
பாலமுருகன் கோவில்
பழனி முருகன் போல் தோற்றமளிக்கும் பாலமுருகன்
வத்தலகுண்டுவிலிருந்து 46 KM தொலைவில் உள்ளது தாண்டிக்குடி மலைக்கிராமம் . இத்தலத்தில் முருகன் பாலமுருகனாக அருள்புரிகிறார்.
பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இக்கோவிலிலும் உள்ளது. பழனி மலை முருகன் சிலையில் இருக்கும் அத்தனை அம்சங்களும் அப்படியே இந்த சிலையில் இருப்பதால், இத்தல முருகனையும், `பழனி முருகன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
தாண்டிக்குதி என பெயர் வந்த கதை
முருகன், கயிலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு பழனி வருவதற்கு முன் தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழனி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாக்கிக் கொள்ள ஏற்றது என கருதி தாண்டிக் குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் தாண்டிக்குதி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி தாண்டிக்குடி என ஆனது.
பழனிக்கே முருகன் இங்கிருந்து தான் சென்றவர் என்பதால் எனவே பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பின் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முருகப்பெருமானின் கால் தடம்
கோவிலின் அருகில் மலைப் பாறையில், பழனி திருத்தலத்தை நோக்கி கால் தடம் ஒன்று காணப்படுகிறது. இங்கிருந்துதான் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பழனி மலைக்கு முருகப்பெருமான் தாண்டிச் சென்றதாகவும், அதில் ஏற்பட்ட கால் தடம்தான் இது என்று கூறப்படுகிறது.
அதே போல் இந்தப் பாறையில் ஒரு வேலின் தோற்றம், மயிலின் தோற்றம், அனுமனின் தோற்றம், பாம்பின் தோற்றம் ஆகியவை காணப்படுகின்றன. அதை விட சிறப்பு, இங்குள்ள பாறையின் மீது எந்நாளும் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. சுனையில் ஒரு வேல் நடப்பட்டுள்ளது.
குழந்தை வரம் தரும் சுனை தீர்த்தம்
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தச் சுனை நீரை எடுத்துச் சென்று சுவாமியின் திருவடியில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் ஆலயத்தில் தரப்படும் விபூதி மற்றும் சந்தனத்தை அந்த நீரில் கலந்து அருந்தினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

சுப்பிரமணியர் கோவில்
மும்மூர்த்திகளின் சொரூபமாக காட்சி தரும் முருகப்பெருமான்
கன்னியாகுமரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் ,சுசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தலம் மருங்கூர் . இந்த முருகன் சிலையானது மயிலோடு சேர்த்து ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பாகும்.
இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு மும்மூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஐப்பசி மாதத்தில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து நடராஜராகவும், மதியம் வெள்ளை வஸ்திரம் அணிந்து பிரம்மாவாகவும், மாலையில் பச்சை வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும்.
சாப விமோசனம் அருளும் தலம்
ஒரு சமயம் சாப விமோசனம் பெற இந்திரன் இத்தலத்திற்கு அருகில் உள்ள சுசீந்திரம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார். அப்போது இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவனோ குதிரையை மருங்கூர் தலத்திற்கு வந்து முருகனை வேண்டி சாப விமோசனம் அடையுமாறு பணித்தார். அதன்படி இங்கு வந்த குதிரையும் இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். குதிரை வழிபட்ட தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனி வருகிறார்.
இத்தலத்து முருகனை வழிபட்டால் அணைத்து பாவம் மற்றும் சாபங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பாலசுப்ரமணியர் கோவில்
முருகப் பெருமானின் அருள் பிரவாகிக்கும் தலம்
வெண்ணெய்மலை பாலசுப்ரமணியர் கோவில் கரூர் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. படிகள் அதிகம் இல்லாததால் மிகவும் எளிதாக மலை ஏறி முருகனை தரிசித்து வரலாம்.
யோகி பகவன் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியன் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாக அனைவரும் அறியச் செய்யுமாறு கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவன், இது குறித்துக் கருவூர் அரசனிடம் கூறினார். மன்னரும் மலையில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து, முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த இக்கோவிலை ஒளவையார் மூவரம்மானையில் பாடியுள்ளார்.
வெண்ணெய் மலைப் பாறை கடும் வெயிலிலும் குளுமையுடன்இருக்கும் அதிசயம்
முன்னொரு யுகத்தில் பிரம்மதேவனுக்கு,தனது படைப்பு தொழிலில் கர்வம் தோன்றியது. அவருக்குப் பாடம் புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது.பிழையை உணர்ந்த பிரம்மன், தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார்.இதற்கு தீர்வாக வஞ்சி வனத்தில் தவம் இயற்ற இறைவன் கூறினார். இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோகப் பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் உயிரினங்கள்,பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது.அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலைப் பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது.
மழலைச் செல்வம் அருளும் தலம்
மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் ஐந்து தினங்கள் நீராடி முருகனை வழிபட, பிள்ளையில்லாக் குறை தீர்வதுடன்,தோஷங்களும் தீர்கிறது.
மூர்த்தி , தலம் , தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்தலத்திற்கு வந்து வணங்கினால் வளமான வாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஓதிமலை ஆண்டவர் கோவில்
முருகப்பெருமான் ஐந்து முகங்களோடு தோற்றமளிக்கும் அபூர்வ காட்சி
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டரில் உள்ளது இரும்பொறை. அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஓதிமலை.முருகன் கோவில் அமைந்த மலைகளிலேயே இந்த ஓதிமலைதான் மிகவும் உயரமான மலை. இது சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலையாகும். இந்த மலையில் ஏறி, முருகப்பெருமானை தரிசனம் செய்ய நாம், 1800 படிகளை கடந்து செல்ல வேண்டும்.
முருகப்பெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டான கதை
பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே இந்த ஓதிமலையிலிருந்து மேற்கொண்டார்.
படைப்புத் தொழிலை செய்து வந்த காரணத்தால், இந்தல முருகப்பெருமானுக்கு, நான்முகனின் நான்கு முகங்களோடு சேர்த்து மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு. ஐந்து முகத் தோற்றத்தில் அருளும் முருகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் காண முடியாது என்பது இந்த தலத்தின் கூடுதல் சிறப்பு.
ஒதி மலை என்ற பெயர் ஏற்பட்டதின் பின்னணி வரலாறு
முருகப்பெருமான் படைப்புத் தொழிலை செய்துவந்த கால கட்டத்தில், அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பது நியதி. எனவே தேவர்கள் அனைவரும் இதுபற்றி சிவபெருமானிடம் முறையிட்டனர்
அவரும் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்தார். எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்தது. பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்று அழைக்கப்பட்டது. அது இந்த ஓதி மலைக்கு அருகிலேயே இருக்கிறது. இரும்பறை என்பது மருவி இரும்பொறை என்று அழைக்கப்படுகிறது.
எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது இந்தப் பகுதி மக்களிடம் வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இருக்கிறது.
இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பாரிஜாதவனேசுவரர் கோவில்
முருகப் பெருமான் சிவஸ்வரூபமாகத் திகழும் தலம்
திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மீ.. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருக்களர். இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் ஆறு முகங்களுடன் தனியே குரு மூர்த்தமாக மிக்க அழகுடன் காட்சி தருகிறார். ஆறுமுகப் பெருமான் இங்கே சிவபெருமானின் கட்டளைக்கிணங்கி, துர்வாசரோடு 60,000 முனிவர்களுக்கும் நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர (ஐந்தெழுத்து) மந்திரத்தை உபதேசித்து அருளினார். சிவஸ்வரூபமாகத் திகழும் ஆறுமுகப் பெருமான் இங்கே இச்சா, கிரியா சக்திகளான வள்ளி-தெய்வானை அல்லாமல் குரு மூர்த்தமாக காட்சி அளிக்கின்றார்.
இவ்வாலயத்தின் அதிமுக்கிய விழாவாக 'பஞ்சாக்ஷர உபதேச விழா' விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது. வருடந்தோறும் மார்கழி மாதம் சஷ்டி திதி, சதய நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் மாலை 6 மணியளவில் கந்தன் குருமூர்த்தியாக எழுந்தருளி பஞ்சாக்ஷர மந்திரத்தை துர்வாசருக்கும், அடுத்து துர்வாசர் சகல உயிர்களுக்கும் உபதேசம் செய்வது இன்றுவரை வெகு சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.
கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. இத்தலம் முருகப் பெருமானின் திருப்புகழ் வைப்புத் தலமாக உள்ள

பழனியப்பர் கோவில்
வேடன் கோலத்தில் முருகன்
முருகனின் மூக்கு, முகவாய், மார்பில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுககுறிச்சி என்னும் இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பழனியப்பர் கோவில். 240 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலைக் கோவிலுக்கு கார் மூலம் செல்ல ரோடு வசதியும் உண்டு. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி, தமிழ் மூதாட்டி அவ்வையார் ஆகியோர் வழிபட்டு இருக்கிறார்கள்.
முருகன் மும்மூர்த்திகளின் தொழிலை பூலோகத்தில் செய்த தலம்
ஒரு சமயம் முருகன், பிரம்மாவிடம் சென்று, ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டார். பிரம்மாவுக்கு அதன் பொருள் தெரியவில்லை. விஷ்ணு, சிவன் ஆகியோரிடமும் கேட்டார் முருகன். அவர்களும் சரியான பதில் சொல்லவில்லை. படைப்பது, காப்பது, அழிப்பது ஆகிய முக்கிய முத்தொழில்களைச் செய்யும் இந்த மூவரையும், முருகன், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஏனெனில், அவருக்கு ஓம் என்ற மந்திரத்தின் பொருள் தெரியும். எல்லாம் நானே என்பதுதான் அந்த மந்திரத்தின் எளிய பொருள். பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்து, மும்மூர்த்திகளின் தொழிலையும் முருகனே மேற்கொண்டார்..முருகன் தங்கிய தலம் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள பேளுக்குறிச்சி கூவை மலை. கூவை என்பது கழுகு போன்ற பெரிய பறவை. வானத்திலிருந்து கூவை மலையைப் பார்த்தால், கழுகு சிறகை விரித்திருப்பது போல காணப்படுவதால் இப்பெயர் வந்தது.
வேடன் கோலத்தில் கையி ல் சேவலுடன் காட்சி தரும் முருகன்
இத்தல முருகனுக்கு பழனியாண்டவர் எனப் பெயர். இங்குள்ள முருகனின் கையில் சேவல் கொடிக்கு பதிலாக, சேவலே இருப்பதைக் காணலாம். பழனியாண்டவரை நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று தரிசித்தால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால், பெண் வடிவமாகவும் காட்சி தருவது விசேஷத்திலும் விசேஷம். சக்தியும் - சிவனும் இணைந்த அர்த்தநாரீஸ்வர வடிவம் என இதைக் கொள்ளலாம். எனவே, இவருக்கு சக்தி அதிகம். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலையைப் போலவே, பழனியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார், போகர் சித்தர். முருகன், வேடன் கோலத்தில் இருப்பதால், தலையில் கொண்டையும், வேங்கை மலர்க்கிரீடமும், கொன்றை மலரும், ருத்திராட்ச மாலையும் சூடியபடி இருக்கிறார். காலில், காலணி, வீரதண்டை அணிந்திருக்கிறார். இடது கையில், வேலும், இடுப்பில், கத்தியும், வலது கையில், வஜ்ரவேலும் தாங்கியிருக்கிறார்.
மூலவர் பழனியப்பர் சிவபெருமான் பார்வதியின் அம்சம் என்பதால், அவர் நெற்றியில் இருக்கும் மூன்று பட்டை விபூதிக் கோடுகள் சிவனையும், விபூதியின் மேல் இருக்கும் குங்குமப்பொட்டு பார்வதியையும் குறிக்கிறது.
முருகனின் மூக்கு, முகவாய், மார்பில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
இக்கோவிலில் நடக்கும் பவுர்ணமி பூஜை மிகவும் விஷேசமானதும் தனிச் சிறப்பும் கொண்டது..இரலில் முருகனுக்கு அபிஷேகம் முடிந்தவுடன், மூலவரின் மூக்கு, முகவாய் மற்றும் மார்பில் இருந்து வியர்வை துளிர்க்கும். அப்போது மூன்று விதமான நறுமண வாசனை முருகனின் திருமேனியிலி ருந்து வெளிப்படும்.
பின்னர் முருகனுக்கு அலங்காரம் செய்து நள்ளிரவு 11.50 மணிக்கு கருவறைக் கதவை மூடிவிடுவார்கள். பௌர்ணமி நள்ளிரவில் சித்தர்கள் வந்து முருகனை பூஜை செய்து வழிபடுவார்கள் என்பதால்தான் கருவறைக் கதவை அடைத்து விடுவார்கள். பின்னர் கதவை திறந்து பார்த்தால் முருகனுக்கு பூஜை நடந்த தடயங்களும், முருகனின் அலங்காரம் கலைந்த நிலையும் காணப்படும். இந்த அதிசயம் இன்றளவும், ஒவ்வொரு பௌர்ணமி பூஜையன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
யானைப்பாழி தீர்த்தம்
மலையடிவாரத்தில் யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை, யானைப்பாழி தீர்த்தம் என்பர். திலுள்ள நீரை உடலில் தெளித்தால், தோல் மற்றும் எலும்பு நோய் நீங்கும் என்பர். இந்த தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வைத்தீஸ்வரன் கோவில்
பங்குனி உத்திரத் திருவிழா
முருகப்பெருமானும் யானையும் விளையாடும் நரி ஓட்டம் நிகழ்ச்சி
கும்பகோணம் = சிதம்பரம் நெடுஞ்சாலையில், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேவார பாடல் பெற்ற தலம் வைத்தீஸ்வரன் கோவில். இறைவன் திருநாமம் வைத்தியநாத சுவாமி. இறைவி தையல்நாயகி.
முருகப்பெருமான் இங்குப் பேரழகுடன் முத்துக்குமார சுவாமி என்ற திருப்பெயர் கொண்டு அருள்கிறார். இவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குமரகுருபரர், 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' என்ற நூலைப் படைத்துள்ளார். இந்தத் தலத்தில் நடைபெறும் அர்த்த சாமபூஜை சிறப்பு வாய்ந்தது. முருகனுக்குப் புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம் முதலியவை சாத்தி தீபாராதனை செய்கிறார்கள். முருகனைப் பிள்ளைத்தமிழ் பாடி தாலாட்டி பள்ளி கொள்ள செய்த பின்னரே சுவாமி அம்பாளுக்கு அர்த்த சாமபூஜை நடைபெறுகிறது.
இத்தலத்தில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப் பெருமான் குழந்தை வடிவாக, இத்தலத்தில் அருள்பாலிப்பதால் அவரை குதூகலம் செய்வதற்காக தினமும் வீதியுலாவின் போது, நரி ஓட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முருகக் கடவுள் யானையை விரட்டுவதும், யானை அவரை விரட்டுவதும் ஆகிய நரி ஓட்டம் பிரபலமாக நடைப்பெறுகிறது. பெரியவர்கள் சிறுகுழந்தையைச் சிரிக்க வைக்க நரி மிரட்டல் செய்வது போல இங்கு முருகனுக்காக நரிஓட்டம் நடத்தப்படுகிறது.. இந்த நிகழ்ச்சியை காண பெருந்திரளான மக்கள் இத்தலத்தில் கூடுகிறார்கள்.

வில்வவனேசுவரர் கோவில்
கலை அம்சத்துடன் காட்சி தரும் சண்முகர்
முருகன் என்றால் அழகு என்ற பொருளும் உண்டு. திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவிலிலுள்ள சண்முகர் விக்கிரகம் கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ள அற்புதப் பொக்கிஷமுமாகும். சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையழகு மிக்க முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது.
இத்தலத்து சண்முகர் விக்கிரகம், மயில், திருவாசி ஆகியன அனைத்தும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது ஆகும். முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த விக்ரகத்தில் கை ரேகை, நகம் எல்லாமே மிகத் தெளிவாக தெரியும். பொதுவாக முருகனின் வலது பக்கம் திரும்பியிருக்கும் மயில், இந்த சிற்பத்தில் இடப்புறமாக திரும்பியிருப்பது மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.
அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

வெற்றி வேலாயுதசாமி கோவில்
முருகப்பெருமான் தன் வேலால் உருவாக்கிய தீர்த்தம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் புகழ் பெற்ற கதித்தமலை அமைந்துள்ளது.இது கைத்தமலை என்றும் கதிர்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. கதித்த என்னும் சொல்லுக்கு கோபித்த என்ற பொருளும் உண்டு. அம்மையப்பனாகிய பெற்றோரிடம் ஞானப்பழத்தை பெறாத முருகன் அவர்களிடம் கோபித்துக்கொண்டு இங்கு வந்ததால் (கோபித்தமலை) கதித்தமலை என்று ஆயிற்று. கதித்தமலை மயில் வடிவில் உள்ளதால், மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு வெற்றி வேலாயுதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மலையின் மீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார் . வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
அகத்தியர் முனிவர், முருகப் பெருமானை வழிபடஇத்தலத்திற்கு வந்தார். ஆனால் அவர் பூஜை செய்வதற்கான நீர் கிடைக்காததால் வருத்தமுற்றார். அவர் மனம் உருகி முருகப்பெருமானை வேண்ட, முருகப்பெருமான், தன வேலால் இவ்விடத்தில குத்த நீர் வந்தது. அதைக்கொண்டு அகத்தியர் பூஜை செய்தார். அவ்வாறு முருகப்பெருமான் குத்திய இடத்தில இருந்து நீர் இன்றும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கிறது . குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் 'ஊத்துக்குளி' என்று இவ்விடத்திற்கு பெயர் ஏற்பட்டது .
அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

முருகய்யனார் கோவில்
பாம்பின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் முருகன்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகேயுள்ள வீரக்குடியில் அமைந்துள்ளது முருகய்யனார் கோயில். பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இத்தல மூலவர் முருகைய்யா பாம்பின் மீது அமர்ந்தவாறு உள்ளது தனிச்சிறப்பாகும். கண்மாய்க் கரையில் எழுந்தருளி உள்ளதால் கரைமேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார்.
முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி வீரக்குடியில் பால் வியாபாரம் செய்து வந்தாள். வீரக்குடியிலிருந்து பாலினை, அவர் கண்மாய்க் கரை வழியாய் வியாபார்ததிற்கு எடுத்துச் செல்லும் போது வள்ளிக் கொடியில் கால் இடறி பால் சிந்தியது. தற்செயலாக நடந்தது என்று நினைத்து வி்ட்டுவிட்டாள், ஆனால் இது தொடர்ந்து நிகழ்ந்தது. அதனால் தனது வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு கோபத்தால் ஒரு கோடரியை வைத்து அக்கொடியை வெட்டினாள். அதிலிருந்து ரத்தம் பீரிட்டுவர பயந்து ஊருக்குள் ஓடினாள். அங்கிருந்தவர்களின் துணையோடு அவ்விடத்திற்கு வந்தாள், அக்கூட்டத்திலிருந்த பெரியவர் அங்கு தோண்டிப் பார்க்கும் படி கூற அங்கு முருகன் சிலை கிடைத்தது. பின்னர் முறைப்படி ஆலயம் கட்டி அதில் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
இரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும் மண்
வள்ளிக் கொடியிலிருந்து இரத்தம் வந்த இடத்தினை வீரத்திடல் என்று இன்றும் அழைக்கப்பட்டு வரும் இடத்தில் மற்ற பகுதி மண்ணைவிட இங்குள்ள மண் இரத்த நிறத்தில் காணப்படுவது அதிசயம்.
பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி விழா
சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் முதலிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக மகாசிவராத்திரியன்று வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இத்தல முருகனை வழிபடுகிறார்கள்.

சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
தாய்க்கு உபதேசம் செய்த முருகன்
தன் தாய் பார்வதிக்கு உபதேசம் செய்த முருகன், செம்பொனார் கோவிலில் அருள் பாலிக்கின்றார். இத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், இறைவியின் திருநாமம் சுகந்த கும்பளாம்பிகை.ஒருமுறை சிவனின் பேச்சையும் மீறி பார்வதி, தன் தந்தையான தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றாள். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளானாள். குடும்ப நிம்மதிக்கு ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்தும் விதத்தில் தாய் பார்வதிக்கு உபதேசித்தார் முருகன். மனம் திருந்திய அவள், அக்னியின் நடுவில் அமர்ந்து தன் குணத்தை மாற்ற தவமிருந்தாள். இதற்காக அவள் தேர்ந்தெடுத்த தலமே செம்பொனார் கோயில். செம்பொன் என்பதற்கு 'துாய தங்கம்' என்பது பொருள். தவத்தின் முடிவில் தங்கம் போல் மாசு மருவற்றவளாக வெளி வந்து சிவபெருமானுடன் இணைந்தாள். உபதேசித்ததை குறிக்கும் விதமாக முருகன் அட்சர மாலையுடன் இருக்கிறார்.சிறந்த கணவர் கிடைக்க பெண்கள் இங்கு வழிபடுகின்றனர். திருமாலை அடைய லட்சுமியும், மன்மதனை அடைய ரதியும் வழிபட்டனர். சித்திரை 7 முதல் 18 வரை சிவனை வழிபடும் விதத்தில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகிறது. இதனை 'சூரியத் திருவிழா' என்கின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
போர் வீரன் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
மதுரையில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு அருகில் (சுமார் 2 கி.மீ.) அமைந்திருக்கிறது புத்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் 'புத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன், நாகாசுரன் என்ற கொள்ளையன் இப்பகுதி மக்களைத் துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறை நாகாசுரன் மக்களின் உடைமைகளைச் சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீரதண்டை அணிந்து, வாள் மற்றும் கத்தியுடன் அங்கு போர் வீரன் கோலத்தில் வந்து அவனைத் தடுத்தார். கோபமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். மக்கள் தங்களைக் காத்த இளைஞனை மன்னரிடத்தில் கூட்டிச் சென்ற போது, அவர் மறைந்து விட்டார். தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோயில் கட்டினார்.கோவில் கருவறையில்m மூலவர் சுப்பிரமணியர் போர் வீரன் கோலத்தில், இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்து காட்சி தருகிறார். இத்தகைய முருகனின் கோலம் வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்றாகும். முதலில் சுப்பிரமணியர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையைப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது முருகனின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலைப் பிரதிஷ்டை செய்தனர். பயந்த சுபாவம், மனக்குழப்பம் உள்ளவர்கள், அக்குறை நீங்க இத்தல முருகனைப் பிரார்த்திக்கிறார்கள்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமான் சிவபூஜை செய்த தலம்
சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. 84 படிகள் கொண்ட குன்றின் மீது சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது.முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் 'கந்தழீஸ்வரர்' என்ற பெயரில், தனிக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் என்ற வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் இருக்கிறது.திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆங்கிலேய கலெக்டர் உணர்ந்த திருச்செந்தூர் முருகனின் தெய்வீக சக்தி
1803ம் ஆண்டில் ஆங்கிலேய கலெக்டராக திருநெல்வேலியில் பணிபுரிந்த லூசிங்க்டன் துரை, ஒரு முறை திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது முருகனுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாடுகளைக் கண்டார். அதில் முருகனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் 16 வகை உபசாரங்களைக் கண்டார். அதில் வெள்ளி விசிறியால் முருகனுக்கு வீசுதலும் ஒன்றாகும்.இதைப் பார்த்த லூசிங்க்டன் துரை, 'உங்கள் கடவுளுக்கு வியர்வை உண்டாகிறதோ' எனக், கேலி செய்து சிரித்தார். இதைக் கவனித்த அர்ச்சகர்கள், 'ஆமாம். எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்' என்றார்கள். பின்னர் லூசிங்க்டன் துரைக்கு முருகப் பெருமானின் சிறப்பை உணர்த்தும் விதத்தில் முருகப் பெருமானின் மேலிருந்த மாலைகளை எடுத்து விட்டு ஒரு புதிய துணியை முருகப் பெருமானின்மேல் போர்த்தினார்கள். கொஞ்சநேரத்தில் முருகப்பெருமான்மீது வியர்வை உருவாகி அந்த துணி முழுவதும் நனைந்தது. வியர்வை அதிகமாகி அது தரையிலும் ஓட ஆரம்பித்தது.இதற்குக் காரணம், திருச்செந்தூர் கோவில் முருகன் விக்ரகம் எப்போதும் மிகவும் சூடாக இருக்கும். சூரபத்மனை வதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால், அவர் திருமேனி எப்போதும் வியர்த்தவாறு இருக்கிறது அதனால் அர்ச்சகர்கள் சந்தனைத்தை அரைத்து அதில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி அதனை, காலை நேரத்தில் முருகன் விக்ரகம் மீது முழுவதுமாக பூசி மூடி விடுவார்கள். விக்ரகத்தில் இப்படி பூசப்பட்டிருக்கும் சந்தனம், மாலை நேரத்தில் ஈரத்தினால் சொத சொதவென சிலை முழுக்க வழிந்து இருக்கும்.முருகப்பெருமானின் விக்ரகத்தில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருப்பதைக் கண்டு லூசிங்டன் வியந்தர். வீடு திரும்பிய லூசிங்டன் கலெக்டருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவிக்கு திடீரென கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தார். தான் முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததாலேயே `தனக்கு இப்படி ஏற்பட்டதாக உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியாமல், தன்க்கு கீழே வேலை பார்க்கும் முருக பக்தர் ஒருவரிடம், முருகனின் கோபம் தணிய என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அவர் கூறிய யோசனையினபடி, முருகப்பெருமானிடம் தான் செய்தது தவறு, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அப்படி செய்தால் நான் என் சொந்த செலவால் உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருகிறேன் என வேண்டினார். முருகனிடம் வேண்டி விட்டு வீடு திரும்பிய லூசிங்டன் பிரவு, மனைவியின் வயிறு வலி நீங்கியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார். உடனே அவர் முருகனுக்கு வேண்டிக் கொண்டபடி வெள்ளிப் பாத்திரத்தை கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுத்தார்.அவர் கொடுத்த வெள்ளிப் பாத்திரம் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 'லூசிங்க்டன் 1803' என்று பொறித்திருப்பதை நாம் காண முடியும்.

சுப்ரமணிய சுவாமி கோவில்
இரண்டு அடுக்கு கொண்ட முருகன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இரண்டு அடுக்காக அமைந்து இருக்கிறது.இந்தக் கோயிலைப் புதுப்பிக்கும்போது பழைய சிலையை எடுக்க முடியவில்லை.அதனால் பழைய முருகன் சிலை இருந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலை நிர்மாணித்து அதில் புதிதாக ஒரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோவில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது. இத்தலத்தில் முருகன் பாலகனாக தனித்து இருந்து அருள்புரிகிறார்.உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், “மலைக்கேணி” (கேணி – கிணறு) என்று பெயர் பெற்றது.

வெற்றிவேல் முருகன் கோவில்
வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் தலம்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஜலகாம் பாறை . வெற்றிவேல் முருகன் கோவில். ஜலகாம் பாறை, ஏலகிரி மலையினை ஒட்டியுள்ளது. சிவலிங்க வடிவில் உள்ள இந்த முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமிது.

வியாழ சோமேஸ்வரர் கோவில்
முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தரும் தலம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. வியாழ சோமேஸ்வரர் கோவில். நவக்கிரகங்களில் சுப கிரகமாக வர்ணிக்கப்படும் குருபகவான் வழிபாடு செய்த சிறப்புமிக்க ஆலயம் என்பதால், இத்தல இறைவன் 'வியாழ சோமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். சோமன் எனப்படும் சந்திரன் வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'சோமேஸ்வரர்' என்று பெயர். குரு மற்றும் சந்திர தோஷம் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள சோமேஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மைகள் வந்தடையும்.இத்தலத்து முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து ஒரு காலை மடித்து மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார் அவர் தொங்க விட்ட நிலையில் இருக்கும் காலில் பாதரட்சை அணிந்து இருக்கிறார். முருகப்பெருமானின் இத்தகைய கோலத்தை வேறு எந்த தலத்திலும் காணமுடியாத.

வேலாயுதசுவாமி கோவில்
மூலவர் முருகப்பெருமான் வேலுடன் காட்சி தரும் அரிய கோலம்
கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோவிலில், மூலவர் முருகப்பெருமான் கையில் வேலுடன் காட்சி தருகிறார். மூலவரின் இத்தகைய தோற்றம் வேறு எந்த தலத்திலும் காண்பதற்கு அரிது. இத்தலம் கோவையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.சில நூற்றாண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையத்தில் ஜமீன்தார் ஒருவர் வசித்து வந்தார். சிறந்த முருக பக்தரான இவர், அடிக்கடி பழனிக்குச் சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை, ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன் என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், பழனி முருகனை தரிசிக்காமல், புரவி பாளையத்திற்கே திரும்பிவிட்டார். பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே என்ற கவலையினாலேயே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவு, ஜமீன்தாரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட கிணத்துகடவு பொன்மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் 'வேலாயுத சுவாமி' என அழைக்கப்பட்டார்.பெற்றோரிடம் போபித்துக்கொண்டு பழநியில் குடி கொண்ட முருகப்பெருமான், இந்த கிணத்துக்கடவு பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.அருணகிரிநாதர் இந்த தலத்தை ‘கனககிரி’ என்று பாடி இருக்கிறார். 'கனக' என்பது பொன்னையும் 'கிரி' என்பது மலையையும் குறிக்கும். .திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் வேலாயுத சுவாமியை வேண்டிக் கொள்கிறார்கள்.

வெற்றிவேல் முருகன் கோவில்
கடவுள் நம்பிக்கை அற்றவரை காப்பாற்றிய முருகப்பெருமான்
சிதம்பரம் பிச்சாவரம் சாலையில் அமைந்துள்ள கிள்ளை என்ற ஊரில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சி.மானம்பட்டி என்னும் ஊரில் அருள்பாலிக்கிறார் வெற்றிவேல் முருகன். இவர் வள்ளி தெய்வானை உடனின்றி, தனித்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பல ஆண்டுகளுக்கு முன் சி.மானம்பட்டி பகுதியில் வசித்து வந்த ஒருவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவரது குடும்பத்தினரிடம் அவர் உயிர் பிழைக்க வழியில்லை என்று கூறி விட்டனர். மரணத்தருவாயில் இருந்த அவருக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட கிடையாது. ஆனால் அவருக்கு முருகனின் அருட்கடாட்சம் கிடைத்தது. படுக்கையில் இருந்த அவருக்கு திடீரெனமயில் மீது முருகன் காட்சி தருவதைப் போல உணர்ந்தார். அந்தக் காட்சியைக் கண்டவுடன் நோயிலிருந்து பூரண குணமடைந்த அவர் குடும்பத்தினரிடம், நான் குணமாகிவிட்டேன். எனக்கு மிகவும் பசிக்கிறது சீக்கிரம் சாப்பாடு கொடுங்கள் என்று கூறி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டார். குடும்பத்தினருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சில நாட்களில் அவர், தாம் கண்ட முருகனை, அதே வடிவத்தில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினார். அவரே இங்கு வெற்றிவேல் முருகனாக அருள்பாலிக்கிறார்.
திருமணத்தடை நீங்க நடத்தப்படும் வினோதமான சடங்கு
திருமணத்தடை உள்ளோருக்கு இங்கு 'வெற்றிலை துடைப்பு' என்னும் சடங்கு நடக்கிறது. இவர்களை கொடிமரம் அருகில் அமர வைத்து, கையில் சுவாமிக்குப் பூஜித்த வெற்றிலையைக் கொடுக்கின்றனர். பின், சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை வெற்றிலையில் தெளிக்கின்றனர். பக்தர்கள் அந்த வெற்றிலையால் தம் முகத்தைத் துடைத்துக்கொண்டு, முருகனைத் தரிசிக்கின்றனர். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மங்கலப்பொருட்களில் ஒன்றான வெற்றிலையை முகத்தில் துடைப்பதால், கெட்ட சக்திகள் விலகி, நன்மை பிறக்கும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
கல்லால் ஆன கொடிமரம் அமைந்திருக்கும் முருகன் கோவில்
பொதுவாக கோவில்களின் கொடிமரம் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜ கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே சென்றால், முதலில் கல்லாலான கொடிமரத்தை காண முடியும். இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இக்கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் அமர்ந்திருக்கிறார். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு,மிக்க கலைநயத்துடன் விளங்குகின்றது. மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.