திருநறையூர் ராமநாத சுவாமி கோவில்

சனி பகவான் குடும்ப சமேதராய் காட்சியளிக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருநறையூர் ராமநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தனி.

தசரதர் தனக்கு ஏற்பட்ட நீண்ட கால நோய் தீர, இத்தல இறைவனையும், சனி பகவானையும் வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். இது ராமேஸ்வரம், ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்துக்கு இணையானது என்கிறார்கள்.ராவணனிடம் போரிட இலங்கை செல்லுமுன் ராமன் வணங்கிச் சென்ற கோயில் இது என்றும், தன் தந்தை தசரதர் வழிபட்ட இங்கு, போரில் வெற்றி வீரராகத் திரும்பி வந்த ராமர், தீர்த்தக்குளம் ஒன்றை வெட்டி, அதில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் நீராடி, இங்குள்ள இறைவனை வழிபட்டு ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அதனால் இத்தல ஈசன் ராமநாதசுவாமி ஆனார்.

இந்த ராமநாத சுவாமி கோவில், சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவிலாக கருதப்படுகிறது. மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய் மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார். இவர்களை வணங்கிய நிலையில், காட்சியளிக்கிறார், தசரதர்.சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது. மூலவருக்கு கொடிமரம் இல்லாமல் சனி பகவானுக்கு கொடிமரம், பலிபீடம் மற்றும் காக வாகனம் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட கால நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது. சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனி பகவானின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.

இத்தலத்தில் உள்ள திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில் பற்றிய முந்தைய பதிவு

மகாலட்சுமி மழலையாய் அவதரித்த தேவாரத்தலம்

https://www.alayathuligal.com/blog/mb5tbfg25mz9x8ldjdbnxaewpe5w4l

குடும்ப சமேதராக ஸ்ரீசனிபகவான், அவரை வணங்கும் தசரதர்

 
Previous
Previous

திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில்

Next
Next

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவில்