திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்

மகாசிவராத்திரி வழிபாடு பிறந்த தேவாரத்தலம்

கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர். இறைவி வளைக்கைநாயகி.

திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம், திருவைகாவூர் ஆகும். சிவராத்திரி வழிபாடு பிறந்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். வேதங்கள் வில்வ மரமாக இருந்து வழிபட்டதால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு 'வில்வவனேசுவரர்' என்றும் பெயர் வந்தது. பெருமாள், பிரம்மா இருவரும், இறைவன் சன்னதியில் துவார பாலகர்களாக உள்ளனர். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவர் மீது அம்பெய்த முற்பட்டான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.

அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக, இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம்.

சிவராத்திரி விழா, சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர்.

கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

Read More
மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்

மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்

உலகில் வேறெங்கும் நடக்காத வித்தியாசமான சிவராத்திரி வழிபாட்டு முறை

அரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்திய ஸ்ரீகிருஷ்ணர்

கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் குறிப்பிடத்தக்கது மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம். மகா சிவராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை, சிவராத்திரி அன்று தரிசிப்பது தான், இந்த சிவாலய ஓட்டத்தின் நோக்கமாகும்.

இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கி விட்டு ஓட ஆரம்பிப்பர். அதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை 'கோவிந்தா, கோபாலா' என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.

சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் செல்லும் கோவில்கள்

1. திருமலை சூலப்பாணிதேவர்

2. திக்குறிச்சி மஹாதேவர்

3. திற்பரப்பு வீரபத்திரேஷ்வரர்

4. திருநந்திக்கரை நந்தீஷ்வரர்

5. பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர்

6. பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர்

7. கல்குளம் நீலகண்டர்

8. மேலாங்கோடு காலகாலர்

9. திருவிடைக்கோடு சடையப்பர்

10. திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர்

11. திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர்

12. திருநட்டாலம் சங்கரநாராயணர்

சிவாலய ஓட்ட வரலாறு

அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே இந்த சிவாலய ஓட்டம் அமைந்துள்ளது. இந்த சிவாலய ஓட்டத்தின் பின்னணியில், மகாபாரதம் சம்பந்தப்பட்ட ஒரு கதை உள்ளது.

வியாக்கிரபாத முனிவர் சிறந்த சிவபக்தர். இடுப்புக்கு மேலே மனித வடிவமும், இடுப்புக்கு கீழே புலி வடிவமும் கொண்டவர். சிவபெருமானை வேண்டி புருஷாமிருகம் என்று அழைக்கப்படும் இந்த உருவத்தை அவர் பெற்றார். அவருக்கு மகாவிஷ்ணு என்றால் ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கி விடுவார். தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவர் பீமன். புருஷாமிருகத்துக்கும், பீமனுக்கும் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்து அதற்கு ஒரு நாடகம் நடத்தினார்.

ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி? எனத் தயங்கினார் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, பயப்படாதே. உன்னிடம் பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்! என்றார்.

திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது அங்கு வந்த பீமன், கோவிந்தா, கோபாலா! என்று கூவினான். இந்த சத்தத்தில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், கோவிந்தா, கோபாலா என்று மீண்டும் குரல் எழுப்பினார். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி. ஓடி ஓடி பதினோரு இடங்களைக் கடந்து பன்னிரெண்டாவது இடமான திருநட்டாலம் என்ற இடத்தில் ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன் உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு! என்றார். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே! என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், அரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் உதவியது.

பீமன் ஓடியதன் விளைவாகவே, சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் 12 சிவாலயங்களுக்கும் ஓடியே வழிபடுகிறார்கள்.

இந்த 12 சிவாலயங்கள், 12 ராசிகளுக்கான கோவிலாக அமைந்துள்ளது. அது போன்று 12 நீர் நிலைகளும் இந்த கோவில் அருகே காணபடுகிறது. 12 சிவாலயங்களுக்கு 110 கி.மீ. தூரம் நடந்து வந்து சிவ பெருமானை தரிசித்து செல்லும் வழிபாடானது, உலகில் வேறெங்கும் நடக்காத நிகழ்வாக உள்ளது. தமிழகம் உட்பட கேரளாவை சேர்ந்த ஐந்து லட்சம் பக்தர்கள் மேல் இந்த புனித யாத்திரையில் பங்கேற்கிறார்கள்.

Read More
அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவில்

அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவில்

நெற்றியில் சிவபெருமானின் லிங்க வடிவம் தாங்கிய அகோர வீரபத்திரர்

மனநோய்க்கான பரிகார தலம்

தாம்பரம் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில், அனுமந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அகோர வீரபத்திர சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் பத்ரகாளி, காளிகாம்பாள். 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களுள் ஒருவர் வீர பத்திரர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவா். வீரம் என்பதற்கு அழகு என்றும், பத்திரம் என்பதற்குக் காப்பவன் என்றும் பொருள் கொண்டு, வீரபத்திரர் என்பதற்கு அழகும், கருணையும் கொண்டு அன்போடு காப்பவர் என்று பொருள். அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில், பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

கருவறையில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமானின் அம்சமான அகோர வீரபத்திர சுவாமி, ஏழடி உயர திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். சுவாமி நெற்றியில் சிவபெருமானின் லிங்க வடிவமும் பொருந்தி, ஒரு கையில் கத்தியும் கேடயமும் மற்றொரு கையில் வில், அம்பு ஏந்தியும், தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றார். அகோர வீரபத்ர சுவாமியின் அருகே, தட்சன் ஆட்டுத் தலையுடன் கரம் கூப்பியபடி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றான்.

பிரார்த்தனை

அகோர வீரபத்திரர் வெற்றிலை தோட்டத்தில் அவதரித்தவர். ஆதலால் அர்ச்சனை தட்டுடன், அவருக்கு வெற்றிலை மாலையும் பக்தர்கள் வாங்கிச்செல்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்குச் சென்றால் அகோர வீரபத்திரர் அவர்கள் மனநோயிலிருந்து விடுபட அருள்பாலிப்பதாக ஐதீகம்.

பக்தர்கள் திருமணத்திற்குப் பிறகு வீரபத்ரருக்கு 108 அல்லது 1008 வெற்றிலைகளைச் சமர்ப்பித்து மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும், குழந்தை வரத்திற்காகவும் இங்கு வருகை தருகின்றனர். மன அழுத்தம், நரம்பு கோளாறுகள், கவலை, மனச்சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற பக்தர்கள் வீரபத்திரரை இங்கு வழிபடுகின்றனர். மாந்திரீகம் மற்றும் சூனியம், செவ்வாய் தோஷங்களில் இருந்து நிவாரணம், வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட பக்தர்கள் இங்கு பத்ர காளியை வழிபடுகின்றனர். பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் இரவு தங்கி, காலை செல்வது வழக்கமாகும்.

செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், உடல் நிலையில் கோளாறு உடையவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமி வந்து எதிரில் உள்ள குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து வேண்டி கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை மாலை சார்த்தி, முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள்.

வெற்றிலைப் படல் சாற்றும் பிரார்த்தனை

இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவது மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப் படுகிறது. வெற்றிலைப்படல் என்பது, சுவாமியைச் சுற்றி அதற்கென உள்ள பிரபையில் வெற்றிலைகளை கொண்டு அலங்கரிக்க படுகின்றது. அரை வெற்றிலைப் படலுக்கு 6400 வெற்றிலைகளும், முழுப்படலுக்கு 12800 வெற்றிலைகளும் பயன் படுத்தப் படுகின்றன. வெற்றிலைப் படல் பிரார்த்தனை செய்வதாக நேர்ந்து கொண்டால், அனைத்து பிரச்னைகளும் தீர்வாகின்றன. (வெற்றியைக் குறிக்கும் இலையே வெற்றிலையாகும்) வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவதும் விசேஷ பலன்களைத் தரும்.

வெண்ணெய் மற்றும் சந்தனக் காப்பு வழிபாடு இங்கு சிறந்த பிரார்த்தனையாகும். வீரபத்ரர் உக்ரமூா்த்தி என்பதால் அவருடைய இன்னருளைப் பெற வெண்ணெய்க் காப்பு சாற்றியும், சந்தனக் காப்பு சாற்றியும் பக்தா்கள் வழிபடுகின்றனா்.

Read More
அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் யோக நிலையில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரத்திலிருந்து 19 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இங்கு இறைவன் ஐராவதேஸ்வரரும், இறைவி காமாட்சி அம்மனும் தம்பதி சமேதராக, சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவது ஒரு தனி சிறப்பாகும்.

பொதுவாக சிவாலயங்களில், நவக்கிரகங்கள் பீடத்தின் மேல் நின்ற நிலையில் காட்சி அளிப்பார்கள். இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் அமர்ந்த நிலையில் தோற்றம் அளிக்கிறார்கள்.நவக்கிரகங்கள் அனைவரும் யோக நிலையில் அமைதியாய் இருப்பதனால் தான் இங்கு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்கள். இப்படி அமர்ந்த கோலத்தில் இருக்கும் நவக்கிரகங்களை ஒரு சில இடங்களில் மட்டுமே நாம் காண முடியும்.

Read More
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்

தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

நாடிஜோதிடம் துவங்கிய கோவில்

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, அமைந்த தேவார தலம் திருக்காரவாசல். இறைவன் திருநாமம் கண்ணாயிரநாதர். இறைவியின் திருநாமம் கைலாச நாயகி. இக்கோவில் சப்தவிடங்க தலங்களுள் ஆதி விடங்கத் தலம். திருவாரூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'குக்குட நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது சேவல் அசைந்து செல்வது போல் இருக்கும்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி 'ஞான தட்சிணாமூர்த்தியாக' அருள்பாலிக்கிறார். அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோவில் இது என்று கருதப்படுகிறது.

Read More
அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

சிவலிங்க பாணத்தில் யானையின் உருவம் தெரியும் அபூர்வ காட்சி

ஒரே கருவறையில் சிவலிங்கத் திருமேனியும், அம்பிகையும் அருள் பாலிக்கும் அரிய காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரத்திலிருந்து 19 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். யானை இங்கு வந்து சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு 'ஹஸ்திமுகம்' எனப் பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் அத்திமுகம் என்று மருவியது. இக்கோவிலானது சாலை மட்டத்திலிருந்து, பத்தடி பள்ளத்தில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டு காலம் தண்ணீருக்குள்ளும், மண்ணுக்குள்ளும் புதைந்து கிடந்த இக்கோவில் தற்போது தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

பொதுவாக ஒரு கோவில் என்று எடுத்துக்கொண்டால் ஒரு மூலவர் இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்கலாம். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள். ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும், அவருக்கு பின்னால் காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் தை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் சூரியனின் பூஜைக்காக, நந்தி மூலவருக்கு நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.

இந்திரன் விருத்திராசுரனை கொன்று அழிக்க, அவருக்கும் அவரது யானை ஐராவதத்திற்கும் ப்ரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. இத்தலத்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றனர். அதனால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவத யானை இங்கு வழிபட்டதால், ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஐராவதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது, யானையின் உருவம் மிகத் தெளிவாக தெரியும். பொதுவாக சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். அந்த வகையில் இத்தலத்து சிவலிங்கத்தின் பாணத்தில், யானை உருவம் தெரிவது ஒரு அரிய காட்சியாகும்.

இங்கு இறைவன் ஐராவதேஸ்வரரும், இறைவி காமாட்சி அம்மனும் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம்,திருமண தடை,கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.

இக்கோவிலில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Read More
திருலோக்கி சுந்தரேசுவரர் கோயில்

திருலோக்கி சுந்தரேசுவரர் கோயில்

குரு பகவானுக்கு 'குருபலம்' வழங்கிய உமாமகேஸ்வரர்

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

இத்தலத்தில்தான் குரு பகவான் உமாமகேஸ்வரரை பூஜித்து மக்களுக்கு குருபலம் அருளும் வரம் பெற்றார்.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. பொன்னுக்கு ஏமம் என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் குரு, ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் ஏமநல்லூர் என்ற பெயர் முற்காலத்தில் இந்த தலத்திற்கு இருந்தது. குரு பகவான் இத்தலத்தில் இறைவன் சுந்தரேசுவரரை உள்ளன்போடு பூஜை செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு அவருக்கு காட்சி தந்து,.'இந்த தலத்துக்கு வந்து உனது பார்வை பெறும் எல்லோரும் எல்லாவிதமான தோஷங்களும் விலகி 'குரு பலம்' பெற்று அவர்களது இனிய இல்லறம் சிறக்க ஆசிர்வதிக்கிறேன்; என்று அருளினார். இப்படி குரு பகவான் 'குருபலம்' பெற்ற நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். இந்த கோலத்தை தரிசித்த குரு பகவான் தனது வழக்கமான அபய முத்திரை விடுத்து, இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிக்கிறார்.

ரிஷப வாகன உமாமகேஸ்வரரின் அற்புத எழில் கோலம்

இக்கோவில் மகா மண்டபத்தில், ரிஷப வாகன உமாமகேஸ்வரரை நாம் தரிசிக்கலாம். அதி அற்புதமான அழகு உடைய இந்த வடிவம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். ரிஷப வாகனத்தில் அம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி ஈசன் காட்சியளிக்கும் அழகே அலாதியானது. இடபத்தின் (காளையின்) முதுகின் மேலுள்ள அம்பாரியில் அமைந்திருக்கும் ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் சடா மகுட தாரியாக ஒளிவட்டத்துடன் சிவபெருமான் அமர்ந்துள்ளார். அவரது வலப் பின்கரத்தில் திரிசூலம் உள்ளது. வலது முன்கரத்தால் அபயம் காட்டுகின்றார். இடக்கரங்களால் அருகே அமர்ந்துள்ள தேவியை அணைத்துள்ளார். அணிகலன்களும், உத்ரபந்தமும், புரிநூலும் தரித்துள்ள சிவபெருமானின் உடல் சற்றே வளைந்த நிலையில் தேவியைத் தாங்குகின்றது

சிவபெருமானுக்கு மேலே அழகிய மகர தோரணம் காணப் பெறுகின்றது. மகர தோரணத்திற்கு மேலே ஆணும் பெண்ணும் என எட்டு கந்தர்வர்கள் வீணை, உடுக்கை, மத்தளம், குழல், சிறுபறை, கைத்தாளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தவாறு, மிதந்த வண்ணம் திகழ்கின்றனர்.

உமாதேவி தன் இடக்காலைக் குத்திட்டவாறு, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளார். இடக்கரத்தில் மலர் ஒன்றினை ஏந்தியுள்ளார். நீண்ட கீழாடையுடன், ஒரு புறம் சரிந்த கொண்டையுடன் தன்னை அணைத்தவாறு அமர்ந்துள்ள சிவபெருமானின் முதுகினைத் தன் வலக்கரத்தால் பற்றியுள்ளார். பெருமானும், அம்மையும் அமர்ந்திருக்கும் மகர தோரணத்தோடு அமைந்துள்ள அம்பாரியின் பின்புறம் ஒரு சிவலிங்கம் புடைப்பு சிற்பமாக அமைந்துள்ளது.

சிவபெருமான் உமாதேவி அமர்ந்திருக்கும் அம்பாரியானது, படுத்த நிலையில் உள்ள ஒரு காளையின் திமிலோடு இணைந்து ஒரே சிற்பமாக உள்ளது. காளை சிறிய கொம்புகள், விரிந்த காதுகள் ஆகியவற்றுடன் தோல் மடிப்புகளுடன் உள்ளது. பெரிய உருண்டை கோர்க்கப் பெற்ற கழுத்து கயிறு, சங்கிலி மாலை, மணிச்சக்கரங்கள் கோர்க்கப் பெற்ற பெரிய மாலை காளையின் கழுத்தை அணி செய்கின்றன. உமாமகேஸ்வரரின் அதி லாவண்ய ரூபத்தை தரிசிக்கவாவது, நாம் ஒரு முறை திருலோக்கி செல்ல வேண்டும்.

மன்மதன் மீண்டும் உயிர் பெற்ற தலம்

திருக்குறுக்கை தலத்தில், சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும். ரதி - மன்மதன் இருவரும் உமாமகேச்வரருக்கு எதிரில், ஐந்தடி உயரத்தில், அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர். உடனிருக்க காட்சி தருகிறார்கள். இந்த தெய்வீக காதலர்களின் சிலாரூபம் மிகுந்த நேர்த்தியும், கலைநயமும் உடையது ஆகும். இச்சிலையும் பார்ப்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும்,

இல்லறம் அமைய, இனிக்க அருளும் தலம்
வரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்து போன தம்பதிகள், திருமணமாகியும் மணவாழ்க்கையில் பிரச்னையுள்ளவர்கள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் இங்கு வந்து உமாமகேச்வரப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து பலன் பெறுகிறார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய குரு பரிகாரத் தலம் இது.

Read More
இலங்குடி பெரிய ஆண்டவர் கோவில்

இலங்குடி பெரிய ஆண்டவர் கோவில்

ரத்தம் போன்ற சிவப்பு நிற திரவத்தை தன் வாயில் இருந்து சுரந்து கொண்டிருக்கும் அதிசய நந்தி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது இலங்குடி என்ற கிராமம். கிராமத்தின் எல்லையில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது.இறைவன் திருநாமம் பெரிய ஆண்டவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.

இக்கோவிலுக்கு வெளியே திறந்த வெளியில் ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது. இந்த நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது. இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது. தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தபடியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுகொள்கின்றனர். சிலர் இதை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த திரவத்திற்கு மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தே படியே தான் இருந்தது. இக்கோவிலில் எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.

மழையின் அளவை விவசாயிகளுக்கு சுட்டிக் காட்டும் நந்தி

நந்தி வாயில் இருந்து வழியும் சிவப்பு நிற திரவத்தின் அளவு, அந்த வருடத்தின் மழை அளவை குறிப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த நந்தி சிலையின் வாயில் திரவம் அதிகமாக சுரந்தால், அந்த வருடம் விவசாயம் நன்றாக இருக்கும் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள்.

Read More
மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில்

மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில்

நிலம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் பரிகார தலம்

நிலத்து மண்ணை சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்யும் வித்தியாசமான பரிகார பூஜை

திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில். இறைவியின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. பஞ்சபூதங்களுள் பூமிக்கான தலமாக விளங்கும் இக்கோவில்2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முற்காலத்தில் மண் அரக்கநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பின்னர் பெயர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானது.

இங்கு பூமிக்குரிய நாயகனாக இத்தலத்து இறைவன் பூமிநாதசுவாமி இருப்பதால், மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் இங்கு வந்தால் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.பூமிநாத சுவாமி 16 விதமான தோஷங்களை நீக்கி அருள்பவர் என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

இங்கு மண் சம்பந்தப்பட்ட பிரச்சனை நீங்க நடத்தப்படும் பரிகார பூஜை சற்று வித்தியாசமானது. நாம் வாங்க அல்லது விற்க நினைக்கும் மனையின் வடகிழக்கு மூலை மண்ணை ஒரு நல்ல நாளில் புதன் ஹோரையில் எடுத்து மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும். கொடி மரத்து விநாயகருக்கு விளக்கேற்றி, பிறகு அம்பிகைக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்து பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.

கோவிலை இரண்டாவது முறை வலம் வந்து, வன்னி மரத்தடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டிக்கொள்ள வேண்டும். மூன்றாவது முறையும் கோவிலைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். அடுத்த நாள் காலை, புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் மண் எடுத்த இடத்தில் கோவிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைப் போட்டு தூப தீபம் ஏற்றி வணங்க வேண்டும். பிறகு மண் எடுத்து வந்த துணியில் ஒரு நாணயத்தை முடிந்து, பூஜை அறையில் வைக்க வேண்டும். என்ன வேண்டினோமோ அது நிறைவேறியதும், பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து முடிந்து வைத்த நாணயத்தை சுவாமிக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் ஒரு வேண்டுதல்.இந்த வேண்டுதலால் பூமி சம்மந்தமான எல்லா பிரச்னைகளும் நீங்கி விடுகின்றன என்பது இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

Read More
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்

அமர்ந்த நிலையில் காட்சி தரும் நவக்கிரகங்களின் வித்தியாசமான தோற்றம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் செண்பகவல்லி அம்மன். இத்தலத்தில், இறைவனும் இறைவியும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் நின்ற நிலையில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களின் இந்த வித்தியாசமான தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

Read More
அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில்

அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில்

இடது பாதம் மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அபூர்வத் தோற்றம்

அம்பாசமுத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதற்கு முன்பாக ஒரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று ஈசர்கள் எழுந்தருளியிருப்பதால், கருவறை மூலவருக்கு மூன்றீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ளார். அவரது இடது கை நாகத்தை தொட்ட நிலையில் இருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இந்த அபூர்வ தோற்றமானது, நாம் வேறு எந்த கோவிலிலும் காண முடியாத ஒன்றாகும்.

Read More
விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்

விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்

ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும், அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் உள்ள ஒரே தலம்

மூலவருக்கு, வேறு எந்த தலத்திலும் இல்லாத திருநாமம் அமையப் பெற்ற தலம்

மதுரையிலிருந்து 14 கி.மீ.தூரத்தில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி, உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில், ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சி ஆகும். அதேபோல், நம் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத வகையில், மூலவருக்கு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் என்ற திருநாமம் அமைந்திருப்பதும், ஒரு தனி சிறப்பாகும். இப்படிப்பட்ட திருநாமம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு திருஉத்திரகோசமங்கை எனும் ஊரில் வாழ்ந்த ஒருவர் தன் மனைவியுடனும்,தன் மகன்கள் மற்றும் மகளுடன் சேர்ந்து, அழகர்கோவிலுக்கு சென்று தன் பேரக்குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி வருவதற்காக மாட்டுவண்டி கட்டிக் கொண்டு இவ்வழியாக வந்தார்.

இக்கோவில் அமைந்துள்ள இவ்விடத்தில் தமது மாட்டுவண்டியை நிறுத்தி அங்கு இருந்த ஆலமரத்தின் கிளையொன்றில் தொட்டிலை கட்டி குழந்தையை துயில் கொள்ள வைத்துவிட்டு, பெண்கள் உணவு சமைக்க, ஆண்கள் அனைவரும் அருகாமையில் ஓடும் நதியில் நீராடி திரும்பி வந்து பார்த்தபோது, தொட்டிலில் துயில் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை.

அவர்கள், கடவுளே ஏன் இந்த சோதனையென இருகரம் கூப்பி ஆகாயத்தை நோக்கியபோது, அவர்களின் கண்களுக்கு ஆகாயத்தில் அக்குழந்தை அந்தரத்தில் மிதப்பதைக் கண்டு பதைபதைத்தனர். அதேவேளையில் அந்த ஆலமரத்தின் உச்சியில் இருந்து ஓர் அசரீரியின் குரல் கேட்டது. 'நீங்கள் கட்டிய தொட்டிலுக்கு அடியில் உங்களின் அழுதகண்ணீரை ஆற்றும் வல்லமை படைத்த சிவன் சிலையொன்று பூமியினுள் புதையுண்டு கிடக்கிறது.அவரின் திருஉருவச்சிலையை வெளிக் கொணர்ந்து வழிபடுவதாக வாக்கு தந்தால், அந்தரத்தில் காணும் அந்த குழந்தை அடுத்த கணமே தொட்டிலில் துயில் கொள்ளும் என்றுரைத்தது.செய்தியைக் கேட்டதும் அவர்கள் அத்தனை பேருமே அப்படியே செய்கிறோம் என தரையில் விழுந்து வணங்கி சத்தியம் செய்ததாகவும் அடுத்தகணமே தொட்டிலில் குழந்தையை பொக்கை வாய் சிரிப்புடன் கண்டார்கள். இறைவனின் கட்டளைப்படி அவர்களும் பூமியினுள் புதையுண்டு கிடந்த ரிஷபாரூடர் சிலையை வெளியில் எடுத்து வைத்து, கோவில் கட்டி வழிபாடு செய்தார்கள். குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு 'அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது இக்கோவிலின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.

இடப வாகனமாக இருக்கும் மகாவிஷ்ணு

ஒரு சமயம், தேவர்கள் அசுரர்கள் தொல்லையினால், கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவபெருமானிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவபெருமானை ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவபெருமானுக்கு 'ரிஷபாரூடர்' என்ற திருநாமம் உண்டாயிற்று. மகாவிஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.

Read More
நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

சிவபெருமான் சார்பில், இறந்தவர் உடலுக்கு மரியாதை செய்யும் வினோத நடைமுறை

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாட்சி அம்மன்.

இக்கோவிலில் இறந்தவர் சடலத்திற்கு, சிவபெருமான் சார்பில் மரியாதை செலுத்தும் வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பொதுவாக கோவிலின் சன்னதி தெருவிலோ அல்லது மடவிளாகத்திலோ யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். இந்த நடைமுறையின் பின்னணியில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாரின் வரலாறு பிணைந்துள்ளது.

சிவபெருமானால் பெயர் சூட்டப்பட்ட ஒரே நாயன்மார்

அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் 'கடல்நாகை' எனும் இந்த நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் தான் கடலில் பிடிக்கும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் சிவபெருமானுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவபெருமானுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார். மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த சிவபெருமான், 'அதிபக்தா' என்று அழைத்து, அவருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார். அப்போது அதிபத்த நாயனார், சிவபெருமானிடம் தனக்கு மட்டுமல்ல தன் வம்சா வழியினருக்கும் முக்தி அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனால் சூட்டப்பட்ட அதிபக்தா என்ற பெயர்தான் பின்னர் மருவி அதிபத்தர் என்றானது.

அதிபத்த நாயனாரின் வேண்டுதலுக்கு ஏற்ப, அவருக்கு மரியாதை தரும் விதமாக இன்றும் அவரது வம்சா வழியினர் யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.

ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோவிலில் நடைபெறுகிறது. அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.

Read More
வன்னிவேடு அகத்தீசுவரர் கோவில்

வன்னிவேடு அகத்தீசுவரர் கோவில்

கட்டிடப் பணி தடங்கல் இன்றி நடக்க, சனிபகவானுக்கு பாகற்காய் மாலை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் புவனேசுவரி.

இக்கோவிலில், ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர் மற்றும் சனீஸ்வரர் அடுத்தடுத்த சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். வீடு மற்றும் கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர், அது தடங்கலின்றி நடக்க, சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு, 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து, எள் தீபமேற்றி வழிபடுவது விசேஷம்.தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், கசப்பான அனுபவங்களை சனி பகவானிடமே அர்ப்பணித்து விடுவதாகவும், இனி, அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இந்த வேண்டுதலைச் செய்கின்றனர்.

Read More
சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்

சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்

சூரிய பிரபை போன்ற தலை முடியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை . இறைவனின் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் தனது வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும் ஏந்தி இருக்கிறார். இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இவரது தலைமுடி சூரிய பிரபை போன்ற அமைப்பில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.

Read More
வைரவன் கோயில் காலபைரவர் கோவில்

வைரவன் கோயில் காலபைரவர் கோவில்

காசிக்கு நிகரான காலபைரவர் தலம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் கோவில், காசி காலபைரவருக்கு இணையான தலமாகப் போற்றப்படுகின்றது. இத்தலத்தில் காலபைரவர் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

முருகப்பெருமானிடம் உபதேசம் பெற கயிலையில் இருந்து வந்த சிவபெருமானுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் மட்டும் சிவபெருமானின் ஆணைப்படி வைரவன் கோவில் எனும் இடத்தில்,காவியியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து கொண்டார். அவர் நோக்கிய இடத்தில் ஒரு மயானமும் உள்ளது. இது காசிக்கு நிகரான பெருமை கொண்ட தலம். காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் இவரும் கொண்டிருக்கிறார். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.

இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.

காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும்.

சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே இவரை வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பு விலகி நல்லவையே நடக்கும்.

Read More
தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்

தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்

திருமணத் தடை நீ்க்கும் அஷ்டகந்தம் சாற்றிய ரட்சை

பலவிதமான நோய்களைத் தீர்க்கும் அபிஷேக விபூதி

சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், சுங்குவார் சத்திரத்திலிருந்து இடதுபக்கம் திரும்பிச்சென்றால் 10 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது தென்னேரி கிராமம். இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. இவ்வூரிலுள்ள ஏரி, திரையனேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது.

கருவறையில் பெரிய வட்டவடிவ ஆவடையாருடன சுவாமி ஆபத்சகாயேஸ்வரர் காட்சி தருகிறார். தன்னை நாடி வருகின்ற தனது பக்தர்களின் துயர்களை துடைத்து ஆனந்த வாழ்வளிக்கிறார் ஆபத்சகாயேஸ்வரர். சுவாமி ஆபத்சகாயேஸ்வரர் மீது அஷ்டகந்தம் சாற்றிய ரட்சை வைத்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். ரட்சையை அணிந்து கொள்வதால் திருமணயோகமும்,பல நோய்களும் தீருவதாக ஐதீகம். எட்டுவகையான வாசனைப் பொருட்களின் கலவையே அஷ்டகந்தம் எனப்படுகிறது.கோரோசனை, வெண்சந்தனம்(அ)சந்தனம்(அ) அத்தர், பச்சைக்கற்பூரம், ஜவ்வாது , கறுப்பு அகில், புனுகு, கஸ்தூரி, குங்குமப்பூ ஆகியவை, அஷ்ட கந்தத்திலுள்ள வாசனைப் பொருட்களாகும்.

சுவாமிக்கு பிரதோஷத்தன்று வடைமாலை சாற்றப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்க, அதை உண்பவர்களுக்கு நோய்கள் தீருவதாகக் கூறுகின்றனர். அபிஷேக விபூதி பெற்று அதை நீரில் இட்டு உட்கொண்டு வந்தால் பலவிதமான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

மூன்று பெண் உருவங்களுக்கு, வெறும் நான்கு கால்களை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்ட வினோதமான சிற்பம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.

நம் கோவில்கள், நம் முன்னோர்கள் கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் ஒரு தூணில், ஆறு அங்குல நீளம், ஆறு அங்குல அகலம் உள்ள ஒரு சதுர பரப்பளவில், மூன்று பெண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நடுவில் இருக்கும் பெண் நம்மை நேராக பார்த்த நிலையிலும், மற்ற இரு பெண்களில் ஒருத்தி தனது உடலை வலது பக்கம் சாய்த்த நிலையிலும், மற்றொருத்தி இடது பக்கம் சாய்த்த நிலையிலும் காட்சியளிக்கின்றனர்.

இந்த சிற்பத்தில் வினோதம் என்னவென்றால், மூன்று பெண்களுக்கு ஆறு கால்கள் இன்றி, வெறும் நான்கு கால்களை கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள். நடுவில் இருக்கும் பெண்ணின் இரு கால்கள் ஆனது மற்ற இரு பெண்களுக்கும், பொதுவான கால் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கற்பனைத் திறனும், அதை நுணுக்கமான சிறிய சிற்பமாக செதுக்கி இருக்கும் விதமும், நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.

Read More
திருசோபுரம் சோபுரநாதர் கோவில்

திருசோபுரம் சோபுரநாதர் கோவில்

தட்சிணாமூர்த்தியின் திருமேனியைத் தட்டினால் மரத்தை தட்டின ஒலி எழும் அதிசயம்

மஞ்சள் வஸ்திரத்திற்கு பதிலாக வித்தியாசமாக வெள்ளை வஸ்திரம் அணியும் தட்சிணாமூர்த்தி

கடலூர் – சிதம்பரம் சாலையில், 18 வது கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் உள்ள தேவார தலம் திருச்சோபுரம். இறைவன் திருநாமம் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சோபுர நாயகி, தியாகவல்லியம்மை.கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும்

அழைக்கப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றது.

இத்தலத்து தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். மேலும் அவர், இத்தலத்தில் இசையின் வடிவமாக அருளுகிறார். கருங்கல்லாலான இவரது திருமேனியை தட்டிப் பார்த்தால், மரத்தை தட்டினால் எந்த ஓசை எழுமோ, அந்த ஓசை கேட்கிறது. இத்தகைய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதால், இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.

இசையில் வல்லமை பெற விரும்புபவர்கள், இசையின் வடிவமாக விளங்கும் இவருக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்

பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.


முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக, அவர்களிடம் வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள்.


உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.


இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜ கோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச் சொன்னான். அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.

Read More