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை நாடினான். கௌதம முனிவர் அகலிகை, இந்திரன் ஆகியோரை சபித்து விடுகிறார். பின் இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி சாப விமோசனம் பெற காக்கை உருவிலேயே நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோவிலின் தென்மேற்கு பகுதியில் ஒரு தீர்த்தம் அமைத்து விநாயகப் பெருமானை முதலில் வழிபட்டான்.
இந்திரனின் சாபம் தீர்க்க வழி செய்ததால், சாபம் தீர்த்த விநாயகர் என்றும், இந்திரன் காக வடிவத்தில் அமைத்த குளத்தின் அருகே உள்ளதால் காக்காகுளம் பிள்ளையார் என்றும், தற்போது அதுவே மருவி காக்கா பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
திருநள்ளாற்றில் சனி தோஷம் முழுமையாக நீங்கப் பெறாத நள மகாராஜா பின் இக்கோயில் காக்காகுளத்தில் நீராடி, விநாயகரை வழிபட்டு சனியினால் காலில் ஏற்பட்ட தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். சூரிய பகவானும் இந்த விநாயகரை வழிபட்டு குழந்தை பாக்கியத்தை பெற்றதால் மார்ச் மாத இறுதி வாரங்களில் அஸ்தமனத்தின் போது சூரிய கதிர்கள் விநாயகரின் மீது படும்படி சூரிய பூஜை நடைபெறுகிறது.
மேலும் இந்திரனும், சூரிய பகவானும் அஞ்சலி முத்திரையில் கை கூப்பி விநாயகரை தொழுத வண்ணம் அமைந்திருப்பது வேறெந்த திருக்கோயில்களில் காணமுடியாத அமைப்பாகும்.
ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் அபூர்வ விநாயகர்
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி-செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள தூசி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1½ கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற தலம் குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் இறையார் வளையம்மை.
சிவாலயத்தில், சிவலிங்கத் திருமேனியின் கீழ் பாகமான ஆவுடையார், சக்தியின் அம்சமாக இருக்கின்றது. இங்குள்ள விநாயகர், தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இப்படி ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் விநாயகரை காண்பது அரிது.
இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன், இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பாகும்.
கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் ஏந்தியிருக்கும் விநாயகர்
சென்னையில் இருந்து 20 கி மீ.தொலைவில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வெள்ளீஸ்வரர் கோவில். அசுரர்களின் குருவான சுக்கிரன் இவரை வழிபட்டு பேறு பெற்றதால் இவருக்கு வெள்ளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. சென்னையை சுற்றியுள்ள நவகிரக தலங்களில் இது சுக்கிரனுக்குரிய பரிகார தலமாகும். இங்கு அம்பிகை சன்னதி கிடையாது. சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது.
இக்கோவிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருப்பது தனிச்சிறப்பாகும். இடது கீழ் கையில் மோதகத்திற்குப் பதிலாக மாம்பழத்தை வைத்திருப்பதால் இவருக்கு மாங்கனி விநாயகர் என்று திருநாமம் உண்டு. மேலும் இடது மேல் கையில் நெற்கதிர்களை ஏந்தி இருப்பதால், நெற்கதிர் விநாயகர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. இத்தலத்தைச் சுற்றி உள்ள விவசாயிகள், இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால் தங்களது விவசாயம் செழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
கிணற்று நீர் பிரசாதமாக தரப்படும் விநாயகர் தலம்
சித்தூர் நகரத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில். நாட்டில் மிகப்பெரிய விநாயகர் மூர்த்தி அமைந்துள்ள ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் மூலவராக இருக்கும் வர சித்தி விநாயகர், ஒரு கிணற்றிலிருந்து சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர்.
முன்னொரு காலத்தில், இப்பகுதியில் ஊனமுற்ற மூன்று சகோதரர்கள் இருந்தனர். ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்கு கண் தெரியாது. அவர்களிடம் 'காணி' நிலமே இருந்தது. அவர்கள் அதில் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். இருப்பினும் ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அந்த சகோதரர்கள் ஒரு கிணற்றில் உள்ள நீரை நம்பி விவசாயம் செய்து வந்தனர். ஒருமுறை கிணறு வற்றிப் போகவே, அதை ஆழப்படுத்த நினைத்து தோண்ட ஆரம்பித்தனர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீரிட்டது. அங்கு விநாயகர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த விநாயகரை வெளியில் எடுக்க, அந்த ஊர் மக்கள் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அதனால் ரத்தத்தை நிறுத்த மக்கள் இளநீரால் கிணற்றிலேயே அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் உள்ள காணியில் பாய்ந்தது. எனவே இந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல, அந்த கிணற்றுக்குள்ளேயே விநாயகரை சுற்றி சன்னதி எழுப்பினர். தொடர்ந்து நீண்ட காலத்திற்குப் பிறகு அங்கு கோவில் உருவானது.
கிணற்று நீர் பிரசாதம்
இத்தலத்து விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் இங்குள்ளது. இந்த விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக் கொண்டேயிருக்கிறது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த கிணற்று நீரை நாம் அருந்தினால் நாம் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். இதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
தலைமை நீதிபதியாக கருதப்படும் விநாயகர்
இங்கு தினமும் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்த வகையான குற்றச் செயல்களாக இருந்தாலும், இங்கு நடக்கும் சத்திய பிரமாணத்தில் கலந்து கொண்டு சத்தியம் செய்தால், அவர் நிரபராதியாக இருந்தால் அவருக்கு எதுவும் ஆவதில்லை. ஆனால்,பொய் சத்தியம் செய்பவர்களுக்கு இந்த வரசக்தி விநாயகர் கடுமையான தண்டனை வழங்குவார் என்பது நம்பிக்கை. அதனால் இந்த காணிப்பாகம் பகுதியை சேர்ந்த பக்தர்களுக்கு விநாயகரை தலைமை நீதிபதியாக பார்க்கின்றனர்.
நாளுக்கு நாள் வளரும் விநாயகர்
காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார். கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த ஒருவர், ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் அந்த வெள்ளிக்கவசம் விநாயகருக்கு பொருந்த வில்லையாம்.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தில் வழிபட்டால் உடல் ஊனமுற்றவர்கள் குறைகள் தீரும். கணவன் - மனைவி பிரச்சினைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஏராளமான பக்தர்கள் இங்கு வருவதால், இக்கோவிலில் பூஜை செய்வதற்கு முன்பதிவு செய்வது அவசியம். அவ்வளவு பக்தர்கள் கூட்டம் இருக்கும்.
குளம் வெட்டிய விநாயகர்
வைத்தீஸ்வரன் கோவிலிருந்து சுமார் 4 கி மீ தொலைவில் உள்ள தேவார தலம் திருப்புன்கூர். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர். இறைவியின் திருநாமம் சொக்க நாயகி, சௌந்தர நாயகி. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம் இது. அதனால்தான் இன்றுவரை திருப்புன்கூர் ஆலயத்தில் நந்தி விலகியே நிற்கிறது என்கிறது தலபுராணம்.
திருநாளைப்போவார் கோவிலின் மேற்குபுறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணினார். அந்த பரந்து விரிந்த குளம் எத்தனை மண்ணை தோண்டினாலும் சீர்படவே இல்லை. தனியாளாக முயற்சி செய்ததால் அந்த பணி நிறைவடையாமல் நீண்டு கொண்டே இருந்தது. நாள்கள் பல கடந்தன. குளத்தை சீர்படுத்தும் பணிக்கு தனக்கு யாரும் துணை இல்லாததால் சிவபெருமானை வேண்ட, அவர் திருநாளைபோவாருக்கு உதவி செய்ய, கணபதியை செல்லுமாறு பணித்தார். விநாயகர், குளத்தை சீர் செய்யும் எல்லா பணிகளிலும் போவாருக்கு உதவினார். அவர் துணையால் திருநாளைப்போவார் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். திருக்குளம் முழுவதுமாக சீர்படும் வரை, விநாயகர் தினமும் பணியாற்றி, எந்த கூலியும் வாங்காமல் தொண்டாற்றினார். அதுவே கணபதி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். இந்தக் குளம் வெட்டிய விநாயகர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்.
இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்திய சூதவன விநாயகர்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோவிலூர். இறைவன் திருநாமம் மந்திரபுரீசுவரர், இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு.
கருடன் ஒரு முறை அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு இத்தலம் மீது வந்து கொண்டிருந்தபோது, அமுதத் துளிகள் சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றின. இங்கே வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால் அவர் வெண்னம நிறமாக காட்சி தருகிறார்.
சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள விநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இந்த விநாயகர் இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் . இப்படி மாவிலை கொத்துக்களையும், மாங்கனியையும் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடிய பாலச்சந்திர விநாயகர்
திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில். எறும்பு ஈசனை வழிபட்ட தலம் இது. இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி. இங்கு விநாயகர் பாலச்சந்திர விநாயகராக அருள்புரிகிறார். தன் அழகினால் அகங்காரம் கொண்டு அவமதித்த சந்திரனை விநாயகப் பெருமான் சாபமிட்டார். சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இதனால் கலக்கமடைந்து ஓடி ஒளிந்த சந்திரனுக்கு விநாயகப்பெருமானை வழிபட்டு நன்னிலை அடையுமாறு தேவர்கள் அறிவுருத்தினர். அதன்படி சந்திரனும் விநாயகரைப் பூஜித்து தன் சாபம் நீங்கப்பெற்றார். அதன் அடையாளமாக பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடி பாலச்சந்திர விநாயகராக, விநாயகப் பெருமான் காட்சி கொடுக்கும் தலம் இது.
பிரார்த்தனை
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள அகந்தை நீங்கி எப்போதும் சுடர்விடும் ஞான ஒளி மனதில் பிறக்கும் என்பது நம்பிக்கை.
அனுமனைப் போல வடை மாலை ஏற்கும் மருதம் விநாயகர்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் மிகமிக வித்தியாசமாக தோற்றம் அளிக்கிறார். இந்த விநாயகருக்கு தும்பிக்கை கிடையாது. மனித முகத்துடன் காணப்படும் இந்த விநாயகர், மருதம் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் வேண்டியதைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த இந்த கணபதிக்கு, அனுமனைப்போல வடை மாலை அணிவித்து, பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.
தோல் நோய் அகற்றும் விநாயகர்
மகாகவி முத்தப்பர் (1767 - 1829) என்ற கவிஞர் நகரத்தார் மரபில், செட்டிநாட்டில் பிறந்தவர். இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர், குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார். தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். முருகனின் அருளால் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது. தான் பாடும் பாடல்களால், மழையை வரவைக்கும் கவித்துவம் பெற்றவர்.
மகாகவி முத்தப்பர், இந்த கணபதியை வேண்டி மனமுருகி பாடிய பத்து பாடல்கள் காரணமாக, அவருக்கு இருந்த தோல் நோய்கள் நீங்கினார். இதனால் இன்றும் தோல் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து மருதம் விநாயகரிடம் வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டி இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
பிரச்சனைகளை தீர்க்கும் கரையேற்று விநாயகர்
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருக்கோடிக்காவல். இறைவன் திருநாமம் கோடீசுவரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
`திரிகோடி' என்றால், மூன்று கோடி என்று அர்த்தம். மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இந்தத் தலத்தில் நீங்கியதால் `திருகோடிகா' என்று பெயர் உண்டாயிற்று. முக்தி வேண்டி மூன்று கோடி மந்திர தேவதைகள் இங்கே தவம் இருந்தனர். அப்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகரைத் துதித்து வேண்டினர். அவரும் அவர்களைக் கரையேற்றி அருள் பாலித்தார். `மந்திர தேவதைகளை வெள்ளத்தில் இருந்து கரை ஏற்றியதால் இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற பெயர் பெற்றார்.
அகத்தியர் மந்திர தேவதைகளுக்கு உபதேசித்து மணலால் விநாயகரைப் பிடித்து வைத்து பிரதிஷ்டை செய்தார். முக்கோடி மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்து பூஜித்தனர்.
கரையேற்று விநாயகர் இத்திருக்கோயிலில் தென் மேற்கு திசையில் அருள்பாலிக்கிறார். இன்றுவரை மணலால் ஆன இந்த விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது, எண்ணை மட்டுமே சாற்றி வழிபட்டு வருகின்றனர்.இவருக்கு ஆயிரம் மலர்களால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, எல்லாவிதமான சாபங்களும் தோஷங்களும் நீங்கும். இன்றைக்கும் நம் வாழ்க்கைக்கான கரையை, வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார் இந்த பிள்ளையார். ஜன்ம வினைகள் நசிந்து, உயிர்கள் கடைத்தேற அருளுபவர் என்பதாலும், இவர் 'கரையேற்று விநாயகர் என்று போற்றப்படுகிறார். வாழ்வில் பிரச்னைகளால் தத்தளிப்போர் இத்தலத்து விநாயகரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நெற்றியில் நாமம் தரித்த விநாயகர்
கர்நாடகா மாநிலம், உடுப்பியிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் உள்ள கும்பாசி என்னும் ஊரில் ஆனேகுட்டே விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆனே என்றால் யானை, குட்டே என்பது சிறுகுன்றைக் குறிக்கிறது. யானை முகத்துடன் விநாயகர் குடியிருக்கும் குன்று என்பதே ஆனேகுட்டே என்றானது. கோவில் கருவறையில் விநாயகர் ஒரே கல்லிலான யானை முகம் கொண்ட 12 அடி உயரம் கொண்ட திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த விநாயகர் திருமேனியானது தமிழகத்தில் உள்ள விநாயகரின் வடிவமைப்பு போல் இல்லாமல், யானை போன்ற உருவ அமைப்பில் உள்ளது. இங்கு அமைந்துள்ள விநாயகரின் நான்கு கரங்களில், மேலிரு கரங்கள் வரம் தரும் வரஹஸ்தத்துடனும், கீழ் இரு கரங்கள் சரணடைந்தோரை காக்கும் அபயஹஸ்தத்துடனும் அமைந்திருக்கின்றன. இந்த விநாயகருக்கு நெற்றியில் திருநீறுக்குப் பதிலாக நாமம் அணியப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள விநாயகருக்கு விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்ற பெயர்களும் உண்டு. தினமும் இவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப் படுகின்றது.இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாக பக்தர்களிடம் ஒரு நம்பிக்கையுள்ளது
திருவிழாக்கள்
இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மார்கழி பிரம்மோற்சவம் ஆகியவை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பறவைகளின் ஒலி கேட்டு தான், அதிகாலையில் நாம் எழுவோம். அந்தப் பறவைகளையே அதிகாலையில் எழுப்பவும், பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்கவும் கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பிரார்த்தனை
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திர பாக்கியம் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.
நெற்றியில் கண் உள்ள விசித்திர விநாயகர்
மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். இக்கோவில் 1801-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் என்றால் கேட்டதை, வேண்டியதை அப்படியே அருளும் விநாயகர் என்பது பொருள். மும்பை சுற்றுலாவின் தவிர்க்க முடியாத ஒரு இடம் சித்தி விநாயகர் கோவில்.
இந்த கோவிலில் உள்ள சித்தி விநாயகர் ஒற்றை கருங்கல்லால் ஆனவர். அவர் 2 அடி 6 அங்குல உயரமும், 2 அடி அகலமும் கொண்டவர். மற்ற விநாயகர் கோவிலில் உள்ளது போன்று இல்லாமல், இந்த சித்தி விநாயகர், தனது தும்பிக்கையை இடது பக்கம் வைத்திருப்பதற்கு பதிலாக, வலது பக்கம் வைத்திருப்பது மிகவும் சிறப்பு. இந்த விநாயகரின் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி இருக்கின்றார். கீழே உள்ள இடது கையில் ஒரு கிண்ணம் நிறைய மோதகம் உள்ளது. வலது கீழ் கையில் ஜெப மாலை வைத்துள்ளார். விநாயகர் பூணூலை ஒத்த, ஒரு பாம்பு உருவம் பூணல் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட விநாயகரின் நெற்றியில் கண் உள்ளது மிகவும் விசித்திரமாக பார்க்கப்படுகின்றது. சித்தி விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர் உள்ளனர். விநாயகரின் இருபுறமும் சித்தி மற்றும் ரித்தி(புத்தி) என்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன. இவர்கள் விநாயகரின் பின் பகுதியிலிருந்து முளைத்து இருப்பது போன்றும், வளைந்து முன்பகுதியில் காட்சியளிக்கும் வண்ணம் விக்கிரகம் அமைந்துள்ளது. இரு பெண் தெய்வங்களுடன் காட்சி அளிப்பதால் இந்த விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகின்றார். இவரை மராட்டியில் நவசாக கணப்தி, நவச பவனார கணபதி என அழைக்கின்றனர்.
இக்கோவில் மிக நவீன பாணியில் கட்டப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்தாலும் கோவிலின் கோபுரம் தெரியும் வகையில், மிக உயரமாக, 5 அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதம், பிரத்தியேக லிஃப்ட் மூலம் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அர்ச்சகர்களால் கணபதிக்கு படைக்கப்படுகின்றது.
சித்தி விநாயகர் கோவிலின் மிக முக்கியமான நாள் செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் கூட்டம் அலை மோதும். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து விடுவார்கள். அடுத்த நாள் புதன்கிழமை அதிகாலை 12.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே செவ்வாய் கிழமைகளில் சங்கடஹர சதுர்த்தி வரும். இதை அங்காரக சதுர்த்தி என்பர். அந்த நாளில் விநாயகரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.
பிரார்த்தனை
குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்தவராக இந்த சித்தி விநாயகர் திகழ்கின்றார். வேண்டியது நிறைவேறினால், கோயிலுக்கு வந்து விளக்கேற்றி, எருக்கம்பூ, இலை மாலையை அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் பணக்காரராக மாறிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்தியாவின் மிக பணக்கார கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் கோவில் உருவாகக் காரணமான உச்சிப்பிள்ளையார்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் தலங்களில் முதன்மையானது, திருச்சி மாநகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகும். பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் 275 அடி உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மலையானது தென்தமிழகத்தின் கைலாயம் என்று போற்றப்படுகின்றது. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன.
இந்த மலைக் கோவிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.உச்சிப் பிள்ளையார் கோவிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.
தல வரலாறு
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் இராவணனின் சகோதரன் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக ராமர், விபீசணனுக்கு ரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் ராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.
விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், ரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், ரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் குட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.
விபீசணன் குட்டியதால் ஏற்பட்ட வீக்கத்தை இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் காணலாம்.
ரங்கநாதரின் சிலை வைக்கப்பட்டிருந்த இடம் நீண்ட காலமாக தீவு பகுதியான அடர்ந்த காடுகளுக்குள் மூடப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகள் கடந்து ஒரு சோழ மன்னன் கிளியைத் தேடிக் கொண்டு வரும் போது தற்செயலாக அந்த சிலை இருந்ததைக் கண்டுபிடித்தார். பின்னர் பிரம்மாண்டமான ஸ்ரீரங்கம் கோவிலை கட்டினார்
விநாயகர் சதுர்த்தி விழா - 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம்
விநாயக சதுர்த்தியன்று மலைக்கோட்டை கீழ் சன்னதியில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டை மேல் எழுந்தருளி இருக்கும் உச்சிப் பிள்ளையார் ஆகிய இரு சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை என 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஒருநாள் முன்பே கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள். இந்தக் கொழுக்கட்டை சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்படும். பின்னர் இரண்டு விநாயகருக்கும் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் தேன் அபிஷேகத்தை உறிஞ்சும் அதிசய விநாயகர்
கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ . தொலலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்புறம்பியம். இறைவன் திருநாமம் சாட்சிநாதேசுவரர். இறைவியின் திருநாமம் கரும்பன்ன சொல்லம்மை.
தல வரலாறு
ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால், இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயர் பெற்றது.
இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப்பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை, வருண பகவான் உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் முழுக்க முழுக்க தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மாலை 6:30 மணிக்கு தொடங்கப்படும் அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். .அபிஷேகம் செய்யப்பெறும் தேன்யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். இந்தத் தேன் அபிஷேகம் நடைபெறும் வேலையில் விநாயகர் செம்பவளத் திருமேனியராய் காட்சித் தருகிறார் வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
விநாயகர் சதுர்த்தி அன்று பிரளயம் காத்த விநாயகரை வணங்கினால் சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும்.
ராகு- கேது உடன் இருக்க அருள் பாலிக்கும் ஸ்ரீசக்தி விநாயகர்
திருநெல்வேலி தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேது உடன் இருக்க ஸ்ரீசக்தி விநாயகர் அருள் பாலிக்கிறார் . ஸ்ரீவிநாயகருக்கு வலப்பக்கம் உள்ள ஐந்து தலை நாகத்தைப் பெருமாளாகவும், ஒற்றைத் தலை நாகத்தை சிவலிங்கமாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.
ஒருகாலத்தில், இந்த ஊரில் கோவிலே இல்லாமல் இருந்ததாம். இதனால் அங்கே அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்ததாக எண்ணிய ஊர்மக்கள் அதையடுத்து கூடிப் பேசி, இந்த விநாயகர் கோவிலைக் கட்டினார்கள்.விநாயகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும்போது, மக்கள் கூடவே ராகு-கேது (நாக) விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் .
பிரார்த்தனை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மாங்கல்ய தோஷம், புத்திர பாக்கிய தோஷம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், இங்கு நாக பிரதிஷ்டையுடன் அருள் தரிசனம் தரும் ஸ்ரீவிநாயகரை வழிபட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருடந்தோறும் ராகு-கேது பெயர்ச்சி அன்று ஸ்ரீகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், ஆயுளை விருத்திப்படுத்த ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை இங்கே விமரிசையாக நடைபெறும்.
நீடித்த ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் அருளும் கள்ள வாரண பிள்ளையார்
மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ .தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருக்கடையூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவியின் திருநாமம் அபிராம வல்லி.
இத்தலத்தில் அமிர்தகடேசுவரர் சன்னதி வலதுபுறம், நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில், கள்ள வாரண விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கள்ள வாரண விநாயகர் சன்னதி, விநாயகரின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகும்.
கள்ள வாரண விநாயகர் தனது தும்பிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். இவருடைய தோற்றத்திற்கு பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது விநாயகரை வழிபட மறந்தனர் . இதனால் விநாயகப் பெருமான் அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் கள்ள வாரண பிள்ளையார் எனப்படுகிறார். இவரை சமஸ்கிருதத்தில் சோர கணபதி என்பார்கள். விநாயகர் ஒளித்து வைத்த அமிர்த குடம், லிங்கமாக மாறி அமிர்தகடேசுவரர் ஆனது.
சிவபெருமான் விநாயகரை வழிபட்டு, அமிர்தம் பெறுமாறு தேவர்களுக்கு வழி காட்டினார். அதன்படி தேவர்கள் திருக்கடவூரில் கணபதியை வழிபட்டு அமிர்தம் கிடைக்கப் பெற்றனர். இந்தத் தலத்தில் விநாயகப் பெருமானை வணங்கினால் அமிர்தம் அருந்தாமலேயே நீடித்த ஆயுளைப் பெறலாம் என்பது ஐதீகம். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.