ராமநாதீஸ்வரர் கோவில்

ராமநாதீஸ்வரர் கோவில்

சிவனே குருவாக இருந்து ராமருக்கு வழிகாட்டிய தலம்

ராமநாதீஸ்வரர் கோவில் , சென்னை போரூர் சந்திப்புக்கு அருகில் அமைந்து இருக்கிறது. இக்கோவில் மிகவும் பழமையானது.

ராமர் சீதையை தேடி வனத்தில் அலைந்து திரிந்து செல்லும் வேளையில் ஒரு நெல்லி மரத்தின் வேர் ராமரின் காலை இடர, ராமர் உள்ளுணர்வால் வேரின் உள்ளே சிவலிங்கம் இருக்கிறது என்பதை உணர்கிறார்.சிவனின் தலைமீது கால்பட்டதால்,உண்டான தோஷத்தை போக்க ,அங்கேயே தவத்தில் இருந்தார்,நாள் ஒன்றிற்கு ஒரு நெல்லிக்கனியை மட்டுமே உணவாக உண்டு 48 நாட்கள் தவம் மேற்கொண்டார்.முடிவில் வேரின் அடியில் இருந்த லிங்கம் பூமியை பிளந்துகொண்டு வந்து வெளிப்பட,சிவபெருமான் ராமருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார். பரவசத்தில் ராமர் சிவபெருமானை கட்டியணைக்க உடனே சிவலிங்கம் ஆறு அடி உயர அமிர்தலிங்கமாக மாறுகிறது. ராமர் சீதையை தேட வழிகேட்க, 'ராமேஸ்வரம் நோக்கி செல்' என்ற அசரீரி கேட்கிறது.

சிவபெருமான் ராமருக்கு காட்சி அளித்தமையால், இங்குள்ள மூலவர் ஸ்ரீராமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மிகப்பெரிய லிங்கவடிவில் 6 அடி அமைப்பும் மிக அழகிய அலங்காரத்துடனும் கிழக்கு நோக்கி அருள்பலிக்கிறார். இந்த பிரும்மாண்ட லிங்கம் சுயம்புவாக தோன்றியவர். அம்பிகை சிவகாமசுந்தரி தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறார். சிவனே வந்து வழிகாட்டிய காரணத்தால் அவரே குருவாகிறார் . ஆகவே தனியாக குருச்சன்னதி கிடையாது . குருவருள் பெறவும் ,வியாழன் கோள் சம்பந்தமான எந்தவித தோஷத்தையும் போக்கும் தலமாக விளங்குகிறது.

ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து ராமேஸ்வரத்தில் செய்யும் பரிகாரங்களை செய்கிறார்கள். ராமேஸ்வரத்தில் செய்யும் பலன், இத்தலத்திலேயே கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஆகவே இந்த கோவில் உத்திரராமேஸ்வரம் என்றும் கூறப்படுகிறது.

தீர்த்தம் தந்து, சடாரி வைக்கும் சிவன் கோவில்

பொதுவாக பெருமாள் கோவிலில் மட்டுமே பிரசாதமாக கிடைக்கும் தீர்த்தம் , சடாரி போன்றவை சிவன் கோவிலான இங்கும் கிடைக்கும். தீர்த்தம் தந்து, சடாரியும் வைக்கும் சிவன் கோவில் என்பதால் இத்தலம் தனிச் சிறப்பைப் பெறுகிறது. இங்கு சுவாமிக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது மிகவும் விசேக்ஷம். இங்கு பிரசாதமாகத் தரப்படும் நெல்லிக்கனியை உண்டால் ஆயுள் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

தட்சிணாமூர்த்தி சேலை அணிந்த கோலத்தில் காட்சி தரும் தேவாரத் தலம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இருந்து 8 கீ.மீ. தொலைவில் உள்ளது, தேவாரத் தலமான, ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில். ஓமாம்புலியூரின் பழைய பெயர் பிரணவபுரம். சிவபெருமான் அம்பாளுக்கு குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவத்தைப் போதித்ததால் 'ஓம்'. புலிக்கு முக்தி கொடுத்ததால் 'புலியூர்'. இந்த இரண்டும் சேர்ந்து ஓமாம்புலியூர் என்ற பெயர் ஏற்பட்டது.

சிவாலயங்களில் பொதுவாகப் பிராகாரத்தில்தான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து இருப்பார். ஆனால், இக்கோவிலில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் அமைந்துள்ள தனிக் கருவறையில், சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அம்பாளுக்கு குரு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் . இப்படிப்பட்ட அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. குருத் தலங்களில் இத்தலம் தலைசிறந்தாகக் கருதப்படுவதிற்கு இதுவே காரணமாகும். குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இங்கு மற்ற நவக்கிரகங்கள் கிடையாது.

அம்மனுக்கு உபதேசம் செய்த காரணத்தினால் தட்சிணாமூர்த்தி சேலை அணிந்திருப்பதும் மற்றும் இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

முருகப் பெருமான் பிரணவ உபதேசம் கற்ற தலம்

தந்தைக்கு முருகப் பெருமான் பிரணவ உபதேசம் செய்த இடம் சுவாமி மலை. அந்த உபதேசத்தை அவர் கற்ற இடம்தான் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில். ஒரு சமயம், இங்கே எழுந்தருளியிருக்கும் புஷ்பலதாம்பிகைக்கு சிவபெருமான் குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முருகப் பெருமானை, 'அம்பாளுக்கு உபதேசம் நடப்பதால், உள்ளே போக வேண்டாம்’ என்று நந்திதேவர் தடுத்தார். அதை மீறி, முருகப் பெருமான் வண்டாக உருமாறி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர் வெளியேறும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாளின் தலையில் இருந்த பூவில் அமர்ந்து கொண்டார். சிவபெருமான் அம்பாளுக்கு செய்த உபதேசத்தை அவரும் படித்தார்.

பிற்பாடு, சுவாமிமலையில் தனக்கே உபதேசம் செய்த முருகப் பெருமானிடம், 'இதை நீ எங்கு படித்தாய்?' என்று சிவபெருமான் கேட்டபோது, 'பிரணவபுரத்தில் அம்மைக்கு நீங்கள் உபதேசம் செய்தபோது உங்களுக்கே தெரியாமல் படித்தேன்' என்றார் முருகப்பெருமான்.

காசியின் மீசம்

அப்பர், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். பெரும்பாலும் சிவலிங்கத்தின் ஆவுடையானது பத்ம பீடமாகத்தான் (வட்ட வடிவில்) இருக்கும். ஆனால், இங்கே சதுர வடிவில் உள்ளது. காசியிலும் சதுர வடிவம் தான் என்பதால், இத்திருத்தலத்தை 'காசியின் மீசம்' என்கிறார்கள்.

ரேவதி நட்சத்திர பரிகாரத் தலம்

பக்தர்களின் தடைகளை நீக்கி சுகவாழ்வு தரும் இத்திருத்தலம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலமாகவும், குருதோஷங்கள் போக்கும் தலமாகவும் விளங்குகிறது. தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் அதிக அளவில் இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள்.

Read More
வைத்தியநாதசுவாமி கோவில்

வைத்தியநாதசுவாமி கோவில்

நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ள தேவாரத் தலம்

திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருமழபாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி.

இந்த ஊருக்கு மழபாடி என்ற பெயர் வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. இப்படி வேதங்கள் நந்திகளாக காட்சி தரும் கோலத்தை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

Read More
கதலிவனேஸ்வரர் கோவில்

கதலிவனேஸ்வரர் கோவில்

அதிசய வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் அருள் புரியும் இறைவன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகேயுள்ள திருக்களம்பூர்

என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது கதலிவனேஸ்வரர் கோவில்.

‘கதலி’ என்றால் வாழை என்று பொருள். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் குடிகொண்ட இறைவன் என்பதால் இவருக்கு 'ஸ்ரீகதலிவனேஸ்வரர்' (கதலி வன ஈஸ்வரர்) என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர், தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

இங்கு வீற்றிருக்கும் மூலவர், சுயம்புலிங்கம். அவரைச் சுற்றிலும் பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. இந்த வாழைமரங்கள் மழை நீரை மட்டுமே உறிஞ்சி வளருகின்றன. இம்மரங்களின் அடியில் பாறைகள் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. இங்கு தோன்றும் வாழைக் கன்றுகளை வெளியே வேறு எங்கு கொண்டு போய் வைத்தாலும் வளராது. அதேபோல், வெளியிடங்களிலிருந்து வாழைக் கன்றுகளைக் கொண்டுவந்து இந்த கோயிலுக்குள் வைத்தாலும் வளராது. மேலும் இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் எதையும் மனிதர்கள் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர், அதைப் பஞ்சாமிர்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னரே சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.

வாழை மரத்திலிருந்து வெளிப்படும் சிவப்பு நிறத் திரவம்

இங்குள்ள வாழைகளில் இன்னோர் அதிசயம் என்னவென்றால், இவற்றின் பழங்கள் பார்க்க மலைப்பழம் போல இருக்கும். ஆனால், உரித்தால் ரஸ்தாளிப் பழம் போல இருக்கும். அதேபோல, மரத்தை வெட்டினால் ரத்தம் போல சிவப்பு நிறத் திரவம் வெளிவரும். ஆனால், இவை செவ்வாழைகளும் அல்ல. இந்தப் பழங்களிலிருந்து செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை, ஒரு கையளவு சாப்பிட்டோமென்றால், ஒரு நாள் முழுவதும் பசியே எடுக்காது.

திருக்களம்பூர் என்று இத்தலத்தின் பெயர் ஏற்பட்ட வரலாறு

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், சோழர்கள்மீது படையெடுத்துச் சென்றபோது, வழியில் வாழைத் தோப்புக்கு நடுவே பயணித்தார். வெகுவேகமாகச் சென்ற அவரது குதிரையின் கால் குளம்பு சிவலிங்கத்தின் மேல் பட்டதால், லிங்கம் மூன்று பிளவுகள் ஆகி, அதிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியது. தெய்வக் குற்றத்தால் மன்னரின் பார்வை பறிபோனது. பரிதவித்த மன்னன், இறைவனிடம் மண்டியிட்டு, 'இறைவா நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும். பறிபோன பார்வை மீண்டும் கிடைக்கவேண்டும்' என்று வேண்டினார். அதற்கு இரங்கிய இறைவன்,'எனக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்பு. உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்' என்று அருளினார். மன்னனும் ஆலயம் எழுப்புவதாக உறுதி கூற, அவரின் பார்வை திரும்பியது. இதையொட்டி கதலிவனநாதருக்கு, ஸ்ரீவைத்தியநாதசுவாமி என்ற பெயரும் உண்டு.

இன்றும் மூலவரின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களைக் காணலாம். அதனால்தான் இவ்வூர் 'திருக்குளம்பூர்' என்று அழைக்கப்பெற்று, பின்னாளில் திருக்களம்பூர் என்று மருவியது. பாண்டிய மன்னர்கள் எங்கே கோயில் கட்டினாலும், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் இல்லாமல் கட்டுவது இல்லை. இங்கேயும், பிராகாரத்தில் ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசொக்கநாதரும் தனிக்கோயிலில் அருள் பாலிக்கிறார்கள்.

திருமண பாக்கியம், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர அருளும் தலம்

திருமணம் ஆகாத ஆண்களோ அல்லது பெண்களோ, வியாழக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டுவிட்டு, அந்தப் பாயசத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், விரைவில் திருமணம் நடக்கும். அதேபோல் கருத்து வேற்றுமையால் பிரிந்துபோன தம்பதி, மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினால், மிக விரைவில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிணிகளால் அவதிப்படுவோர், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய் கள் தீரும். குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப் பலியாகச் சமர்ப்பித்து வழிபட் டால், விரைவில் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேர்திருவாரூர் ஆழித்தேர்

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். எண்கோண வடிவில் ஏழு அடுக்குகளைக் கொண்டு 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர். முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது இது 400 டன் எடையைக் கொண்டது.

ஆழித்தேர் என பெயர் ஏற்பட்ட காரணம்

இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற சோழ மன்னன் முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர். பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு இந்தத் தேர் உருவானது . அதனாலேயே இது ஆழித்தேர், அதாவது கடல் போன்ற தேர் என்று பெயர் பெற்றது்.

ஆழித்தேர் திருவிழாவை தேவார முதலிகளான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தினார்கள் என்ற குறிப்பும் இந்த விழாவின் மகத்துவத்தை நமக்கு விளக்கும். 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று வியக்கிறார் ஆளுடைய அரசப் பெருமான்.

திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள்

திருவாரூர் தேரழகு என்று இன்றும் போற்றப்படும் இந்ந தேரானது, பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டது. தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இதன் கலசத்தில் இரண்டு வெள்ளிக் குடைகள் அமைக்கப்படும். உலகில் வேறு எங்கும், தேர் கலசத்தில் வெள்ளிக் குடைகள் கிடையாது. இத்தேரில் 64 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைக்கட்டுள்ளது. ரிக், யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகளையும் கொண்டிருக்கும்.

இந்த தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், 150 நைலான் கயிறு கட்டுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேரை இழுக்கவென்று 4 பெரிய வடங்கள் பயன்படுகின்றன. ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது. தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருத்தேர் உலா வரும்போது கொடு கொட்டி, பாரி நாயனம் போன்ற அபூர்வ இசைக் கருவிகள் இசைக்கப்படுவது வழக்கம்.

ஆழித்தேரோட்டம்

உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம், பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுகிறது. ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆழித்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் அசைந்து சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் கூறுவார்கள். இந்நிகழ்ச்சி 'தேர்த்தடம் பார்த்தல்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது. தேர் அசையும்போதெல்லாம் மக்கள் கூட்டம் கூடி அரூரா, தியாகேசா என்று விண்ணதிர முழக்கமிடும் ஒலியும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது. திருவாரூர் வீதியெங்கும் கயிலாய வாத்திய முழக்கங்களும் திருமுறை முழக்கங்களும் என பூலோக கயிலாயமாக விளங்கும் என்றால் அது மிகையில்லை

மொத்தத்தில் ஆழித்தேர், தமிழகத்தின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுகின்றது.

Read More
வீரட்டானேசுவரர் கோவில்

வீரட்டானேசுவரர் கோவில்

சிவபெருமான் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவதிகை. இத்தலத்து . இறைவன் திருநாமம் வீரட்டானேசுவரர். இறைவி பெரியயநாயகி.. சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை. முப்புரத்தை எரித்து சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்றி அருளிய திருத்தலம் திருவதிகை.

பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் தான் தரிசனம் தருவார்.சில சிவத்தலங்களில் உள்ள கருவறைகளில் அதுபோன்ற சிவலிங்கத்திற்கு பின்னால் ஈசனின் திருமணக்கோலம் அல்லது ஈசனின் ஏதேனும் ஒரு திருவிளையாடல் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும் .ஆனால் திருவதிகை திருதலத்தில் மட்டும் ஈசனை, நின்ற கோலத்தில் தனிச்சன்னதியயில் தரிசிக்கலாம் .மேருவை வில்லாகவும் வாசுகியை நானாகவும் கொண்டு நின்ற நிலையில் மூன்று அசுரர்களின் மீது அம்பு எய்தி வதம் செய்யும் திரிபுர சம்ஹார மூர்த்தியாக சிவபெருமான் அங்கு காட்சி தருகிறார் சிவபெருமானின் இந்த அபூர்வ கோலத்தை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது்.

Read More
மங்களேசுவரர் கோவில்

மங்களேசுவரர் கோவில்

உத்திரகோசமங்கை மரகத நடராஜர்

கடலில் கிடைத்த மரகதப் பாறை

ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்ற இடத்தில் மரைக்காயர் என்ற ஏழை மீனவர் வசித்து வந்தார். இவர் தினமும் உத்திரகோசமங்கை இறைவன் மங்களேசுவரர்ரை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சூறாவளி காற்று அடித்ததால் அவருடைய படகு நிலைகுலைந்து வெகுதூரம் போய் ஒரு பாசி படிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது அந்தப் பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்துவிட்டது.

அதுவரை அடித்துக்கொண்டிருந்த புயலும் மழையும் சட்டென்று நின்று விட ஒரு வழியாக அந்த பாறையோடு சேர்த்து படகை செலுத்தி மண்டபம் வந்து சேர்ந்தார். படகில் கொண்டு வந்த பாசி படிந்த அந்தப் பாறைக்கல்லை என்னவென்று தெரியாமல் வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்திருந்தார். மரைக்காயர் வீட்டுக்குள் போக வர அந்தக் கல் மீது நடந்து நடந்து அதன் மேலே ஒட்டியிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் அந்த கல் பச்சை நிறத்துடன் பள பளவென்று மின்னியது.

மரைக்காயர் அந்த பச்சை பாறையை அரசரிடம் தந்தால் தமது வறுமை நீங்கும் என்று எண்ணி பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு கடலில் நடந்த அனைத்தையும் விவரித்து தனது வீட்டில் உள்ள பச்சைக்கல் விபரத்தை சொன்னார். அரண்மனை ஆட்கள் அந்த பச்சை பாறையை எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள்

ரத்தின கற்களைப் பற்றிய விபரம் அறிந்த ஒருவர் அதை சோதித்துப் பார்த்தார். பச்சை பாறையை சோதித்த அவர் ஆச்சரியத்துடன், இது விலைமதிக்க முடியாத அபூர்வ மரகதக்கல். உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று மன்னரிடம் சொன்னார் மன்னர் பச்சை பாறைக்கு உரிய பொற்காசுகளை மரைக்காயருக்கு அளித்து வழியனுப்பி வைத்தார்.

சித்தர் வடித்த மரகத நடராஜர் சிலை

அந்த அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராஜர் சிலையை செதுக்க வேண்டும் என்று அரசன் விரும்பினார். ஆனால் அந்த சிலை வடிப்பதற்கு தகுதியான சிற்பி மன்னருக்கு கிடைக்கவில்லை. பின்னர் இலங்கை அரசன் முதலாம் கயவாகு அரண்மனையில் சிற்பியாக இருந்த சிவபக்தர் ரத்தினசபாபதி யைப் பற்றிய விவரம் கிடைத்தது. சிற்பி ரத்தினசபாபதி பாண்டிய மன்னன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகதக் கல்லை கண்டதும் மயங்கி விழுந்தவர், என்னால் மரகத நடராஜர் சிலையை வடிக்க இயலாது என்று கூறி சென்றுவிட்டார்.

மன்னர் வருத்தத்துடன் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னிதி முன் நின்று பிரார்த்தனை செய்தார் அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் மன்னா என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கிய மன்னரும் பிரஜைகளும் ஒரு சித்தரை கண்டனர் அந்த சித்தரின் பெயர் சண்முகவடிவேலர்.

மன்னரின் கவலை நீங்கியது மரகத நடராஜரை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முகவடிவேலரிடம் ஒப்படைத்தார். சித்தர் சண்முகவடிவேலர் அந்த பெரிய மரகதப்பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் மிகவும் நுணுக்கமாக செதுக்கினார் அந்த சிலைதான் உத்தரகோசமங்கையில் இப்போதும் காட்சியளிக்கும் மரகத நடராஜர். இந்த நடராஜர் சிலையின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் கூட, பால் அபிஷேகத்தின் போது நமக்கு தெரியும் அளவுக்கு மிக நுணுக்கமாகவும், அழகுடனும் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் நமக்கு காட்சியளிப்பார். மார்கழி திருவாதிரையின்போது பழைய சந்தன காப்பு களையப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின் மீண்டும் புதிய நடன கோலத்துடன்சந்தனக்காப்பு இடப்படும். புன்னகை தவழும் கம்பீரமான முகத்துடன் திருநடன கோலத்துடன் காட்சியளிக்கும் உத்திரகோசமங்கை மரகத நடராஜரை, அவசியம் நாம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.

Read More
கவிகங்காதீஸ்வரர் கோவில்

கவிகங்காதீஸ்வரர் கோவில்

அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்

பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.

5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.

மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை

Read More
ஸ்ரீமாகாளீஸ்வரர்  கோவில்

ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்

ராகு-கேது பரிகார தலம்

மனித உருவில் அபூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கும் ராகு கேது பகவான்

பொதுவாக சிவாலயங்களில் ராகுவும் கேதுவும் நவகிரக சன்னதியில் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். அதில் ராகு மனித முகத்துடனும், பாம்பு உடலுடனும், கேது பாம்பு முகத்துடனும் மனித உடலுடனும் காட்சியளிப்பார்கள். ஆனால் ராகு கேதுவை வித்தியாசமான நிலையிலும், அபூர்வமான தோற்றத்திலும் நாம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பின்புறம் ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ள, ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். இக்கோவிலில் சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் ராகு கேதுவை தன் கைகளில் ஏந்தி இருக்கிறார்.மற்றுமொரு சிறப்பு, ராகுவும் கேதுவும் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார்கள். இது போன்று காட்சியளிக்கும் ராகு கேதுவை நாம் வேறு எந்த கோவிலிலும் பார்க்க முடியாது.

இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் மூலவர் ஸ்ரீமாகாளீஸ்வரரைச் சுற்றி அமைந்துள்ளனர்.

ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச தல புராணம். சொல்கிறது. அதனால் இக்கோவில் ராகு-கேது பரிகார தலமாக திகழ்கிறது..இங்கு வழிபட்டால், திருமணத் தடை நீங்குவதோடு, கால ஸர்ப்ப தோஷம், புத்ர தோஷம், பித்ரு சாப தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில், ராகு காலத்தில் இங்கு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.

Read More
ஆரண்யேசுரர் கோவில்

ஆரண்யேசுரர் கோவில்

ஒரே சிவலிங்கத்தில் இரண்டு பாணங்கள்

சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப்படுகிறார். விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். இத்தலத்து இறைவனை வழிபட்டு இழந்த பதவியை மீண்டும் பெற்றான்இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் 'தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.

Read More
கண்ணாயிரநாதர் கோவில்

கண்ணாயிரநாதர் கோவில்

கண் நோய் தீர்க்கும் கண்ணாயிரநாதர்

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, பிரதான சாலை ஓரத்திலேயே திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில் உள்ளது. புராண காலத்தில் இந்தத் தலம் முழுவதும், 'காரகில்' என்ற மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாக இருந்ததால் 'திருக்காரகில்' என்ற பெயர் பெற்றிருந்தது. அதுவே காலப்போக்கில் 'திருக்காரவாசல்' என்று மருவியது. இத்தலத்து இறைவன் கண்ணாயிரநாதர். இறைவி கைலாசநாயகி. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார். ஒரு சமயம், பிரம்மாவிற்கு தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட எண்ணி அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரகில் மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காடசி தருகிறார். இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு. ஆதிசேஷன் இந்தக் கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது.கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத்தில் தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பெற்று சாப்பிட்டு வந்தால் விரைவில் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை., இங்குள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால், பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Read More
பாரிஜாதவனேசுவரர் கோவில்

பாரிஜாதவனேசுவரர் கோவில்

நடராஜ பெருமானின் இரண்டாவது தாண்டவ தலம்

திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருக்களர். இறைவன் திருநாமம் : களர்முளை நாதர், பாரிஜாதவனேசுவரர். இறைவி : இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேசுவரிதுர்வாச முனிவர், சிவபெருமானின் ஆனந்த தாண்டவ தரிசத்தைப் பெற விரும்பினார். திருக்களர் தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை கொண்டு வந்து இங்கு வளர்க்கலானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் பிரதிஷ்டை செய்து, தேவதச்சன் மூலமாக இக்கோயிலை எடுப்பித்தார். இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரம்ம தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது. சிவபெருமான் நர்த்தனக் கோலம் காட்டிய இடம் என்பதனால் களரி (நடன சபை) என இத்தலம் அழைக்கப்பட்டு, பின்பு களர் என மருவியது. இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

Read More
சுந்தரேசுவரர் கோயில்

சுந்தரேசுவரர் கோயில்

குரு பகவானுக்கு 'குருபலம்' வழங்கிய உமாமகேஸ்வரர்

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் குரு பகவான் உமாமகேஸ்வரரை பூஜித்து மக்களுக்கு குருபலம் அருளும் வரம் பெற்றார்.நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. பொன்னுக்கு ஏமம் என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் குரு, ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் ஏமநல்லூர் என்ற பெயர் முற்காலத்தில் இந்த தலத்திற்கு இருந்தது. குரு பகவான் இத்தலத்தில் இறைவன் சுந்தரேசுவரரை உள்ளன்போடு பூஜை செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு அவருக்கு காட்சி தந்து,.'இந்த தலத்துக்கு வந்து உனது பார்வை பெறும் எல்லோரும் எல்லாவிதமான தோஷங்களும் விலகி 'குரு பலம்' பெற்று அவர்களது இனிய இல்லறம் சிறக்க ஆசிர்வதிக்கிறேன்; என்று அருளினார். இப்படி குரு பகவான் 'குருபலம்' பெற்ற நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். இந்த கோலத்தை தரிசித்த குரு பகவான் தனது வழக்கமான அபய முத்திரை விடுத்து, இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிக்கிறார்.

ரிஷப வாகன உமாமகேஸ்வரரின் அற்புத எழில் கோலம்

இக்கோவில் மகா மண்டபத்தில், ரிஷப வாகன உமாமகேஸ்வரரை நாம் தரிசிக்கலாம். அதி அற்புதமான அழகு உடைய இந்த வடிவம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். ரிஷப வாகனத்தில் அம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி ஈசன் காட்சியளிக்கும் அழகே அலாதியானது. இடபத்தின் (காளையின்) முதுகின் மேலுள்ள அம்பாரியில் அமைந்திருக்கும் ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் சடா மகுட தாரியாக ஒளிவட்டத்துடன் சிவபெருமான் அமர்ந்துள்ளார். அவரது வலப் பின்கரத்தில் திரிசூலம் உள்ளது. வலது முன்கரத்தால் அபயம் காட்டுகின்றார். இடக்கரங்களால் அருகே அமர்ந்துள்ள தேவியை அணைத்துள்ளார். அணிகலன்களும், உத்ரபந்தமும், புரிநூலும் தரித்துள்ள சிவபெருமானின் உடல் சற்றே வளைந்த நிலையில் தேவியைத் தாங்குகின்றதுசிவபெருமானுக்கு மேலே அழகிய மகர தோரணம் காணப் பெறுகின்றது. மகர தோரணத்திற்கு மேலே ஆணும் பெண்ணும் என எட்டு கந்தர்வர்கள் வீணை, உடுக்கை, மத்தளம், குழல், சிறுபறை, கைத்தாளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தவாறு, மிதந்த வண்ணம் திகழ்கின்றனர்.உமாதேவி தன் இடக்காலைக் குத்திட்டவாறு, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளார். இடக்கரத்தில் மலர் ஒன்றினை ஏந்தியுள்ளார். நீண்ட கீழாடையுடன், ஒரு புறம் சரிந்த கொண்டையுடன் தன்னை அணைத்தவாறு அமர்ந்துள்ள சிவபெருமானின் முதுகினைத் தன் வலக்கரத்தால் பற்றியுள்ளார். பெருமானும், அம்மையும் அமர்ந்திருக்கும் மகர தோரணத்தோடு அமைந்துள்ள அம்பாரியின் பின்புறம் ஒரு சிவலிங்கம் புடைப்பு சிற்பமாக அமைந்துள்ளது.சிவபெருமான் உமாதேவி அமர்ந்திருக்கும் அம்பாரியானது, படுத்த நிலையில் உள்ள ஒரு காளையின் திமிலோடு இணைந்து ஒரே சிற்பமாக உள்ளது. காளை சிறிய கொம்புகள், விரிந்த காதுகள் ஆகியவற்றுடன் தோல் மடிப்புகளுடன் உள்ளது. பெரிய உருண்டை கோர்க்கப் பெற்ற கழுத்து கயிறு, சங்கிலி மாலை, மணிச்சக்கரங்கள் கோர்க்கப் பெற்ற பெரிய மாலை காளையின் கழுத்தை அணி செய்கின்றன. உமாமகேஸ்வரரின் அதி லாவண்ய ரூபத்தை தரிசிக்கவாவது, நாம் ஒரு முறை திருலோக்கி செல்ல வேண்டும்.

மன்மதன் மீண்டும் உயிர் பெற்ற தலம்

திருக்குறுக்கை தலத்தில், சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும். ரதி - மன்மதன் இருவரும் உமாமகேச்வரருக்கு எதிரில், ஐந்தடி உயரத்தில், அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர். உடனிருக்க காட்சி தருகிறார்கள். இந்த தெய்வீக காதலர்களின் சிலாரூபம் மிகுந்த நேர்த்தியும், கலைநயமும் உடையது ஆகும். இச்சிலையும் பார்ப்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும்,

இல்லறம் அமைய, இனிக்க அருளும்

தலம்வரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்துபோன தம்பதிகள், திருமணமாகியும் மணவாழ்க்கையில் பிரச்னையுள்ளவர்கள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் இங்கு வந்து உமாமகேச்வரப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து பலன் பெறுகிறார்கள்.தனுசு ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய குரு பரிகாரத் தலம் இது.

Read More
கோடீசுவரர் கோவில்

கோடீசுவரர் கோவில்

சனி பகவான் தலையில் சிவலிங்கம்

கும்பகோணத்துக்கு அருகில் திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது.இங்குள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள சனி பகவான் தலையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.இந்த சனி பகவான் 'பால சனி' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவானுக்கு காகம்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்குள்ள சனி பகவானுக்கு கருடன் வாகனமாக அமைந்திருக்கிறது.மூலவர் கோடீசுவரர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இக்கோவிலில் சனீஸ்வரனை எமதர்மன்பார்ப்பது போன்றும் எமதர்மனை சனீஸ்வரர் பார்ப்பது போன்றும் அமைந்து இருக்கின்றது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் இருக்கிறார் சனிபகவான், எமதர்மராஜன், சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடியும்.சனி பகவானுடைய நீதிமன்றமாக திருக்கோடிக்காவல் அமையப் பெற்றுள்ளது.நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமது பால்ய வயதில் அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, மரணச் சனி என்ற அனைத்து சனி திசைகளுக்கும், இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும். நமது பால்ய வயதில் ஏற்பட்ட பாவ புண்ணிய வரவு-செலவு கணக்குகளை சரி பார்க்க கூடிய இடம் திருக்கோடிக்காவல். உலகத்தின் நீதிபதியாகிய பால சனீஸ்வரர் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து, அதை சித்திரகுப்தன் சரி பார்த்து எமதர்மனிடம் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தீர்ப்புக்கான பரிகார நிவர்த்தி இத்தலத்தில் செய்யப்படுகிறது. சாதாரணமாக இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது யாருக்கு எந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு சென்று வழிபட முடியும். சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.

Read More
கோடீசுவரர் கோவில்

கோடீசுவரர் கோவில்

சகல பாவங்களும் தொலைந்து போகும் திருக்கோடிக்காவல்

மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டதால், இத்தல இறைவனின் திருநாமம் 'கோடீசுவரர்’ ' என்றும், ஊர் 'திருக்கோடிக்கா' என்றும் ஏற்பட்டது. மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்றன. ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட பெருமை உடையது இத்தலம்.காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்று வரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள். இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். தலத்தின் தீர்த்தமான் காவிரியில் கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.லோக காந்தா என்ற பெண்மணி, தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள். அவள் தன் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், யம தூதர்கள்,, அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் சென்றார்கள். சிவ தூதர்கள், அவர்களை வழிமறித்தனர். உடனே யமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்.சிவபெருமான், தமது தலமான திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிட்டார். பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று கூறி யமதர்மராஜன், இத்தலத்தை விட்டு நீங்கினான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைந்தாள்.

Read More
சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

அரிதான கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இது ஒரு அரிதான காட்சியாகும்.

ஒருசமயம் இத்தலத்தில் வாழ்ந்த விவசாய தம்பதியினரான பெரியான் மற்றும் அவன் மனைவியின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், அவர்கள் வயலில் வேலை செய்ததற்கு கூலியாக கொடுத்த உணவை கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உண்டார். அந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான் தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார்.

இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் வராது என்றும், மேலும் விவசாயம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

Read More
அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்

பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக அவர்களிடம்,வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள். உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜகோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச்சொன்னான்.அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான். முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.

Read More
சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்

கடலூரில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது.

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். அவர்கள் தினமும் தாங்கள் உணவு அருந்துவதற்கு முன் யாராவது ஒருவருக்காவது உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக எவரும் அத் தம்பதியரின் வீட்டுக்கு செல்லாதபடி செய்துவிட்டார். அதனால், விவசாயி தன் வயலில் வேலை செய்யும் பணியாளர்கள் யாருக்காவது உணவு அளிக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. அப்போது, சிவபெருமான் முதியவர் வடிவம் தாங்கி அங்கே வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், 'நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் வயலில் எனக்கு ஏதாவது வேலை கொடுத்தாள், அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்' என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் வயலை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார்.

தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு வயலுக்குத் திரும்பினர். அப்போது, வயலில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நிலத்தை உழுத உடனேயே இத்தனை பயிர் விளைந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் 'ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, இத்தலத்தில் சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.

சிவபெருமான், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். வயலில் வேலை செய்ததால் சிவபெருமான், 'விவசாயி' என்றும் பெயர் பெற்றார்.அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.

நடராஜரின் தாண்டவத்திற்கு இசைக்கும் திருமால், பிரம்மா

இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் நடராஜரின் திருவடிக்கு கீழே, திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். திருமாலும் பிரம்மாவும் இசைத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்' என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.

Read More
ஏடகநாதேஸ்வரர் கோவில்

ஏடகநாதேஸ்வரர் கோவில்

திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல் வாதம். புனல் வாதம் புரிந்த தலம்

மதுரையை ஆண்ட கூன்பாண்டிய மன்னர், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவருக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரும் உண்டு. இவர் சோழமன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர்கள் மிகத் தீவிரமாக சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். இதனால் சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தரை அனல் வாதம். புனல் வாதம் புரிய அழைத்தனர்.

சமணர்கள் தாங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு கோவில் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற தேவார பாடல் பெற்ற தலம் ஆனது.

இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி போன்ற நாட்களில் பூஜைகள் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தலத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் இக்கோவிலில் உள்ளது.

இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், சித்த பிரமை நீங்குவது தலத்தின் தனி சிறப்பாகும்.

Read More
பிரளயகாலேசுவரர் கோவில்

பிரளயகாலேசுவரர் கோவில்

வெள்ள நீரை உறிஞ்சுவதற்காக எதிர்திசை திரும்பியிருக்கும் நந்தி

விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி சுடர் கொழுந்தீசர்; அம்பாள் கடந்தை நாயகி. ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர் மக்கள் இறைவனை வேண்ட, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும்படி ஆணையிட்டார். உடனே நந்தியெம்பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்குப் புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலை நோக்கி உள்ளார்.

Read More