கோவில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவில்

கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து ஓசிஎப் வழியாக செல்லும் பாதையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கோவில்பதாகை என்ற ஊரில் அமைந்துள்ளது சுந்தரராஜப் பெருமாள் கோவில். சோழர்களால் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழைமையான வைணவத் தலம் இது. இத்தலத்தின் புராணப் பெயர் சேதாரண்ய க்ஷேத்ரம் ஆகும்.

பிருகு மகரிஷிக்கும், மார்கண்டேய மகரிஷிக்கும் இத்தலத்தில், பெருமாள் அழகிய தோற்றத்தில் பூரண சேவை சாதித்து அருளினார். அவருடைய பேரழகு தரிசனத்தின் காரணமாக இத்தலத்துப் பெருமாள் சுந்தரராஜப் பெருமாள் என்றழைக்கப்படுகிறார். கருவறையில் சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மற்றொரு கருவறையில் மேற்கு திசை நோக்கியவாறு ஸ்ரீவைகுண்டநாதப்பெருமாள் பிரயோக நிலையில் சக்கரத்தை வைத்தபடி ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரோடு காட்சி தருகிறார். அருகில் மார்கண்டேய மகரிஷி அமைந்துள்ளார். இந்த கருவறைக்கு எதிரில் கருடாழ்வார் கைகூப்பிய நிலையில் அமர்ந்தவாறு காட்சி தருகிறார். பொதுவாக அனைத்து வைணவத் தலங்களிலும் பெரிய திருவடி எனும் கருடாழ்வார் பெருமாளை நோக்கி கைகூப்பி நின்றவண்ணம் காட்சி தருவார். ஆனால், கருடாழ்வார் கைகளைக் கூப்பி அமர்ந்தவாறு காட்சி தருவது, வேறெங்கும் காண முடியாத காட்சியாகும். இத்தலத்தில் பலிபீடம், கொடிமரம் இவற்றைக் கடந்தால், மேலும் ஒரு கருடாழ்வார், சிறு சன்னிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இப்படி இரண்டு மூலவர்கள், இரண்டு கருடாழ்வார்கள், இரண்டு மகரிஷிகள் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

அமர்ந்த கோலத்தில் இருக்கும் கருடாழ்வார்

 
Previous
Previous

சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்

Next
Next

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்