கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில்

குதிரை முகம் கொண்ட அபூர்வ நந்தி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி- சேத்துபட்டு வழியில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பங்கஜவல்லி. துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.

இத்தலத்து நந்தி குதிரை முகத்துடன் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது. ஒரு சமயம் இந்திரன் தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். ஆனால் இறைவன் அவனுக்கு காட்சி தரவில்லை. சிவபெருமான் அசரீரி மூலமாக இந்திரனை கெங்காபுரம், விருபாட்சிபுரம் , கோனைப்புதூர் முதலிய தலங்களில் வழிபட்டு, பின்னர் இத்தலத்தில் பூஜை செய்தால் காட்சி கிடைக்கும் என்று அருளினார். இந்திரனும், அவ்வாறே செய்தான்.

சிவபெருமானும் இந்திரனுக்கு காட்சி தருவதற்காக ரிஷபத்தின் மேல் ஏறிக்கொண்டு கிளம்பினார். கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டதால், இந்த ரிஷபம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை அழைத்து செல்லுமா என்றும், அதே நேரம் இதுவே ஒரு குதிரையாக இருந்தால் நாம் விரைவில் இந்திரனுக்கு காட்சி தரலாமே என்றும் எண்ணினார். இது ரிஷபத்திற்கு தெரிந்து ஈசன் நம்மைப் பற்றி இப்படி நினைத்துவிட்டாரே என்று எண்ணி ஈசனின் எண்ணப்படி குதிரை முகத்துடன் வடிவெடுத்து, சிவபெருமானை குறிப்பிட்ட காலத்திற்குள் அழைத்து சென்று அவரது எண்ணத்தை பூர்த்தி செய்தது. எனவே தான் இத்தலத்தில் குதிரை வடிவுடன் கூடிய நந்தி அமைந்துள்ளது. இப்படி நந்தி குதிரை முகத்துடன் இருப்பது ஒரு அரிதான காட்சியாகும்.

துலாபாரம் காணிக்கை செலுத்தப்படும் ஒரே சிவாலயம்

பொதுவாக சிவன் கோயில்களில் துலாபாரம் காணிக்கை செலுத்தும் வழக்கம் கிடையாது ஆனால் இத்தலத்தில் துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் ஒரு தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

தலத்து இறைவன் சிறந்த வரப்பிரசாதி. இத்தலத்தில் வழிபட்டு திருமணத்தடை நீங்க பெற்றவர்களும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களும் அதிகம். இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி ஸ்ரீ சந்தான கோபால யாகமும் , திருமண தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வர கலா பார்வதி யாகமும் நடைபெறுகின்றது.

படங்கள் உதவி : திரு. R.சுந்தரேசன், கெங்காபுரம்

குதிரை முகம் கொண்ட நந்தி

துலாபார காணிக்கை

 
Previous
Previous

சிவராத்திரியின் சிறப்புகள்

Next
Next

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்