திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்க தலத்தின் பரிவார தலங்கள்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இறைவியின் திருநாமம் பிரகத் சுந்தரகுஜாம்பிகை.

இத்தலம் மகாலிங்கத் தலம் எனவும் இதனைச் சுற்றியுள்ள ஒன்பது தலங்களை இதன் பரிவாரத் தலங்கள் என்றும் சொல்வர். ஒரு சிவாலயத்தில் மூலவராக விளங்கும் லிங்கம், அவருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் நந்தி, சுற்றுப்பிரகாரத்தில் பிரதட்சணமாகச் சென்றால் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ் கந்தர், சண்டேச்வரர், பைரவர், நடராஜர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. ஐதீகப் பிரகாரம் மூலவரைத் தரிசித்து வணங்கியபின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோஷ்ட தெய்வங்களைத் தரிசித்தால்தான் சிவதரிசனம் பூர்ணமாகப் பூர்த்தியாகும் என்பது நமது பண்டைய மரபு மற்றும் சாஸ்திரமாகும்.

இந்த ஆகம முறைப்படி, ஒரு ஆலயம் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டுமோ அதேபோல் சோழ நாட்டையே ஒரு சிவாலயமாக்கி, அதன் நடுநாயகராகத் திருவிடை மருதூர் உறை மகாலிங்கத்தை மூலவராக்கி இருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் மூலவரான மகாலிங்கத்தை கர்ப்பக்கிரகமாக நோக்கினால், இவ்வாலயத்தின் ஏனைய பரிவார மூர்த்திகள் இருக்க வேண்டிய திசைகளில் உள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திவ்ய ஷேத்ரமாக விளங்குவதைப் பார்க்கலாம். இவை அனைத்துமே ஆகம விதிப்படி எந்தெந்தப் பரிவார மூர்த்திகள் எந்தெந்தத் திசைகளில் இருக்க வேண்டுமோ, அவ்வூரில் உள்ள அந்த ஆலயம் அவ்வாறே விசேஷ தலமாக அமைந்திருக்கிறது. அந்த பரிவாரத் தலங்களும், அத்தலத்து மூர்த்தியும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1 - நந்தி - திருவாவடுதுறை.

2- சோமாஸ்கந்தர் - திருவாரூர்.

3- தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.

4 - விநாயகர் - திருவலஞ்சுழி.

5 - முருகன் - சுவாமிமலை.

6 - சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.

7 - நடராசர் - தில்லை.

8 - பைரவர் - சீர்காழி.

9 - நவக்கிரகம் - சூரியனார் கோயில்.

இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக விளங்குகிறது.

மகாலிங்கேசுவரர்

மகாலிங்கேசுவரர்

பிரகத் சுந்தரகுஜாம்பிகை

மூகாம்பிகை

Previous
Previous

கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்

Next
Next

குத்தாலம் சோழீஸ்வரர் கோவில்