முருகன்
வள்ளியும் தெய்வயானையும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் வித்தியாசமான அமைப்பு
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் அமைந்துள்ளது சிவந்தியப்பர் கோவில்.இறைவன் திருநாமம் சிவந்தியப்பர். இறைவியின் திருநாமம் வழியடிமை கொண்டநாயகி. சிவந்தியப்பர் என்ற மன்னன் இக்கோவிலைக் கட்டியதால், இத்தலத்து இறைவனுக்கும், சிவந்தியப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவில் பிரகாரத்தில் முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை சமேதராக எழுந்தருளி உள்ளார். பொதுவாக முருகப்பெருமானுடன் இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும், முருகருக்கு வலது பக்கமும், இடது பக்கமுமாக இருந்து பக்தர்களை பார்ப்பது போல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், முருகப்பெருமானுக்கு வலது பக்கமும், இடதுபக்கமுமாக இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்படியாக, நின்றபடி அருள் பாலிக்கின்றனர். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்.
முருகனுக்கு மிட்டாய்களை நைவேத்தியமாக செலுத்தும் வினோத நடைமுறை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி செல்லும் வழியில், இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் கோவில். மிகவும் பழமையான இந்த கோவில், பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவில்களில் ஒன்றாக விளங்குகின்றது. கருவறையில், குழந்தை வடிவில் கையில் வேலுடன் திகழ்வதால், முருகப் பெருமானுக்கு குழந்தை வேலப்பர் என்று பெயர். இவருக்கு மிட்டாய் முருகன் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
ஒரு பக்தர் தனக்கு மழலைச் செல்வம் வேண்டி, இத்தலத்து முருகனிடம் பிரார்த்தனை செய்தார், அவருடைய விருப்பம் நிறைவேறியதும், அவர் இங்குள்ள முருகனை வணங்கி, தன்னுடன் வந்த உறவினர்களுக்கு சாக்லேட்களை விநியோகித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் தோன்றி, எனக்கு ஏன் மிட்டாய் கொடுக்கவில்லை என்று கேட்டார். உடனே அந்த பக்தர் கோவிலுக்கு விரைந்து வந்து, முருகனுக்கு மிட்டாய்களை வழங்கினார். அன்றிலிருந்து மிட்டாய் கொடுத்து முருகனை வழிபடும் வினோத நடைமுறை இங்கு வாடிக்கையாகிவிட்டது. கோவிலுக்கு வெளியே மிட்டாய்கள் விற்க கவுண்டர்கள் உள்ளன.
பிரார்த்தனை
இங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர்.
திருமணம், பிள்ளைவரம் முதலான வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள், குழந்தை வேலப்பருக்கு மிட்டாய்களை நைவேத்தியமாகச் செலுத்துகின்றனர். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று, குழந்தை வேலப்பருக்கு செந்நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைத்து, மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தால், கல்வித் தடை நீங்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.
பழநி பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள், குழந்தை வேலப்பரை தரிசித்து, மிட்டாய் வழங்கிவிட்டே பழநிக்குச் செல்கின்றனர்.
முருகப்பெருமானின் தலைக்கிரீடத்திலிருந்து முத்து விழுந்த மலை
கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையே உள்ள கிணத்துக்கடவு என்ற ஊரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் முத்துகவுண்டனூரில் உள்ளது, முத்துமலை முருகன் கோவில். மலை மேல் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு.
முருகப்பெருமான் தனது வாகனமான மயிலின் மீது உலகைச் சுற்றிக் கொண்டிருந்தபோது, அவரது கிரீடத்திலிருந்து ஒரு முத்து விழுந்தது. முருகன் அந்தமுத்துவைத் தேடியபோது, அது இந்த மலையின் மீது விழுந்திருந்தது. முருகப்பெருமான் அதை மீட்க இம்மலையின் மீது கால் வைத்தார். முருகனின் முத்து இம்மலையில் விழுந்ததால், இந்த மலை முத்துமலை என்று அழைக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, முருகப்பெருமான் ஒரு உள்ளூர் பெண்ணின் கனவில் வந்து, மூன்று காரைச் செடிகளின் (காட்டு மல்லிகை) வரிசையின் கீழ் புதைந்து இருப்பதாகக் கூறினார். இதை அந்தப் பெண் உள்ளூர் பெரியவர்களிடம் கூறியபோது, யாரும் நம்பவில்லை. தொடர்ந்து மூன்று கிருத்திகை மற்றும் பரணி நட்சத்திர நாட்களில் அவள் கனவில் முருகன் மீண்டும் தோன்றினார். அந்தப் பெண் முருகனை தேடிச் சென்றபோது, மூன்று காரைச் செடிகள் வரிசையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஊர் பெரியவர்கள் அவளை நம்பி, அந்த இடத்தில் ஒரு வேல் (ஈட்டி) நிறுவி, அதை முருகனின் பிரதிநிதியாகக் கருதி வழிபட்டனர். பின்னர் இந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இத்தலத்தில் நாகர் சன்னதி அமைந்துள்ளது. அதனால் நாக தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் இத்தலத்தில் நடத்தப்படுகின்றது. கோவிலுக்கு அருகில் ஒரு எறும்புப் புற்று உள்ளது. இந்த எறும்புப் புற்றிலிருந்து இரவு நேரங்களில் ஒரு ஒளி வெளிப்படுகிறது. இந்த ஒளியை பல பக்தர்கள் தரிசனம் செய்திருக்கிறார்கள். இந்த ஒளிர்விற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.
சின்னப் பழனி என்று போற்றப்படும் முருகன் தலம்
முருகப்பெருமானின் விசேஷமான திருக்கோலம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள வையப்பமலை ன்னும் ஊரில், மலை மீது அமைந்துள்ளது சுப்ரமணியசுவாமி கோவில்.
கருவறையில் இரண்டு கரத்தினராக , இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர். முருகனுக்கான விசேஷமாகச் சொல்லப்படும் 16 கோலங்களில், இந்த சுப்பிரமணியர் திருக்கோலமும் ஒன்று. குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன.
இத்தலத்திற்கு முற்காலத்தில் வைகை பொன்மலை என்று பெயர். அதன் பின்னணியில் பழனி முருகன் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று உள்ளது.
இந்த மலைக்கு அருகில் ‘அலவாய்மலை’ என்று அழைக்கப்படும் உலைவாய்மலை அமைந்துள்ளது. இந்த உலைவாய் மலையின் ஒரு பகுதியான சித்தர்மலையிலே, சித்தர்கள் பலர் தங்கியிருந்து மூலிகைகள் பல கொண்டு ரச வாதத்தின் மூலம் பொன் செய்தார்கள். இவ்வாறு பல காலம் செய்த பொன்னை எல்லாம் அவர்கள் ஒன்று திரட்ட, அது ஒரு பொற் குன்றாக விளங்கியது.
பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி, சித்தர்களின் மதி எல்லாம் பொன்னின் பால் சென்றதால் அவர்களை தடுத்தாட்கொண்டு திருவிளையாடல் புரிய விரும்பினார். முருகப்பெருமான் அந்த சித்தர்களிடம், ஆடு மேய்க்கும் இடையனை போன்ற வடிவத்தில், அவர்களிடம் சீடனாக சேர்ந்து, அவர்கள் அயர்ந்த சமயத்தில் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கலானார்.
அதைக் கண்ட சித்தர்கள் அவன் யார் என்று தெரியாமலேயே, ‘வை பொன்னை’, ‘வை பொன்னை’ எனக் கூவிக்கொண்டே துரத்தினர். ‘நீ தூக்கிச் செல்லும் பொன்மலை உனக்கு உதவாமல், கல் மலையாக போகக் கடவது’ என்று சித்தர்கள் சாபம் தந்தனர். அதனால் இந்த பொன்மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியது.
சித்தர் மலையில் இருந்து முருகப்பெருமான் பொன்மலையை தூக்கிச் சென்ற போது ஒரு சிறு பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடம் தற்போது பொன்மலை என்று அழைக்கப்படுகின்றது.
முருகப்பெருமான் தற்போது உள்ள பொன்மலைக்கு வந்ததும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஔவையார் முருகனைக் கண்டு அடையாளம் கண்டு கொண்டு,’வைக,பொன் மலையை’ என்று வேண்டினார். அதற்குச் இசைந்த முருகன், இவ்விடத்தே பொற்குன்றை வைத்து விட்டு ஔவைக்கும் துரத்தி வந்த சித்தர்களுக்கும் மலை மீது காட்சி அளித்து, உபதேசம் செய்து அருளினார். அதுமுதல், வைகைப்பொன்மலை என்றும், பேச்சு வழக்கில் வையப்பமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
பழனி மூலவர் பீடத்தில், மூலவர் தண்டாயுதபாணி இல்லாததைக் கண்ட போகர், தனது ஞான திருஷ்டியின் மூலமாக நடந்ததை அறிந்து நவ பாசனத்தால் மூலவர் சிலையை உருவாக்கி பீடத்தில் வைத்து விட்டார்.
அதுமுதல் பழனியில் நவபாஷான முருகனும், வைகைபொன்மலையில் மூலவரான பாலதண்டாயுதபாணியான முருகனும் மேற்கு நோக்கி அருள்புரிந்து வருகிறார்கள். இதனால் தான் இத்தலம் சின்னபழனி என்று போற்றப்படுகின்றது.
திருத்தணிகை செல்வதற்கு முன்பு வணங்க வேண்டிய திருப்புகழ் தலம்
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள நெடியம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது செங்கல்வராய சுவாமி கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 600 படிக்கட்டுகள் உள்ளன. யானை படுத்துக் கொண்டிருப்பது போல் இந்த மலை உள்ளதால், யானை மலை, கஜகிரி என்ற பெயர்களும், நெடியமலைக்கு உள்ளன. .அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது..
முருகனை இத்தலத்தில், இந்திரன் 'செங்கல்வம்' என்னும் நீலோத்பல மலரால் வழிபட்டமையால், முருகன் 'செங்கல்வராய சுவாமி' என்று போற்றப்படுகிறார். இங்கே முருகப்பெருமான் ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு இருபுறமும் தேவிமார் சூழ, கடிஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
முருகப்பெருமான் வேடர்கள் அறியாமல் வள்ளியைக் கவர்ந்து வர, வேடர்கள் அவருடன் போருக்கு வர, முருகன் போர் புரிந்து சினம் அடங்காமல் நின்ற இடம் தான் இத்தலம். அவரது சினத்திற்கு இம்மலை தாங்காமல் ஆடவே, அருகிலுள்ள தணிகைமலையில் சென்று கோபம் தணிந்தாராம்.. முருகப்பெருமான் திருத்தணிக்கு செல்வதற்கு முன்பு சில காலம் இங்கு தங்கியிருந்ததால், பக்தர்கள் முதலில் செங்கல்வராய சுவாமியை வணங்கிவிட்டு பின்னர் திருத்தணிக்கு செல்லலாம்.
பிரார்த்தனை
கல்வித்துறை சார்ந்தவர்களும், வாகனத் துறையில் இருப்பவர்களும் வழிபட நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆடி கிருத்திகை சிறப்புகள்
முருகப்பெருமான், சூரனை அழிக்க சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்த நாள்தான் கிருத்திகை. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிப் பொறிகள், ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் சேர, அவற்றைத் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அந்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் 'கார்த்திகை' நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
அனைத்து கிருத்திகை நாட்களுமே முருகனுக்கு உகந்தவை என்றாலும் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை, கார்த்திகை மாத கிருத்திகை என்ற மூன்று கிருத்திகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
ஆடி கிருத்திகையன்று, திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் போன்ற முக்கிய முருகன் கோவில்களில் மாபெரும் கொண்டாட்டங்கள் நடைபெறும். கோவில்கள் மலர்கள், விளக்குகள் மற்றும் வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
'ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை சித்திக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆடி கிருத்திகை அன்று, பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, பால் குடம், காவடி எடுத்து முருகனை வழிபடுகின்றனர். முருகப் பெருமானின் வேல் வழிபடப்படுகிறது. மற்றும் பக்தர்கள், தங்களின் பக்தியின் அடையாளமாக வேல் ஏந்துகின்றனர்.
மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படும் முருகன் தலம்
புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தபசுமலை பாலதண்டாயுதபாணி கோவில். சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலை அடைய, 75 படிக்கட்டுகள் உள்ளன. சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்குத் தபசு மலை என்ற பெயர் வந்துள்ளது. இக்கோவில், 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பாலதண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் வழிபாடு செய்ய செல்லும் பக்தர்களுக்கு, மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு நோய் உள்ளிட்டவைகள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம்.
கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இங்கு வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானை வழிபட்டால் அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது. கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து ஒருமுறை தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மனவேற்றுமையால் பிரிந்து வாழும் கணவன் அல்லது மனைவி முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது நம்பிக்கை. கிரக தோஷம், நாக தோஷம் உள்ளவர்களும் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறார்கள்.
குகனுக்காக, வில்லும் அம்பும் ஏந்தி ராமராக காட்சியளித்த முருகப்பெருமான்
தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாறப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி.
இக்கோவிலில் அமைந்துள்ள வேலவன் கோட்டம் என்ற சன்னதியில் முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி, தனுசு சுப்பிரமணியயராக வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இப்படி இவர் ராமர் போல், வில்லும் அம்பும் ஏந்தி காட்சி அளிப்பதற்கு, இராமாயண காலத்து நிகழ்ச்சி ஒன்றுதான் காரணம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், அங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியை ஆளத் துவங்கினார். அப்போது தன்னுடைய சொந்த ஊரான சிருங்கிபேரபுரத்தில் தங்கி இருந்த குகனுக்கு, ராமருடைய பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராமரைக் காண வேண்டும் என்று முருகரிடம் குகன் பிரார்த்திக்க, முருகர் கோதண்ட ராமனாகவும், வள்ளி சீதையாகவும், தெய்வயானை லட்சுமணராகவும் காட்சி கொடுத்தனராம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.
முருகன் வேலை தலைகீழாக பிடித்திருக்கும் தலம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. இப்படி, மற்ற முருகன் கோவில்களில் இருந்து வேறுபட்டு, முருகன் வேலை தலைகீழாக பிடித்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
முருகன் வேலை தலைகீழாக பிடித்து இருப்பதற்கான காரணம்
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கப் போருக்குச் செல்லும் போது முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான், அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போரிடும் போது முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது. தாரகாசுரனை அழித்த இரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த இரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலைத், தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார்.முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர்.
பிரார்த்தனை
இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.
சுவாமி மலையை அடுத்து முருகன் குருவாக இருந்து உபதேசம் செய்த தலம்
மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம் இது. முருகன் சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்தது போல், இத்தலத்தில் பிரம்ம தேவனுக்கும், மயிலுக்கும் உபதேசம் செய்து அருளினார்.
பொதுவாக சிவன் கோவில்களில் சிவன் சன்னதிக்கு பின்புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும் ஆனால் இந்தவத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும் ,ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுகிறார்கள். இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், ஆறு முகங்களுடனும், 12 கைகளுடனும் வள்ளி தெய்வயானை சமேதராக எழுந்தருளி இருக்கிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில், முருகனின் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். இத்தல முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறவிக்கடன் தீரும் என்பது ஐதீகம்.
முருகக் கடவுள் அவதரித்த வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். விசாகம் என்றால் ஆறு நட்சத்திரங்கள். ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கிணைந்திருப்பதால், ஆறு முகங்களுடன் முருகன் தோன்றியதாக ஐதீகம். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகக் கடவுள். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான்.
பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருமழப்பாடி என்ற ஊரில் சிவன் திருநடனம் ஆடியது வைகாசி விசாகத்தினத்திலே.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம் அவதரித்ததும் வைகாசி விசாகத்தன்று தான்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.
இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.
தர்மத்திற்கு அதிபதியான எமதர்மராஜன் அவதரித்தது ஓர் வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமாரியம்மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முருகனின் பாதச்சுவடுகள் பதிந்த மலை
வேலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள புதுவசூர் என்ற கிராமத்தில் மலை மீது அமைந்துள்ளது தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில். இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த மலைக்கோயிலுக்கு நடந்து செல்ல 220 படிக்கட்டுகளும், வாகனங்கள் செல்ல சாலை வசதியும் இருக்கின்றது. கருவறையில் முருகன், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி அளிக்கிறார். இந்தக் கோவிலில் முருகப்பெருமானும் வள்ளியம்மையும் சம உயரத்தில் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும். தெய்வானை முருகனை விட சற்று குறைவான உயரத்தில் காட்சி அளிக்கிறார்.
வள்ளிமலையில் நம்பிராஜன் மகளாக வளர்ந்து வந்த வள்ளியைத் திருமணம் செய்து கொள்வதற்காக, முருகன் வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை நோக்கிச் சென்றபோது, இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறி பாதம் பதித்துச் சென்றார். இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த ஆலயத்திற்கு படியேறிச் செல்லும் பாதையில், பத்துப் படிகள் ஏறியதுமே வலதுபுறம் காட்சி தருகின்றன.
இந்த மலைப்பகுதிக்கு ஒளவையார் வந்தபோது அவரிடம் விளையாட விரும்பிய முருகன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியது இந்த மலையில்தான்.
பிரார்த்தனை
இந்த மலையில் முருகப்பெருமான் தன் திருவடிகளைப் பதித்து இளைப்பாறியதால், இந்த கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் மனத் துன்பங்கள் விலகி, முருகனின் அருளால் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருச்செந்தூர் முருகனைப் போன்ற திருக்கோலத்துடன் எழுந்தருளி இருக்கும் முருகன் கோவில்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், புதுக்குடியையும் ஶ்ரீவைகுண்டத்தையும் இணைக்கும் பாலத்துக்குக் கீழ், தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது நதிக்கரை முருகன்.
இக்கோவில் மூலவரான முருகன், திருச்செந்தூர் முருகனைப் போன்ற திருக்கோலத்துடன் இருக்கின்றார். திருச்செந்தூரில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தவநிலையிலும், சிவனைப் பூஜிக்கும் தன்மையுடனும் திகழ்வதாக ஐதிகம். அதனால் அங்கே, கருவறையில் செந்தில் ஆண்டவரின் இடப்புறத்தில் சிவலிங்கம் உண்டு. திருச்செந்தூரைப் போன்றே இங்கும் கருவறையில் முருகன் அருகில் சிவலிங்கத் திருமேனி உண்டு. இங்கு ஶ்ரீசுப்ரமணியர், ஶ்ரீசண்முகப் பெருமான் என்று இரண்டு உற்சவர்கள். இருவருமே தேவியருடன் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள்.
திருச்செந்தூரில் கடற்கரையில் நிகழும் சூரசம்ஹாரம், இங்கே நதிக்கரையில் நிகழ்வது சிறப்பம்சம் ஆகும். திருச்செந்தூர் முருகன் போன்ற உருவ ஒற்றுமையுடன் நதிக்கரை மூலவர் அருள்வதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வழிபட்டால், திருச்செந்தூரில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆகவே, கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூருக்குச் செல்ல முடியாத பக்தர்கள், இந்தக் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
திருமண பாக்கியம் அருளும் விருட்ச கல்யாண வழிபாடு
இந்தக் கோவிலின் விசேஷங்களில் ஒன்று விருட்ச கல்யாணம். இந்தக் கோவிலின் தல விருட்சமாக அரசும், வேம்பும் பின்னிப் பிணைந்தபடி திகழ்கின்றன. இவற்றின் அடியில் நாக சிலைகள் உள்ளன. திருமணத் தடை உள்ளவர்கள், தோஷங்களின் காரணமாக கல்யாண நடப்பதில் தாமதம் ஏற்பட்டு அதனால் வருந்தும் அன்பர்கள், எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையாதவர்கள், இங்கு வந்து இந்த விருட்சங்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். ஶ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இந்த முருகனுக்கு வேண்டிக்கொண்டு, கல்யாணம் நிச்சயம் ஆனதும், இந்தக் கோவிலுக்கே வந்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.
வள்ளி, தெய்வயானையின்றி பாலமுருகனாக அருளும் தலம்
வெள்ளிபோல் மின்னும் மலை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளி மலை. 200 அடி உயரம் உள்ள இந்த மலைக்கோவிலுக்கு செல்ல சாலை வசதியும், படிக்கட்டுகளும் உள்ளன. இந்த மலையில் ஒருவகை தாதுப்பொருள் கலந்திருப்பதால், சூரிய ஒளி பட்டு இந்த மலை வெள்ளிபோல் மின்னுகின்றது. அதனால், இந்த மலைக்கு வெள்ளிமலை என்று பெயர் வந்தது.
கோவில் கருவறையில், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானையின்றி பாலமுருகனாக அருள் புரிகிறார். அவரின் வசீகர தோற்றம் பார்ப்பவரை பரவசமடைய செய்யும். சித்திரை மாதம் பத்தாம் நாள் சூரியக் கிரணங்கள் நீளமான மண்டபத்தைக் கடந்து வந்து முருகனின் திருப்பாதங்களைத் தழுவி வணங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும். அன்று முருகப் பெருமானை தரிசித்தால் நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
இக்கோவில் பாலமுருகனை வழிபட்டால், குழந்தைப் பேறு கிட்டும், திருமண வரம் கிடைக்கும், நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
திருச்செந்தூருக்கு இணையான திருப்புகழ் தலம்
தஞ்சாவூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில், பெருமாக்கநல்லூர் அருகே உள்ள காவலூர் கிராமத்தில் அமைந்துள்ளது சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான முருகன் கோவில்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர் இக்கோவில் முருகன் மீது திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு அருகில் ஓடும் வெட்டாறு, தெற்கில் இருந்து வடக்கு திசை நோக்கிப் பாய்வதால், உத்திர வாஹினி என்று கருதப்படுகிறது. எனவே இத்தலம் காசிக்குச் சமமாக கருதப்படுகிறது. அதனால் காசிக்குப் போக வேண்டாம், காவலூர் சென்றாலே போதும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
இந்தக் கோவில் மாடக்கோவில் வகையைச் சேர்ந்ததாகும். கோவிலை அடைவதற்கு 12 படிக்கட்டுகள் உள்ளன. இந்த 12 படிகள் 12 ராசிகளைக் குறிக்கும். கருவறையில் ஆறு முகங்களுடன் 12 கைகளுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக மயில் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள முருகன், திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார்.
பிரார்த்தனை
செவ்வாய் தோஷம் நீங்கவும், திருமண தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செவ்வாய் கிரகத்துக்கான தெய்வமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். திருக்கருகாவூர் கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் இக்கோவிலின் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். காசிக்கு இணையான தலம் என்பதால், இக்கோவில் பித்ரு தோஷ நிவர்த்திக்கும் புகழ்பெற்றது.
முருகனின் திருவடி பதிந்த திருப்புகழ் தலம்
சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில், சோளிங்கரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஞானமலை முருகன் கோவில். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு செல்ல 150 படிக்கட்டுகள் உள்ளன. அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.
கோவில் கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டிதசுவாமி காட்சி அளிக்கிறார். ஒருமுகம், நான்கு கரங்கள், பின் இரு கரங்களில். கமண்டலம், ஜபமாலை, முன்வலக்கரத்தில் அபயமுத்திரை, முன் இடக்கரம் இடுப்பில் வைத்து, முருகப்பெருமான் நின்ற கோலத்தில், 'பிரும்மசாஸ்தா' வடிவத்தில்' காட்சி அளிக்கிறார். வள்ளியை மணந்துகொண்டு முருகப்பெருமான் இங்கு வந்தபோது, இம்மலையில் முருகன் வள்ளியோடு உலாவினார். இம்மலையில் முருகப்பெருமானின் திருவடி பதிந்துள்ள புனிதமான இடம் உள்ளது.'ஞானம்' என்பதற்கு திருவடி என்றும் பொருள். எனவே, ஞானமலை என்பதை திருவடி மலை என்றும் கூறலாம்.
அருணகிரிநாதருக்கு முருகனின் திருவடி தரிசனம் கிடைத்த ஞானமலை
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனித்தபோது முருகப்பெருமான் தனது திருவடிகளை அவருக்கு காட்சி தந்து ஆட்கொண்டான். முருகனின் திருவடியை மறுபடியும் தரிசிக்க வேண்டிய அருணகிரிநாதருக்கு, மீண்டும் ஞானமலையில் அவருக்கு திருவடி தரிசனம் தந்து அருளினான். கோவில் தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த 'குறமகள் தழுவிய குமரன்' வடிவம், வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவமாகும். நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் அரிய வடிவம். அருகில், அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக்காட்சியைக் கண்டு இன்புறுவார்.
ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய மூன்று முருகன் தலங்கள்
ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும் வடகிழக்கில் தணிகை மலையும் வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கன் மலையும் அமைந்துள்ளன. வள்ளிமலை, தணிகைமலை, ஞானமலை, மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் மூன்று மலைகளையும் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
பங்குனி உத்திர திருவிழா - வாழைப்பழம் சூறை வீசும் விநோத நேர்த்திக்கடன்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மானூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடைபெறும் தேர் திருவிழாவும், அப்பொழுது பக்தர்கள் வாழைப்பழம் சூறை வீசும் நிகழ்ச்சியும், இப்பகுதி சுற்றுவட்டாரங்களில் மிகவும் பிரசித்தம்.
பங்குனி உத்திர திருவிழா முக்கிய நிகழ்வாக மூலவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மூலவர் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோர் சிறப்பு பூஜைகளுக்கு பின் ரதத்தில் எழுந்தருளுவார்கள். ஊரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ரத உற்சவம் நடைபெறும். தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் வாழைப் பழம் மற்றும் தானியங்கள், மிளகாய் வத்தல் ஆகியவற்றை சூறை வீசும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். சூறை வீசிய பழங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் மிகவும் ஆர்வமுடன் எடுத்துச் செல்வார்கள். இந்த சூறை வீசும் நிகழ்ச்சிக்கு ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வார்கள்.
முருகப்பெருமானின் முன்பு சிவலிங்கம் இருக்கும் திருப்புகழ் தலம்
சென்னையில் பிரசித்தி பெற்ற திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை . நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலம் இது. சிவலிங்கத்தின் பின்னால் ஈசனும் அம்பாளும் திருமணக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
முருகப் பெருமான், ஈசனை வழிபட்டு தனது தவறுக்குப் பரிகாரம் தேடிய தலம்
முருகப் பெருமான், பாலமுருகனாகத் திருவிளையாடிய போது, திருக்கயிலாயத்துக்குச் சென்ற பிரம்மாவிடம், பிரணவப் பொருள் கேட்க, அதற்கு பிரம்மா விடை அளிக்காததால், அவரை சிறையில் இட்டார். அவரைச் சிறையிலிட்ட குற்றத்துக்காக முருகப் பெருமான் சிவனாரை வழிபட முடிவு செய்தார். இத்தலத்திற்கு வந்து வேதபுரீஸ்வரை வழிபட்டார். பின்னர், அவருக்கு அருகில், மரகதலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்குக் கிழக்கில் மந்தாகினி தீர்த்தத்தையும், மேற்கில் தமது கூர்வேலால் வேலாயுத கூபத்தையும் (கிணறு) ஏற்படுத்தினார். மரகதலிங்கம், கந்தன் ஸ்தாபித்தது என்பதால் ''ஸ்கந்த லிங்கம்" ஆனது. இப்படி முருகப்பெருமானின் முன்பு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்திருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். திங்கட்கிழமைகளில் வேலாயுத கூபத்தில் நீராடி, முருகரையும் வேதவனநாதரையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்று தலபுராணம் விவரிக்கிறது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
விஷம் தீண்டா பதி
திருமால் இத்தலத்துக்கு அருகில் உள்ள கண்ணபாளையம் என்ற இடத்தில் சிவபெருமானை பூஜித்து தான் இழந்த சக்கராயுதத்தை திரும்ப பெற்றார். இதனைப் பார்த்து அதிசயித்த ஆதிசேஷன், 'இனி இந்த திருத்தலத்தில், யாரைப் பாம்பு கடித்தாலும் அவர் மீது விஷம் அணுக விட மாட்டேன். வேறெந்த விஷப் பூச்சி கடித்தாலும் அப்படியே' என்றாராம். எனவேதான், திருவேற்காடு 'விஷம் தீண்டா பதி' ஆகி விட்டது. இங்கு பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை
பிரார்த்தனை
இங்கு சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும்.
முருகன் பிரம்மச்சாரியாகவும், வள்ளி தெய்வானை தவக்கோலத்திலும் இருக்கும் தலம்
ஈரோட்டில் இருந்து 35 கி மீ தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 3 கி மீ. தூரத்தில் அமைந்துள்ளது பவளமலை முத்துகுமார சுவாமி கோவில். மலைமீது உள்ள கோவிலுக்கு செல்ல 60 படிக்கட்டுகள் உள்ளன. இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்வாச முனிவரால் உருவாக்கப்பட்டது.
மூலவர் முத்துக்குமார சுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயு மூலையில் வள்ளி தெய்வானைமுருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம்
இக்கோவிலில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் திரிசத அர்ச்சனை சிறப்பு மிக்கதாகும். திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு. முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிலும் சிவனைப் போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது. சூரசம்ஹாரம், வள்ளிதேவசேனா கல்யாணம், தந்தைக்கு உபதேசம், தேவர் குலம் காக்க, பிரம்ம சாஸ்திரம், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் ஆகிய ஆறு காரணங்களுக்காக முருகனுக்கு ஆறுமுகம் ஏற்பட்டது. அதிலிருந்து சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் (சடாச்சரம்) உருவானது. கேடு மற்றும் இடையூறு நீங்க. ஒரு முகத்திற்கு 50 அர்ச்சனை வீதம் ஆறுமுகத்துக்கு 300 மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைக்கிறது. அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல் ஆகியவற்றுக்காகவும் இந்த அர்ச்சனையைச் செய்கின்றனர்.
பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர், பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. செவ்வாய் மாலை ஐந்து மணிக்கு பருப்பு பாயாசம், உளுந்தவடை நைவேத்தியமாக படைக்கப்பட்டு திரிசதார்ச்சனை நடக்கும். இதில் பங்கேற்றால், நினைத்தது நடக்குமென்பது ஐதீகம்.
வடக்குத் திருச்செந்தூர் என்று போற்றப்படும் முருகன் தலம்
சென்னை-பூந்தமல்லி சாலையில் காட்டுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே அரை கி.மீ. தொலைவில் உள்ளது செந்தூர்புரம். திருச்செந்தூரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் அவன் அருள் கிடைக்க எண்ணிய பக்தர்கள் காஞ்சி முனிவரிடம் சென்று தம் எண்ணத்தைத் தெரிவித்தனர். “நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் திருச்செந்தூர் செந்திலாண்டவனை தாராளமாக பிரதிஷ்டை செய்யலாம்” என்று அவர் அருளாசி வழங்கினார். கூடவே, சுமார் 6 அடி உயரமுள்ள அழகான முருகன் சிலையை வைக்க ஏற்பாடும் செய்து கொடுத்து, இத்தலத்தின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்றும் ஆலோசனையும் தெரிவித்தார். அவருடைய அறிவுரைப்படி, இந்தக் கோவில் அமைந்தது. கருவறையில் மூலவர் வடசெந்தூர் முருகன் ஆறடி உயர திருமேனியுடன் வலது கையில் வஜ்ரம், இடது கையில் ஜபமாலை மற்றும் அபய வரதக் கரங்களோடு அருட்பாலிக்கிறார். மூலவருக்கு கிருத்திகை அன்று ராஜ அலங்கார உடையும், சஷ்டி நாளில் சந்தன அலங்காரமும் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயம் உருவாகுவதற்கு முன் பல அதிசய நிகழ்வுகள் இத்தளத்தில் நிகழ்ந்தன. இந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்ற ஒரு பெண்மணி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருசமயம் இவ்வழியே சென்ற அவள், வழியில் ஆறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டாள். ஒரு குழந்தை அவளிடம் வந்து வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்தது. அதை வியப்பு கலந்த அன்போடு பெற்றுக்கொண்ட அந்தப் பெண், அதில் பாதியைத் தான் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்தக் குழந்தைக்கே கொடுத்துவிட்டாள். பிறகு அந்த ஆண் குழந்தையை ஆசையோடு முத்த மிட்டு, 'எங்கள் வீட்டுக்கு வருகிறாயா?' என்று கேட்டாள். 'நிச்சயமா ஒருநாள் உங்கள் மகனாகவே வருவேன்' என்றதாம் அந்தக் குழந்தை.. குழந்தை பேறில்லாத அவள் கண்களில் நீர் பெருகிட அந்தக் குழந்தையை அள்ளி உச்சி முகர்ந்தாள். பிறகு அந்த இடத்தைவிட்டுச் செல்ல அவள் முயன்றபோது அவளுடைய புடவை ஒரு முள் செடியில் சிக்கியது. அதை விடுவித்துவிட்டு திரும்பினால், அந்தக் குழந்தைகளை காணவில்லை. இந்த அதிசயத்தை அவள் ஊர்ப் பெரியோர்களிடம் தெரிவித்தாள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் தனக்காக ஒரு வீடு கட்டும் பணி தொடங்கிய போது, அங்கே முருகன் சந்நதி அமையப் போகிறது என்ற அசரீரி உத்தரவும் அவளுக்கு கிடைத்தது.
பிரார்த்தனை
முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதிரிகள் எளிதாக விலகுவர். ஞாயிற்றுக்கிழமைகளில் 'வித்யாசர்வண பிரார்த்தனை' நடைபெறுகிறது. தங்கள் பிள்ளைகள் கல்வியில் உயர்வடைய வேண்டுமென்று எண்ணும் பக்தர்கள் இந்த வித்யாசர்வண பூஜையில் கலந்து கொண்டு பஞ்சாமிர்த பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள்.
அமுதக் கலசம் ஏந்திய அபூர்வ முருகன்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோடியக்கரை அமிர்தகடேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மைத்தடங்கண்ணி. கோவில் இருக்கும் இடம் கோடியக்காடு என்றும் கடற்கரை பகுதி கோடியக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. நவகோடி சித்தர்கள் இன்றும் இத்தலத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது.
இத்தலத்து முருகன், மூலவர் அமிர்தகடேசுவரரை விட சிறப்பு வாய்ந்தவர். அவருடன் வள்ளி , தெய்வானை ஆகிய இரண்டு தேவிகளும் இருக்கின்றனர். சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுத கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம்,பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுத கலசத்துடன் உள்ள முருகப் பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற! பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார் இந்த முருகப்பெருமான் 'அமிர்தகரசுப்பிரமணியர்' என்றும் 'கோடிக்குழகர்' என்றும் அழைக்கப்படுகின்றார் .
தேவர்களும் அசுரர்களும் இந்த திருப்பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது .இந்த அமிர்த கலசத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார் வாயு பகவான். அப்போது அசுரர்கள் அனைவரும் சேர்ந்து சூறாவளி காற்றை உருவாக்கினார். அதனால் வாயு பகவான் அமிர்த கலசத்தை தவறவிட்டார். அப்படி தவறி விழுந்த அமிர்த கலசத்தை தலத்தில் உள்ள முருகப்பெருமான் தன் கையில் தாங்கி பின்னர் அதனை தேவர்களிடம் ஒப்படைத்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் தேவர்கள் மகிழ்ந்து கந்தனுக்கு நீலோற்பல மலரை பரிசாக அளித்தனர்.எனவே இத்தலத்தில் அருளும் முருகப்பெருமான் தன்னுடைய கரங்களில் நீலோற்ப மலரையும் அமிர்தத்தையும் தாங்கியபடி அருள் பாலிக்கிறார். அமிர்த கலசத்தில் இருந்து சிந்திய அமிர்தத்துளிகள் சிவலிங்கமாக உருவானது. அப்பெருமானே இத்தலத்தில் அருளும் அமிர்தகடேசுவரர் ஆவார்.
கோடியக்காட்டு முகத்துவாரத்தில் ராமபிரான், சேது பந்தனம் செய்ய நின்ற இடத்தில் ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனை பெறலாம் என்கிறார்கள். எனவே இது ஆதி சேது என்று போற்றப்படுகிறது. ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பிரார்த்தனை
சரியாக பேச்சு வராத குழந்தைகள் இங்கு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த தேனை பருகினால் சிறந்த பலனை பெறுகின்றனர். சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமான அபிஷேகம் செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொடர்ந்து ஆறு சஷ்டி திதியில் விரதம் இருந்து இத்தல முருகனுக்கு ஆறு நிறத்தில் உள்ள மலர்களை சூட்டி ஆறு நைவேத்தியங்களை படைத்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். இங்கு வழிபட்டால் பித்ரு தோஷம் விலகும்.
தைப்பூசத் திருநாளின் சிறப்புகள்
முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பெளர்ணமியும் இணையும் நாளை தைப்பூச திருநாளாக முருக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். தைப்பூச நன்னாளின் சில சிறப்புகளை இப்பதிவில் நாம் காணலாம்.
- ஆன்மிகத்தில் பொதுவாக 9, 18, 7 போன்ற எண்கள் பல வகையிலும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமாகிய தை மாதமும், 27 நட்சத்திரங்களில் 8 வது நட்சத்திரமாகிய பூசமும் சேர்ந்து வருவது இந்த தைப்பூசத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்.
- ஒரு கல்பத்தில் (பிரம்மாவின் பகல் நேரத்தில்) தைப்பூச தினத்தில்தான், உலகப் படைப்பு தோன்றியது. நீர் முதலில் தோன்றியது; அதில் பிரமாண்டமான றிலப்பகுதி உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஐதிகத்தின் அடிப்படையில் பல்வேறு ஆலயங்களில் அன்று தெப்போற்சவம் நடைபெறுகிறது.
- சூரபத்மனை அழிக்க கிளம்பிய முருகபெருமானுக்கு, பராசக்தி தன்னுடைய சக்தி வேலை கொடுத்த தினம் தைப்பூசம்.
- தைப்பூசம்அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டார்.
- முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால், ஊடல் கொண்ட தெய்வயானையை சமாதானம் செய்து, முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம்.
- சிவபெருமான் வியாக்கிரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர்களுக்கும் தனது ஆனந்த திருநடனத்தை காட்டு அருளியது தைப்பூச நன்னாளில் தான்.
- தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார்.
- ஜோதிடத்தில் மங்களகாரகன் என குறிப்பிடப்படும் குரு பகவான் அவதரித்தது இந்த நாளில் தான்.
- ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார்.
- ராமலிங்க அடிகளார் 1874-ம் ஆண்டு, தைப்பூச நாளில் அருள் ஜோதியில் கலந்தார்.
- முருகப் பெருமான் அனைத்து தெய்வங்களின் அம்சமாக திகழக் கூடியவர் என்பதாலேயே இந்த நாள் முருகப் பெருமானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் பால் குடம் எடுத்து வந்தும், காவடி ஏந்தி வந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக வந்து முருகனை பக்தர்கள் வழிபடுவார்கள். முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக, நடந்து செல்வதால் தீராத வினையும் தீரும் என்பது நம்பிக்கை. பால் காவடி, பன்னீர் காவடி, சந்தன காவடி என காவடிகள் சுமந்து விரதம் இருந்து தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் இந்த தைப்பூசத்திருநாளில் செலுத்துவது வழக்கம். அறுபடை வீடுகளிலும் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசித்து வணங்குவது வழக்கம்.
- தைப்பூசத்தன்று விரதமிருந்து, மனமுருகி முருகனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தைப்பூசத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் திருமண தடை விலகும், குழந்தைப்பேறு கிடைக்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், வறுமை ஒழியும், வளமான வாழ்க்கை அமையும், பகை ஒழியும், நினைத்த காரியம் நிறைவேறும்.
திருமண வரம் , வீடு மனை யோகம் அருளும் முருகன்
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி. இக்கோவில் இரண்டாம் நூற்றாண்டில், கரிகால சோழனால் கட்டப்பட்டது.
இக்கோவில் வெளிப்பிராகாரத்தில், முருகபெருமான் பால தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன், தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்க முனிவர் தான் இந்த பால தண்டாயுத சுவாமியை பிரதிட்டைசெய்து, இங்கு கடும் தவம் புரிந்தார் என்கிறது தல புராணம். இத்தலத்து முருகன் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியிருக்கிறார்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், முருகப்பெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . அதே போல் இக்கோவிலிலும், பால தண்டாயுதபாணி மேற்கு பார்த்த நிலையில் தரிசனம் தந்தருள்கிறார். இப்படி மேற்குப் பார்த்தபடி முருகக் கடவுள் திருக்காட்சி தரும் திருத்தலங்கள் அரிது. மேலும் மேற்குப் பார்த்த நிலையில் உள்ள முருகக் கடவுளைத் தரிசிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போல் மாதந்தோறும் வருகிற எல்லா கிருத்திகை நட்சத்திர நாளும் இங்கே விசேஷம் தான். இந்த நாளில், பேரூர் பால தண்டாயுதபாணிப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறுகின்றன.
கிருத்திகை நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு, பேரூர் முருகப்பெருமானை தரிசித்தால், திருமண பாக்கியம் கைகூடும். அதேபோல், திருமணமான பெண்கள் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு பாலதண்டாயுதபாணியை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.
கிருத்திகை நட்சத்திர நாளில், பால தண்டாயுதபாணிக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காணும் பொங்கலன்று மாட்டு வண்டியில் வீதி உலா வரும் திருத்தணி முருகன்
திருத்தணி முருகன் கோவிலின் உற்சவர் காணும் பொங்கலன்று, வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக இறங்கி வருவார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தர நகர வீதிகளில் உலா வருவார். திருவீதி உலா வரும் தெருக்களில் வண்ணக்கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் முருகனை வழிபடுவர். பொதுவாக காணும் பொங்கல் அன்று பக்தர்கள் கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால், திருத்தணியில்
பக்தர்களுக்கு தரிசனம் தர, முருகப்பெருமானே மலையில் இருந்து இறங்கி வருவது தனிச்சிறப்பாகும்.
காணும் பொங்கல் சிறப்புகள்
பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுகக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் ’போகி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல்நாள் தைப்பொங்கல் கொண்டாடாப்படுகிறது. இடண்டாவது நாளில் உழவுக்கு உதவும் மாடுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம். நான்காவது நாள்தான் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். காணும் பொங்கல் (கன்னி பொங்கல்) அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென்று மார்கழி மாதம் முழுவதும் விரதம் எடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வது கன்னி பொங்கலாகும்.
காணும் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும் என்பதே சம்பிரதாயமாகும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும். முதல் நாள் பொங்கிய சாத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து , சக்கரைப் பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும் ,குருவிக்கும் படையல் வைக்க வேண்டும். 'காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்' என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும்.
காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் பெரும்பாலோரின் நடைமுறையாக உள்ளது. முக்கியமான பண்டிகை ஆகும். இந்நாள் பெண்களுக்கு, பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.டக்கும்.
மயூர வாகன சேவன விழா
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பாம்பன் சுவாமிகள் கோவில். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். ராமேசுவரத்திற்கு அருகில் உள்ள பாம்பன் என்ற ஊரில் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு. சிறுவயது முதலே முருகப்பெருமானின் மீது தீவிர பக்திக் கொண்டிருந்தார். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகன் மேல் இயற்றிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6666. இவர் தமிழ் உயிர் எழுத்துக்கள்(12), மெய்யெழுத்துக்கள்(18) எண்ணிக்கையை ஒன்றிணைத்து, இயற்றிய 30 பாடல்கள் கொண்ட 'சண்முகக்கவசம்', முருக பக்தர்களுக்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்றது.
இவர் வாழ்க்கையில் முருகன் புரிந்த திருவிளையாடல்கள் அநேகம். அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவர்கள் எலும்பு கூடாது என்று காலை அகற்ற நினைத்திருந்த தருணத்தில் முருகப்பெருமான் அவருக்கு காட்சியளித்து குணப்படுத்தியது பெரிய அதிசய நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியை பற்றிய ஆதாரப்பூர்வமானபதிவுகளை, இன்றளவும் நாம் சென்னை பொது மருத்துவமனையில் (ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை) பார்வையிடலாம்.
பாம்பன் சுவாமிகளுக்கு, அரசு மருத்துவமனையில் முருக தரிசனம்
சென்னை தம்புச் செட்டித் தெருவில், 27-12-1923 நாளன்று பாம்பன் சுவாமிகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு குதிரை வண்டி சுவாமிகளின் மீது மோதியதால், அவரின் இடது கால் கணுக்கால் எலும்பு முறிந்து விட்டது. இந்த விபத்தைக் கண்ணுற்ற சுவாமிகளின் அன்பர், சுவாமிகளைச் சென்னை அரசு பொது மருத்துவமனையில் 11ம் எண்ணுள்ள மன்றோ வார்டில் சேர்ந்தார். சுவாமிகள் 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பு, புளி, காரம் அற்ற உணவையே உண்பவர் என்பதாலும் அவர்களின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அதனால் அறுவை சிகிச்சை செய்து காலை அகற்ற வேண்டும் என்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். மருத்துவமனையில் சேர்ந்த 11ம் நாள் இரவில் முருகப் பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை நல்ல வட்ட வடிவமாக விரித்து, அழகிய வானை மறைத்தும், அதன் இடப்பக்கத்தில் உடன் வந்த மற்றொரு மயிலுடன் சேர்ந்து நடனமாடிய அழகிய காட்சியைச் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட் டியருளினான். மயில்களின் கால்கள், தரையில் பதியவில்லை. அவை பொன்மய பச்சை நிறமாக இருந்தன. முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். இந்நிகழ்ச்சியை சுவாமிகள் 'அசோகசாலவாசம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்:
அம்மயூரவாகனக் காட்சியானது தன்னை விட்டு மறைதலைக் கண்டு, மீண்டும் இது போன்றொரு காட்சி எவ்வாறு கிடைக்கும் என்று நினைத்து சுவாமிகள் அழுதார். அவர் மனம் மகிழுமாறு ஓர் இரவில் முருகப்பெருமான், ஒரு சிவந்த நிறக் குழந்தை வடிவில் தோன்றி சுவாமிகள் படுத்திருந்த படுக்கையிலேயே தானும் தலை வைத்துக் காலை நீட்டிப் படுத்திருந்தான். அத்திருக்காட்சியைக் கண்ட சுவாமிகள், குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே என்று உணர்ந்ததும் முருகப்பெருமான் மறைந்துவிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்,அவரது முறிந்த கால் எலும்பு கூடிவிட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர் இவரை சோதித்து, 'உணவில் உப்பை முற்றிலும் நீத்த தங்களின் கால் குணமாகியது பெரும் வியப்பாக உள்ளது' என்று அன்புடன் கூறினார். இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்தார்.
முருகப்பெருமான் திருவருளால், 11ம் நாள் இரவு (6-1-1924) வளர்பிறைப் பிரதமை திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலே பூரண குணம் பெற்றார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் அவர் அடியார்கள், ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கு மயிலும், முருகப்பெருமானும் காட்சிக் கொடுத்த 100-வது ஆண்டு மயூர வாகன சேவன விழா, 10.1. 2024 முதல் 12.1.2024 வரை, மூன்று நாட்கள் திருவான்மியூர், பாம்பன் குமரகுருபர சுவாமி கோவிலில் கொண்டாடப்பட்டது..
பாலகனாக, ஆண்டி கோலத்தில் காட்சி தரும் முத்துக்குமாரசாமி
திருப்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற முருகன் தலங்களில் இதுவும் ஒன்று. 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் மிகவும் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு, நடந்து செல்ல 300 படிக்கட்டுகள் உள்ளன. வாகனத்தில் செல்ல சாலை வசதியும் உண்டு. அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் 'அலகு மலை' என்று அழைக்கப்படுகிறது.
கோவில் கருவறையில், முருகன் நான்கரை அடி உயர திருமேனியுடன் பாலகனாக, பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி காட்சி அளிக்கின்றார். மூலவர் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கண்களை சற்றே தாழ்த்திய நிலையில் ஞானகுருவாக அருள்புரிகிறார். வள்ளியும், தெய்வானையும் தனி சந்ததியில் காட்சி தருகிறார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளுக்கான தனிச் சன்னதிகள் இக்கோவிலில் உள்ளன. ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
சிவபெருமான் கேள்விக்கு முருகன் அளித்த சமயோசித பதில்
ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, 'இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முருகப்பெருமான், 'அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை' என்று முருகப்பெருமான் சமயோசிதமாக பதில் கூறினார். அதாவது 'அறன்மாதா' என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. 'அறம் வளர்த்த நாயகி' என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் 'உயிர்களை காக்கும் நீர்' என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.
திருமணம் கைகூட முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம்
திருமணத்திற்கு காலதாமதம் ஆகும் ஆண் பெண்கள், இந்த முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம் செய்தால், நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார்.
முருகனுக்கு வேலை நேர்த்திக்கடனாக செலுத்தும் திருப்புகழ் தலம்
கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள, வேலாயுதம்பாளையம் என்ற ஊரில் இருக்கும் புகழிமலையின் மேல் அமைந்துள்ளது, பாலசுப்ரமணியசுவாமி கோவில். கோவிலுக்கு செல்ல 315 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றது. இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான், இக்கோவில் கட்டப்பட்ட தாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு மைசூர் கோவில்களின் கட்டட பாணியில் கோபுரம் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
கருவறையில்,பாலசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக காட்சி நல்குகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இந்தக் கோவிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தை குறிக்கும். இதிலிருந்து இந்தக் கோவிலின் புராதனத்தை அறியமுடிகிறது.
பிரார்த்தனை
இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும். சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். இத்தலத்து விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
தலையில் குடுமியுடன் காட்சி அளிக்கும் பாலமுருகன்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. பவானி நதிக்கரையில் உள்ள இக்கோவில் ஆயிரம் வருடங்கள் பழமையானது. முற்காலத்தில் கோவில் அமைந்திருக்கும் பவானி நதிக்கரையோரம், ஏராளமான மாமரங்கள், பலா மரங்கள், கொய்யா மரங்கள் நிறைந்திருந்தன. அதனால் இக்கோவில் பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. பழனி திருஆவினன்குடி கோவிலை அடுத்து, இந்த வட்டாரத்தில் தரை பரப்பில் அமைந்த முருகன் கோவில்களில் இது மிகவும் பிரசித்தி பெற்றது.
கருவறையில் பாலமுருகன், இரண்டரை அடி உயர திருமேனியுடன், கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பாலமுருகனின் பின்னந்தலையில் குடுமி அமைந்திருப்பது ஆச்சரியமாகும். இந்த பாலமுருகனின் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
இந்த பாலமுருகனுக்கு, செவ்வாய்க்கிழமை செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால், குடும்பத்தில் சகல கஷ்டங்களும் விலகி, செல்வ செழிப்பு உண்டாகும். இவரை வணங்கினால் திருமண தடைகள் நீங்கும்; சந்தான பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மயிலின் கழுத்தை வளைத்து பிடித்திருக்கும் பாலமுருகனின் அபூர்வ தோற்றம்
முருகன் யோக வேலை ஏந்திய ஒரே தலம்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலையில் அமைந்துள்ளது பாலசுப்ரமணியர் கோவில். மலைக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இத்தலம் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது. அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்.
இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். பாலசுப்ரமணியர், குழந்தை வடிவில் காட்சியளிக்கிறார், முருகன், மயிலின் கழுத்தைப் பிடித்தபடி நிற்கும் தோரணையானது தனித்துவமானது. வேறு எந்த தளத்திலும் முருகனை இந்தக் கோலத்தில் நாம் தரிசிக்க முடியாது. முருகன் கையில் இருக்கும் வேல் யோக வேல் என்று அழைக்கப்படுகிறது. மற்ற தலங்களில் சக்திவேல், வைரவேல், வஜ்ரவேல், வீரவேல் போன்ற வேல்களை முருகன் தாங்கி பிடித்தாலும், இத்தலத்தில் மட்டும் தான் யோக வேலை ஏந்தி இருக்கிறார். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து, அகத்திய முனிவர் பூஜை செய்திருக்கிறார். இப்படி கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம், இங்கும், அரித்துவாரிலும் மட்டுமே உள்ளது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. சப்த ரிஷிகளும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இத்தளத்தில் வழிபடுவதாக ஐதீகம். அந்த தினங்களில் நாமும் வழிபட்டால், அவர்களது ஆசிர்வாதத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் உண்டாகும்.
ராகு–கேது, காலசர்ப்ப தோஷம் நீக்கும் நாக சுப்பிரமணியர்
தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது விருப்பாச்சி ஆறுமுகநாயனார் கோவில்.
இத்தலத்து மூலவர் முருகன், ஆறு முகங்களுடன் திருவாட்சியுடன் சேர்ந்த சிலை அமைப்பில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் வயலில் கண்டெடுக்கப்பட்டவர். இங்கு வசித்த விவசாயி ஒருவரின் சுனவில் தோன்றிய முருகன் ஒரு வயலைச் சுட்டிக் காட்டி தான் அங்கு சிலை வடிவில் இருப்பதாக உணர்த்தினார். தான் கண்ட கனவை விவசாயி, இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் கூறினார். அதன்பின் வயலில் முருகன் சிலையை எடுத்த அவர்கள். இங்கு பிரதிஷ்டை செய்து சன்னதி எழுப்பினர். விருப்பாச்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள் புரிந்த முருகன் எழுந்தருளிய தலமென்பதால், விருப்பாச்சி ஆறுமுகனார் என்று மூலவர் பெயர் பெற்றார்.
நாக சுப்பிரமணியர்
மூலவர் விருப்பாச்சி ஆறுமுகனாருக்கு அருகில் ஏழு தலை நாகம் குடைப்பிடித்தபடி இருக்க, அதன் மீது மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் நாக சுப்பிரமணியர் காட்சி தருகிறார். நாகத்தின் மத்தியில், வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். இவருக்கு பூஜை செய்த பின்பே மூலவரை பூஜிக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்களை இவர் நீக்குவதாக ஐதீகம். ராகு – கேது, கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும் அன்பர்கள் இவருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து தோஷை நிவர்த்தி அடைகிறார்கள்.
கோவில் முன்பு முருக தீர்த்தம் எனப்படும் வற்றாத தீர்த்த தொட்டி உள்ளது. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் நீங்க வேண்டி இந்த தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர்.