திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில்

ராமபிரான் சயன கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

ராமநாதபுரத்துக்குத் தென்கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. இத்தலத்து பெருமாளின் திருநாமம் ஆதிஜெகநாத பெருமாள். தாயார் திருநாமம் கல்யாணவல்லி.

இக்கோவில் மிகவும் புராதனமானது. ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம் இது.

ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகின்றது. மூலவர் ஆதிஜெகநாத பெருமாள் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் (ராமபிரான்) சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும்.

சீதையை மீட்க இலங்கை செல்லவிருந்த ராமபிரான், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, ராமபிரான் புல்லையே தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால், இது திருப்புல்லணை என அழைக்கப்பட்டது. இங்கு ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால், ராமருடன் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை; அனுமன் மட்டும் உள்ளார். கருவறை சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த காட்சியில் சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்., விபீஷணன் ராமபிரானிடம் இவ்வூரில்தான் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.

 
Previous
Previous

கும்பகோணம் ராமசாமி கோவில்

Next
Next

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்