சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவில்

வேற்று மதத்தினரும் செவ்வாய் தோஷம் நீங்க வழிபடும் தேவாரத் தலம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள தேவாரத் தலம் சிறுகுடி. இறைவன் திருநாமம் சூட்சுமபுரீஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை, தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு மங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோவில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது.

தல வரலாறு

ஒருமுறை கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில் பார்வதி பெற்றி பெற்றாள் அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார் கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான காட்சி கொடுத்து அவளை மீண்டும். ஏற்றுக்கொண்டதாக தல புராணம் கூறுகிறது. கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர். அது மருவி தற்போது, 'சிறுகுடி' என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள். மணலால் பிடித்த லிங்கம் என்பதால், அபிஷேகம் செய்வதில்லை. மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது. சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்துகொண்டதால் இத்தழும்புகள் உண்டானது.

செவ்வாய்தோஷ நிவர்த்தி தலம்

செவ்வாய் பகவான் வந்து வணங்கி விமோசனம் பெற்றதால், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு நிவர்த்தி தரும் தலமாக விளங்குகின்றது. பெரும்பாலும் மாங்கல்ய தோஷம், கடன்தொல்லை, பயம், சண்டை சச்சரவு, வாகன விபத்து, ரத்தம் சம்பந்தமான நோய்கள், மாரடைப்பு, தீயினால் ஏற்படும் காயங்கள் அனைத்தையும் நீக்கி, அருள்தரும் மங்களநாதராக சுவாமி இருக்கிறார்.

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து செல்கிறார்கள். மேலும் புதிதாக வீடு கட்டுபவர்களும் தாங்கள் கட்டும் வீடு மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மங்களாம்பிகை ஏற்படுத்திய மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்களநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.

செவ்வாய்தோஷம் உடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவசியம் வந்து வணங்கவேண்டிய கோயில் இது. வேற்று மதத்தினர்கள்கூட இங்கு வந்து செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவதைப் பார்க்கலாம்.

 
Previous
Previous

சின்னமனூர் லட்சுமிநாராயணர் கோவில்

Next
Next

கோயில் வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில்