வெற்றிவேல் முருகன் கோவில்
கடவுள் நம்பிக்கை அற்றவரை காப்பாற்றிய முருகப்பெருமான்
சிதம்பரம் பிச்சாவரம் சாலையில் அமைந்துள்ள கிள்ளை என்ற ஊரில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சி.மானம்பட்டி என்னும் ஊரில் அருள்பாலிக்கிறார் வெற்றிவேல் முருகன். இவர் வள்ளி தெய்வானை உடனின்றி, தனித்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பல ஆண்டுகளுக்கு முன் சி.மானம்பட்டி பகுதியில் வசித்து வந்த ஒருவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவரது குடும்பத்தினரிடம் அவர் உயிர் பிழைக்க வழியில்லை என்று கூறி விட்டனர். மரணத்தருவாயில் இருந்த அவருக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட கிடையாது. ஆனால் அவருக்கு முருகனின் அருட்கடாட்சம் கிடைத்தது. படுக்கையில் இருந்த அவருக்கு திடீரெனமயில் மீது முருகன் காட்சி தருவதைப் போல உணர்ந்தார். அந்தக் காட்சியைக் கண்டவுடன் நோயிலிருந்து பூரண குணமடைந்த அவர் குடும்பத்தினரிடம், நான் குணமாகிவிட்டேன். எனக்கு மிகவும் பசிக்கிறது சீக்கிரம் சாப்பாடு கொடுங்கள் என்று கூறி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டார். குடும்பத்தினருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சில நாட்களில் அவர், தாம் கண்ட முருகனை, அதே வடிவத்தில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினார். அவரே இங்கு வெற்றிவேல் முருகனாக அருள்பாலிக்கிறார்.
திருமணத்தடை நீங்க நடத்தப்படும் வினோதமான சடங்கு
திருமணத்தடை உள்ளோருக்கு இங்கு 'வெற்றிலை துடைப்பு' என்னும் சடங்கு நடக்கிறது. இவர்களை கொடிமரம் அருகில் அமர வைத்து, கையில் சுவாமிக்குப் பூஜித்த வெற்றிலையைக் கொடுக்கின்றனர். பின், சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை வெற்றிலையில் தெளிக்கின்றனர். பக்தர்கள் அந்த வெற்றிலையால் தம் முகத்தைத் துடைத்துக்கொண்டு, முருகனைத் தரிசிக்கின்றனர். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மங்கலப்பொருட்களில் ஒன்றான வெற்றிலையை முகத்தில் துடைப்பதால், கெட்ட சக்திகள் விலகி, நன்மை பிறக்கும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.
சுவாமிநாதசுவாமி கோயில்
நேத்திர கணபதி
கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை. இத்தலத்தில் நேத்திர கணபதி அருள்பாலிக்கிறார்.
பிறவியில் பார்வை இல்லாத ஒருவர் கொங்கு நாட்டில் இருந்து இத்தலம் வந்து, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நேத்திர கணபதியை வணங்கியபோது பார்வை பெற்றார். பக்தருக்கு பார்வை கொடுத்ததால் இவர் 'கண் கொடுத்த கணபதி' எனப் பெயர் பெற்றார். கண் பார்வை கோளாறு உடையவர்கள்,, இவரை பூரணமாக வழிபட்டால் கண் நோய் குணமாகும் என்று இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
சிவலோகத் தியாகேசர் கோவில்
அம்பிகையே நேரில் வந்து திருநீறு அளித்த தேவாரத்தலம்
சிதம்பரம் சீர்காழி இடையிலான சாலையில் அமைந்துள்ள கொள்ளிடம் என்ற ஊரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருநல்லூர்பெருமணம். தற்போது ஆச்சாள்புரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் தன் திருமணத்திற்கு பின் தனது சுற்றத்தாருடன் இறைவனின் ஜோதியில் கலந்தார்.ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு, திருநல்லூர்பெருமணம் தலத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை.
ஏடகநாதேஸ்வரர் கோவில்
திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல் வாதம். புனல் வாதம் புரிந்த தலம்
மதுரையை ஆண்ட கூன்பாண்டிய மன்னர், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவருக்கு நின்றசீர் நெடுமாறன் என்ற பெயரும் உண்டு. இவர் சோழமன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர்கள் மிகத் தீவிரமாக சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். இதனால் சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தரை அனல் வாதம். புனல் வாதம் புரிய அழைத்தனர்.
சமணர்கள் தாங்கள் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு கோவில் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற தேவார பாடல் பெற்ற தலம் ஆனது.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி போன்ற நாட்களில் பூஜைகள் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தலத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் இக்கோவிலில் உள்ளது.
இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், சித்த பிரமை நீங்குவது தலத்தின் தனி சிறப்பாகும்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
தம்பிக்கு உகந்த விநாயகர்
மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. மருதமலையின் அடிவாரத்திலிருந்து நடை பயணமாகச் செல்லும்போது, பாதையின் தொடக்கத்திலேயே காட்சி தருகிறது தான்தோன்றி விநாயகர் சந்நிதி. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். இவருடைய தோற்றம் ஒரு குட்டி யானை படுத்திருப்பது போன்று இருக்கின்றது. யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவதுவிசேஷம். விநாயகரின் இந்தக் கோலம் காண்பதற்கு அரிதாகும். விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது.
முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, 'தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்."
நாகநாதசுவாமி கோவில்
கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய மூவரும் ஒரே சன்னதியில் காட்சி தரும் தலம்.
கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தில் அம்பிகை கிரிகுஜாம்பாள் என்ற திருநாமத்துடன், கலைமகள் மற்றும் அலைமகளுடன் ஒரே சன்னதியில் காட்சி தருகிறார். இப்படி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இவர்கள் மூவரையும் ஒரே சன்னதியில் தரிசிப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத காட்சியாகும். பிருங்கி முனிவருக்காக முப்பெரும் தேவியரும் ஒன்றாக காட்சி தந்ததாக ஐதீகம்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
கல்லால் ஆன கொடிமரம் அமைந்திருக்கும் முருகன் கோவில்
பொதுவாக கோவில்களின் கொடிமரம் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜ கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே சென்றால், முதலில் கல்லாலான கொடிமரத்தை காண முடியும். இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இக்கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் அமர்ந்திருக்கிறார். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு,மிக்க கலைநயத்துடன் விளங்குகின்றது. மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
பிரளயகாலேசுவரர் கோவில்
வெள்ள நீரை உறிஞ்சுவதற்காக எதிர்திசை திரும்பியிருக்கும் நந்தி
விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி சுடர் கொழுந்தீசர்; அம்பாள் கடந்தை நாயகி. ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர் மக்கள் இறைவனை வேண்ட, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும்படி ஆணையிட்டார். உடனே நந்தியெம்பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்குப் புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலை நோக்கி உள்ளார்.
சண்முக நாதர் கோவில்
முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் திருப்புகழ் தலம்
திருச்சி மதுரை சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விராலிமலை சண்முக நாதர் கோவில்.ஒருகாலத்தில், கருப்புமுத்து எனும் பக்தர் இக்கோவிலின் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், பலத்த மழை பெய்யவே. கருப்புமுத்துவால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வரமுடியவில்லை. குளிரில் நடுங்கியபடி, முருகப்பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்று வருத்தமுடன் இருந்தார். குளிருக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தபோது சன்னதியில் பாதி சுருட்டு இருந்தது கண்டு திகைத்துப் போனார். கருப்பமுத்து ஊர்மக்களிடம் நடந்ததைக் கூற அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.பின்னர் இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், “எனக்கு சுருட்டு படைப்பது பிறருக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதனால்தான் அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே” என்றார். அதன் பிறகு இன்றுவரை இப்பழக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் இந்த சுருட்டைப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவன் நாம் அன்புடன் படைக்கும் எதையும் ஏற்றுக் கொள்வான் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இத்தலத்தில் நோய், துன்பம் விலகவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் பெருகவும் முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்கள்.
ஞானபுரீஸ்வரர் கோயில்
அம்பாள் நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில் காட்சி தரும் தலம்
செங்கல்பட்டில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவடிசூலம். இறைவன் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவி இமயமடக்கொடி.
பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக, ஒன்றோடு ஒன்று இணைத்து நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் திருவடிசூலம் தலத்தில் அம்பாள் இமயமடக்கொடி, தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும்.
சிவபெருமான், இடையன் வடிவில், திருவடிசூலம் வந்த திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு!” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர்.
காலில் ஊனம் உள்ளவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.
யோக ஆஞ்சநேயர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய ஆஞ்சநேயர்
தொண்டை நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கரில், பெரிய மலையில் யோக நரசிம்மரும் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள். யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது.யோக ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், 'பிற்காலத்தில் இந்த மலையில் தவம் செய்யவிருக்கும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படும். அதை தவிர்த்து ரிஷிகளை பாதுகாப்பாயாக' என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து சப்தரிஷிகளின் தவத்துக்கு இடையூறாக இருந்த காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்தார். ஆனால் அவர்களை வெல்ல முடியவில்லை. அதனால் பெருமாளை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து சப்தரிஷிகளை காப்பாற்றினார். கடைசியில் சப்தரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், 'கலியுகத்தில் உன்னுடைய பணி, பூமியில் மிக மிக அவசியம். உன்னை நாடி வரும் என் பக்தர்களின் குறைகளை போக்கி வா' என்று கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் 'யோக ஆஞ்சநேயராக' சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.யோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். மனநோயாளிகள் முறைப்படி இந்த தலத்திலுள்ள 'ஹனுமத் தீர்த்தம்' என்னும் குளத்தில் நீராடி பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய, அவர்களது மனநிலை சரியாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
கமலவரதராஜப் பெருமாள் கோவில்
வலது பாதத்தில் ஆறுவிரல்கள் உள்ள சுந்தர மகாலட்சுமி
செங்கல்பட்டு - மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில். இந்த ஊரில் அமைந்துள்ளது கமலவரதராஜப் பெருமாள் கோவில். இத்தலத்துப் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக்கொண்டு, ஸ்ரீதேவி-பூதேவியோடு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தாயார் சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். தாயார் சுந்தர மகாலட்சுமி, பெயருக்கு ஏற்றாற்போல் அழகு சுந்தரியாக காட்சி தருகிறாள். மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய-வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கற்பூர ஆரத்தியின் போது தாயாரின் வலது பாதத்தை தரிசிக்க வைக்கிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் உள்ள வலது பாதத்தில், சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல் அமைந்திருக்கிறது. இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு, சுந்தர மகாலட்சுமி அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.
தாயார் சன்னதி முன், ஒரு இசை மண்டபம் உள்ளது. அங்குள்ள தூண்களை நாம் தட்டினால் ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள தூணிலுள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.
ஆறு என்பது சுக்கிரனின் எண் ஆகும். இந்த தாயாரிடம் சுக்கிரன் ஐக்கியமானதாக ஐதீகம். எனவே சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம் இதுவாகும். அதிக செல்வம் பெற, வீடு வாங்க திருமண பாக்கியம்,பிள்ளைப்பேறு கிடைக்க, இந்தத் தாயாரை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சுப்ரமணிய சுவாமி கோவில்
புத்தாண்டில் படிபூஜை நடக்கும் முருகன் தலம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிவில் வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கின்றது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.
கஜேந்திரவரதன் கோவில்
இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்த திவ்ய தேசம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் கபிஸ்தலம். இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்தது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.
பாலீஸ்வரர் கோவில்
களவு போன பொருட்களை மீட்டுக் கொடுக்கும் கதவிற் கணபதி
பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமைந்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள பாலீஸ்வரர் ஆலயத்தில் கதவிற் கணபதி அருள்பாலிக்கின்றார். சுமார் ஒரு சாண் அளவே உள்ள மரத்தால் ஆன திருமேனி உடையவர். ஆனால் இவரின் கீர்த்தியோ பெரிது. மஹா மண்டபத்தில் தனி சன்னதியில் இருக்கும் இவரை வணங்கிட வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.பல ஆண்டுகளுக்கு முன், கோயிலின் திருக்கதவில் தீப்பற்றிக் கொண்டு எரிந்ததாம். கதவு முழுதும் எரிந்தும், அதில் சிற்ப வடிவமாக இருந்த இந்தக் கணபதிக்கு மட்டும் ஒன்றும் நேரவில்லை. எனவே, இவருக்கு இந்தப் பெயர் நிலைத்துவிட்டது.பொருள் களவு கொடுத்த அன்பர்கள், எதையாவது தொலைத்து விட்டு அது திரும்பக் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், இந்தப் பிள்ளையாரை வழிபட்டு வேண்டிக் கொண்டால், அந்தப் பொருள்கள் விரைவில் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அவ்வாறு கிடைத்து விட்டால், இந்தப் பிள்ளையாருக்கு ஏழு தேங்காய்களை உடைத்து, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
பழமலைநாதர் கோவில்
சிவபெருமான் சந்தோஷத்திற்காக நடனமாடிய தேவாரத் தலம்
விருதாச்சலம் கடலூரில் இருந்து சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தேவாரத் தலம்.சுவாமியின் திருநாமம் விருத்தகிரீசுவரர்.அம்மன் திருநாமம் விருத்தாம்பிகை.இத்தலத்தின் புராண பெயர் திருமுதுகுன்றம் ஆகும்.ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
இராமனாதீஸ்வரர் கோயில்
அம்பாள் கையில் குழந்தையாக காட்சி தரும் நந்தி தேவர்
நன்னிலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் இராமநந்தீஸ்வரம்.இத்தலத்து இறைவன் திருநாமம் இராமனாதீஸ்வரர்.இராமபிரான் இத்தலத்திற்கு வந்தபோது, சிவபெருமான் சுயம்புவாக தோன்றினார். இராமபிரானை சாதாரண மனிதர் என்று நந்தி தேவர் அவரைத் தடுத்தார். அம்பாள் தோன்றி உண்மையை உணர்த்த, நந்தி இராமபிரானை வணங்கி, இருவரும் வழிபாடு செய்தனர். அதனால் இத்தலம் 'இராமநந்தீஸ்வரம்' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் 'இராமனதீஸ்வரம்' என்று மருவியது.நந்தியை அம்பாள் அணைத்ததால் சோமாஸ்கந்த மூர்த்தத்தில், அம்பாள் கையில் நந்தி குழந்தையாக காட்சி தருகிறார்.
எழுத்தறிநாதர் கோவில்
கல்வியில் முதன்மை பெறச் செய்யும் தேவாரத்தலம்
கும்பகோணத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தேவாரத்தலம், இன்னம்பூர். இங்குள்ள சிவனின் திரு நாமம் எழுத்தறிநாதர். சரிவரப் பேச முடியாதவர்கள், பாடுவதற்கு நல்ல குரல் வளம் வேண்டுவோர் இத்தலத்திர்கு வந்து இறைவன் எழுத்தறிநாதரை தரிசனம் செய்கிறார்கள். கோயில் அர்ச்சகர் தேனை பூவால் தொட்டு நாக்கில் தடவுகிறார். தேன் நாம் கொண்டு செல்ல வேண்டும். எழுத்தறிநாதரின் அருளால் நலம் அடைந்து, நல்ல குரல் வளம் பேச்சு வளம் பெற்றுச் செல்கின்றனர்.தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் அகத்திய முனிவர். அவருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கள்ளழகர் கோயில்
பஞ்ச ஆயுதங்களோடு பெருமாள் காட்சி தரும் திவ்ய தேசம்
மதுரைக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருமாலிருஞ்சோலை. மூலவர் பரமசுவாமி. கருவறையில் இவர் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்சாயுதம் தாங்கிய நிலையில், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்
சுப்ரமணிய சுவாமி கோவில்
குழந்தை முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்
திருத்தணி மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.