சந்தவாசல் கங்காதேவி கோவில்

விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கோவில்

வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சந்தவாசல் கங்காதேவி கோவில். இக்கோவிலில், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள், கங்காதேவி. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. கீழே சிம்ம வாகனம் இருக்கிறது.

சிவபெருமானை அழைக்காமல், அவரது மாமனார் தட்சன் யாகம் நடத்தினார். இதனால், கோபத்துடன் இருந்த அவரது வெம்மையை, தலையில் இருந்த கங்காதேவியால் தாங்க முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி, அவள், மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், சிவபெருமானின் உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும், ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி, குளிரச் செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையில், சந்தவாசலில், குமார கம்பணன் என்ற சிற்றரசரின் மனைவி கங்காதேவிக்கு, கோவில் எழுப்பினார்.

கோவிலுக்குப் பின்புறம் ராஜகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து, திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார். இதற்கு, 'மிதிமலை' என்று பெயர். மலையில் சிவபாதம் உள்ளது. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கைசிக கார்த்திகையன்று, இந்த மலையில் விஷ்ணு தீபம் எனப்படும் தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இக்கோவிலில் விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச்சிறப்பாகும். இங்கு, பெருமாள் கோவில் இருந்ததன் அடையாளமாக, கோவில் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம் உள்ளது. இதில், சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால் இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர் இதை சிறிது வாங்கிச் சென்று. வீட்டில் வைத்துக் கொள்ள ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். சித்திரை முதல் நாள், பக்தர்களே, அம்பிகைக்கு பூஜை செய்யலாம்.

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், 'துணி முடிதல்' என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து, கோவிலில் கொடுத்து விடுவார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், மீண்டும் வந்து துணி முடிப்பை வாங்கி காணிக்கை செலுத்துவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், அவரது நன்மைக்காகவும் அம்பிகைக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

 
Previous
Previous

பிரம்மதேசம் கைலாசநாதர். கோவில்

Next
Next

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்