
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்
பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக, அவர்களிடம் வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள்.
உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.
இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜ கோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச் சொன்னான். அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.

படவேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் சூட்டிய தலம்
முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி
திருவண்ணாமலை அடுத்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோவில் அருகே உள்ள குன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. படை+வீடு = படைவீடு படைகள் தங்கி இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருள்பாலித்ததால், படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று, நாளடைவில் படவேடு என பெயர் மருவி வந்துள்ளது.
முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய படைவீடு
படவேடு ரேணுகாதேவி ஆலயத்துக்கு எதிரேயுள்ள குன்றில் வந்தமர்ந்த முருகப்பெருமானுக்கு, அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம் நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் நடத்தினான்.
முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி
இக்கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கிழக்கு பார்த்து எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அல்லது மயிலுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், இக்கோவிலில் வடக்கு முகம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயில் மீது முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது அபூர்வமான ஒன்றாகும். அந்த மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பது

சந்தவாசல் கங்காதேவி கோவில்
விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கோவில்
வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சந்தவாசல் கங்காதேவி கோவில். இக்கோவிலில், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள், கங்காதேவி. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. கீழே சிம்ம வாகனம் இருக்கிறது.
சிவபெருமானை அழைக்காமல், அவரது மாமனார் தட்சன் யாகம் நடத்தினார். இதனால், கோபத்துடன் இருந்த அவரது வெம்மையை, தலையில் இருந்த கங்காதேவியால் தாங்க முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி, அவள், மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், சிவபெருமானின் உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும், ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி, குளிரச் செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையில், சந்தவாசலில், குமார கம்பணன் என்ற சிற்றரசரின் மனைவி கங்காதேவிக்கு, கோவில் எழுப்பினார்.
கோவிலுக்குப் பின்புறம் ராஜகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து, திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார். இதற்கு, 'மிதிமலை' என்று பெயர். மலையில் சிவபாதம் உள்ளது. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கைசிக கார்த்திகையன்று, இந்த மலையில் விஷ்ணு தீபம் எனப்படும் தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இக்கோவிலில் விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச்சிறப்பாகும். இங்கு, பெருமாள் கோவில் இருந்ததன் அடையாளமாக, கோவில் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம் உள்ளது. இதில், சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால் இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர் இதை சிறிது வாங்கிச் சென்று. வீட்டில் வைத்துக் கொள்ள ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். சித்திரை முதல் நாள், பக்தர்களே, அம்பிகைக்கு பூஜை செய்யலாம்.
திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், 'துணி முடிதல்' என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து, கோவிலில் கொடுத்து விடுவார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், மீண்டும் வந்து துணி முடிப்பை வாங்கி காணிக்கை செலுத்துவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், அவரது நன்மைக்காகவும் அம்பிகைக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்
திருவண்ணாமலை மகாதீபத்தின் சிறப்புகள்
பஞ்சபூதங்களுக்குரிய தலங்களில் நெருப்புக்குரியது திருவண்ணாமலை. இத்தலத்தை நினைத்தாலே முக்தி தரும். இங்கு சிவபெருமானே மலையாக அமர்ந்திருப்பதாக ஐதீகம். அதனால் தான் மலையை கிரிவலமாக வந்து வழிபடுவது, சிவபெருமானை வலம் வந்து வணங்குவதற்கு இணையாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலையின் சிறப்புகளுக்கு முதன்மையானதாக இருப்பது திருக்கார்த்திகை அன்று மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தான். இது போல் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த கோவிலிலும் கிடையாது. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது..
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும், பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கிய படி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
தீபத் திருநாளில் 5 முறை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மலை மீது தீபம் ஏற்றப்படும் போது,'தீப மங்கள ஜோதி நமோ !நம' என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அப்போது நாமும் கிரிவலம் வருவது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும்.
கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.
கார்த்திகை மாதம்,கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

படவேடு யோகராமசந்திர மூர்த்தி கோவில்
ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி இருக்கும் அரிய ராமர், சீதை சிலை
ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்யும் யோகராமர்
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே, நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள வீரக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது யோகராமசந்திர மூர்த்தி கோவில். படவேடு ரேணுகாதேவி கோவில் இணைப்புக் கோவிலாக யோகராமசந்திர மூர்த்தி கோவில் இருக்கிறது.
வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோவில் இது.
இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில், மாணவனுக்கு பாடம் போதிக்கிற பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது.
சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்த நிலையில், பனை ஓலைகளை கொத்தாக கையில் பிடித்து, ஓலைச் சுவடியை படிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், ராமபிரான் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் எதுவும் இல்லை. ஆனால், இளையபெருமாளான லட்சுமணன் வில்லும் கையுமாக நிற்கிறார்.
யோகராமர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக இத்தல ராமரை வழிபட்டு பலனடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவண்ணாமலை: அருணாச்சலேசுவரர் கோவில்
மரண பயத்தை போக்கும் காலபைரவர்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் காலபைரவர் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த காலபைரவர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி கபால மாலைடன் காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் 64 திருமேனிகளுள் ஒருவரான பைரவர், சனி பகவானின் குருவாகவும், 12 ராசிகள், 8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் மற்றும் காலத்தையும் கட்டுப்படுத்துபவராக விளங்குபவர்.
தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு செய்யப்படும் பூஜைகள் சிறப்பு வாய்ந்தது என்றாலும், செவ்வாய்கிழமை வருகிற அஷ்டமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காலபைரவருக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, சந்தனம், தேன், விபூதி, இளநீர் உள்ளிட்டவைகளை கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து காலபைரவருக்கு வடைமாலை மற்றும் முந்திரி மாலை அணிவிக்கப்படும்
தேய்பிறை அஷ்டமி அபிஷேகத்தின் போது கால பைரவரின் பாதத்தில் வைத்த பச்சையை கட்டினால் கண் திருஷ்டி விலகும், எதிரிகளால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாக்கும், பைரவர் ரட்சை அணியும் மக்களுக்கு செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். காலபைரவருக்கு பக்தர்கள் பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றியும், தேங்காய் மூடியில் விளக்கேற்றியும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு மரண பயத்தை போக்கும். ஆபத்திலிருந்து காக்கும், தீராத நோய், கடன் தீர்க்கும்.

படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில்
லட்சுமி நரசிம்மரின் வித்தியாசமான தோற்றம்
காட்பாடியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள சந்தவாசலிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது படவேடு என்னும் கிராமம். தசாவதார பெருமாள்களில் ஒருவரான பரசுராமன் அவதரித்த தலம் இது. இந்த கிராமத்தில் ஓடும் கமண்டலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவில்.இந்த மலைக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி உண்டு.
இக்கோவில் வெறும் மூலவர் சன்னதி மட்டும் கொண்ட சிறிய கோவில். பொதுவாக எல்லா லட்சுமி நரசிம்மர் கோவில்களிலும் லட்சுமி தேவி நரசிம்மரின் இடது தொடை மீது அமர்ந்து காட்சி தருவாள். இத்தலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மரின் சிறப்பு என்னவென்றால், லட்சுமி தேவி, நரசிம்மரின் வலது பக்க மடிமீது அமர்ந்து காட்சி தருவது தான். லட்சுமி நரசிம்மரின் இந்த தோற்றத்தை நாம் வேறு தலங்களில் தரிசிப்பது அரிது.

ரகுநாதசமுத்திரம் ஞானராமர் கோவில்
ஓலைச்சுவடியில் வேதத்தை வாசிக்கும் அனுமனுக்கு அதன் பொருளை விளக்கும் ராமர்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் - பெரணமல்லூர் சாலையில் சேத்பட்டிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ரகுநாதசமுத்திரம் ஞானராமர் கோவில்.
இந்தக் கோவிலில், ஸ்ரீராமபிரான் யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இப்படி யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் இருக்கும் ராமரை நாம் ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ள படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய திருத்தலங்களிலும் ஸ்ரீ யோக ராமரை நாம் தரிசிக்கலாம்.
கருவறையில் ஸ்ரீராமபிரான் யோகாசனமிட்டு அமர்ந்தவண்ணம் தனது வலது கரத்தை சின்முத்திரையாகக் கொண்டு ஆத்ம ஸ்தானத்தில் வைத்தபடி வீற்றிக்கிறார், அவருக்கு இடதுபுறம் தம்பி லட்சுமணர் வில்லேந்திய கோலத்தில் நின்றருள, வலது பக்கம் சீதா பிராட்டி அமர்ந்து திருவருள் புரிகின்றாள். ரகுநாதசமுத்திரத்தில் மட்டும் ஸ்ரீ ராமபிரானுக்கு வலதுபுறம் மாறியபடி சீதா தேவியும், இடதுபுறத்தில் ஸ்ரீ லட்சுமணரும் திருக்காட்சித் தருவது சிறப்பம்சமாகும்.
கருவறையின் எதிரே ஈசான மூலையில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சுகப்பிரம்ம மகரிஷி தந்த ஓலைச்சுவடியை பத்மாசனத்தில் அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருக்கின்றார். அனுமனின் இந்த கோலத்தின் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. ஸ்ரீராமபிரான், ராவணனை வதைத்து, சீதையை மீட்டு, தம்பி லட்சுமணரோடு இப்பகுதியில் வரும்போது சுகபிரம்ம மகரிஷியை சந்திக்கின்றார். அவரிடமிருந்து வேதங்களின் உட்பொருள் அடங்கிய ஓலைச்சுவடியைப் பெற்று, அனுமனை வாசிக்கச் சொல்கின்றார். வேதத்தின் உட்பொருளைக் கேட்டு இன்புற்ற ஸ்ரீராமபிரான் அனுமனுக்கு உபநிஷதங்களில் ஒன்றான முக்திகோபநிஷத்தை உபதேசிக்கின்றார். இந்தத் திருக்கோலத்தையே, இந்தக் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
பிரார்த்தனை
இந்தக் கோவிலில், தொடர்ந்து மூன்று வாரங்கள் ஸ்ரீராமரை சேவித்து கோரிக்கைகளைச் சொல்லி, கருடனின் பாதங்களை வணங்கினால் குழந்தைப் பேறு, திருமண வரம் கிட்டும். ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம் செய்து, 11 சுமங்கலிகளுக்கு புடைவை மற்றும் மங்கலப் பொருட்களை தானம் தந்து, வேப்ப மரத்தில் தொட்டில் கட்டிச் செல்ல, ஆண் குழந்தை பாக்கியம் கிட்டும்.

அழிவிடைதாங்கி சொர்ணகால பைரவர் கோவில்
சொர்ணகால பைரவர் மூலவராக விளங்கும் தலம்
காஞ்சிபுரத்திலிருந்து, வெம்பாக்கம் வழியாக சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழிவிடைதாங்கி. இங்கு 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சொர்ண கால பைரவர் கோவில் இருக்கின்றது. ஆதிசங்கரர் இத்தல பைரவரை பிரதிஷ்டை செய்தார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. கருவறையில் ஐந்தடி உயர திருமேனியுடன் நின்ற கோலத்தில், தனது நான்கு திருக்கரங்களில் உடுக்கை, பாசுரம், சூலம், கபாலம் ஆகியவவற்றை ஏந்தியபடி தலையில் அக்னி ஜுவாலை கிரீடத்துடனும், தெற்கு முகம் நோக்கி, நாய் வாகனத்துடன் காட்சி அளிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்க்கு நோக்கி இருக்கும். ஆனால் இத்தலத்தில் அவருடைய வாகனம் கிழக்கு நோக்கி இருக்கின்றது. மேலும் இக்கோவிலில் அட்ட பைரவர்கள் தங்கள் மனைவியருடனும், வாகனத்துடனும் பிரகாரத்தில் சுதை வடிவில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.
கி.பி.14ஆம் நூற்றாண்டில் வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே நடந்த போரின் முதல் நாள் தனது படைகள் பெருமளவில் நாசமடைந்ததைக் கண்டு சம்புவராயன் மனம் வருந்தினார். அன்று இரவு, கால பைரவர் அவரது கனவில் தோன்றி நீ வருத்தப்படவேண்டாம் நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துனையிருப்பேன் என்றார். அடுத்த நாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றார். அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூரை அழிபடைதாங்கி எனப் பெயரிட்டார். இந்த வெற்றியை அருளிய சொர்ணகாலபைரவருக்கு பெரியதொரு கோவிலையும் எழுப்பினார். இதுபோன்று, சொர்ணகால பைரவருக்கு என்ற தனி கோவில் வேறு எங்கும் கிடையாது.
பிரார்த்தனை
சொர்ணகால பைரவர், வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும விலகும்.

அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
நவ நரசிம்மர் அருளும் தட்சிண அகோபிலம்
திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் தலம்
ஐந்து பெருமாள் எழுந்தருளி இருக்கும் பஞ்ச திருப்பதி தலம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 15 கி.மீ, தூரத்தில் அமைந்திருக்கிறது அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தட்சிண அகோபிலம் என்று சொல்லப்படும் இந்த நவநரசிம்ம தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி அவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட புராணத்தில் இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.
அவணியாபுரம் பஞ்ச திருப்பதி என போற்றப்படுகிறது. பிருகு முனிவருக்கு அருள் செய்ய, பெருமாள் அவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் கோலத்தில் இங்கு எழுந்தருளி அருள் புரிந்தார்.
இக்கோவில் சன்னதிகள் மலையில் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும், ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜபெருமாளும், ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர்.
கீழே குகை போன்ற கர்ப்பகிரகத்தில் லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம், சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம் அமைந்திருக்கின்றது. இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்தபிறகு, தட்சிணப் பகுதியில் இந்த மலைக் குகையில்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் பெருமாள். அவரே இப்போது மூலவராக உள்ளார். புராண காலத்தில் இந்தத் தலத்தில் ஸ்ரீநரசிம்மர் உக்கிரமாக இருந்தார். அவரின் சினத்தைக் குளிர்விக்க பிரம்மா இங்கே யாகம் செய்தார். அப்போது, யாகத் தீயால் பெருமாளின் திருமுகம் பின்னமானது. இதனால் பதறிப்போன திருமகள், நரசிம்மரின் திருமுகத்தை தான் ஏற்று பெருமாளின் மடியில் அமர்ந்து அருள் செய்யத் தொடங்கினாள். பெருமாளுக்காக, அவரின் முதல் அடியாரான கருடாழ்வாரும் சிம்ம முகம் தாங்கி சேவை புரிந்தார்.
லட்சுமி நரசிம்மர் கர்ப்பகிரகத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், 'தட்சிண அகோபிலம்' என்று போற்றப்படுகிறது.
பிரார்த்தனை
இந்தக் கோவிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மருதாடு புரந்தரீசர் கோவில்
இந்தரபிரசாதவல்லி என்ற வித்தியாசமான திருநாமம் உடைய அம்பிகை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதாடு. இறைவன் திருநாமம் புரந்தரீசர். இறைவியின் திருநாமம் இந்திரப்பிரசாதவல்லி.
தேவர்களின் அரசனான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இத்தலத்துக்கு, வந்து தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டான். இந்திரன் வழிபட்டு அருள் பெற்றதால், அவனுடைய பெயராலேயே இத்தல மூலவர், புரந்தரீசர் என்ற பெயர் பெற்றார். இந்திரனின் மற்றொரு பெயர் புரந்தரன். இந்திரன் வழிபட்ட போது இத்தல அம்பிகை, அவனுக்கு விபூதி பிரசாதமும், தீர்த்த பிரசாதமும் வழங்கி ஆசிர்வதித்தார். இந்திரனுக்கு பிரசாதம் அளித்ததால் அம்பிகை 'இந்திரப்பிரசாதவல்லி' என்று பெயர் பெற்றார். இப்படிப்பட்ட வித்தியாசமான திருநாமத்தை உடைய அம்பிகையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மன் சன்னிதியில் குங்கும பிரசாதமும், தை மாத வெள்ளிக்கிழமையில் தீர்த்த பிரசாதமும் தரப்படுகிறது.
பிரார்த்தனை
அம்பாளுக்கு அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இத்தலத்தில் உள்ள சூரியன் மற்றும் புரந்தரீசருக்கு கோதுமைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் நோய்கள் நிவர்த்தியாகும்.

கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில்
குதிரை முகம் கொண்ட அபூர்வ நந்தி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி- சேத்துபட்டு வழியில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பங்கஜவல்லி. துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.
இத்தலத்து நந்தி குதிரை முகத்துடன் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது. ஒரு சமயம் இந்திரன் தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். ஆனால் இறைவன் அவனுக்கு காட்சி தரவில்லை. சிவபெருமான் அசரீரி மூலமாக இந்திரனை கெங்காபுரம், விருபாட்சிபுரம் , கோனைப்புதூர் முதலிய தலங்களில் வழிபட்டு, பின்னர் இத்தலத்தில் பூஜை செய்தால் காட்சி கிடைக்கும் என்று அருளினார். இந்திரனும், அவ்வாறே செய்தான்.
சிவபெருமானும் இந்திரனுக்கு காட்சி தருவதற்காக ரிஷபத்தின் மேல் ஏறிக்கொண்டு கிளம்பினார். கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டதால், இந்த ரிஷபம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை அழைத்து செல்லுமா என்றும், அதே நேரம் இதுவே ஒரு குதிரையாக இருந்தால் நாம் விரைவில் இந்திரனுக்கு காட்சி தரலாமே என்றும் எண்ணினார். இது ரிஷபத்திற்கு தெரிந்து ஈசன் நம்மைப் பற்றி இப்படி நினைத்துவிட்டாரே என்று எண்ணி ஈசனின் எண்ணப்படி குதிரை முகத்துடன் வடிவெடுத்து, சிவபெருமானை குறிப்பிட்ட காலத்திற்குள் அழைத்து சென்று அவரது எண்ணத்தை பூர்த்தி செய்தது. எனவே தான் இத்தலத்தில் குதிரை வடிவுடன் கூடிய நந்தி அமைந்துள்ளது. இப்படி நந்தி குதிரை முகத்துடன் இருப்பது ஒரு அரிதான காட்சியாகும்.
துலாபாரம் காணிக்கை செலுத்தப்படும் ஒரே சிவாலயம்
பொதுவாக சிவன் கோயில்களில் துலாபாரம் காணிக்கை செலுத்தும் வழக்கம் கிடையாது ஆனால் இத்தலத்தில் துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் ஒரு தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
தலத்து இறைவன் சிறந்த வரப்பிரசாதி. இத்தலத்தில் வழிபட்டு திருமணத்தடை நீங்க பெற்றவர்களும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களும் அதிகம். இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி ஸ்ரீ சந்தான கோபால யாகமும் , திருமண தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வர கலா பார்வதி யாகமும் நடைபெறுகின்றது.

நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில்
யோகநிலையில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்
திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தலம் நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. சுகப் பிரம்மரிஷி வழிபட்ட தலம் இது.
இக்கோவிலில் 64 சிவ மூர்த்தங்களில் ஒன்றான யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருக்கிறார். பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார்.
பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். ஆனால் சனகாதி முனிவர்களுக்கு மனம் ஒருமுகப்படாததால் தெளிவு ஏற்படவில்லை.இதனால் சிவபெருமான் தாமே யோக நிலையில் அமா்ந்து மெளனத்தின் மூலமாக ஞானமும் நிஷ்டையும் கைகூடும் தன்மையை போதித்து அருளினாா். சிவபெருமானின் இத்திருக் கோலத்தை 'யோக தட்சிணாமூா்த்தி' என்று புராணங்கள் போற்றுகின்றன. யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது. இரு பாதங்களையும் குத்திட்டு, குறுக்காக வைத்து, யோகபட்டயம் தரித்து, முன் இரண்டு கரங்களையும் முழங்கால்கள் மீது நீட்டி, பின் இரண்டு திருக்கரங்களில் அட்சய மாலை மற்றும் கமண்டலம் ஏந்தி காட்சி தருகிறார்.
செவ்வாய் தோஷம் தீர்க்கும் யோக தட்சிணாமூர்த்தி
இந்த யோக தட்சிணாமூர்த்தியை இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். கல்வியில் மேன்மை பெறலாம்.

திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில்
பால பருவத்து கிருஷ்ணன், பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் அபூர்வ தோற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ளது பூதநாராயணப் பெருமாள் கோவில். கருவறையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் பால பருவத்து கிருஷ்ணராக இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்திருப்பது தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
வாசுதேவர், தேவகிக்கு எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். அக்குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கம்சன் அதனைக் கொல்லப் பல வழிகளில் முயற்சித்தான். பூதகி எனும் அரக்கியை அழைத்து, குழந்தையை கொல்லுமாறு கட்டளையிட்டான். அதன்படி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பூதகி கிருஷ்ணனைத் தனியாக அழைத்துப் பாலூட்டினாள். வந்திருப்பது யாரென்பதை அறிந்து கொண்ட மாயக்கண்ணன் பூதகியின் விஷப்பாலை அருந்துவது போல் பாவித்து, அவளைக் கொன்றான். பின்பொரு சமயம் அரக்கியை வதஞ்செய்த கிருஷ்ணாவதாரக் கோலத்தைத் தனக்கு காட்டியருளுமாறு பிருகு முனிவர், திருமாலிடம் வேண்டினார். அவ்வேண்டுதளுக்குச் செவி சாய்த்து, திருமால் திருவண்ணாமலையில் பூதநாரயணப் பெருமாளாகக் காட்சியளித்து அர்ச்சாரூபமாய் எழுந்தருளினார். காலமாற்றத்தால் அப்பெருமாளை மணல் மூடிற்று. வெகு நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு முனிவரின் கனவில் திருமால் தோன்றி, அருகில் உள்ள மணல் புற்றை முழுவதுமாக அகற்றுகையில், திருமாலின் அர்ச்சாரூபம் அங்கு உள்ளதைக் கண்டு, அதை கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து வணங்கி வரலாயினர்
பிரார்த்தனை
இந்த ஆலய இறைவனை வேண்டிக்கொண்டால், அறிவும், ஞானமும் கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு உள்ள தீராத நோய், கண் திருஷ்டி போன்றவை அகலும். குணமுள்ள குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்

குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில்
எமனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி-செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள தூசி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1½ கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற தலம் குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் இறையார் வளையம்மை.. மறுபிறவி வேண்டாதவர்களுக்கு அருள்பாலிக்கும் தலம் இது, மகரிஷிகளின் சாபத்தால் வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் முட்டமாக (காகம்) பூலோகத்தில் பிறப்பெடுத்தனர். இதனால், மனம் வருந்திய மூவரும் திருக்கயிலாயம் சென்று உமையொருபாகனான சிவபெருமானை சரணடைந்து தங்களுக்கு சாப விமோசனம் அருளும்படி வேண்டி நின்றனர். சிவபெருமானின் கட்டளையை ஏற்று இத்தலத்து இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
சனி தோஷ நிவர்த்தி தலம்
சனி கிரகத்தின் அதிபதியாக யமன் கருதப்படுகிறார். அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும். எமனுக்கே சாப விமோசனம் கிடைத்த தலம் இது என்பதால், சகலவிதமான சனி தோஷங்களும் இங்கு நிவர்த்தியாகும்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்
அருணாசலேசுவரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திருவிழா
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று, திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதாக ஐதீகம். எனவேதான் எல்லா வைணவத் தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல், அன்று அனைத்து வைணவத் தலங்களிலும் திறக்கப்படும்.
பஞ்சபூத சிவாலயங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடத்தப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறப்புக்குரிய சாவியை, கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமிகள் சன்னதியில் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்துவார்கள். பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிறகு அந்த சாவி மேளம் தாளம் முழுங்க எடுத்து வரப்படும். அந்த சாவியை கொண்டு சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பியபடி சொர்க்கவாசலை கடந்து செல்வார்கள்.
தமிழ்நாட்டில், அருணாசலேசுவரர் கோவில் தவிர வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய சொர்க்க வாசல் திறப்பு திருவிழா நடப்பதில்லை.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்
திருவண்ணாமலை கோவிலின் சிறப்புகள்
திருவண்ணாமலைக் கோவில், மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று. இறைவன் திருநாமம் அருணாசலேசுவரர். இறைவியின் திருநாமம் உண்ணாமுலையாள். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மலையே சிவலிங்கமாக உள்ளது எனபது நம்பிக்கை.'அருணம்' என்றால் 'சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு'. 'அசலம்' என்றால் 'மலை'. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு 'அருணாச்சலம்' என்று பெயர் ஏற்பட்டது. பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாகும். இக்கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் நாம் காணலாம்.
பார்வதிக்கு சிவபெருமான் தன் இடப்பாகம் அளித்த தலம்
சிவனை நோக்கி தவமிருந்த பார்வதிக்கு தன் இடப்பாகம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய், கருவறையின் பின் புறம் அமர்ந்தார்.
நினைத்தாலே முக்தி தரும் தலம்
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. முதலில் குறிப்பிட்ட நான்கு தலங்களின் மூலம் முக்தி அடைவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பதால், அது எல்லோருக்கும் சாத்தியப்படும் ஒன்றாகும்.
திருவெம்பாவை, திருப்புகழ் போன்ற பக்தி நூல்கள் இயற்றப்பட்ட தலம்
இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
பழமையான மலை
திருவண்ணாமலையில் இருக்கும் மலை 260 கோடி ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இந்த மலையானது கிருதா யுகத்தில் நெருப்பு மலையாக இருந்தது, திரேதா யுகத்தில் மாணிக்க மலையாக இருந்தது, துவாபர யுகத்தில் தங்க மலையாக இருந்தது. தற்போது கலி யுகத்தில் கல் மலையாக இருக்கின்றது என்பது சைவர்களின் நம்பிக்கை. மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில், பால் பிரண்டன் எனும் பிரிட்டனைச் சேர்ந்த தத்துவஞானி மற்றும் ஆய்வாளார் 'லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையின் அமைப்பு
திருவண்ணாமலையை கீழ்த்திசையிலிருந்து பார்த்தால் ஏக மலையாகத் (ஒன்றாக) தெரியும். மலை சுற்றும் வழியில் நின்று பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்த நாரீஸ்வர தத்துவத்தைக் குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன், பிரம்மா, திருமால் மூவரையும் குறிக்கும்.
கோவில் அமைப்பு
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இவ்வாலயத்தின் ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை உள்ளன. திருவண்ணாமலை ராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது.
பௌர்ணமி கிரிவலம்
சித்தர்களில் ஆதிசித்தனாகிய சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் சித்தர்கள் அருவமாக வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு பௌர்ணமி இரவன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது கிபி 1240ல் இங்கு கிரிவலம் செல்ல ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்து பணி செய்தார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து, அண்ணாமலையரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து வணங்குபவர்களுக்கு குல சாபங்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா
ஆடிப்பூரத்தன்று மாலை. ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.
திட்டிவாசல் வழியே வெளிவரும் உற்சவமூர்த்திகள்
திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவரும் நடைமுறை இவ்வாலயத்தில் மட்டும்தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலையில் பத்துநாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். சிவனுக்குரிய மகா தீப விழாவை உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. பத்தாம் நாள் திருவண்ணாமலை மீது ஏற்றும் தீபம், மகா தீபமாகும். திருவண்ணாமலை கார்த்திகை தீப நாள் அன்று அதிகாலை 4 மணி அளவில் மலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றும் விழா நடைபெறும். மகா தீபம் ஏற்ற 3000 கிலோ பசு நெய், 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடாத்துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும். இந்த தீபத்தின் ஒளியை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாழும் மக்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவானவன், அவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதை இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம் ஆகும். இந்த கார்த்திகை தீப தரிசனத்தை காண்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும், அண்ணாமலையார் மற்றும் இங்கு அருவமாக வாழும் சித்தர்களின் ஆசிகளால் நிறைவேறும்.
அண்ணாமலை மகா தீப தரிசன பலன்
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும், தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும் அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.
மகா தீபத்தை தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா: பதங்கா: மச காச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா த்ருஷ்ட் வா ப்ரதீபம் நச ஜன்ம பாகின. பவந்தி நித்யம் ச்வ பசா ஹி விப்ரா
இந்த மகாதீப ஒளிக்காட்சியைக் காணும் மக்கள் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

நெடுங்குணம் யோக ராமர் கோவில்
கைகளில் வில்லும், அம்புமின்றி யோக நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ ராமர்
திருவண்ணாமலையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நெடுங்குணம் யோக ராமர் கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில், தமிழ்நாட்டில், ராமருக்கு என்று அமைந்த தனிக்கோவிலில் மிகவும் பெரியது.
கருவறையில் ஸ்ரீராமபிரான் வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். எப்பொழுதும் அவர் கையில் ஏந்தி இருக்கும் கோதண்டம் மற்றும் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமர்ந்த நிலையில் வலது கையை சின் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி, கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார். இது ராமபிரானின் மிகவும் அபூர்வமான திருக்கோலம் ஆகும். இதனாலேயே இவரை யோக ராமர் என்று அழைக்கின்றனர். ராமர் அருகே இடப்புறம் சீதாபிராட்டி அமர்ந்த நிலையில், வலக் கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ராமருக்கு வலது புறத்தில் கைகளைக் குவித்து அஞ்சலி செலுத்தியவராய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமபிரானும் சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர, அவர்கள் எதிரே அனுமன் பிரம்மசூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது. இது வேறு எங்குமே காணமுடியாத அற்புத காட்சியாகும்.
பிரார்த்தனை
இங்கே ராமபிரான் சாந்தமான கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், அவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காக ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.

ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்
விநாயகரும் ஆஞ்சநேயரும் எதிர் எதிரே தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கில், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கில் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி.
ஆர்(அத்தி) மரங்கள் அணி, அணியாய் சேர்ந்து காடாகி இருந்த இடமாக இருந்ததால, இந்த ஊருக்கு ஆரணி என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில் கமண்டல நாகநதிக்கரையில் அமைந்துள்ளது. ஆற்றுப்பாலத்துக்கு இடப்பக்கத்திலிருக்கும் இக்கோவிலுக்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இடப்புறத்தில் படித்துறை விநாயகர் சன்னிதி அமைந்திருக்கின்றது. அவருக்கு எதிர்புறம், கோவிலின் வலப்புறத்தில் ஆஞ்சநேயர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றார். இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது அரிது. இங்கிருக்கும் ஆஞ்சனேயர் கையில் சங்கு, சக்கரம் இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கி துவங்குவதும், அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்வதும் நமது வழிப்பாட்டு முறையாகும். இந்த நடைமுறையை சுட்டிக்காட்டும் விதமாக, கோவிலை வலம் வர ஆரம்பிக்கும்போது விநாயகரில் ஆரம்பித்து, இறைவனை தரிசித்து கடைசியில் ஆஞ்சநேயரை வணங்கி நமது கோவில் தரிசனத்தை முடிக்கும் விதமாக இக்கோவில் அமைப்பு அமைந்திருக்கின்றது.
பிரார்த்தனை
ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருப்பதால் உண்டாகும் புத்திர தோஷமும், நாகதோஷமும் நீங்க, இக்கோவிலில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திரகாமேஷ்டி யாகத்தினை செய்தும் தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். பரிகார தலம் என்பதால் திருமணம் செய்ய உகந்த இடமாக விளங்குகின்றது. மேலும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றது.

ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்
நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டுவோருக்கு பலன் தரும் தலம்
காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கிலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கிலும் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. குழந்தையற்ற தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் பிரதான வழிபாட்டுத் தலமாக இக்கோவில் விளங்குகிறது. கருவறையில் மூலவர் புத்திரகாமேட்டீசுவரர் ஒன்பது தலை நாகத்தின் கீழ் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தி நீண்ட நாட்களாக தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கவலை கொண்டிருந்தார். குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, இத்தலத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்பின்னர், அவருக்கு ராமர், பரதன், லட்சுமணன். சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் புத்திரகாமேட்டீசுவரர் என்றே பெயர் சூட்டினார். கோவிலுக்கு நேரே, வெளியில் தசரதருக்கும் சன்னதி உள்ளது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில், முனிவர் போல கைகளில் ருத்ராட்ச மாலை. கமண்டலம் வைத்து காட்சியளிக்கிறார். தசரதர் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரார்த்தனை
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் புத்திரகாமேட்டீசுவரரை வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வேண்டி, புத்திரகாமேட்டீசுவரரை வணங்குவோர், ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள் மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில் ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைக்கு அள்னதானம் பரிமாறி விரதமிருக்க வேண்டும். ஏழாவது திங்கள்கிழமையன்று இங்கு புத்திரகாமேட்டீசுவரருக்கு செவ்வலரிப்பூ மற்றும் கோயிலில் உள்ள பவன் மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று சிவனுக்கு சிவாச்சாரியார்கள், புத்திரகாமேஷ்டி யாகம் நடத்துவர். இதிலும் கலந்து கொள்ளலாம். ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் உண்டாகும் புத்திர தோஷம் நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.