திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில்

ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்

விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநாவலூர். இறைவன் திருநாமம் பக்தஜனேஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி அம்மை.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி ஆல மரத்தின் கீழ், அமர்ந்த நிலையில்தான் காட்சிகொடுப்பார். கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக விளங்குவதால் குருதட்சிணாமூர்த்தி என்று அழைக்கபடுவார். மேலும் படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமாரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் ஞானம் போதிக்கும் நிலையில், சின் முத்திரை தரித்த கோலத்தில் அவர் காட்சி கொடுப்பார்.

ஆனால், இக்கோவில் சன்னதியில் கோஷ்ட மூர்த்தியாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில், வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு அதிசயத்தக்கது. வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாதது.

சுந்தரர் பூராட நட்சத்திரத்தில் இங்கே இருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றுகொண்டார் என சொல்லப்படுகிறது. இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். எனவே இவரை பூராட நட்சத்திர அன்பர்கள் வழிபட்டால், அவர்களுக்கு நன்மை உண்டாகும்.

படம் உதவி : திரு. செந்தில் குருக்கள், திருநாவலூர்

 
Previous
Previous

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில்

Next
Next

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்