வைரவன் கோயில் காலபைரவர் கோவில்
காசிக்கு நிகரான காலபைரவர் தலம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் கோவில், காசி காலபைரவருக்கு இணையான தலமாகப் போற்றப்படுகின்றது. இத்தலத்தில் காலபைரவர் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
முருகப்பெருமானிடம் உபதேசம் பெற கயிலையில் இருந்து வந்த சிவபெருமானுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் மட்டும் சிவபெருமானின் ஆணைப்படி வைரவன் கோவில் எனும் இடத்தில்,காவியியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து கொண்டார். அவர் நோக்கிய இடத்தில் ஒரு மயானமும் உள்ளது. இது காசிக்கு நிகரான பெருமை கொண்ட தலம். காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் இவரும் கொண்டிருக்கிறார். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.
இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.
காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே இவரை வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பு விலகி நல்லவையே நடக்கும்.