சுப்பிரமணியர் கோவில்

மும்மூர்த்திகளின் சொரூபமாக காட்சி தரும் முருகப்பெருமான்

கன்னியாகுமரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், சுசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தலம் மருங்கூர் . இந்த முருகன் சிலையானது மயிலோடு சேர்த்து ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பாகும்.

இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு மும்மூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஐப்பசி மாதத்தில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து நடராஜராகவும், மதியம் வெள்ளை வஸ்திரம் அணிந்து பிரம்மாவாகவும், மாலையில் பச்சை வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும்.

சாப விமோசனம் அருளும் தலம்

ஒரு சமயம் சாப விமோசனம் பெற இந்திரன் இத்தலத்திற்கு அருகில் உள்ள சுசீந்திரம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார். அப்போது இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவனோ குதிரையை மருங்கூர் தலத்திற்கு வந்து முருகனை வேண்டி சாப விமோசனம் அடையுமாறு பணித்தார். அதன்படி இங்கு வந்த குதிரையும் இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். குதிரை வழிபட்ட தலம் என்பதால், இத்தல முருகன் விழாக் காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனி வருகிறார்.

இத்தலத்து முருகனை வழிபட்டால் அணைத்து பாவம் மற்றும் சாபங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 
Previous
Previous

தலத்தின் தனிச் சிறப்பு

Next
Next

திருவேட்டீசுவரர் கோவில்