திருக்கோகர்ணம்   கோகர்ணேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்

தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்

புதுக்கோட்டை-திருச்சி சாலையில், புதுக்கோட்டை நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருக்கோகர்ணம். இறைவன் திருநாமம் கோகர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள் (அரைக்காசு அம்மன்). குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது.

புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் கோவிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர். அதனால் புதுக்கோட்டையை ஆண்ட அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்ற சொல் சேர்க்கப்பட்டது.

அந்நாளில் பிரகதாம்பாள் அம்பிகைக்கு நவராத்திரி விழாவினை, புதுக்கோட்டை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல், பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர். புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட அந்த அரைக்காசு நாணயம், புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் மன்னர் ஒருவரின் முக்கியமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காத அந்தப் பொருள் கிடைக்க வேண்டும் என்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாளிடம் பிரார்த்தனை செய்தாராம் மன்னர். தான் வணங்கும் இந்த அரைக்காசு அம்மனே அதனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். அவர் பிரார்த்தனை பலித்து, தேடிய பொருள் கைக்கு வந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வெல்லத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த வெல்லப் பிரசாதத்தைத் தானும் உண்டு, பக்தர்களுக்கும் வழங்கினார். அதனால் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பத்திரம், நகை, எந்த பொருள் தொலைந்தாலும் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு காசு எடுத்து வைத்தால் அந்தப் பொருள் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த உக்கிரபாண்டியனால் கட்டப்பட்டதாகும். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை. தேவர்களுக்கு பரப்பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்ததால் இந்த அம்பிகைக்கு ஸ்ரீஞானாம்பிகை என்ற திருநாமம் உணடாயிற்று.

கீழமங்கலம் கோவிலில் உள்ள ஸ்ரீஞானாம்பிகை வர, அபய கைகளுடன் சூட்சுமத்தில் வலது கையில் தாமரை மலர், இடது கையில் நீலோற்பலம் மலருடன், ஜடாமகுடத்துடன், சமமான சந்திரகலையுடன், மூன்று கண்களுடன், பத்மத்தின் மேல் நின்ற கோலத்தில் அருட்காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். நீலோற்பலம் மலர் என்பது ஒரு வகை தாமரையை சேர்ந்தது. இம்மலர் இரவில்தான் மலரும். அம்பிகை ஒரு கையில் நீலோற்பலம் வைத்திருப்பது, அம்பிகை இரவில் சூட்சுமமாக சிவபெருமானை பூஜிப்பதையே உணர்த்துகிறது. பகவானுடைய வலது கண் சூரியன், இடது கண் சந்திரனின் அம்சமாகும். அதனால்தான் சூரியனால் தாமரையும், சந்திரனால் நீலோற்பலமும் (நீல நிறத்தாமரையும்) மலர்கின்றன. நீலோற்பலத்திற்கு ஒரு வருடம் வரை நிர்மால்ய தோஷம் கிடையாது. துளசி, வில்வத்திற்கு கூட 6 மாதம்தான் நிர்மால்ய தோஷம் கிடையாது. எனவே நீலோற்பலம் மிகச் சிறந்தது.

.திருவானைக்கோவிலில் அருள்பாலிக்கும் அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி இரண்டு கைகளிலும் தாமரை மலர் உள்ளது. இது பகலில் மலரும் மலராகும். அதனால்தான் திருவானைக்கோவிலில் பகலில் உச்சிக் காலத்தில் அம்பிகை சிவ பூஜை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. இங்கு கீழமங்கலத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை வலக்கையில் தாமரையும், இடக்கையில் நீலோற்பலமும் வைத்திருப்பதால், அம்பிகை இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்து கொண்டும், வரமும், அபயமும் எப்போதும் வழங்குவேன் என்று வர, அபய முத்திரைகளுடன் காட்சி கொடுத்து, அருள் பாலிக்கிறாள்.

ஸ்ரீ ஞானாம்பிகை சூடியிருக்கும் சந்திரன் மூன்றாம்பிறைச் சந்திரன் ஆகும். அதாவது 'சம கலை சந்திரன்'. இது கோணலான பிறைச் சந்திரன் கிடையாது. ஸ்ரீ ஞானம்பிகைக்கே உள்ள அதிவிசேஷம் இது. 'சம கலை சந்திரனைச்' சூடிய அம்பிகை என்பதால், 'என்னால் அழிவு கிடையாது. ஆக்கமும் ஆற்றலும் மட்டுமே. ஞானத்திற்கு என்றுமே அழிவு கிடையாது' என்பதையே வலியுறுத்துகிறாள்.

இந்த அம்பிகையை தரிசனம் செய்தவர்கள் , மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யவே ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு பக்தர்களை மெய் மறக்கச் செய்யும், மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யத் தூண்டும் அளவிற்கு ஞான வசீகரத் தோற்றம் உடையவள் ஸ்ரீஞானாம்பிகை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

Read More
கொட்டையூர்  கோடீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ள பந்தாடுநாயகி அம்பாள்

கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால், பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப் பாவம் கோடி அளவு பெருகிவிடும். அதே போல புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் புண்ணியம் கோடி அளவு கூடிவிடும்.

விளையாட்டில் உன்னத நிலையை அடைய அருளும் அம்பிகை

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், அத்துறையில் உன்னத நிலையை அடையவும், பரிசுகள் பெறுவதற்காகவும் இந்த பந்தாடுநாயகி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

Read More
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

அகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கர தாடகங்களின் சிறப்பு

திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும். இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் . இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

ஆதி சங்கரர் திருவானைக்கா தலத்துக்கு வந்தபோது அங்கு அன்னை உக்கிர ரூபத்தோடு காட்சியளித்தாள், அன்னையின் உக்கிரம் தணிக்க, ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை தாடகங்கமாகச் செய்து அணிவித்தார். இதனால் அன்னை மனம் குளிர்த்து சாந்த சொரூபியாக, வரப்பிரசாதியாக அருள்பாலித்தார். அன்னையின் தாடகங்கள் ஸ்ரீசக்கர ரூபமாக அமைந்ததால் அதை தரிசனம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அம்பிகையின் தாடகங்களையே உற்று நோக்கி வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் அம்பாள் முப்பெரும் தேவியராகக் காட்சிகொடுக்கிறாள். அகிலாண்டேஸ்வரி ஒருநாளில், காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அருள்பாலிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்பிகையை தரிசித்து வழிபட செல்வம், வீரம், கல்வி ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன வேத சாஸ்திரங்கள்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்

https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

Read More
நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

அம்பிகை மெட்டி அணிந்திருக்கும் அபூர்வக் கோலம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டத்திலுள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இத்தலம் திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி.

இக்கோவில் மகாமண்டபத்தின் இடதுபுறம், இறைவி மீனாட்சியின் சந்நதி உள்ளது. அம்பிகை முன்கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் ஏந்தி நின்ற கோலத்தில், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அம்பிகையின் கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்திருப்பது ஓர் அபூர்வமான காட்சி ஆகும். திருமணத்துக்காகக் காத்திருக்கும் இளம் வயதினர், அம்பிகையின் மெட்டி தரிசனம் கண்டால் வெகுவிரைவில் அந்த பாக்கியம் அருளப் பெறுகிறார்கள்.

Read More
காஞ்சிபுரம் கனக துர்கா கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காஞ்சிபுரம் கனக துர்கா கோவில்

பழ அபிஷேகம் செய்தால் நற்பலன்கள் தரும் கனக துர்கா

காஞ்சிபுரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் ஏனத்தூர் சாலையில் கோனேரி குப்பம் என்ற இடத்தில் கனக துர்கா கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் கருவறையில், கனக துர்கா அமர்ந்த கோலத்தில் தனது இடது காலை மகிஷாசுரனின் தலை மீதும் வலது காலைத் தரையில் ஊன்றியும் காட்சித் தருகின்றாள். கனக துர்கையின் வலதுபுறம் சிங்கமும் இடது புறம் பூத கணமும் இருக்கிறார்கள். தன் கைகளில் சங்கு, சக்கரம்,திரிசூலம்,வில், பாசம், அம்பு,வாள், கேடயம் ஏந்தி இருக்கின்றாள்.

கனக துர்கா அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால் சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால்... நினைத்தது நடக்கும். மாம்பழ அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால் பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ கனக துர்கா அம்மன் அருள் புரிவாள் என்பது ஐதீகம்..

Read More
கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

நல்லூர் அஷ்டபுஜமாகாளி

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநல்லூர். இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.

திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலின் தெற்கு வெளிப் பிரகாரத்தில்தான் நல்லூர் அஷ்டபுஜமாகாளி வீற்றிருக்கிறாள். இக்கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது. எப்போதுமே பிரளயத்தோடு காளிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

பொதுவாக காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நம் நினைவுக்கு வரும். . ஆனால், இத்தலத்து அஷ்டபுஜமாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகியாய், மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவளாய், ஆக்ரோஷமே இல்லாது அமைதியாக பேரழகோடு அமர்ந்திருக்கிறாள். எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அவள் அமர்ந்துள்ள கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.

மழலைச் செல்வம் இல்லாதவர்கள் அஷ்டபுஜமாகாளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் தாய்மைப் பேற்றை அடைகிறார்கள்.கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க இங்கு காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள்.

Comments (0)Newest First

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அமிர்தகடேசுவரர் கோவில்

தினம் முப்பெருந்தேவியாக அருள் பாலிக்கும் அம்பிகை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இக்கோவில் சுமார் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் (வித்யா) மதியம் யானையுடன் லக்ஷ்மியாகவும் (ஜோதி) இரவில் சூலத்துடன் துர்க்கையாகவும் (நாயகி) அருள் தருவதால் வித்யஜோதிநாயகி என்று அழைக்கிறார்கள். சோதிமின்னம்மை என்ற பெயரும் இவருக்கு உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக அவசியம் வணங்க வேண்டிய ஸ்தலம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி

https://www.alayathuligal.com/blog/8jbwz76aeb7drsnd59bggnn7emjd59

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்

https://www.alayathuligal.com/blog/xjneb5f8s4fffahndmmwkzp2ex4lxe

Read More
பகவதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பகவதி அம்மன் கோவில்

தேவி கன்னியாகுமரி

இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது பகவதியம்மன் கோவில். இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் கட்டப்பட்டதாகும். தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக, தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் குமரி அம்மன் கன்னிப்பெண் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் அசுரர் தலைவனான பாணாசுரன் என்பவன் தேவர்களுக்கும் ,முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது தேவர்கள், பாணாசுரனுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திருமாலிடம் விண்ணப்பித்தனர். திருமாலும் பாணாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனை கன்னிப்பெண் ஒருவரால் மட்டுமே அழிக்க முடியும். என்றார். அதனால் பார்வதி தேவியிடம் உங்கள் வேண்டுதலை சமர்ப்பியுங்கள் என்று அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள், பாணாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவியை வணங்கி ஒரு பெரிய வேள்வி செய்தனர். வேள்வியால் மகிழ்ந்த பார்வதி தேவி, தேவர்கள் முன்பாக தோன்றி, பாணாசுரனை அழிப்பதாக உறுதி அளிக்கிறார்.

அதற்காக கன்னியாகுமரி வந்தடைந்த பார்வதி தேவி, அங்கு கடும்தவம் புரிந்தார். சிறிய பெண்ணாக இருந்த கன்னிதேவி, மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரத்தில் கோயில் கொண்ட சிவபெருமான் (தாணுமாலவர்), அவரை மணமுடிக்க எண்ணினார். சிவபெருமான் தனது விருப்பத்தை தேவர்களிடம் கூறினார்.

சிவபெருமானுக்கும் கன்னிதேவிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஒரு கன்னிப்பெண்ணால்தான் பாணாசுரனுக்கு அழிவு ஏற்படும் என்பதால், நாரத முனிவர் சற்று யோசித்தார். தேவர்களும், பாணாசுரனை வீழ்த்த வேண்டும் என்றால், அன்னையின் தவம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாரதரிடம் கூறினர். அதன்படி நாரதர், சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த எண்ணினார். அதேநேரத்தில், சிவபெருமானின் எண்ணத்தை மறுத்துரைக்காதபடி செயல்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டார்.

அதனால், நள்ளிரவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் கூறினார் நாரதர். மேலும் கண்ணில்லா தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லா மலர் ஆகியவற்றை திருமண சீராக வைக்க வேண்டும் என்று கூறினார்.

நாரதர் கூறிய நிபந்தனைகளை சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், சீதனப் பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டார் சிவபெருமான். போகும்வழியில் 'வழுக்கம் பாறை' என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் சேவல் உருவம் கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்துவிட்டது, நள்ளிரவு நேரம் கடந்துவிட்டது என்று நினைத்த சிவபெருமான், கன்னியாகுமரி செல்லாமல், சுசீந்திரம் திரும்பினார். பார்வதி தேவியும் கன்னியாகவே தவத்தைத் தொடர்ந்தார்.

திருமணத்துக்கு ஏற்பாடான உணவுகளும் சீதனப் பொருட்களும் மணலாக மாறின. அரிசி போன்ற வெண்மணலும், வெவ்வேறு வண்ண மணலும் குமரிக்கடல் துறையில் மிகுந்து கிடப்பதை இன்றும் காணலாம்.

இதனிடையே, கன்னிதேவியைப் பற்றி கேள்விப்பட்ட பாணாசுரன், தேவியை மணம்புரிய விரும்பினான். தேவி அதற்கு உடன்படாததால், தேவியை கவர்ந்து செல்ல முயன்றான். இதுதான் சமயம் என்று பார்வதி தேவி, தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை வீழ்த்தினார். மீண்டும் தன் தவத்தை தேவி தொடர்ந்தார்.

அன்னையின் தவக்கோலம்

கன்னியாகுமரி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் . இலுப்பைப் பூமாலையை ஒரு கரத்தில் தரித்து, மற்றொரு கரத்தை தன் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக காட்சி தருகிறர். அன்னையின் திருமுடி மீதுள்ள கீரிடத்தில் பிறைமதி அமைந்துள்ளது.

அன்னையின் மூக்குத்தி

பாணாசுரனை அழித்த பின்பு பகவதி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். சிவபெருமான் தன்னை மணக்காதது, பாணாசுரன் மீது இருந்த வெறுப்பு ஆகியவை சேர்ந்து மிகவும் கோபம் கொண்டு காணப்பட்டார் பகவதி அம்மன். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அம்மன் தன் கோபத்தை ஒரு மூக்குத்தியில் இறக்கி, சாந்தமானார். அன்னையின் மூக்குத்தி யோகசக்தியாக கருதப்படுகிறது.

கன்னித் தீர்த்தம்

மகாபாரதம், மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதம் முதலானவற்றில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள கன்னித் தீர்த்தம் மிகவும் சிறப்புடையது. 'குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை காப்பியம் உரைக்கிறது. சீதையை மீட்க ராமபிரான் கிளம்பியபோது, இலங்கைக்குச் செல்ல சேதுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த சேதுபாலம் கன்னித் தீர்த்தத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கன்னித் தீர்த்தம் ஆதிசேதுவாகவும் கருதப்படுகிறது. பாணாசுரனை அழிக்க கன்னிதேவி புறப்பட்ட இதே இடத்தில் இருந்து, ராவணனை அழிக்க ராமபிரான் புறப்பட்டுள்ளது சிறப்பு.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். தீர்த்தக் கரையில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும். காசி போகிறவர்களுக்கு நற்கதி கிடைக்க கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்று கூறப்படுவதுண்டு.

புரட்டாசி நவராத்திரி விழா 10 நாட்கள், வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு விஜயதசமியன்று

வெளியான பதிவு

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்

https://www.alayathuligal.com/blog/z2lt7re82mmwkk8243hldf6pjnk396

Read More
கொல்லூர் மூகாம்பிகை  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொல்லூர் மூகாம்பிகை கோவில்

கொல்லூர் மூகாம்பிகை அம்மன்

அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகிய கொல்லூர் தலம், அம்பிகையின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம் கர்நாடக மாநிலத்தின் தெற்கே, குடசாத்ரி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைத்துள்ளது. மங்களூரிலிருந்து நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சௌபர்ணிகையாற்றின் கரையோரமாக அமைந்திருக்கிறது.

மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையில் வரத கரம் தன் தாளை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். கன்னியாகுமரியில் பகவதி தேவியின் மூக்கில் மாணிக்க மூக்குத்தி அலங்கரிப்பது போல் கொல்லூரில் அவள் மார்பில், இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. கருவறையின் விமானம் முழுவதும் கெட்டியான தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

இத்தலத்தில் முதன்முதலில் அம்பாள் மூகாம்பிகையானவள், சிலை வடிவில் இல்லை. மூலவராக சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. சிவபெருமானின் லிங்கத்தில், அம்பாள் அரூபமாகவே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு வருகை தந்தபோது சுயம்பு லிங்கத்தை மட்டுமே தரிசனம் செய்தார். இந்த கோவிலில் இருக்கும் சுயம்பு லிங்கத்தை முதன்முதலில் வழிபட்டவர் கோல மகரிஷி ஆவார். லிங்கத்தில் அரூப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆதிசங்கரர் கடும் தவம் மேற்கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற தேவி, மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தால். அந்த ரூபத்தை மூகாம்பிகை சிலையாக உருவம் அமைத்து பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் மூகாம்பிகை மேல் தவம் புரிந்து எழ முயன்றார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்துக் கொடுத்தாள். அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்கு இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரமும், ஆராதனையும் மட்டுமே நடைபெறும். அபிஷேகங்கள் எல்லாம் லிங்கத்திற்கு மட்டுமே நடைபெறுகிறது.

காளி தேவியுடனும், சரஸ்வதி தேவியுடனும் காட்சி தரும் மூகாம்பிகை

இத்தலத்தில் இருக்கும் லிங்கத்தின் நடுவே தங்க நிற கோடு இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. தங்க நிற கோடு இருப்பதை அபிஷேக நேரத்தில் மட்டுமே காண முடியும். லிங்கத்திற்கு இடது பக்கமாக பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் மூவரும், வலது பக்கமாக சரஸ்வதி லட்சுமி பார்வதி இவர்கள் மூவரும் வீற்றிருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் லிங்கத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

முதன்முதலாக இந்த லிங்கத்தை கோல மகரிஷி வழிபட்டதால் கொல்லூர் என்ற பெயர் இந்த இடத்திற்கு வந்தது. இங்கு காட்சிதரும் ஸ்ரீ மூகாம்பிகையின் இரு பக்கங்களிலும் ஐம்பொன்னாலான காளி தேவியும், சரஸ்வதி தேவியும் காட்சி தருகின்றனர். இதனால் இவர்களுக்கு முப்பெரும் தேவியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.

சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகை

கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகையே வழிபட்டால் மிகவும் சிறந்தது.

நவராத்திரி திருவிழாவே இங்கு வெகு சிறப்பான விழாவாக விளங்குகிறது. நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இங்கு விசேஷமான பூஜைகள் நடத்தப்படும். அம்பிகையை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் மூகாம்பிகையை, சரஸ்வதி தேவியாக நினைத்து வணங்கி 'கால ரோகணம்' பாடி அருள் பெற்றார். இத்தலத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியின் சிலையானது, சரஸ்வதி பூஜை அன்று வீதி உலா எடுத்துச் செல்லப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்தியாரம்ப நிகழ்ச்சியும் சரஸ்வதி பூஜை அன்று சிறப்பாக இத்தலத்தில் நடத்தப்படுகிறது.

மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.

கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலா அஞ்சலி செய்கிறார்கள்.

தொழிலில் வெற்றி பெற குங்கும அர்ச்சனை செய்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட வடை நிவேதனம் செய்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க மகாதிருமதுர நிவேதனம் செய்கிறார்கள்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஒன்பதாம் நாளன்று வெளியான பதிவு

கூத்தனூர் சரஸ்வதி கோவில்

https://www.alayathuligal.com/blog/s44nerac2p3waedbzhth84byfbe7k5

Read More
விஜயவாடா கனக துர்கா கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

விஜயவாடா கனக துர்கா கோவில்

விஜயவாடா கனக துர்க்கையம்மன்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத் தலைமையிடமான விஜயவாடா நகரத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள இந்திரநீலாத்திரி மலையில் அமைந்துள்ளது கனக துர்கா கோவில். விஜயவாடா நகர காவல் தெய்வமான கனக துர்க்கா எனப்படும் துர்க்கையம்மன் இந்த கோயிலில் வீற்றுள்ளார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு விஜயம் செய்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு.

கீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள் வேண்டி தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்க்கை காட்சி கொடுக்க, 'அன்னையே! நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும்' என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே! நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில்' அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் இருப்பேன், என வரமளித்தாள். துர்க்கையின் ஆணைப்படி, கீலா மலையாக மாறினான். அன்னை துர்கா, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தபின், கீலா மலை மீது அஷ்டகரங்களுடன் மகிஷாகரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்தாள். மகிஷாசுரனை அழித்த சந்தோஷத்தில் இத்தலத்தில் தங்க மழை பொழிய செய்ததால் கனக துர்கா என்ற பெயர் பெற்றாள்.

அம்பாள் மூலஸ்தானத்தின் மேல் தங்ககூரை போடப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும். கருவறையில் அமைதியான புன்னகை மற்றும் இன்முகத்துடன் அம்மன் காட்சி தருகிறார். கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன.

நவராத்திரி விழா

இத்தலத்தில் நவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன. இத்தலத்தில் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகிலேயே இத்தலத்தில்தான் மூலவரான அம்மன் சரஸ்வதி, மகாலட்சுமி, பால திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, துர்கா தேவி, அன்னப்பூர்ணாதேவி, காயத்ரி, லலிதா திரிபுரசுந்தரி ஆகிய அலங்காரங்களில் நலராத்திரியின்போது காட்சி தருகிறார். விஜயதசமி அன்று அம்மனை, கிருஷ்ணா நதியில் அன்ன வடிவத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வரச் செய்வார்கள். இந்த விழாவிற்கு நவுக விஹாரம் என்று பெயர்.

சீனப்பயணி யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பு

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தனது பயணக் குறிப்புகளில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயில் குறித்து பதிவு செய்துள்ளார் கோயில் அருகே வரவாற்றை விளக்கும் பல்வேறு கல்வெட்டுகள் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருந்து செல்வதுபோல, இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் கனகதுர்கா அன்னைக்கும், மாலை அணிந்து, விரதம் இருந்து யாத்திரையாகச் செல்கிறார்கள். எதிரிகளின் தொந்தரவு விலக, செல்வம் செழிக்க இந்த அம்பிகையை வழிபாடு செய்கிறார்கள். அன்னை கனக துர்காவை வணங்கினால், அவளது அருளால் பொன்மழையே பொழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி எட்டாம் நாளன்று வெளியான பதிவு

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்

https://www.alayathuligal.com/blog/5xn2r77m9f4g5kh9bmnmsgym8thmj8

Read More
வைத்தீசுவரன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

வைத்தீசுவரன் கோவில்

தையல்நாயகி அம்மன்

சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், 'வைத்தியநாதர்'. அம்பாள் பெயர் 'தையல்நாயகி' என்பதாகும்.

வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார். அம்பாளும், இறைவனுக்கு உதவியாக தனது கையில் தைல பாத்திரம், அமிர்த சஞ்சீவி, வில்வ மரத்தடி மண் ஏந்தி இருக்கிறார். இப்படி அம்பாளும், சுவாமியும் தீவினை தீர்க்கும் சக்தி படைத்தவர்களாக அருள்பாலிக்கிறார்கள். சூரபத்மனை வெல்வதற்காக, இத்தல அம்பிகையை முருகப்பெருமான் வழிபாடு செய்தாராம்.

தையல்நாயகிக்கு புடவை சாத்துதல், அபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு செய்வது பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது. மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் தாயாருக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வார்கள். இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் என்ற குறை நீங்கும்.

பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த மேற்கொள்ளும் பாதயாத்திரை

ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக,காரைக்குடி,கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி,மானாமதுரை,திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.

குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றி நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தங்கள் வேண்டுதல்களுக்காகவும், வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்துகின்றனர். . மேலும் விளக்கேற்றியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற வேண்டி அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஏழாம் நாளன்று வெளியான பதிவு

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்

https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

Read More
மாயூரநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மாயூரநாதர் கோவில்

மயிலாடுதுறை அபயாம்பிகை

அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.

கௌரி தாண்டவம்

அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இதனால் இத்தலம் 'கௌரி மாயூரம்' என்றும் பெயர் பெற்றது.

அபயாம்பிகை என்று பெயர் வரக் காரணம்

பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். பார்வதி மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு அவமானப்பட்டாள்.

இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது. நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள். சிவபெருமானை பார்வதியை மயிலாக மாறும்படி சபித்து விடுகிறார்.

அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், 'மாயூரநாதர்' என்றும் பெயர் பெற்றார்.

சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள் பெற்றனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி அமைந்துள்ளது. மயில் வடிவில் சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருகின்றனர். பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்கள் சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன.

இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அன்னை அபயாம்பிகை மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும் காட்சி தருகிறாள். தேவாரத்தில் இந்த அம்பிகையை அம்சலாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அழகிய சொற்களைப் பேசுபவள் என்பது பொருளாகும்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஆறாம் நாளன்று வெளியான பதிவு

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

https://www.alayathuligal.com/blog/3nxzzk82pts7skpe7ekkc3b8gagw82

Read More
நெல்லையப்பர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நெல்லையப்பர் கோவில்

திருநெல்வேலி காந்திமதி அம்மன்

நெல்லையப்பர் கோவிலில் அருள் பாலிக்கும் காந்திமதி அம்மன், வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது. காந்தசக்தி மிகுந்து, பிரகாசமாக அம்பிகை விளங்குவதாலும் இது காந்தி பீடமாயிற்று. இத்தலத்தில் அம்பிகைக்கும், ஈசனுக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

அன்னம் பரிமாறும் அம்பிகை

இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். ஒரு மனைவி கணவனையும் விருந்தினர்களையும் உபசரித்துப் போற்றும் விதிமுறையை இத்தல உச்சிக்கால பூஜை நிகழ்ச்சியில் நிலைநாட்டப்படுகிறது. மற்ற தலங்களில் சுத்த அன்னம் நைவேத்தியம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு சுவாமிக்கு சுத்த அன்னத்துடன் ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு குழம்பு என அறுசுவையுடன் கூடிய உணவையே பிரசாதமாக நைவேத்தியம் செய்வது தனிச்சிறப்பு. கணவன் மனைவி எப்படி ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்தச் சடங்கு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது காந்திமதி அன்னை நைவேத்திய தட்டுடன் ஈசனை நோக்கிப் புறப்படுவாள்.இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். பின் ஆலயத்திலுள்ள அனைத்துப் பரிவார தேவதைகளுக்கும் நைவேத்தியம் செய்கிறாள். பின்னரே காந்திமதிக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. கணவர் உணவு எடுத்துக்கொண்ட பின்னர் மனைவி உணவு புசிக்கும் பாரம்பரியத்தை இக்கோயிலில் அன்னை காந்திமதி தினந்தோறும் நிகழ்த்திக் காட்டுகிறாள்

அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணியும் அம்மன்

உலகம் அனைத்தும் இறுதிக் காலத்தில் அம்பிகையிடம் ஐக்கியமாவதை உணர்த்தும் விதமாக காந்திமதி அம்மனுக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளாபூஜை வரை அம்பிகை வெண்ணிற ஆடையிலேயே அருள்பாலிக்கிறார்.

காந்திமதி சீர்

இத்தலத்தில் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாணத்தின் 3ம் நாள் முதல் 7ம் நாள்வரை காந்திமதி அம்மன் கம்பை நதிக்கு நீராடச் செல்லுவது வழக்கம். அப்போது அங்கே வரும் பெண்களை எல்லாம் அம்பிகையின் தோழியராக பாவித்து அவர்கள் நீராட, ஆலயத்தின் சார்பில் நல்லெண்ணெயும் பாலும் வழங்கப்படுகின்றன. இரண்டையும் சிரசில் வைத்து நீராட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும்,பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது ஐப்பசி திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். 14ஆம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் சிவன் சன்னதிக்கு மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை காந்திமதி சீர் என்று அழைப்பார்கள். இந்த சீர் வரிசை பலகாரங்களை காணவே கண் கோடி வேண்டும்.

ஆடிப் பூரம் வளைகாப்பு

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் ஆலயத்தில், ஆடிப் பூரம் விழாவின் 4-ம் நாளன்று, அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறும். இந்த வைபவத்தின்போது, ஊறவைத்த பயறு வகைகளை, அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர். பார்ப்பதற்குக் கர்ப்பிணி போலவே காட்சி தருவாள் காந்திமதி அம்மன். விழாவுக்கு வந்தவர்களுக்கு வளையல் பிரசாதம் தரப்படும். இந்த வளையலை அணியும் புதுமணப் பெண்ணுக்கு அடுத்த பூரத்துக்குள் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த வைபவத்தைக் காணும் கன்னிகளுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

அம்பிகைக்கு பிரதோஷம்

பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கென ஆடிப்பூர விழா, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆனி மாதப் பெருவிழா போன்றவை விசேஷமானது.

தம்பதியர் அன்யோன்யத்திற்கு அருளும் அம்பிகை

சாந்த சொரூபமாக வீற்றிருக்கும் காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஐந்தாம் நாளன்று வெளியான பதிவு

திருவாரூர் கமலாம்பிகை

https://www.alayathuligal.com/blog/zk6z5ghrez6ekcnc9gg5r373rxmf5a

Read More
குற்றாலநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

குற்றாலநாதர் கோவில்

குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன்

தென்காசி மாவட்டம்., தென்காசி நகரிலிருந்து மேற்கே சுமார் 5 கி. மீ தொலைவில். ஸ்ரீகுற்றாலநாதர் உடனுறை ஸ்ரீகுழல்வாய்மொழி ஆலயம் அமையப்பெற்றுள்ளது.

இங்குள்ள அம்பிகை குழல்வாய்மொழி. வடமொழியில் வேணுவாக்வாகினி என்றும் அழைக்கப்படுகிறாள். இதற்கு, மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலில் இருந்து எழும் இசையை காட்டிலும் இவளுடைய குரல் இனிமை வாய்ந்தது என்று பொருள்.

உயரமான கருவறையில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடக்கரத்தை கீழே தொங்கவிட்டபடியும் புன்முறுவல் பூத்த முகத்தவளாய் காட்சிதருகிறாள்.

தரணி பீடம்

அம்பிகையின் சக்தி பீடங்களுள் இத்தலம் 'தரணி பீடம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது திருமாலுக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, 'தரணி பீடம்' (தரணி – பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் 'நவசக்தி' பூஜை செய்கின்றனர். அப்போது, பால், வடை பிரதானமாக படைக்கப்படும். இவள் உக்கிரமாக இருப்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'காமகோடீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.இரவு எண்ணைய் தீப விளக்குகளின் ஒளியில் அம்பிகையின் தரிசனம் பார்ப்பவரை பரவசம் அடையச் செய்யும்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி நான்காம் நாளன்று வெளியான பதிவு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்

https://www.alayathuligal.com/blog/wl7ltlrte5zw89gr4xkt4kns3e974y

Read More
திருவெண்காடர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவெண்காடர் கோவில்

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடு சிவத்தலம் இருக்கிறது.இங்கே சுவாமியின் திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர். திருவெண்காடர், திருவெண்காட்டுத் தேவர், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான், அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.

பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்த அம்பிகை

பிரம்ம வித்யாம்பிகைக்கு, பெரியநாயகி, மாதங்கி, வேயனதோளி நாச்சியார் என பல திருநாமங்கள் உள்ளன. திருவெண்காடு திருத்தலத்துக்கு அருகில் திருநாங்கூர் எனும் வைணவ திருத்தலம் உள்ளது. அங்கே, மதங்காஸ்ரமத்தில், மதங்க முனிவருக்கு மாதங்கி எனும் பெயரில் மகளாக வளர்ந்து, திருவெண்காடரை நோக்கி கடும் தவம் புரிந்து, ஈசனை கணவராகப் பெற்றாள் என்று பத்மபுராணம் கூறுகிறது. பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்ததால் அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகை எனும் திருநாமம் அமைந்தது. 51 சக்தி பீடங்களில் இத்தலம் பிரணவபீடம் என போற்றப்படுகிறது.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் தனி உள்பிரகாரத்துடன், அம்பிகை சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகையின் நான்கு திருக்கரங்களில், இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். வலது கீழ்க்கரம் அபய கரம், இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.

திருஞானசம்பந்தரை இடுப்பில் சுமந்த அம்பிகை

திருஞானசம்பந்தர், திரு வெண்காட்டின் வட எல்லைக்கு வந்த பொழுது அவருக்கு ஊரெல்லாம் சிவ லோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் காட்சியளிக்க, இத்தலத்தினை மிதிப்பதற்கு அஞ்சி அவர் 'அம்மா' என்றழைக்க, பிரம்மவித்யாம்பாள் அங்கு தோன்றி, தனது இடுப்பில் திருஞானசம்பந்தரை இடுக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். திருஞானசம்பந்தரை இடுப்பில் சுமந்த வடிவில் அம்பாள் சிலை கோயிலின் மேற்கு உட்பிராகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளை நின்று கூப்பிட்ட குளக்கரை குளம் 'கூப்பிட்டான் குளம்' என்று அழைக்கப்பட்டு, இன்று 'கோட்டான் குளம்' என்று மறுவிவிட்டது.

ஞானத்தையும் வித்தையையும் அருள்பவள்

தேவி கல்வி வரம் தருவதில் நிகரற்றவள். அருளும் பொருளும் அள்ளித்தரக்கூடியவள். அம்பிகை வரப்பிரசாதியாய் திகழ்ந்தருளும் திருத்தலம் இது. ஒருவரின் ஜாதகத்தில், புதன் நீச்சம் பெற்று இருந்தால் இங்கு வந்து வழிபட்டு, அம்பிகையை மனமுருகி வேண்டினால், அனைத்து குறைகளையும் நீக்குவாள் அம்பிகை. மனிதன் எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும் ஞானம், அறிவு, கலைகளில் மேன்மை இருந்தால்தான் வாழும் வாழ்க்கை இனிமையும் உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். அத்தகைய ஞானத்தையும் வித்தையையும் அருள்பவள் அன்னை பிரம்ம லிதயாம்பிகை

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி மூன்றாம் நாளன்று வெளியான பதிவு

நாகை நீலாயதாக்ஷி அம்மன்

https://www.alayathuligal.com/blog/3d8ght8lka6dy92dbtp8rramxpfljr

Read More
கும்பேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கும்பேஸ்வரர் கோவில்

கும்பகோணம் மங்களாம்பிகை அம்மன்

அம்மனின் சக்தி பீட வரிசையில், குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை அம்மன், விஷ்ணு சக்தி பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலம் மந்திரிணி சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது.

கும்பேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், மங்களாம்பிகை ஆகிய திருநாமங்கள் உண்டு. திருஞானசம்பந்தர் தனது பாடலில் மங்களாம்பிகையை 'வளர் மங்கை' என்று அழைக்கிறார். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது திருமேனியில் பாதியை வழங்கினார். அதே போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை மங்களாம்பிகைக்கு வழங்கியுள்ளார். அதனால் மங்களாம்பிகை 'மந்திரபீடேஸ்வரி' என்றும் அழைக்கப்படுகிறார். மஞ்சள் பட்டுடுத்தி, மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு, அம்பாள் அருள்பாலிப்பதைக் காண பக்தர்கள் எப்போதும் இந்த கோயிலில் குவிவது வழக்கம்.

கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை அருள்பாலிக்கிறார். வலது மேல்கரத்தில் அமுதக் கலசத்தையும், இடது மேல்கரத்தில் அட்சமாலையையும் தாங்கி அருள்பாலிக்கிறார். வலது கீழ் கரம் அபயகரமாகவும், இடது கீழ்க்கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்துள்ளன.

கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் மேம்பட, திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, செல்வம் பெருக இத்தலத்தில் பக்தர்கள் கூடி மங்களநாயகிக்கு வழிபாடு செய்வது வழக்கம். விநாயகப் பெருமான் அம்மையும் அப்பனுமே உலகம் என்று கூறுவதைப் போன்று, இக்கோயிலில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை இருவரையும் சேர்த்தே வலம் வருவது போன்ற பிரகார அமைப்பு உள்ளது.

ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்

பொன்னூஞ்சல், நீராடல், அம்மானை, அம்புலி, வாரானை, முத்தம், சப்பாணி, தாலம், செங்கீரை, காப்பு ஆகிய பருவங்களை விளக்கி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருக்குடந்தை மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை அருளியுள்ளார்.

தளர்நடை பயிலும் குழந்தையாக மங்களாம்பிகையை பாவித்துப் பாடும்போது, "கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி" என்கிறார். மங்களாம்பிகையைக் கண்டாலே, பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரம் அனைத்தும் பறந்தோடும் என்கிறார். பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல் ஆராவரிக்கும் என்று கூறி மகிழ்கிறார்.

சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். நவராத்திரி தினங்களில் கோயில் முழுவதும், கொலுவைக்கப்படுவதும் அதைக் காண பல ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருவதும் வழக்கம்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி இரண்டாம் நாளன்று வெளியான பதிவு

மதுரை மீனாட்சி அம்மன்

https://www.alayathuligal.com/blog/l6eks5ceh4mjgbcx42w4tamp656mnn

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அமிர்தகடேசுவரர் கோவில்

திருக்கடையூர் அபிராமி அம்மன்

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேசுவரர் உடனுறை ஸ்ரீஅபிராமி ஆலயம் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது,

ஆலயதத்தின் வெளிப்பிரகாரத்தில் இத்தலத்து நாயகி அபிராமி அம்மனின் சன்னதி கிழக்கு நோக்கியுள்ளது. அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள்.

அபிராமி என்ற சொல்லுக்கு 'மேலான அழகுடையவள்' என்பது பொருள். அபிராமி அம்மன் காலசம்ஹாரரையும், ஸ்ரீஅமிர்தகடேசுவரரையும் விட பிரசத்தி பெற்றவள். சரஸ்வதிதேவியே அபிராமி அம்மனை பூஜை செய்து பலன் பெற்றாள் என்றால் அன்னையின் அருளளாற்றல் எத்தகையது என்று நமக்கு விளங்கும்.

அபிராமிப்பட்டருக்காக நிகழ்த்திய அற்புதம்

அபிராமிப்பட்டர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூரில் வாழ்ந்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். அபிராமி அன்னையின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். எப்பொழுதும் அபிராமி சன்னதியில் அமர்ந்து அவளை துதித்து கொண்டிருப்பார். பிற சமயங்களில் நல்ல நாள்,நட்சத்திரங்களை குறித்து கொடுக்கும் பணியை செய்து வந்தார்.

ஒரு நாள் தஞ்சை மன்னன் சரபோஜி (கி.பி.1712 –1728)அபிராமி ஆலயத்திற்குவந்தான். மற்றவர் எல்லாம் மன்னனை வணங்கி நிற்க, அபிராமி பட்டரோ கண்ணை மூடி தியான நிலையில் அபிராமியின் பிரகாசமான முகத்தை மனக்கண்ணில் பாரத்து முகத்தில் மகழ்ச்சி பொங்க அமர்ந்திருந்தார். மன்னன், தனக்கு மரியாதை செய்யாது இருக்கும் அபிராமிபட்டரைப் பற்றி மற்றவர்களிடம் விசாரித்தான், அவர்கள் அபிராமிபட்டர் பஞ்சாங்கம் கணிப்பவர் என்றும் ஆனால் எப்பொழுதும் மதுப்போதையில் இருப்பார் என்றும் பொய் கூறினர்.

மன்னன் அபிராமிப்பட்டர் நாள் கணிப்பவர் என்பதால் அவரை எழுப்பி 'இன்று என்ன திதி' என்று கேட்டான். அபிராமியின் பௌர்ணமி போன்ற பிரகாச முகத்தை அதுவரை மனக் கண்ணில் தரிசித்துக் கொண்டிருந்ததால் சடடென்று 'இன்று பௌர்ணமி' எனறு கூறிவிட்டார். ஆனால் அன்று அமாவாசை திதி. அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று கூறியதால் கோபம் கொண்ட மன்னன் 'இன்று இரவு முழு நிலவு ஆகாயத்தில் தோன்றாவிட்டால் மரண தண்டணை' எனறு அபிராமிபட்டரிடம் கூறி விட்டான்.

மன்னன் கொடுக்கப் போகும் தண்டணையைக் கேட்டு அபிராமிப்பட்டர் மனம் உடைந்தார். உடனே அபிராமியை துதித்து அபிராமி அந்தாதி பாடத் தொடங்கினார். அவர் 78 பாடல்கள் பாடி முடித்தார். ஆனால் அபிராமியின் அருள் எதுவும் அவருக்கு அதுவரைக் கிடைக்கவில்லை. 'கயவர் தம்மோடு கூட்டினியே' என்று முடியும் 79 பாடலைப் பாடினார். இப்பாடலின் பொருள் 'உன்னையே எப்பொழுதும் வணங்கும் நான் துன்பப்படும்போது நீ ஏன் கயவர்களுக்கு துணையாய் இருக்கின்றாய்' என்பதாகும். இந்தப் பாடல் முடிந்ததும் அபிராமிப்பட்டர் முன் தோன்றிய அபிராமி 'உன் பக்தியை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம்' என்று கூறி தன் காதில் அணிந்திருந்த தாடங்கத்தை கழற்றி ஆகாயத்தில் வீசி எறிந்தாள். அது முழுநிலவை விட பன்மடங்கு பிராகசத்துடன் ஜொலித்தது.

தன் கவறை உணர்நத மன்னன் அவருக்கு 'அபிராமிபட்டர்' என்று பட்டம் அளித்தான். இந்த அற்புத நிகழ்ச்சியை ஒவவொரு வருடமும் தை அமாவாசையன்று அபிராமிபட்டர் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

அபிராமியிடம் நாம் பெறக்கூடிய நற்பலன்கள்

நீண்ட ஆயுளை வேண்டுவோர் இத்தலத்து ஈசனை நாடி வருகின்றார்கள் என்றால் வாழ்கையில் துன்பப்பட்டு அதில் உழண்டு கொண்டிருப்பவர்கள் தம் துன்பங்கள் நீங்கி நற்பலன்கள் பெற நாடுவது, சகலவித செல்வங்களையும் வாரிவழங்கும் அன்னை அபிராமியைத்தான்.

அபிராமிப்பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி என்னும் நூலில் நூறுபாடல்கள் உள்ளன. அதிலுள்ள ஒவ்வொரு பாடலும் அபிராமியிடம் நாம் பெறக்கூடிய நற்பலன்களை விவரிக்கின்றது. திருமணம், குழந்தைப்பேறு, வீடு, வாகனம், உத்தியோக உயர்வு, தெய்வ அருள் என்று ஒவ்வொரு பாடலுக்கும் சிறப்புப் பலன்கள் உண்டு.

அன்னை அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் தன்னை வந்து வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி முதல் நாளன்று வெளியான பதிவு

மயிலாப்பூர் கற்பகாம்பாள்

https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln

Read More
ஐயாறப்பர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஐயாறப்பர் கோவில்

திருவையாறு தர்மசம்வர்த்தினி

அம்மனின் சக்தி பீட வரிசையில் தஞ்சை மாவட்டம், திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்பாள் உடனுறை ஐயாறப்பர் கோயில், தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.

இவளுக்கு இங்கு தர்மாம்பிகை, அறம்வளர்த்தநாயகி, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சன்னதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னிதிகளுக்குத் தனித்தனி ராஜகோபுரம் உண்டு.

காவிரியானது திருவையாறு அருகே காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று ஐந்து கிளை ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் இவ்வூர் திருவையாறு (திரு+ஐந்து+ஆறு) என்று பெயர் பெற்றது.

அறம் வளர்த்த நாயகி

ஆண்கள் தர்மம் செய்வதைவிட ,குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் பார்வதி தேவி இங்கே எழுந்தருளி உள்ளாள்.

காஞ்சி காமாட்சியைப் போன்று இறைவனிடம் இரு நாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்ததால், அம்பாள் 'அறம் வளர்த்த நாயகி' என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

அம்பாள், மேல் கரங்களில் சங்கு சக்கரத்துடனும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் திருமால் அம்சமாக அருள்பாலிக்கிறார். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோயில்கள் இல்லை.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.

தஞ்சாவூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு மஹாளய அமாவாசையன்று வெளியான பதிவு

சீர்காழி திரிபுரசுந்தரி அம்மன்

https://www.alayathuligal.com/blog/2a9b25aa7he6e3exfy4756yx3zdc9t

Read More
அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அங்காள பரமேஸ்வரி கோவில்

ஆங்கிலேய அதிகாரியை அடிபணிய வைத்த அங்காள பரமேஸ்வரி

தேனி-போடி சாலையில் கோடாங்கிப்பட்டி கிராமத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தேனிக்கு அருகிலுள்ள குச்சனூரில் புற்றுக் கோயில் இருந்தது. இந்த கோவிலுக்கு ஊர் மக்கள் ஓர் அங்காள பரமேஸ்வரியின் சிலையைச் செய்ய விரும்பினார்கள். அதன்படி சுப்புத் தேவர் என்பவர், போடிக்கு அருகே உள்ள ஊருக்குச் சென்று அங்காள பரமேஸ்வரியின் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையை தங்கள் வசித்த வந்த குச்சனூருக்குக் கொண்டு செல்ல ஊர் மக்கள் சுமந்து வந்தனர். அப்போது போடிக்கு அருகே கோடாங்கிப்பட்டி எனும் ஊரை வந்து அடைந்தபோது களைப்பு உண்டானதால் அங்கு சிலையை இறக்கி வைத்துவிட்டு சற்று ஓய்வு எடுத்தனர். அன்னையின் திருவுளம் அங்கேயே தங்கிவிட எண்ணியது போலும். அதனால் கீழே இறக்கி வைக்கப்பட்ட திருவுருவச்சிலை மீண்டும் எடுக்கவே முடியாதபடி நிலைத்து நின்றுவிட்டது. இதனால் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த ஊர் மக்கள் கண்ணீர்விட்டுப் புலம்பி, 'எங்கள் தாய் இருக்கும் இடமே எங்களுக்கான இடம்' என்று உறுதி கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.

அன்னை குடிகொண்ட இடத்தில் ஒரு கோயிலை எழுப்ப விரும்பி போடி ஜமீன்தாரைச் சந்தித்து விண்ணப்பம் செய்தனர், அவரோ இப்போது சிலை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஆங்கிலேயர் ஒருவரே அந்த இடத்துக்கு உரிமையாளர் என்றும் கூறினார். நீங்கள் அவரிடம் அனுமதி பெற்று ஆலயம் கட்டிக்கொள்ளுங்கள் என்று வழி காட்டினார். அவர்களும் அவ்விதமே அந்த ஆங்கிலேயரை அணுகி அங்காள அம்மனுக்குக் கோயில் கட்ட அனுமதி கேட்டனர். அந்த ஆங்கில அதிகாரியோ கோபமடைந்து, அவர்களை விரட்டியடிக்க தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பயந்துபோன ஊர்மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

அன்றிரவு ஆங்கில அதிகாரியின் மாளிகை எங்கும் தீ பரவியது. அது ஊரெங்கும் பற்றியது. ஆங்கிலேயரும் அவரது காவலர்களும் மாளிகையை விட்டு ஓடினர். தெய்வ அருள் வந்த மூதாட்டி ஒருத்தி, 'அங்காளம்மனுக்கு சொந்தமான இடத்தைக் கொடுத்துவிடுங்கள்! உங்களைப் பாவத்தில் இருந்து மீண்டு கொள்ளுங்கள்' என்று அறிவித்தாள். ஆங்கிலேய அதிகாரிகள் மிரண்டனர்.காவலர்கள் இப்போது ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க வரும்பும்படி ஊர்மக்களைக் கெஞ்சுகிறார்கள். அதிகாரிகள் ஊர்மக்களை வணங்கித் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். அம்மன் நிலை கொண்ட கோடாங்கிப்பட்டி ஏரிக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர், மேலும், 'ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான இடம் அது' என்று செப்பு சாசனத்தையும் வழங்கினர்.

மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கண்கண்ட தெய்வமாக கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி விளங்கி வருகிறாள். இங்கு இவளுக்கு வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜைகள், மாசி அமாவாசை மற்றும் ஆடி மாத விழாக்கள் விசேஷமானவை. ஒருமுறை இவளை தரிசித்தால் போதும், அச்சங்கள் இல்லாத சிறப்பான வாழ்வை அடையலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

Read More