மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்

மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்

சிவபெருமான் ரிஷபத்தின் மேல் தாண்டவமாடும் அபூர்வ கோலம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இக்கோவில் சுமார் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவியின் திருநாமம் வித்யூஜோதிநாயகி.

பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசனம் தரும் தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி

இத்தலத்தில் சிவபெருமான் ரிஷப தாண்டவமூர்த்தி என்னும் பெயரோடு, நந்தி மீது நடமாடும் அபூர்வ கோலத்தில், 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர் சூலமாட, பைரவர், கணங்கள், விநாயகர், பார்வதி, பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைப்படைப்பு. திருவாசியில் அக்கினிக்குப் பதிலாக, இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. தலைக்குப் பின்புறத்தில் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணியில் உள்ளது. இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.

Read More
சௌகார்பேட்டை  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சௌகார்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

பெண் கருடனும், பெண் குரங்கும் தாயாருக்கு வாகனங்களாக விளங்கும் சிறப்பு

சென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெருவில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். திருப்பதி ஏழுமலையானை நினைவுபடுத்தும் வெங்கடேச பெருமாளே இங்கு மூலவர். அருகில் தனிச் சந்நிதியில் அலர்மேல்மங்கை தாயார்.

சுமார் 420 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோவிலில், ராமர்தான் மூலவராக இருந்தார். லால்தாஸ் என்ற ஒரு சந்நியாசி, லாகூரில் இருந்து கி.பி.1,800-ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். வட மாநிலங்களில் இருந்து யாத்திரை வரும் பக்தர்கள் வசதிக்காக ஒரு மடம் கட்டினார். பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் முறையான வசதிகளை ஏற்படுத்தினார். பிறகு இந்த இடத்தை விட்டுச் செல்ல மனமின்றி, இவரும் இங்கேயே தங்கி இறைப் பணியில் ஈடுபடலானார். பின்பு பெருமாளின் திருவுளப்படி, வெங்கடேச பெருமாளுக்கும், அலர்மேல்மங்கை தாயாருக்கும் சன்னதிகள் அமைத்தார். 'பைராகி' என்றால் சந்நியாசி என்று அர்த்தம். சந்நியாசி லால்தாஸ் அமைத்த கோவில் என்பதால் இக்கோவிலுக்கு 'பைராகி மடம்' என்ற பெயரும் உண்டு.

மூலவர் வெங்கடேச பெருமாளின் உயரம் சுமார் ஆறரை அடி. திருமலை திருப்பதியில் அமைந்துள்ள பெருமாளின் கோலத்தை நினைவுபடுத்தும் அதே அமைப்பு. பரந்து விரிந்த திருமார்பு. அதில் உறையும் சொர்ண லட்சுமி. சங்கு- சக்கரதாரி. திருப்பதியில் நடப்பது போலவே அனைத்து உற்சவங்களும் இங்கு நடந்து வருகின்றன. திருச்சானூரில் நடக்கும் உற்சவங்கள் இங்கே தாயாருக்கும் நடந்து வருகின்றன. அவற்றுள், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பஞ்சமி தீர்த்த உற்சவம் விசேடம். உற்சவ காலத்தில் தாயாருக்கான கருட வாகனம் பெண் சொரூபமாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விசேடமாகும். சாதாரணமாக கருட வாகனம் என்றால், பிற கோவில்களில் மீசை முறுக்கிய கோலம், திரண்ட தோள்கள் போன்றவற்றுடன் கூடிய கருட வாகனம் இருக்கும். ஆனால் அத்தகைய ஆண் கருட வாகனம் இங்கு தாயாருக்கு இல்லை. கருடனின் மணைவியான கருடி எனப் பெயர் பெற்ற, காதணி, மூக்கணி, புடவை அணிந்த கோலத்தில் உள்ள பெண் கருட வாகனத்தில், தாயாரின் புறப்பாடு நடக்கும். தாயாருக்கான அனுமந்த உற்சவத்தின்போதும் பெண் குரங்கு வாகனத்தில்தான் புறப்பாடு நடக்கும். இப்படி தாயாருக்கான வாகனங்களில் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் பெண் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

Read More
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்

சிவபெருமானை கிளி வடிவில் தன் இடது தோளில் ஏந்தி இருக்கும் அம்பிகை

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில், 8 கி.மீ தொலைவில் உள்ள கஞ்சாநகரம் என்ற ஊரில் அமைந்துள்ளது காத்ர சுந்தரேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் காத்ர சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் துங்கபாலஸ்தானம்பிகை. கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலமாக, இக்கோவில் விளங்குகின்றது.

மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இந்தக் கிளிக்கு வேதாமிர்த கீரம் என்று பெயர். அம்பிகை மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேதசக்தியாகக் கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும்.

Read More
ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

புதுமண தம்பதிகள் வணங்க வேண்டிய திருவதன தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார். எனவே இத்தலம் சூரிய தோஷம், பித்ரு தோஷம், ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகின்றது.

இத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள், திருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். காலவ மகரிஷி, இத்தல ஈசனின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி, தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைத்தார். இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள் திருமகளை திருமணம் புரிந்த போது, லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும், பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார். அப்போது தட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம். அந்த தெய்வீக காட்சியைக் கண்ட தேவர்கள் எல்லாம் மணம் குளிர்ந்து தட்சிணா மூர்த்தி, காலவ மகரிஷி, பெருமாள் தம்பதிகள் மேல் மலர்கள் தூவி வணங்கினார்கள். அன்று முதல் ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தி, திருவதன தட்சிணா மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருவதன தட்சிணா மூர்த்தியைப் போல பெருமாளும், லட்சுமி தேவியும் புன்னகை புரிய அப்போது தோன்றியதே பெருமாளின் அழகிய மணவாளன் தரிசனம். திருமணமானவர்கள் முதன் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே திருவதன தட்சிணா மூர்த்தி ஆவார். இங்கு தரிசனம் பெறும் புதுமணத் தம்பதிகளுக்கு மற்றோர் ஈடு இணையற்ற பாக்கியமும் காத்திருக்கிறது. தம்பதிகள் ஸ்ரீதிருவதன தட்சிணாமூர்த்தியையும், காலவ மகரிஷியையும் வணங்கும்போது அது குபேர திசையான வடக்கு நோக்கி அமைவதால் காலவ மகரிஷியின் 360 திருமகள் தேவிகளின் ஒருமித்த லட்சுமி கடாட்ச சக்திகளுமே அவர்கள் மேல் குபேர நிதியாக பொழியும்.

Read More
சேத்திரபாலபுரம்   காலபைரவர் கோவில்

சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவில்

காசிக்கு மேலாக போற்றப்படும் சேத்திரபாலபுரம் காலபைரவர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு மேலாக போற்றப்படும் பழமையான காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. பல ஆலயங்களிலும் பைரவர் தனி சன்னிதியில் மட்டுமே காட்சி தருவார். காசியில் கூட பைரவருக்குத் தனி ஆலயம் கிடையாது. ஆனால் சேத்திரபாலபுரத்தில் காலபைரவர் மூலவராக எழுந்தருளி உள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம். அது மட்டுமின்றி அந்த பைரவர்கள் எல்லாம் சாந்தமான முகத்தைக் கொண்டு காட்சி தருவது இல்லை. ஆனால் சேத்திரபாலபுரத்தில் உள்ள பைரவர் தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல், தாமரை மலரில் சிரித்த முகத்தோடு வீற்றிருக்கிறார். இதனால் இவரை 'ஆனந்த கால பைரவர்' என்று அழைக்கிறார்கள். இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் அதிபதி ஆவார்.

காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை, இந்த தலத்தில் வந்து பிரம்மா, இந்திரன், நவக்கிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்த கதை உள்ளது. நவக்கிரகங்களின் சக்தி வாய்ந்த ஆலயங்கள் இந்தத் திருத்தலத்தைச் சுற்றி (கும்பகோணம்) அமைந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தைச் சுற்றி சூல தீர்த்தம், காவிரி தீர்த்தம், கணேச தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவிரி தீர்த்தத்தை 'சங்கு முக தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருப்பதுதான். அதில் குளிப்பது காசியில் குளித்தப் புண்ணியத்தை தரும் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது.

பிரார்த்தனை

இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலில் மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்சதீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். கால பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்து விடும். அஷ்டமி தினத்தில் காலபைரவரை வழிபடுவதன் மூலம் நமக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண் டாகும். சுபகாரியத் தடைகள் விலகும். பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளுக்கு பாகற்காயை வெட்டி அதில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வாஸ்து தோஷம், கோ சாபம், பிதுர் சாபம், மாது சாபம், பண நஷ்டம், பெற்றோர் சாபம் போன்றவை நீங்க பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட வேண்டும், உடல் நலக்குறைவு நீங்கி, அந்நிய தேசப்பயணம் சென்று பொருள் ஈட்ட கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வழிபட வேண்டும். அரசியலில் பெயர் புகழ் சேர பைரவருக்கு கிராம்பு மாலை அணிவிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளா்ச்சிக்கு பைரவருக்கு ஏலக்காய் மாலை அணிக்க வேண்டும். சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தவர்கள் புத்திக்கூர்மை பெற்று தெளிந்த மனநிலை பெற செவ்வாழை பழத்தில் நெய் தீபமிட்டு வழிபட வேண்டும். இந்த கோவிலில் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.

Read More
சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் கோவில்

சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் கோவில்

இசை ஒலி எழுப்பும் அபூர்வமான இசைக்குதிரைகள்

நம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலாயன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய கோவில்களில் ஏழு ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் இருக்கின்றன. இந்த இசைத் தூண்கள் நம் முன்னோர்களின் சிற்பத் திறனையும், அறிவியல் திறனையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றன. இந்த வரிசையில், இந்த இசைத் தூண் வேலைப்பாடுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல, விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள வானிலை கண்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் இசைக் குதிரைகள் விளங்குகின்றன.

உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டரில் சேந்தமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இன்றைக்கு சிறு கிராமமாக இருக்கும் இந்த இடம் கி.பி. 12-13 நூற்றாண்டில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனின் தலை நகராக விளங்கியது. சோழ மன்னனையே கைது செய்து 6 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்த இந்த குறு நில மன்னன், தன்னுடைய தலை நகரில் கோட்டை போன்ற அமைப்பில் பெரிய மதில் சுவர் சூழ "வானிலை கண்டீஸ்வரர்" என்ற பிரம்மாண்டமான கோயிலை அமைத்தான், கோட்டை சுவரின் நான்கு புறங்களிலும் காவலாளிகள் நிற்க பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கும் இந்த கோயிலை மத்திய தொல்லியல் துறை பழைய முறைப்படி பல வருடங்களாக அழகாக புதுப்பித்து வருகின்றது.

அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நான்கு புறங்களிலும் அழகிய படிகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில் மிக்க கருங்கல் மண்டபத்தையும் கட்டியுள்ளனர். ஒரு குதிரைக்கும் மறு குதிரைக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தாலே அன்று இது எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகின்றது. இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.

பெரிய சதுரவடிவ கருங்கல் பீடம், அதன் மீத தாமரை இதழ்களைக் கொண்ட மூன்றடுக்கு பீடம், அதன்மீது ஏறி அமர்ந்து தாவிச் செல்லும் கோலத்தில் குதிரை அமைந்துள்ளது. குதிரையின் கால்களில் அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள், முதுகில் பட்டாடை விரித்த கோலம்; அதிலும் வேலைப்பாடுகள் கொண்ட தோற்றத்தில் மிளிர்கின்றது. கழுத்தில் மாலை, அழகிய மணிகளைக்கோர்த்த மணிமாலைகள், தலைக்கு அணிவரிசை, வாயில் கடிவாளம் என மொத்த குதிரையின் வடிவமும், கலைநயம் கொண்டு விளங்குகின்றது. சீறிப்பாய்வது போல் நின்றுகொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல வித ஒலிகளை எழுப்புகின்றது. இப்படி இசை ஒலி எழுப்பும் சிற்பங்களை மற்ற தலங்களில், நாம் காண்பது அரிது.

Read More
கார்த்திகை சோமவார விரதம்

கார்த்திகை சோமவார விரதம்

கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்புகள்

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் என்னும் திருநாமமும் உண்டு. சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சோமவார விரதமும் ஒன்று.

பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார். சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்ட பார்வதிதேவிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று 'பெருமானே! சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன?' என்று பரமனிடமே கேட்டாள் பார்வதிதேவி. 'தேவி! சந்திரன் எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும், தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி, தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினார்கள்.

குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டு சாபம் பெற்ற சந்திரன் கார்த்திகை சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சில கோவில்களில் 108 சங்காபிஷேகமும், 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். திருவிடைமருதூர், திருக்கடவூர், திருநாகேஸ்வரம், திருவையாறு, தஞ்சாவூர், மயிலாடுதுறை. திருமயிலை, திருவொற்றியூர் என எல்லாத் கோவில்களிலும் சிறப்பான முறையில் சங்காபிஷேகம் நடத்தப்படுகின்றது. 108 அல்லது 1008 என சங்குகளில் வெட்டிவேர், விளாமிச்சை, பன்னீர், ரோஜா, ஏலம் என பல்வகைப்பட்ட வாசனாதி திரவியங்களில் நிறைந்த நன்னீரை நிரப்பி ஆகம முறைப்படி பூஜித்து, அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். மாலை நேரத்தில் நிகழும் இந்த சங்காபிஷேகத்தை கண்டு தரிசிப்பதையும், அபிஷேக தீர்த்தத்தை தம் மேல் தெளித்துக் கொள்வதையும் அன்பர்கள் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்வர்.சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறலாம். கார்த்திகை திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.

Read More
சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்

சலவைக்கல்லில் எழுந்தருளிய நரசிம்மர்

திருச்சி– கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில், காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில். தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் கோவில்களில், இக்கோவிலும் ஒன்று. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இக்கோவிலில் முதலில் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அனுமன் ஆகியோர் எழுந்தருளியிருந்தனர். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீவியாசராஜர். பின்னாளில்தான் நரசிம்மர் இங்கு எழுந்தருளினார். ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களின் பெருமை திசையெங்கும் பரவ, பலரும் இங்கு வந்து தங்கி, இறைவழிபாடு நடத்தினர். அப்படி வந்த பக்தர்களில் ஒருவர் ஸ்ரீ முஷ்ணம் ஆர்யாச்சார். இவர் கனவில் தோன்றிய ஸ்ரீ நரசிம்மர், தான் சிந்தலவாடியின் அருகில் உள்ள கருப்பத்தூர் என்ற காவிரிக்கரை ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி, துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தும் கல்லாக இருப்பதாகத் தெரிவித்து, அங்கு வந்து தம்மை மேற்கு திசையில் எவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல ஆணையிட்டார். எந்த இடத்தில் பாரம் அதிகமாகத் தெரிகிறதோ அந்த இடத்திலேயே, தம்மைப் பிரதிஷ்டை செய்யவும் பணித்தார். அதேநேரத்தில் சலவைத் தொழிலாளிக்கும் ஒரு கனவு. வரும் பக்தரிடம் அக்கல்லைக் தந்து விட உத்தரவு கொடுக்கப்பட்டது.

மறுநாள், ஆர்யாச்சார் சிந்தலவாடியில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள கருப்பத்தூருக்குச் சென்றார். கனவில் தெரிந்த வழிகளில் பயணம் தொடர, சலவைத் தொழிலாளர்கள் பணி செய்யும் இடம் வந்தது. குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியும் ஆர்யாச்சாரை அழைத்துச் சென்று அக்கல்லைக் காண்பித்தார். அதைத் திருப்பிப் பார்த்தபோது ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா ரூபம் தெரிந்தது. ஸ்ரீ ஆர்யாச்சார் பக்தியாக, அந்த விக்கிரகத்தோடு மேற்கு நோக்கி நடந்தார். சிந்தலவாடி அருகே வந்தபோது, நடை நடுங்கியது; கல் பாரமாகத் தெரிய ஆரம்பித்தது.

ஸ்ரீ நரசிம்மரின் எண்ணம் பக்தருக்குப் புரிந்தது. அங்கேயே ஸ்ரீ யோக நரசிம்மரை இறக்கி, முன்பே இருந்த ஸ்ரீ காளிங்க நர்த்தனக் கோவிலில் நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்தார்.

பிரார்த்தனை

இக்கோவில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை இக்கோவிலில் நடத்துகிறார்கள். இந்த கோவிலுக்கு சென்று நரசிம்மரை வழிபட்டால் சுப யோகமும், தீய சக்திகளின் பிடியில் இருந்து நீக்கமும் கிடைக்கும் என்பது இக்கோவிலின் சிறப்பு அய்சமாகும்.

Read More
கோவில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோவில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவில்

கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து ஓசிஎப் வழியாக செல்லும் பாதையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கோவில்பதாகை என்ற ஊரில் அமைந்துள்ளது சுந்தரராஜப் பெருமாள் கோவில். சோழர்களால் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழைமையான வைணவத் தலம் இது. இத்தலத்தின் புராணப் பெயர் சேதாரண்ய க்ஷேத்ரம் ஆகும்.

பிருகு மகரிஷிக்கும், மார்கண்டேய மகரிஷிக்கும் இத்தலத்தில், பெருமாள் அழகிய தோற்றத்தில் பூரண சேவை சாதித்து அருளினார். அவருடைய பேரழகு தரிசனத்தின் காரணமாக இத்தலத்துப் பெருமாள் சுந்தரராஜப் பெருமாள் என்றழைக்கப்படுகிறார். கருவறையில் சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மற்றொரு கருவறையில் மேற்கு திசை நோக்கியவாறு ஸ்ரீவைகுண்டநாதப்பெருமாள் பிரயோக நிலையில் சக்கரத்தை வைத்தபடி ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரோடு காட்சி தருகிறார். அருகில் மார்கண்டேய மகரிஷி அமைந்துள்ளார். இந்த கருவறைக்கு எதிரில் கருடாழ்வார் கைகூப்பிய நிலையில் அமர்ந்தவாறு காட்சி தருகிறார். பொதுவாக அனைத்து வைணவத் தலங்களிலும் பெரிய திருவடி எனும் கருடாழ்வார் பெருமாளை நோக்கி கைகூப்பி நின்றவண்ணம் காட்சி தருவார். ஆனால், கருடாழ்வார் கைகளைக் கூப்பி அமர்ந்தவாறு காட்சி தருவது, வேறெங்கும் காண முடியாத காட்சியாகும். இத்தலத்தில் பலிபீடம், கொடிமரம் இவற்றைக் கடந்தால், மேலும் ஒரு கருடாழ்வார், சிறு சன்னிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இப்படி இரண்டு மூலவர்கள், இரண்டு கருடாழ்வார்கள், இரண்டு மகரிஷிகள் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்

பெருமாளின் தசாவதாரக் கோலத்தில் காட்சி தரும் மாரியம்மன்

திண்டுக்கல் மலைப்பகுதி திண்டு போல் இருப்பதால்தான் இவ்வூர், திண்டுக்கல் என்று பெயர் பெற்றது என்பது ஒரு வரலாறு. திண்டுக்கல் மலைக்கோட்டை உருவான போதே அம்மனும் அவதரித்ததால் இங்கிருக்கும் அம்மன் 'திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்' என்று அழைக்கப்படுகின்றாள்.தமிழகத்தின் 300 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றாக இக்கோவில் இருக்கின்றது. 1700ம் ஆண்டுகளில் திப்பு சுல்தான், தன் படை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கிய இம்மாரியம்மனின் வழிபாட்டிற்கு என்று ஒரு பீடம் அமைத்து கொடுத்தார். திண்டுக்கல் பகுதிவாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக இக்கோவில் விளங்குகின்றது. எனவே இந்து, முஸ்லீம், கிருஸ்துவர் என மும்மதத்தவர்களும் இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.

இக்கோவில் கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். எட்டு கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கைகளில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.

இந்த அம்மன் சிலையின் அடிப்பகுதி மற்ற தெய்வங்களை காட்டிலும் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இருபது நாட்கள் நடைபெறும். இக்கோவில் மாசி திருவிழாவின் போது, வேறு எந்த அம்மன் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்வாக மாரியம்மன், பெருமாளின் தசாவதாரக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருவார். அம்மனின் காளி, மச்ச,கூர்ம,கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி உள்ளிட்ட கோலங்கள் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.

அம்மனிடம் கேட்ட வரங்களுக்கு நன்றியாக பக்தர்கள், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், திருவிழாவின் போது உருண்டு கொடுத்தல் , பூக்குழி இறங்குதல் , தீச்சட்டி எடுப்பது , பால் குடம் எடுத்தல் , முளைப்பாரி எடுத்தல் , மாவிளக்கு போடுவது போன்ற நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர்.

Read More
கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்

இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்திய சூதவன விநாயகர்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோவிலூர். இறைவன் திருநாமம் மந்திரபுரீசுவரர், இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு.

கருடன் ஒரு முறை அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு இத்தலம் மீது வந்து கொண்டிருந்தபோது, அமுதத் துளிகள் சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றின. இங்கே வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால் அவர் வெண்னம நிறமாக காட்சி தருகிறார்.

சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள விநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இந்த விநாயகர் இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் . இப்படி மாவிலை கொத்துக்களையும், மாங்கனியையும் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
ஆப்பூர் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆப்பூர் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

பெருமாளுக்கு புடவை மட்டுமே வஸ்திரமாக சாற்றப்படும் தலம்

சிங்கப் பெருமாள் கோவிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்திருக்கும் ஔஷதகிரி (மூலிகை மலை) என்ற மலை மீது நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மலைமீது உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல 480 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவிலில் வெங்கடேச பெருமாள் மட்டுமே பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. இத்தலத்தில், பெருமாளும் தாயாரும் இனைந்து ஒரே வடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை. அதனால் தான் பெருமாளுக்கு 'நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. பெருமாளும் தாயாரும் இங்கு ஐக்கியமாகி இருப்பதால், அதாவது பெருமாள் லட்சுமி சொருபமாக இருப்பதனால் புடவைதான் வஸ்திரமாக சாற்றப்படுகிறது. அதைத் தவிர வேறு வஸ்திரங்கள் பெருமாளுக்குசாற்றபடுவதில்லை.

தல வரலாறு

ராம, ராவண யுத்தத்தின்போது இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர், அந்த அஸ்திர தாக்குதலில் அகப்படாமல் தப்பித்த ஒரு சிலரில் முக்கியமானவர் ஆஞ்சனேயர். அவர் ஜாம்பவானின் அறிவுரைப்படி இலங்கையில் இருந்து கடலை தாண்டி இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து, மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க தேவையான நான்கு வகை மூலிகைகளை எடுக்க செல்கிறார் . இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரனத்தால், அனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறான். அவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மாற்றும் போது, அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதிதான் இங்கு மூலிகை மலையாக இருக்கின்றது. அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூர்(ஆப்பூரில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது) பகுதியில் விழுந்ததாம்.

பிரார்த்தனை

பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர். திருமணம் நிறைவேறாமல் இருப்பது, வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் குறைகள் போய் விடும்.

Read More
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர்  கோவில்

கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்

முருகன் பிறக்கக் காரணமான தலம்

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில், 8 கி.மீ தொலைவில் உள்ள கஞ்சாநகரம் என்ற ஊரில் அமைந்துள்ளது காத்ர சுந்தரேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் காத்ர சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் துங்கபாலஸ்தானம்பிகை. சிவனின் நெற்றிக்கண்ணில்,ஆறு குழந்தைகளாகத் தோன்றிய முருகப்பெருமானை வளர்த்த, கார்த்திகை பெண்கள். நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பேரும் அவதரித்த தலம் இது.

பத்மாசுரன், சிங்கமுகன் முதலிய அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறை போக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன். காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். காத்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்பது பொருள். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை, கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலமாக இது விளங்குகின்றது. இக்கோவிலில் அவர்கள் தீபம் ஏற்றி விசேஷ வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேதாமிர்த் கீரம் எனப்படும் அம்மனின் கையிலுள்ள கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மண வாழ்க்கை அமையும். திருமணத்தில் தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் துங்கபத்திரா நதியின் தீர்த்தத்தால், இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமண் நடக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில்

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில்

கார்த்திகை பௌர்ணமியில் விஸ்வரூப தரிசனம் தரும் திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர்

தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்று சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில். இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை அம்மன். மூலவரான சுயம்பு ஆதிபுரீசுவரர் புற்று வடிவில் எழுந்தருளி, கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். ஆவுடையாரின் மீது வழக்கமான லிங்கத் திருமேனிக்கு பதிலாக, படம் எடுத்த நாக வடிவில் இறைவன் காட்சி தருவது அபூர்வக் கோலமாகும். தன்னை வழிபட்ட வாசுகி பாம்பை, தன்னுள் ஐக்கியப் படுத்தியதால், இத்தல இறைவன் இப்படி காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இவர் கவசம் சார்த்தப்பட்டு நாக வடிவில், சதுர வடிவ ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

வாசுகி என்னும் பாம்பு நாகலோகத்தில் அரசராக இருந்து வந்தது. தன் மகனுக்கு பட்டம் சூட்டியபின், உபமன்னியு முனிவரை சந்தித்து மோக்ஷம் பெற வழி என்ன என்று கேட்டது. அவர் திருவொற்றியூர் சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளிய சிவனை துதிக்க சொன்னார். வாசுகியும் அவ்வாறே செய்ய, மனமகிழ்ந்த ஈசன் புற்று வடிவில் தோன்றி, அந்த வாசுகிப் பாம்பைத் தன் திருக்கரம் கொண்டு பற்றியிழுத்து தம்முடைய திருவடியில் பொருந்தும்படிச் செய்தார். அதுவும் சிவபெருமானிடத்தில் ஐயக்கியமானது. பாம்புக்கு படம் என்றும் ஒரு பெயர் உண்டு. பாம்பு சிவன் அருகில் ஒதுங்கியதால் படம் பக்க நாதர் என்று ஈசன் அழைக்கப்பட்டார். அந்த புற்றில் இருந்து சுயம்புவாக ஒரு லிங்கமும் தோன்றியது. அதனால் புற்றீஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

புற்று மண்ணால் சுயம்பு லிங்கமாக உருவானதால், லிங்கத்திருமேனி ஆண்டு முழுவதும் லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி, கவசத்தால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நிகழும் பௌர்ணமி தினத்தில் மட்டுமே கவசம் அகற்றப்பட்டு, பௌர்ணமியன்று மாலையில். ஆதிபுரீசுவரருக்கு, புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆதிபுரீசுவரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாற்றப்படும். சிவபெருமானை வழிபட பிரம்மன், விஷ்ணு, வாசுகி மூவரும் கடுந்தவம் இருந்து வரம் பெற்றனர். அதன் பயனால் ஆண்டுதோறும், மூவரும் கார்த்திகை பௌர்ணமி தொடங்கி மூன்று நாட்கள் இத்தல இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை கோவிலின் சிறப்புகள்

திருவண்ணாமலைக் கோவில், மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று. இறைவன் திருநாமம் அருணாசலேசுவரர். இறைவியின் திருநாமம் உண்ணாமுலையாள். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மலையே சிவலிங்கமாக உள்ளது எனபது நம்பிக்கை.'அருணம்' என்றால் 'சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு'. 'அசலம்' என்றால் 'மலை'. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு 'அருணாச்சலம்' என்று பெயர் ஏற்பட்டது. பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாகும். இக்கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் நாம் காணலாம்.

பார்வதிக்கு சிவபெருமான் தன் இடப்பாகம் அளித்த தலம்

சிவனை நோக்கி தவமிருந்த பார்வதிக்கு தன் இடப்பாகம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய், கருவறையின் பின் புறம் அமர்ந்தார்.

நினைத்தாலே முக்தி தரும் தலம்

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. முதலில் குறிப்பிட்ட நான்கு தலங்களின் மூலம் முக்தி அடைவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பதால், அது எல்லோருக்கும் சாத்தியப்படும் ஒன்றாகும்.

திருவெம்பாவை, திருப்புகழ் போன்ற பக்தி நூல்கள் இயற்றப்பட்ட தலம்

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

பழமையான மலை

திருவண்ணாமலையில் இருக்கும் மலை 260 கோடி ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இந்த மலையானது கிருதா யுகத்தில் நெருப்பு மலையாக இருந்தது, திரேதா யுகத்தில் மாணிக்க மலையாக இருந்தது, துவாபர யுகத்தில் தங்க மலையாக இருந்தது. தற்போது கலி யுகத்தில் கல் மலையாக இருக்கின்றது என்பது சைவர்களின் நம்பிக்கை. மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில், பால் பிரண்டன் எனும் பிரிட்டனைச் சேர்ந்த தத்துவஞானி மற்றும் ஆய்வாளார் 'லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலையின் அமைப்பு

திருவண்ணாமலையை கீழ்த்திசையிலிருந்து பார்த்தால் ஏக மலையாகத் (ஒன்றாக) தெரியும். மலை சுற்றும் வழியில் நின்று பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்த நாரீஸ்வர தத்துவத்தைக் குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன், பிரம்மா, திருமால் மூவரையும் குறிக்கும்.

கோவில் அமைப்பு

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இவ்வாலயத்தின் ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை உள்ளன. திருவண்ணாமலை ராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது.

பௌர்ணமி கிரிவலம்

சித்தர்களில் ஆதிசித்தனாகிய சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் சித்தர்கள் அருவமாக வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு பௌர்ணமி இரவன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது கிபி 1240ல் இங்கு கிரிவலம் செல்ல ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்து பணி செய்தார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து, அண்ணாமலையரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து வணங்குபவர்களுக்கு குல சாபங்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா

ஆடிப்பூரத்தன்று மாலை. ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.

திட்டிவாசல் வழியே வெளிவரும் உற்சவமூர்த்திகள்

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவரும் நடைமுறை இவ்வாலயத்தில் மட்டும்தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

திருவண்ணாமலை மகா தீபம்

திருவண்ணாமலையில் பத்துநாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். சிவனுக்குரிய மகா தீப விழாவை உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. பத்தாம் நாள் திருவண்ணாமலை மீது ஏற்றும் தீபம், மகா தீபமாகும். திருவண்ணாமலை கார்த்திகை தீப நாள் அன்று அதிகாலை 4 மணி அளவில் மலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றும் விழா நடைபெறும். மகா தீபம் ஏற்ற 3000 கிலோ பசு நெய், 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடாத்துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும். இந்த தீபத்தின் ஒளியை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாழும் மக்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவானவன், அவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதை இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம் ஆகும். இந்த கார்த்திகை தீப தரிசனத்தை காண்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும், அண்ணாமலையார் மற்றும் இங்கு அருவமாக வாழும் சித்தர்களின் ஆசிகளால் நிறைவேறும்.

அண்ணாமலை மகா தீப தரிசன பலன்

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும், தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும் அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.

மகா தீபத்தை தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கீடா: பதங்கா: மச காச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா த்ருஷ்ட் வா ப்ரதீபம் நச ஜன்ம பாகின. பவந்தி நித்யம் ச்வ பசா ஹி விப்ரா

இந்த மகாதீப ஒளிக்காட்சியைக் காணும் மக்கள் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கத்து பெரிய கருடாழ்வார்

ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவைதான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோவில் பெரிதென்பதால் பெரிய கோவில் ஆயிற்று. கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர், திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். வாத்தியத்திற்கு பெரிய மேளம். பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

இந்த வரிசையில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சன்னதி எதிரில் அமைந்துள்ள கருடாழ்வார், பிரம்மாண்டமாக 25 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இவ்வளவு பெரிய திருமேனியுடைய கருடாழ்வாரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் எட்டு விதமான நாகாபரணம் அணிந்துள்ளார். இந்த சிலை இறகுகளை விரித்து பறக்க தயாராக உள்ளது போன்ற நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் இவருக்கு கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் ஏற்படும் பாதிப்பை நீக்குபவர் இவர் என்பது ஐதீகம்.

Read More
திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோவில்

குழந்தை முருகனை இடையில் தாங்கியவாறு காட்சி அளிக்கும் அம்பிகையின் அபூர்வ கோலம்

கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ . தொலலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்புறம்பியம். இறைவன் திருநாமம் சாட்சிநாதேசுவரர். இறைவியின் திருநாமம் கரும்பன்ன சொல்லம்மை.

இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பிரளயம் காத்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும்தான், வெறும் தேனால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேனானது அவரது திருமேனியை விட்டு வெளியே வருவதில்லை. இது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகும்.

இத்தலத்தில் அமைந்திருக்கும் 'ஸ்ரீகுகாம்பிகை' சன்னதி மிகச் சிறப்பானது. அருல்மிகு குகாம்பிகை, ஆறுமுகனாம் (குழந்தை வடிவ) குகப்பெருமானை, ஒரு அன்னை தன் குழந்தையை இடையில் ஏந்தியிருப்பது போல், ஏந்தி அரவனைத்தவாறு காட்சித் தருகிறாள். அம்பிகையும் குழந்தை முருகனும், இப்படி தாயும் சேயும் ஆக சேயுளாக இருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. இந்த அம்பிகைக்கு பெளர்னமி தினத்தன்று சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது.

பிரார்த்தனை

தடை பட்டு கொண்டிருக்கும் திருமணங்கள் இனிதே நடைபெறவும், கருவுற்ற பெண்களது பிரசவம், சுகமாக அமைந்திடவும், திருமணம் கைகூடவும் வேண்டுவோர்க்கு சிறந்த வரப்பிரசாதியாக குகாம்பிகை திகழ்கிறாள்.

Read More
ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்

ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நரசிம்மர்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ராமகிரி என்ற ஊரில் அமைந்துள்ளது கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் . 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில். நீண்டகாலமாக திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.

ஆந்திர மாநிலம் குத்தி பல்லாரி என்ற இடத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரணியனை வதம் செய்த போது ஏற்பட்ட ரத்தக் கறைகளை அஹோபிலத்தில் சுத்தம் செய்தார். மிகுந்த கோபத்துடன் இருந்த உக்கிர நரசிம்மர் அங்கிருந்து கிளம்பி தெற்கு நோக்கி பயணப்பட்டு திண்டுக்கல் வந்த போது, சிவபெருமானும் தேவர்களும் அவரை வழிமறித்து கோபம் தணிக்க முயற்சித்தனர். ஆனால் அதிலும் முழுமையாக சாந்தம் அடையாத நரசிம்மர், பின்னர் கரூர் மாவட்டம் தேவர் மலையை அடைந்தபோது பிரகலாதனின் வேண்டுகோளை ஏற்று கோபம் தணிந்து தேவர்மலை தீர்த்தத்தில் தன் அங்கங்களை சுத்தம் செய்து சாந்தமடைந்தார். சாந்தமடைந்த நரசிம்மர், திண்டுக்கல் மாவட்டம் பழைய அய்யலூருக்குச் சென்று கருணாகிரி நரசிங்க பெருமாளாக எழுந்தருளினார். பின்னர் கோபம் தணிந்து, தனியாக இருக்கும் பெருமாளுக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராமகிரி தலத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனால் இங்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத 'ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாளாக' திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

பிரார்த்தனை

முன்ஜென்ம பாவத்தில் ஏற்பட்ட இரணியனின் கர்மாவை அழித்து, அவன் பெற்ற வரங்களுக்கு ஏற்ப இரணியனை வதைத்து நரசிம்மர் இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பதால், நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தடை நீங்கும். திருமணமாகாதவர்கள் இவரை வேண்டி வணங்கிட உடனடியாக திருமணம் நடைபெறும். மேலும் தனி சன்னதியில் உள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் குடும்பத்தில் உள்ளவரை வணங்கினால் பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி, பணவரவு ஏற்படும். கோவிலின் வாசலில் உள்ள ஆஞ்சநேயர் வடை மாலை, துளசி மாலை நெய்வேத்தியம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்குள்ள பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து வணங்கினால் நாக தோஷம், விலகி வாழ்வில் சுகம் உண்டாகும்.

Read More
தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோவில்

சக்கரத்தாழ்வார் மூலவராக எழுந்தருளி இருக்கும் அபூர்வக் கோவில்

தஞ்சை பெரிய கோவிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை மதன கோபாலப் பெருமாள் கோவில் என்றும்அழைப்பார்கள். எந்த ஒரு பெருமாள் கோவிலிலும் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் மூலவராக சக்கரத்தாழ்வார், சுதர்சன வல்லி, விஜயவல்லி என்ற இரு தாயார்களுடன் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் நரசிம்மர் இடம்பெற்றிருப்பார். ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார் மூலவராக அமைந்துள்ளதால், நரசிம்மர் அதில் இடம் பெறாமல், கோவில் ராஜ கோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடது புறத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக அமர்ந்துள்ளனர். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும் நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மூன்று சக்கரத்தாழ்வார்கள்

இந்த கோவிலில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த கோவிலில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் எழுந்தருளுவார்.

பிரார்த்தனை

இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் எனக் கருதப்படுகிறது. மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான 'ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நமஹ' என்ற காயத்ரி மந்திரத்தை, ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.

சக்கரத்தாழ்வாரைத் தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றும் அல்லது 9 வியாழக்கிழமைகள் அல்லது 9 சனிக்கிழமைகளில் 9 அகல் தீபம் ஏற்றி, 9 முறை வலம் வந்து சிலப்பு மலர்களால் மாலை சூட்டி, கற்கண்டு, உலர்ந்த திராட்சைகளை நிவேதனமாக வைத்து அரச்சனைகள் செய்து வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது இக்கோயிலின் ஐதீகம்.

முற்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் ஏற்படும் கெடுதிகள் யாவும் நீங்கும். நவக்கிரகத் தோஷப் போகும். திருமணத் தடைகள் விலகும்.

இவர், கல்வி தொடர்பான தடைகளை நீக்கிச் சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். மனச் சஞ்சலம், சித்தப் பிரமை, பேய் பிசாசு, பில்லி சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளிலிருந்து விடுபட செய்வார்.

Read More
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில்

பங்குனி பொங்கல் திருவிழா - கோவில் கொடியில் கட்டிய சாதங்கள் ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும் அதிசயம்

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், தென் மாவட்டங்களில் பிரபலமான அம்மன் கோவில்களில் ஒன்று. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் முகப்பு கோபுரமானது, வேறு எங்கும் இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் பராசக்தி மாரியம்மன் இடது கால் மடித்து, வலது கால் தொங்கும் கோலத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள்.

இக்கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா, தென்மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோது 1780ல் கோவில் உள்ள இடத்தில், சிறிய பீடம் அமைத்து வழிபட்டு வந்தனர். 1859ல் பீடம் மீது, அம்மன் சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அன்று முதல், இக்கோவிலின் முக்கிய பண்டிகையாக, பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடம்பில் கரும் புள்ளி செம்புலி குற்றி, வேம்பால் அலங்கரிக்க பட்ட ஆடை உடுத்தி, அக்னிச்சட்டி எடுத்து, வாயில் சூலம் குத்தி, கரகம், ரதம் இழுத்து நகரம் முழுவதும் ஊர்வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழாவானது பங்குனி முதல் நாளில் தொடங்கும். பொங்கல் பண்டிகைக்கு முன், ஏழு தினங்களுக்கு முன்னால் ஞாயிற்றுக் கிழமை நல்ல நேரத்தில் விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை தூப, தீபம் செய்வித்து ஆலய அர்ச்சகர், அம்மன் பணியாளர், சாட்டு முரசு கொட்டும் சாம்பன் அனைவரும் அம்மன் முன் காப்பு கட்டுவார்கள். பொங்கல் சாற்றிய தினத்தில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். சாற்றிய தினத்திலிருந்து பதினைந்தாம் நாள் இரவு மாரியம்மன் கோவிலில் கொடியேற்று வைபவம் நடைபெறுகின்றது.கொடியேற்றிய பின் ஏழாம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று பொங்கல் விழாவும், பொங்கல் அன்று பொங்கல் வைத்தல், மொட்டை எடுத்தல், உருண்டு கொடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண்பானை வைத்தல், நீர் ஊற்றுதல், ஆக்கிவைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.

விழா துவங்கி கடைசி ஏழு நாட்கள் இருக்கும் போது கோவிலில் உட்கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. அப்பொழுது கொடி துணியுடன் ஐந்து வகையான சாதங்கள் வைத்து துணியில் கட்டி ஏற்றுகின்றனர் திருவிழா முடிந்து கொடியை இறக்கும் போது அந்த சாத மூட்டையை திறக்கின்றனர். ஏழுநாட்களுக்கு பின்னும் அந்த ஐந்து வகை சாதமானது கெடாமல் இருக்கின்றது என்பது தற்பொழுதும் நிகழ்ந்து வரும் அதிசயமாகும்.

Read More