ஐயாறப்பர் கோவில்

திருவையாறு தர்மசம்வர்த்தினி

அம்மனின் சக்தி பீட வரிசையில் தஞ்சை மாவட்டம், திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்பாள் உடனுறை ஐயாறப்பர் கோயில், தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.

இவளுக்கு இங்கு தர்மாம்பிகை, அறம்வளர்த்தநாயகி, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சன்னதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னிதிகளுக்குத் தனித்தனி ராஜகோபுரம் உண்டு

காவிரியானது திருவையாறு அருகே காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று ஐந்து கிளை ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் இவ்வூர் திருவையாறு (திரு+ஐந்து+ஆறு) என்று பெயர் பெற்றது.

அறம் வளர்த்த நாயகி

ஆண்கள் தர்மம் செய்வதைவிட ,குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் பார்வதி தேவி இங்கே எழுந்தருளி உள்ளாள்.

காஞ்சி காமாட்சியைப் போன்று இறைவனிடம் இரு நாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்ததால், அம்பாள் 'அறம் வளர்த்த நாயகி' என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

அம்பாள், மேல் கரங்களில் சங்கு சக்கரத்துடனும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் திருமால் அம்சமாக அருள்பாலிக்கிறார். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோயில்கள் இல்லை.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.

தஞ்சாவூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு மஹாளய அமாவாசையன்று வெளியான பதிவு

சீர்காழி திரிபுரசுந்தரி அம்மன்

https://www.alayathuligal.com/blog/2a9b25aa7he6e3exfy4756yx3zdc9t

 
Previous
Previous

அமிர்தகடேசுவரர் கோவில்

Next
Next

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்