வடுவூர் கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வடுவூர் கோதண்டராமர் கோவில்

ராமர் தன்னுடைய உற்சவத் திருமேனியை தானே உருவாக்கிய தலம்

தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், மன்னார்குடியில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள வடுவூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'பஞ்ச ராம க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் தலங்களில் வடுவூரும் ஒன்று. இக்கோவில் தட்சிண அயோத்தி என்று போற்றப்படுகிறது. கரிகால் சோழன் போரில் வென்று ஊர் திரும்பியபோது, மூலிகைகள் நிறைந்த இந்த ஊரில் போரில் அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் பார்த்தார்களாம். வீரர்களின் வடுக்களை ஆற்றிய ஊர் என்பதால் வடுவூர் என்றும் கூறுகின்றனர்.

மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கயாண கோவத்தில் லட்சுமணன், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவர் ராமர் பேரழகு உடையவர். இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். அப்படி கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு, இந்தக் கோவிலில் ராமருடைய உற்சவத் திருமேனி விளங்குகின்றது. இந்த உற்சவ மூர்த்தியை, ஸ்ரீ ராமரே உருவாக்கினார் என்பதனால் தான் தனிச்சிறப்புடன் விளங்குகின்றது.

ராமர் உற்சவத் திருமேனியை உருவாக்கிய வரலாறு

ராவண வதத்திற்கு பிறகு, சீதாபிராட்டியை மீட்டு, வனவாசம் முடித்துக்கொண்டு கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது, அவரைக் கண்ட ரிஷிகள் ராமரைத் தங்கள் கூடவே இருக்கச் சொல்லிக் கேட்டார்களாம். பரதனைக காண வேண்டிய அவசியத்தை அவரகளுக்குக் கூறிய ராமர் தன்னுடைய உருவத்தை விக்கிரகமாக வடித்து அவர்களுக்குக் கொடுத்து, நானே வேண்டுமா? அல்லது இந்த விக்கிரகம் வேண்டுமா? எனக் கேட்க, அந்த விக்கிரகத்தின் அழகில மயங்கிய ரிஷிகள், ராமருக்கு பதிலாக அந்த விக்கிரகத் திருமேனியே போதும் என்றனராம. தாங்கள் பூஜிக்க அந்த விக்கிரகத்தைத் தரும்படி ரிஷிகள் கேடக, அதன்படி ராமர அவர்களிடம் விக்கிரகத்தைக் கொடுத்துவிட்டு, அயோததி திரும்பினார் என்பது வரலாறு

பிற்காலத்தில் அந்நியப் படையெடுப்பினபோது, பாதுகாப்பிற்காக தலைஞாயிறு என்னும் தலத்தில் இந்த விக்கிரங்களை மறைத்து வைத்தனர். தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னன கனவில் வந்த ராமர தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு, தனக்குக் கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் விக்கிரகங்களை எடுத்துக் கொண்டு தஞ்சையில் பிரதிஷ்டை செய்ட எண்ணிக கொண்டு வரும் வழியில், வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. விக்கிரகங்களை வடுவூர் கோவிலில் வைத்துக் கொண்டு, அங்கேயே தங்கினார. அந்த ஊர் மக்கள் ராமரின் அழகில மயங்கி, அங்கேயே ஸ்ரீராமரை விட்டுச் செல்ல மன்னனிடம் வேண்டினர். மன்னன மறுதது விக்கிரகங்களைத்தை எடுக்க முயற்சித்தபோது வைத்த இடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் மக்கள் வேண்டியபடி, மன்னன் வடுவூரிலேயே சிலையை விட்டு சென்றார் என்கிறது தல புராணம்.

பிரார்த்தனை

திருமணத் தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தைப் பாரத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ராமரிடம் வேண்டிக் கொண்டால் பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள் எனவும், நியாய சிந்தனைகள் உண்டாகும் எனவும் நம்பப்படுகிறது.

Read More
கும்பகோணம் ராமசாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் ராமசாமி கோவில்

தென்னக அயோத்தி - கும்பகோணம் ராமசாமி கோவில்

சீதையும் ராமரும் திருமண கோலத்தில் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து இருக்கும் அபூர்வ காட்சி

கும்பகோணம் ராமசாமி கோவில் தென்னக அயோத்தி என்னும் சிறப்பை பெற்றது. இக்கோவில் கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது கிடைத்த ராமன், சீதையின் சிலைகளைத் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.

கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் ஆகியோர் எழுந்தருளி இருக்கிறார்கள். மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, லட்சுமணன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க காட்சி தருகின்றனர். ராமபிரான் தனது சகோதரர்களோடு எழுந்து அருளி இருக்கும் தலங்கள் மிகவும் அரிது. உத்தரப்பிரதேசம் அயோத்தி, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மற்றும் இத்தலத்தில் தான் நாம் இந்த அபூர்வ காட்சியை தரிசிக்க முடியும். அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் ராமரும் சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மற்ற கோவில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும்.

இத்தலத்தை தரிசனம் செய்தாலே குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்று (22.01.2024), கும்பகோணம் ராமசாமி கோவிலில் சீதாராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம"

"ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்"

Read More
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில்

ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் நரசிம்மர்

ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. இத்தலத்து பெருமாளின் திருநாமம் ஆதிஜெகநாத பெருமாள்.பொதுவாக நரசிம்மர் மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தருவார்ஆனால் நரசிம்மர் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இது புராதனமான கோவில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு ஆகும். இத்தலத்தில்தான் தசரத மகாராஜா குழந்தை பாக்கியத்திற்காக புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை தன் மனைவியருக்குக் கொடுத்தார். அதன் பலனால் ராமன், லட்சுமணன், பரதன், சத்துருக்கனன் பிறந்தனர். எனவே இத்தலத்தில் பிரசாதமாக தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

Read More
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்

கவியரசர் கம்பருக்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடல்

பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண், ஆண்டாள் நாச்சியார். அவர் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். பெருமாளின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமி பிராட்டியின் அம்சமாக அவதரித்தவர்ஆண்டாள் நாச்சியார். ஸ்ரீரங்கம் ரங்கநாதனுக்கு சூட்ட வேண்டிய பூமாலையை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள்.

இக்கோவிலில் நடைபெறும் 'மார்கழி நீராடல்' உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது. அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை 'மார்கழி நீராடல்' உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ' என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, 'எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும். ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்' என்று பதில் அளித்தனர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, 'இதுவா பாருங்கள்?' என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். 'ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?' எனக் கேட்டனர். கம்பர். 'திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!' என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.

கூடாரவல்லித் திருநாள்

மார்கழி மாதம் 26 நாட்க பாவை நோன்பிருந்த ஆண்டாள், அரங்கநாதனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில் அவருடன் இரண்டறக் கலந்தாள்.

Read More
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்

தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். 1500 ஆண்டுகள் பழமையானது. நாமக்கல் கோட்டைக்கு கீழே, நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் விக்கிரகங்களில் இதுவும் ஒன்று. அவரது திருமேனி, பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ராமாயண காலத்தில், சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக ஆஞ்சநேயர், இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, நல்ல ஒழுக்கம், நற்பண்புகள் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.

Read More
நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில்

குழந்தை வடிவில் இருக்கும் ஆஞ்சநேயர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவில் உள்ள நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் பால ஆஞ்சநேயர் கோவில் என்று பிரசித்தி பெற்றுள்ளது. கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவர் எழுநூற்று முப்பத்திரண்டு ஆஞ்சநேயர் கோவில்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கட்டியுள்ளார்.

ஒரு சமயம், துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள், தனது வியாச பூஜை மற்றும் சதுர் மாச விரதத்தைக் கடைப்பிடிப்பதற்காக திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தார். அங்கு வீர ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக, தன்னுடன் அந்த சிலையை எடுத்துச் சென்றார். ஆனால் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அதனால், ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள் நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேய சிலையை நிறுவினார்,

கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர், வீர மங்கள ஆஞ்சநேயரின் தோற்றம், சிறு குழந்தையின் உருவத்தை ஒத்திருப்பதால் அவர் பால ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். அவர்,திருப்பதி வேங்கட நாதன் வீற்றிருக்கும் வடக்கு திசையை நோக்கி நடக்கும் பாவனையில் இருக்கின்றார். அவரது வலதுகரம் அபயமுத்திரை தாங்கியும், இடது கரம் தாமரை மலர் ஏந்தியும் காணப்படுகிறது. நரசிம்மரைப் போல் இவருக்கும் கோரப்பற்கள் உள்ளன. தலைக்கு மேல் செல்லும் அவரது வாலின் முனையில் ஒரு மணி தொங்குகிறது.

ஓட்டல் நிர்வாகியின் மூலம் தன் கோவிலை சீரமைத்த ஆஞ்சநேயர்

துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோவில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிதிலமடைந்தது. 1997-ம் ஆண்டு, தென்னகத்தில் பிரபலமாக விளங்கும் ஒரு ஹோட்டல் குழுமத்தின் நிர்வாகியின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, கோவிலை சீரமைக்கும்படி உத்தரவிட்டார். தன் நிர்வாகப் பணியிலே கவனம் செலுத்தி வந்த அவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆஞ்சநேயரின் இந்த உத்தரவு அவருக்கு வியப்பளித்தது. அவருடைய முயற்சியால் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலின் முகப்பில் ஆஞ்சநேயரின் மிகப்பெரிய சுதை சிற்பம் நிறுவப்பட்டது.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தின் நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான். திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும்.

Read More
அயோத்தியாபட்டணம் கோதண்டராமர்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்

ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

சேலத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில். ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டுக் கொண்டு, அயோத்திக்கு முடி சூட்டிக்கொள்ள திரும்பும் வழியில், ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தந்த தலம் இது.

ராமபிரான், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இந்த இடத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினார். ஆக, அயோத்தியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுகின்றது.

கருவறையில் ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர். அவர்களின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. பொதுவாக ராமரின் வலது புறத்தில் எழுந்தருளும் சீதாபிராட்டி, இத்தலத்தில் இடதுபுறம் வீற்றிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். ராமர் மற்றும் சீதைக்கு பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாற்றியபடியும், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் ஆகியோர் ராமபிரான்-சீதாதேவியை சேவித்தபடியும் உள்ளனர்.

இக்கோவில் சிற்பங்கள் மிக்க கலை நயமும், அபார அழகும் கொண்டவையாக இருக்கின்றன. இக்கோவில் சிற்ப வேலைப்பாடுகள், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு முருகன் கோவில் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகளுக்கு இணையாக உள்ளன. இங்கு இடம்பெற்றுள்ள இசைத் தூண்கள், ராமர் பட்டாபிஷேக சிற்பம், குதிரை, யானை, யாழி, சிங்கம் சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

பிரார்த்தனை

இந்த ஆலயத்துக்கு வந்து கோதண்ட ராமசுவாமியை வணங்கினால், திருமணத் தடை உள்ளவர்களுக்குத் தடை நீங்கி, தாலி பாக்கியம் கிடைக்கும்; ராகு கேது தோஷம் நிவர்த்தி ஆகும்; வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்; சொத்துத் தகராறுகள் நிவர்த்தி ஆகும்; குடும்பப் பூசல்கள் நீங்கும்; குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மும்பை மஹாலக்ஷ்மி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மும்பை மஹாலக்ஷ்மி கோவில்

சகல செல்வங்களையும் அருளும் மகாலட்சுமி

மும்பையின் மஹாலக்ஷ்மி பகுதியில் அமைந்துள்ளது மகாலட்சுமி கோவில். மும்பை மகாலட்சுமி கோவிலில் மகாகாளி, மகாசரஸ்வதி, மஹாலக்ஷ்மி ஆகிய மூன்று தேவியரும் எழுந்தருளி இருக்கின்றனர். முப்பெருந்தேவியரில் மஹாலக்ஷ்மி நடுநாயகமாக வீற்றிருக்கின்றாள். அதனால் இக்கோவில் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மூன்று தேவியரும் கைகளில் தங்க வளையலும், தங்க மூக்குத்தியும், கழுத்தில் முத்து மணி மாலையும் அணிந்து காட்சி தருகிறார்கள்.

முற்காலத்தில் அன்னியர் படையில் இருந்து காப்பாற்றுவதற்காக, மூன்று தேவிகளின் சிலைகளை வொர்லி சிற்றோடைக்கு (Worli Creek) அருகில் கடலில் போட்டுவிட்டார்கள். பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​கவர்னர் வில்லியம் ஹார்ன்பி (Governor Lord Horneby ) என்பவர் வொர்லி-மல்பார் ஹில் ஆகிய இரண்டு தீவுகளையும் இணைக்க முடிவு செய்தார். இந்தத் தீவுகளை இணைக்கும் பணி ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவுகளை இணைக்க இரு வழி சாலை திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடல் அலைகள் காரணமாக, அவர்கள் எழுப்பிய தடுப்பு சுவர் சரிந்து விழுந்து திட்டத்தை அவர்களால் முடிக்க முடியவில்லை.

ஒரு நாள் இரவு ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி, ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபுவின் கனவில் தோன்றி, வோர்லி சிற்றோடையில் மூழ்கியுள்ள மூன்று தேவிகளின் சிலைகளையும் வெளியே எடுத்து மலையின் உச்சியில் வைக்கும்படி கூறினார். அவற்றைக் கடலிலிருந்து வெளியே எடுத்து வந்து குன்றின் மேல் கோவில் கட்டி வைப்பதாக தேவியிடம் வாக்குக் கொடுத்தார்.

அதன்படி, வொர்லி சிற்றோடை மற்றும் மல்பார் மலை சிற்றோடையை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், வொர்லி சிற்றோடையிலிருந்து மூன்று தேவிகளின் சிலைகளையும் வெளியே எடுத்தனர். அதன் பிறகுதான் அவர்களால் இரண்டு சிற்றோடைகளையும் இணைக்க முடிந்தது. இந்த வேலை முடிந்ததும், பொறியாளர் ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு ஆங்கிலேய ஆட்சியாளரிடமிருந்து பரிசாக மலையின் மீது நிலத்தைப் பெற்றார். பின்னர் அவர் மலையின் உச்சியில் ரூ.80,000/- செலவில், 1761 A.D. - 1771 A.D க்கு இடைபட்ட காலத்தில், மகாலட்சுமி கோவிலைக் கட்டினார்.

Read More
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேசங்கள்

பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஆனால் திவ்ய தேசமான கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. ஏனென்றால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. ஏனென்றால் இத்தலத்து மூலவர் சாரங்கபாணி, இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளினார். இத்தலத்து தாயாரான மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை, பெருமாள் நேராக வைகுண்டத்திலிருந்து இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளி, திருமணம் புரிந்து கொண்டார். எனவே இவரை வணங்கினாலேயே பரமபதம் கிடைத்து விடும் என்பதால், இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.

இக்கோவிலில் மூலவரை தரிசிக்கும் வழியில், உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. உத்திராயண வாசல் வழியே தை மாதம் முதல் ஆனி மாதம் வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையும் பெருமாளை தரிசிக்க செல்ல வேண்டும். இந்த இரு வாசல்களை கடந்து சென்று பெருமாளை தரிசித்தாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

இதேபோல் திருச்சிக்கு அருகே உள்ள மற்றொரு திவ்ய தேசமான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கும் உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

Read More
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்

கைகளை கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் இருக்கும் கருடாழ்வாரின் அபூர்வ தோற்றம்

பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சி தருகிறார். பெருமாள் கோவில்களில், நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தரும் ஒரே தலம் இதுதான் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடாழ்வார், கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் அஞ்சலி முத்திரையுடன் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார் இரு கைகளையும் கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் காட்சி தருவது ஒரு அபூர்வமான தோற்றமாகும். பெருமாள் இந்த கருடாழ்வாருக்கு, சங்கு சக்கரத்தை திரிபுர சம்ஹாரத்தின் போது கொடுத்தார் என்று புராணம் கூறுகின்றது.

Read More
மானாமதுரை வீர அழகர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மானாமதுரை வீர அழகர் கோவில்

பாஸ்போர்ட் ஆஞ்சநேயர்

ஒரு மாதமானாலும் ஆஞ்சநேயருக்கு சாற்றிய வடை மாலை கெடாமல் இருக்கும் அதிசயம்!

மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 49 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரை என்ற ஊரில் அமைந்துள்ளது வீர அழகர் கோவில். இத்தலத்தில் பெருமாள், மதுரை அழகர் கோவிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். தாயார் திருநாமம் சௌந்தரவல்லி.

சீதாதேவியை தேடி வானர வீரர்கள் வானர வீரர்கள் இங்கு வந்தனர். இங்குள்ள பிருந்தாவனம் எனும் இடத்திலிருந்த சுவைமிக்க கனிகளை உண்டதால் மயக்கம் உண்டாகியதாம். பின்னர் ஶ்ரீராமர் அங்கு வந்து அவர்களை ஊக்கப்படுத்தி மீண்டும் வீரர்களாக்கிதாலேயே இத்தலம், 'வானரவீர மதுரை' என்றழைக்கப்பட்டு, பின் அப்பெயர் மருவி தற்போதைய 'மானாமதுரை' என்றானதாம். இத்தலத்துப் பெருமாள், ஆடித்திருவிழாவின் போது காஞ்சி வரதராஜப் பெருமாள் போல, தாயாரின் இருப்பிடத்திற்குச் சென்று திருமணம் முடித்துக் கொள்வார்.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் பெருமாளைப் போல் மிகவும் பிரசித்தம். இவர் ஆறரை அடி உயர திருமேனியுடன், நின்ற கோலத்தில் கைகூப்பி அஞ்சலி முத்திரையுடன் காட்சி அளிக்கிறார். மறுபடியும் ஒரு ராவணன் தோன்றி விடக்கூடாது என்பதற்காக இவர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள ஆஞ்சநேயருக்கு சாற்றப்படும் வடை மாலையானது, ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருப்பது அதிசயம். இவருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இவருக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகம்.

திருமணத்தடைநீங்க வியாழக்கிழமை வெற்றிலை மாலையும், காரியத்தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மாலையும் இவருக்கு சாற்றலாம். இத்தலத்திலுள்ள தாயாருக்கு வெள்ளிக்கிழமைகளில் தாமரைத் திரியால் விளக்கு போட்டு வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்

சிவபெருமானைப் போல் தலையில் ஜடாமுடியுடனும், நெற்றிக்கண்ணுடனும் காட்சியளிக்கும் பெருமாள்

மும்மூர்த்திகளாக தரிசனம் தரும் பெருமாள்

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழைய சீவரம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு 'திருமுக்கூடல்' என்ற பெயரும் உண்டு. இத்தலத்து பெருமாள் திருநாமம் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. பெருமாளின் திருமார்பில் அலமேலு மங்கை ஒரு புறமும், பத்மாவதி தாயார் மறு புறமும் உள்ளனர். இக்கோவில் பெருமாள், கையில் பத்மம் , சங்கு, சக்கரம் கையில் வைத்திருப்பதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் இருப்பதால் சிவரூபமாகவும், கையிலும், பத்மத்தின் மீது நின்று தரிசனம் தருவதால் பிரம்மரூபமாகவும் காட்சி தருகிறார். கார்த்திகை மாதத்தில் பெருமாளின் ஜடாமுடியை கழற்றி மூலிகை/எண்ணெய் காப்பு செய்யும்போது மட்டும்தான், அவரது ஜடாமுடி தரிசனம் பார்க்க இயலும்.

அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற பெயர் ஏற்பட்ட வரலாறு

தொண்டைமான் சக்ரவர்த்தி, திருப்பதி சீனிவாச பெருமாள் மீது அளவுகடந்த பக்தி கொண்டு, நாட்டை மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள் அசரீரி குரலில் நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு மன்னனுக்கு கூறுகிறார். அதனை பொருட்படுத்தாமல் சீனிவாச பெருமாள் வசம் சரணாகதி அடைந்தார் மன்னன். அப்போது சீனிவாச பெருமாள் தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அனுப்பி தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார். அதன் பின் திருப்பதி செல்லும் போது பெருமாளின் சங்கு, சக்கரம் திருமுக்கூடல் ஆலயத்திலேயே தங்கி விட்டது. அதனால் தான் இன்றும் அந்த கோயில் சங்கு, சக்கரம் மட்டும் தனியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பிறகு பெருமாளின் கட்டளைக்கு இணங்க தொண்டமான் சக்கரவர்த்தி திருமுக்கூடலுக்கு திரும்பி அப்பன் சீனிவாச பெருமாளை வணங்க வந்தார். அப்போது சயன கோலத்தில் இருந்த பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் வடிவமாக ஒன்று கலந்து ஓருருவில் காட்சி கொடுத்தார். அதை பார்த்த தொண்டமான் சக்கரவர்த்தி, அப்பன் வெங்கடேசா என்று பெருமாளை கட்டித்தழுவி கசிந்துருகி வேண்டினர். அதனால் தான் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு பிருகு முனிவரின் தவத்திற்கு பெருமாள் காட்சி அளித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

ஒப்பிலியப்பன் போல் பெருமாளின் திருவடியில் பூமாதேவியும், மார்க்கண்டேயனும் இங்கு தவம் செய்கிறார்கள். திருப்பதி சீனிவாச பெருமாளின் கையில் உள்ள சங்கு சக்கரமும் இங்கு உள்ளது. இங்கு உறையும் பெருமாள் மார்க்கண்டேயனுக்கு நாதனாகவும், பூமாதேவிக்கு கண்ணனாகவும், காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கு திருப்பதி சீனிவாச பெருமாளாகவும் காட்சி கொடுத்தார் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More
சௌகார்பேட்டை  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சௌகார்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

பெண் கருடனும், பெண் குரங்கும் தாயாருக்கு வாகனங்களாக விளங்கும் சிறப்பு

சென்னை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா முதலி தெருவில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். திருப்பதி ஏழுமலையானை நினைவுபடுத்தும் வெங்கடேச பெருமாளே இங்கு மூலவர். அருகில் தனிச் சந்நிதியில் அலர்மேல்மங்கை தாயார்.

சுமார் 420 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோவிலில், ராமர்தான் மூலவராக இருந்தார். லால்தாஸ் என்ற ஒரு சந்நியாசி, லாகூரில் இருந்து கி.பி.1,800-ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். வட மாநிலங்களில் இருந்து யாத்திரை வரும் பக்தர்கள் வசதிக்காக ஒரு மடம் கட்டினார். பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் முறையான வசதிகளை ஏற்படுத்தினார். பிறகு இந்த இடத்தை விட்டுச் செல்ல மனமின்றி, இவரும் இங்கேயே தங்கி இறைப் பணியில் ஈடுபடலானார். பின்பு பெருமாளின் திருவுளப்படி, வெங்கடேச பெருமாளுக்கும், அலர்மேல்மங்கை தாயாருக்கும் சன்னதிகள் அமைத்தார். 'பைராகி' என்றால் சந்நியாசி என்று அர்த்தம். சந்நியாசி லால்தாஸ் அமைத்த கோவில் என்பதால் இக்கோவிலுக்கு 'பைராகி மடம்' என்ற பெயரும் உண்டு.

மூலவர் வெங்கடேச பெருமாளின் உயரம் சுமார் ஆறரை அடி. திருமலை திருப்பதியில் அமைந்துள்ள பெருமாளின் கோலத்தை நினைவுபடுத்தும் அதே அமைப்பு. பரந்து விரிந்த திருமார்பு. அதில் உறையும் சொர்ண லட்சுமி. சங்கு- சக்கரதாரி. திருப்பதியில் நடப்பது போலவே அனைத்து உற்சவங்களும் இங்கு நடந்து வருகின்றன. திருச்சானூரில் நடக்கும் உற்சவங்கள் இங்கே தாயாருக்கும் நடந்து வருகின்றன. அவற்றுள், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பஞ்சமி தீர்த்த உற்சவம் விசேடம். உற்சவ காலத்தில் தாயாருக்கான கருட வாகனம் பெண் சொரூபமாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விசேடமாகும். சாதாரணமாக கருட வாகனம் என்றால், பிற கோவில்களில் மீசை முறுக்கிய கோலம், திரண்ட தோள்கள் போன்றவற்றுடன் கூடிய கருட வாகனம் இருக்கும். ஆனால் அத்தகைய ஆண் கருட வாகனம் இங்கு தாயாருக்கு இல்லை. கருடனின் மணைவியான கருடி எனப் பெயர் பெற்ற, காதணி, மூக்கணி, புடவை அணிந்த கோலத்தில் உள்ள பெண் கருட வாகனத்தில், தாயாரின் புறப்பாடு நடக்கும். தாயாருக்கான அனுமந்த உற்சவத்தின்போதும் பெண் குரங்கு வாகனத்தில்தான் புறப்பாடு நடக்கும். இப்படி தாயாருக்கான வாகனங்களில் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் பெண் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

Read More
சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில்

சலவைக்கல்லில் எழுந்தருளிய நரசிம்மர்

திருச்சி– கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில், காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில். தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் கோவில்களில், இக்கோவிலும் ஒன்று. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இக்கோவிலில் முதலில் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அனுமன் ஆகியோர் எழுந்தருளியிருந்தனர். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீவியாசராஜர். பின்னாளில்தான் நரசிம்மர் இங்கு எழுந்தருளினார். ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களின் பெருமை திசையெங்கும் பரவ, பலரும் இங்கு வந்து தங்கி, இறைவழிபாடு நடத்தினர். அப்படி வந்த பக்தர்களில் ஒருவர் ஸ்ரீ முஷ்ணம் ஆர்யாச்சார். இவர் கனவில் தோன்றிய ஸ்ரீ நரசிம்மர், தான் சிந்தலவாடியின் அருகில் உள்ள கருப்பத்தூர் என்ற காவிரிக்கரை ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி, துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தும் கல்லாக இருப்பதாகத் தெரிவித்து, அங்கு வந்து தம்மை மேற்கு திசையில் எவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவு எடுத்துச் செல்ல ஆணையிட்டார். எந்த இடத்தில் பாரம் அதிகமாகத் தெரிகிறதோ அந்த இடத்திலேயே, தம்மைப் பிரதிஷ்டை செய்யவும் பணித்தார். அதேநேரத்தில் சலவைத் தொழிலாளிக்கும் ஒரு கனவு. வரும் பக்தரிடம் அக்கல்லைக் தந்து விட உத்தரவு கொடுக்கப்பட்டது.

மறுநாள், ஆர்யாச்சார் சிந்தலவாடியில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள கருப்பத்தூருக்குச் சென்றார். கனவில் தெரிந்த வழிகளில் பயணம் தொடர, சலவைத் தொழிலாளர்கள் பணி செய்யும் இடம் வந்தது. குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியும் ஆர்யாச்சாரை அழைத்துச் சென்று அக்கல்லைக் காண்பித்தார். அதைத் திருப்பிப் பார்த்தபோது ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா ரூபம் தெரிந்தது. ஸ்ரீ ஆர்யாச்சார் பக்தியாக, அந்த விக்கிரகத்தோடு மேற்கு நோக்கி நடந்தார். சிந்தலவாடி அருகே வந்தபோது, நடை நடுங்கியது; கல் பாரமாகத் தெரிய ஆரம்பித்தது.

ஸ்ரீ நரசிம்மரின் எண்ணம் பக்தருக்குப் புரிந்தது. அங்கேயே ஸ்ரீ யோக நரசிம்மரை இறக்கி, முன்பே இருந்த ஸ்ரீ காளிங்க நர்த்தனக் கோவிலில் நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்தார்.

பிரார்த்தனை

இக்கோவில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை இக்கோவிலில் நடத்துகிறார்கள். இந்த கோவிலுக்கு சென்று நரசிம்மரை வழிபட்டால் சுப யோகமும், தீய சக்திகளின் பிடியில் இருந்து நீக்கமும் கிடைக்கும் என்பது இக்கோவிலின் சிறப்பு அய்சமாகும்.

Read More
கோவில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோவில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவில்

கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து ஓசிஎப் வழியாக செல்லும் பாதையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கோவில்பதாகை என்ற ஊரில் அமைந்துள்ளது சுந்தரராஜப் பெருமாள் கோவில். சோழர்களால் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழைமையான வைணவத் தலம் இது. இத்தலத்தின் புராணப் பெயர் சேதாரண்ய க்ஷேத்ரம் ஆகும்.

பிருகு மகரிஷிக்கும், மார்கண்டேய மகரிஷிக்கும் இத்தலத்தில், பெருமாள் அழகிய தோற்றத்தில் பூரண சேவை சாதித்து அருளினார். அவருடைய பேரழகு தரிசனத்தின் காரணமாக இத்தலத்துப் பெருமாள் சுந்தரராஜப் பெருமாள் என்றழைக்கப்படுகிறார். கருவறையில் சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மற்றொரு கருவறையில் மேற்கு திசை நோக்கியவாறு ஸ்ரீவைகுண்டநாதப்பெருமாள் பிரயோக நிலையில் சக்கரத்தை வைத்தபடி ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரோடு காட்சி தருகிறார். அருகில் மார்கண்டேய மகரிஷி அமைந்துள்ளார். இந்த கருவறைக்கு எதிரில் கருடாழ்வார் கைகூப்பிய நிலையில் அமர்ந்தவாறு காட்சி தருகிறார். பொதுவாக அனைத்து வைணவத் தலங்களிலும் பெரிய திருவடி எனும் கருடாழ்வார் பெருமாளை நோக்கி கைகூப்பி நின்றவண்ணம் காட்சி தருவார். ஆனால், கருடாழ்வார் கைகளைக் கூப்பி அமர்ந்தவாறு காட்சி தருவது, வேறெங்கும் காண முடியாத காட்சியாகும். இத்தலத்தில் பலிபீடம், கொடிமரம் இவற்றைக் கடந்தால், மேலும் ஒரு கருடாழ்வார், சிறு சன்னிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இப்படி இரண்டு மூலவர்கள், இரண்டு கருடாழ்வார்கள், இரண்டு மகரிஷிகள் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More
ஆப்பூர் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆப்பூர் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

பெருமாளுக்கு புடவை மட்டுமே வஸ்திரமாக சாற்றப்படும் தலம்

சிங்கப் பெருமாள் கோவிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்திருக்கும் ஔஷதகிரி (மூலிகை மலை) என்ற மலை மீது நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மலைமீது உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல 480 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவிலில் வெங்கடேச பெருமாள் மட்டுமே பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. இத்தலத்தில், பெருமாளும் தாயாரும் இனைந்து ஒரே வடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை. அதனால் தான் பெருமாளுக்கு 'நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. பெருமாளும் தாயாரும் இங்கு ஐக்கியமாகி இருப்பதால், அதாவது பெருமாள் லட்சுமி சொருபமாக இருப்பதனால் புடவைதான் வஸ்திரமாக சாற்றப்படுகிறது. அதைத் தவிர வேறு வஸ்திரங்கள் பெருமாளுக்குசாற்றபடுவதில்லை.

தல வரலாறு

ராம, ராவண யுத்தத்தின்போது இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர், அந்த அஸ்திர தாக்குதலில் அகப்படாமல் தப்பித்த ஒரு சிலரில் முக்கியமானவர் ஆஞ்சனேயர். அவர் ஜாம்பவானின் அறிவுரைப்படி இலங்கையில் இருந்து கடலை தாண்டி இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து, மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க தேவையான நான்கு வகை மூலிகைகளை எடுக்க செல்கிறார் . இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரனத்தால், அனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறான். அவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மாற்றும் போது, அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதிதான் இங்கு மூலிகை மலையாக இருக்கின்றது. அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூர்(ஆப்பூரில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது) பகுதியில் விழுந்ததாம்.

பிரார்த்தனை

பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர். திருமணம் நிறைவேறாமல் இருப்பது, வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் குறைகள் போய் விடும்.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கத்து பெரிய கருடாழ்வார்

ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவைதான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோவில் பெரிதென்பதால் பெரிய கோவில் ஆயிற்று. கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர், திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். வாத்தியத்திற்கு பெரிய மேளம். பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

இந்த வரிசையில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சன்னதி எதிரில் அமைந்துள்ள கருடாழ்வார், பிரம்மாண்டமாக 25 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இவ்வளவு பெரிய திருமேனியுடைய கருடாழ்வாரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் எட்டு விதமான நாகாபரணம் அணிந்துள்ளார். இந்த சிலை இறகுகளை விரித்து பறக்க தயாராக உள்ளது போன்ற நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் இவருக்கு கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் ஏற்படும் பாதிப்பை நீக்குபவர் இவர் என்பது ஐதீகம்.

Read More
ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்

ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நரசிம்மர்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ராமகிரி என்ற ஊரில் அமைந்துள்ளது கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் . 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில். நீண்டகாலமாக திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.

ஆந்திர மாநிலம் குத்தி பல்லாரி என்ற இடத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரணியனை வதம் செய்த போது ஏற்பட்ட ரத்தக் கறைகளை அஹோபிலத்தில் சுத்தம் செய்தார். மிகுந்த கோபத்துடன் இருந்த உக்கிர நரசிம்மர் அங்கிருந்து கிளம்பி தெற்கு நோக்கி பயணப்பட்டு திண்டுக்கல் வந்த போது, சிவபெருமானும் தேவர்களும் அவரை வழிமறித்து கோபம் தணிக்க முயற்சித்தனர். ஆனால் அதிலும் முழுமையாக சாந்தம் அடையாத நரசிம்மர், பின்னர் கரூர் மாவட்டம் தேவர் மலையை அடைந்தபோது பிரகலாதனின் வேண்டுகோளை ஏற்று கோபம் தணிந்து தேவர்மலை தீர்த்தத்தில் தன் அங்கங்களை சுத்தம் செய்து சாந்தமடைந்தார். சாந்தமடைந்த நரசிம்மர், திண்டுக்கல் மாவட்டம் பழைய அய்யலூருக்குச் சென்று கருணாகிரி நரசிங்க பெருமாளாக எழுந்தருளினார். பின்னர் கோபம் தணிந்து, தனியாக இருக்கும் பெருமாளுக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராமகிரி தலத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனால் இங்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத 'ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாளாக' திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

பிரார்த்தனை

முன்ஜென்ம பாவத்தில் ஏற்பட்ட இரணியனின் கர்மாவை அழித்து, அவன் பெற்ற வரங்களுக்கு ஏற்ப இரணியனை வதைத்து நரசிம்மர் இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பதால், நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தடை நீங்கும். திருமணமாகாதவர்கள் இவரை வேண்டி வணங்கிட உடனடியாக திருமணம் நடைபெறும். மேலும் தனி சன்னதியில் உள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் குடும்பத்தில் உள்ளவரை வணங்கினால் பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி, பணவரவு ஏற்படும். கோவிலின் வாசலில் உள்ள ஆஞ்சநேயர் வடை மாலை, துளசி மாலை நெய்வேத்தியம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்குள்ள பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து வணங்கினால் நாக தோஷம், விலகி வாழ்வில் சுகம் உண்டாகும்.

Read More
தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோவில்

சக்கரத்தாழ்வார் மூலவராக எழுந்தருளி இருக்கும் அபூர்வக் கோவில்

தஞ்சை பெரிய கோவிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை மதன கோபாலப் பெருமாள் கோவில் என்றும்அழைப்பார்கள். எந்த ஒரு பெருமாள் கோவிலிலும் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் மூலவராக சக்கரத்தாழ்வார், சுதர்சன வல்லி, விஜயவல்லி என்ற இரு தாயார்களுடன் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் நரசிம்மர் இடம்பெற்றிருப்பார். ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார் மூலவராக அமைந்துள்ளதால், நரசிம்மர் அதில் இடம் பெறாமல், கோவில் ராஜ கோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடது புறத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக அமர்ந்துள்ளனர். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும் நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மூன்று சக்கரத்தாழ்வார்கள்

இந்த கோவிலில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த கோவிலில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் எழுந்தருளுவார்.

பிரார்த்தனை

இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் எனக் கருதப்படுகிறது. மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான 'ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நமஹ' என்ற காயத்ரி மந்திரத்தை, ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.

சக்கரத்தாழ்வாரைத் தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றும் அல்லது 9 வியாழக்கிழமைகள் அல்லது 9 சனிக்கிழமைகளில் 9 அகல் தீபம் ஏற்றி, 9 முறை வலம் வந்து சிலப்பு மலர்களால் மாலை சூட்டி, கற்கண்டு, உலர்ந்த திராட்சைகளை நிவேதனமாக வைத்து அரச்சனைகள் செய்து வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது இக்கோயிலின் ஐதீகம்.

முற்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் ஏற்படும் கெடுதிகள் யாவும் நீங்கும். நவக்கிரகத் தோஷப் போகும். திருமணத் தடைகள் விலகும்.

இவர், கல்வி தொடர்பான தடைகளை நீக்கிச் சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். மனச் சஞ்சலம், சித்தப் பிரமை, பேய் பிசாசு, பில்லி சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளிலிருந்து விடுபட செய்வார்.

Read More
ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கநாதருக்கு, மாமனார் தீபாவளி சீர் அளிக்கும் சாளி உற்சவம்

தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி, தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார், தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவமானது ஸ்ரீரங்கம் கோவிலில் தீபாவளியன்று 'சாளி உற்சவம்' என்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோவிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்பின், கோவிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகித் தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள், அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.

காலை பத்து மணியளவில் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிப்பார். ஒவ்வொருவரும் தன் குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை, தன் மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். பெரியாழ்வாரின் சார்பில், அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்றாகிவிட்டது. வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும், பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.

Read More