ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கநாதருக்கு, மாமனார் தீபாவளி சீர் அளிக்கும் சாளி உற்சவம்

தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி, தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார், தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவமானது ஸ்ரீரங்கம் கோவிலில் தீபாவளியன்று 'சாளி உற்சவம்' என்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோவிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்பின், கோவிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகித் தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள், அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.

காலை பத்து மணியளவில் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிப்பார். ஒவ்வொருவரும் தன் குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை, தன் மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். பெரியாழ்வாரின் சார்பில், அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்றாகிவிட்டது. வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும், பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.

Read More
திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில்

நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் கருடாழ்வார் பயந்த நிலையில் காட்சியளிக்கும் திவ்யதேசம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில், விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல, திருமால் தானே விரும்பி அமர்ந்த இடம் தான் திருவேளுக்கை. வேள் என்றால் விருப்பம். தானாக விருப்பப்பட்டு அமைதியைத் தேடி இத்தலத்தில் யோக மூர்த்தியாக இருப்பதால் வேளிருக்கை என்று ஆகி, காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது. மூலவர் முகுந்த நாயகன், நின்ற கோலமாக கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இவருக்கு அழகிய சிங்கர் நரசிம்மர், ஆள் அரி என்ற பெயர்கள் உண்டு.

ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தபோது, அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். பிரம்மதேவர் யாகம் இடையூறு இல்லாமல் நடக்க திருமாலிடம் வேண்டினார். திருமால், முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே கோலத்துடன் ஹஸ்திசைலம் என்ற குகையில் இருந்து புறப்பட்டு, பிரம்மதேவனின் யாகத்துக்கு இடையூறு அளித்த அசுரர்களை அவ்விடத்தில் இருந்து விரட்டிச் சென்றார். அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள இந்த இடம் வரை ஓடிவந்தனர். அவர்களைத் துரத்திக் கொண்டு வந்த நரசிம்மப் பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார். பயந்து ஓடிய அசுரர்கள் மீண்டும் வந்தால் அவர்களை எதிர்க்க இந்த இடமே சிறந்தது என்று நினைத்து, தனது கோப உணர்வுகளை நீக்கி, யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாலித்து தரிசனம் தருகிறார். இதனாலேயே இவரது சந்நிதி 'காமாஷிகா நரசிம்மர் சந்நிதி'என்று பெயர் பெற்றது.

இக்கோவிலில், நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அரிய தோற்றம் ஆகும்.

Read More
முடிகொண்டான் கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

முடிகொண்டான் கோதண்டராமர் கோவில்

அனுமன் உடன் இல்லாமல் ராமர் எழுந்தருளியிருக்கும் தலம்

திருவாரூர் மாவட்டத்தில், தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் ஆகிய தலங்களில் அமைந்துள்ள ராமர் கோவில்கள் 'பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் முடிகொண்டான் கோதண்டராமர் கோவில் திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், திருக்கண்ணபுரம் மற்றும் சிறுபுலியூர் திவ்ய தேசங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

கருவறையில், வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளி இருப்பதை நாம் இத்தலத்தில் காணலாம். ராமரின் இடது புறம் சீதையும், வலது புறம் லட்சுமணனும் உள்ளனர். ராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்புகையில் பரத்வாஜ முனிவர் வேண்டுகோளுக்கிணங்க அவர் ஆசிரமத்தில் தங்கி இருந்து விருந்துன்ன சம்மதித்தார். 16 வருடம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் கிளம்பி வந்து கொண்டே இருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் ராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது ராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். ராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சந்நிதி இருப்பதையும் காணலாம்.

ராமருக்கு விருந்தோம்பல் செய்வதில் உற்சாகமடைந்த பரத்வாஜ ரிஷி, ராமரிடம் தனது கிரீடத்துடன் (முடி) தரிசனம் தரும்படி கேட்டுக் கொண்டார். ராமர் தனது தனது குலதெய்வமான ரங்கநாதரின் ஆசீர்வாதத்தைப் பெறாமல் இதைச் செய்ய முடியாது என்று கூறியபோது, பரத்வாஜ ரிஷி தனது சக்தியைப் பிரயோகித்து ரங்கநாதரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தார். ரங்கநாதர், ஐந்து தேவலோக மலர்களால் ஆன மலர் கிரீடத்தை ராமருக்கு சூட்டினார். ராமர் அந்த மலர் கிரீடத்துடன் பரத்வாஜர் முனிவருக்கு காட்சி தந்ததால் இத்தலத்திற்கு முடிகொண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.

இத்தலத்து உற்சவமூர்த்தி ராமர் தனது உடலில் மூன்று வளைவுகளுடன், அதாவது முகம் ஒரு திசையில், இடுப்பு. மற்றொன்று மற்றும் மூன்றாவது வளைவில் கால் என்ற நிலையில் காட்சி அளிப்பது தனித்துவமானது. இந்த ஆசனம் 'உத்தம லக்ஷணம்' என்று குறிப்பிடப்படுகிறது.

பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர். குறிப்பாக மேல்நாட்டுக் கல்வி படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட்டால் அவர்களது பிரார்த்தனை நிறைவேறுகிறது. உயர்கல்வி கற்க விரும்புவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள். கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர். மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

Read More
நெடுங்குணம் யோக ராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நெடுங்குணம் யோக ராமர் கோவில்

கைகளில் வில்லும், அம்புமின்றி யோக நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ ராமர்

திருவண்ணாமலையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நெடுங்குணம் யோக ராமர் கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில், தமிழ்நாட்டில், ராமருக்கு என்று அமைந்த தனிக்கோவிலில் மிகவும் பெரியது.

கருவறையில் ஸ்ரீராமபிரான் வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். எப்பொழுதும் அவர் கையில் ஏந்தி இருக்கும் கோதண்டம் மற்றும் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமர்ந்த நிலையில் வலது கையை சின் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி, கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார். இது ராமபிரானின் மிகவும் அபூர்வமான திருக்கோலம் ஆகும். இதனாலேயே இவரை யோக ராமர் என்று அழைக்கின்றனர். ராமர் அருகே இடப்புறம் சீதாபிராட்டி அமர்ந்த நிலையில், வலக் கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ராமருக்கு வலது புறத்தில் கைகளைக் குவித்து அஞ்சலி செலுத்தியவராய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமபிரானும் சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர, அவர்கள் எதிரே அனுமன் பிரம்மசூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது. இது வேறு எங்குமே காணமுடியாத அற்புத காட்சியாகும்.

பிரார்த்தனை

இங்கே ராமபிரான் சாந்தமான கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், அவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காக ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.

Read More
அனந்தமங்கலம் இராஜகோபால சாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அனந்தமங்கலம் இராஜகோபால சாமி கோவில்

மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடைய அபூர்வ ஆஞ்சநேயர்

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் அமைந்துள்ளது அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில். கருவறையில் மூலவர் வாசுதேவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி இருக்கிறார்.

இக்கோவில் பெருமாள் கோவிலாக இருந்தாலும், இங்கு எழுந்தருளியுள்ள திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவரே முதன்மையான கடவுளாக இத்தலத்தில் வழிபடப்படுகிறார். அவர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடையவராகவும், அவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு, அபூர்வமான தோற்றத்தில் காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனியை வேறு எந்த கோவிலிலும் நாம் தரிசிக்க முடியாது.

ராமபிரான் இலங்கையில் இராவணனை வதம் செய்துவிட்டு திரும்புகையில், ராவணனின் வழிவந்த அரக்கர்கள் அங்கே கடலுக்கு அடியில் தவம் செய்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அவர்களை அழிக்க அனுமனை அனுப்பினார். இலங்கைக்கு புறப்பட்ட ஆஞ்சநேயருக்கு திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ஸ்ரீதேவி பத்மமும், ஸ்ரீசக்தி பாசமும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் 'ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும், அனந்தமங்கலம் சென்றால் ஆனந்தம் கிடைக்கும் என்பது பழமொழி. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள். பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர் கள் இத்தல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்கள் அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுவதாக மக்களின் நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் வியாழக்கிழமை, இத்தல ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Read More
திருச்சானூர் பத்மாவதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சானூர் பத்மாவதி கோவில்

திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார்

ஆந்திர மாநிலத்தில், கீழ் திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். இக்கோவில் வெங்கடாசலபதியின் மனைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாவதி தாயாருக்கு அலர்மேல் மங்கை என்ற பெயரும் உண்டு. சொல் வழக்கில், அலமேலு என்று அழைப்பார்கள். அலர் என்றால் தாமரை. 'செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்' என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது. அன்னை மகாலட்சுமியின் அம்சம் அலர்மேல் மங்கை. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல் மங்கைத் தாயார்.'

திருச்சானூரில் அருளும் இந்தத் தாயாரின் சந்நிதியில் பிரம்மா, உலக நன்மைக்காக இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டார் என்றும், அந்த விளக்குகள் இன்றும் ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்கு தாயாருக்கு ஆலயம் எழுப்பும்படி தொண்டைமானுக்கு ஶ்ரீநிவாசனே உத்தரவிட்டார் என்கின்றது தலபுராணம். அதனால் பகவான் ஆனந்தம் அடைந்ததால், இந்த ஆலய விமானத்துக்கு ஆனந்த விமானம் என்று தொண்டைமான் பெயரிட்டான்.

இந்த ஆலயத்தில் வழிபட்டப் பிறகே திருமலை சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. மன அமைதியைத் தருவதோடு, வறுமையில் வாடும் மக்களுக்கு செல்வத்தை அளிப்பவளும் அவளே. அப்படிப்பட்ட அலர்மேல் மங்கையை தரிசித்து அல்லது மனக்கண்ணால் தியானித்து வழிபடுவதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்னார். குறத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ‘வைகரீ ரூபாய அலர்மேல் மங்காய நமஹ' எனும் அலர்மேல் மங்கை தாயார் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

Read More
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் உருவான கோவில்

நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஶ்ரீதேவி, இடதுபுறம் பூமாதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படும். ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது. தனி சன்னதியில் பத்மாவதி தாயார் எழுந்தருளி இருக்கிறார்.

தல வரலாறு

இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர் காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே பெருமாள் சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு 'கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்'என்று பெயர் சூட்டப்பட்டது.

திருப்பதியில் ஓர் நாள் என்னும் இத்தலத்தில் மட்டுமே நடைபெறும் தனித்துவமான உற்சவம்

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் இந்த கோவில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும், 'திருப்பதியில் ஓர் நாள்' என்னும் மகா உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே இத்தலத்திலும் நடைபெறுவது தனிச்சிறப்பாகும் . திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே. அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். அன்று, திருமலை வேங்கடவன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப்  பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் தலம்

திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில், குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் கோவில். இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. கருவறையில் மூலவர் வைகுண்ட நாராயணப் பெருமாள், நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்களில், வலது கரத்தில் பிரயோக நிலையில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் ஏந்தி, கீழ் இரு கரங்கள் வரத, அபய முத்திரையோடும் எழுந்தருளி இருக்கிறார். பெருமாள் வைகுண்ட லோகத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் இங்கு எழுந்தருளி இருப்பதால் இத்தலம் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகின்றது. திருப்பதி ஏழுமலையான், மானுட வடிவில் இந்த தலம் வந்து இங்கு அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டு அலர்மேல் மங்கை தாயாரை திருமணம் செய்ய கடன் பெற்று சென்று தாயாரை திருமணம் செய்து கொண்டு,இழந்த செல்வத்தை பெருமாள் மீண்டும் பெற காரணமாக அமைந்த கோவில் இது

கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பின்போது இக்கோவில் சேதமடைந்தது. இந்த ஊரைச் சேர்ந்த, சென்னை மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றியவரும், பிரபல அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சிவராமன் கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு கோவில் கட்டி புதுப்பிக்க உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் சிவராமன் கோவிலை புதுப்பித்து, 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

சுக்கிர தோஷ நிவர்த்தி தலம்

மார்கழி மாதம் அதிகாலையில் சுக்கிர பகவான் தனது ஒளியால் இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை தரிசிப்பதாக ஐதீகம். ஒருவரது ஜனன கால ஜாதகத்தில், சுக்கிரன் பலம் இழந்தோ அல்லது ஆதிபத்திய தோஷம் பெற்றிருந்தாலோ, அதனை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகின்றது. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த தலத்திற்கு வந்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும். காதல் திருமணம் கைகூட நினைப்பவர்கள், இத்தலத்து பெருமாளின் காலடியில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து அர்ச்சித்து பின்னர் அந்த எலுமிச்சம்பழச் சாறை அருந்தினால், வர்களது வேண்டுதல் நிறைவேறும்.

பிரார்த்தனை

இந்த தலத்தில் உள்ள லட்சுமி குபேரர் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி திருமணத்திற்கு பணம் தந்து உதவியதால் இவரை வழிபட சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஐப்பசி மாதம் தீபாவளி அன்று இந்த தலத்தில் உள்ள குபரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் கலந்து கொள்ள சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை வழிபட்ட 90 நாட்களில், திருமணம் நிச்சயம் கைகூடும்.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

திருமலையானுக்கு தினமும் புதிய மண் சட்டியில் நைவேத்தியமாகும் தயிர் சாதம்

திருமலை வேங்கடவன் கோவிலில் பலவிதமான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருப்பதி லட்டு. பல்வேறு வகையான பட்சணங்கள், திருமலையின் பெரிய மடைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டாலும், திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுவது வெறும் தயிர் சாதம் மட்டும்தான். அதுவும் மண் பாத்திரத்தில் வைக்கப்பட்டதாக இருக்கும். புத்தம் புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும், குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. திருமலையானுக்கு ஒவ்வொரு நாளும் புதிய மண் சட்டியில் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்பு உள்ள குலசேகரப்படியை தாண்டிச் செல்வதில்லை. அவனுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இப்படி மண்சட்டியில் தயிர்சாதம் நிவேதனம் செய்யப்படுவதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதர். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோவிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தார். அப்படியே கோவிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோவிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்து, 'நீயே எல்லாம்' என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்து விடுவார். இந்நிலையில், கோவிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார். அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார். அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார். திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் தினமுமொரு புது மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.

புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.

Read More
சிங்கவரம் ரங்கநாதர்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சிங்கவரம் ரங்கநாதர் கோவில்

பாவம் நீக்கும் ரங்கநாதரின் பிரம்மாண்ட பாத தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்து வடக்கே நான்கு கி.மீ. தொலைவில், 1500 ஆண்டுகள் பழமையான சிங்கவரம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 160 படிகளைக் கொண்ட மலைக்கோவில் இது. இந்த ஊர் முற்காலத்தில் விஷ்ணு செஞ்சி என்றும், திருப்பன்றி குன்றம் என்றும், சிங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டது. தாயார் திருநாமம் ரங்கநாயகி.

பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள இந்த குடைவரைக் கோவிலில்,ரங்கநாதர் பிரம்மாண்ட கோலத்தில் சுமார் 14 அடி நீளமுள்ள திருமேனியுடன், போக சயன நிலையில் எழிலோடு காட்சி தருகின்றார். தமது வலது கரத்தினை கீழே தொங்கவிட்ட நிலையில், கீழே அனுமன், மேலே சக்ரத்தாழ்வார், இடது கையில் சின்முத்திரை, அருகே கந்தர்வர், நாபிக் கமலத்தில் பிரம்மன், கருடன், ஜெயவிஜயன், மார்பில் மகாலட்சுமி, திருவடியில் பூதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு, அத்திரி முனிவர்கள் ஆகியோரும் உடன் இருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய திருமேனி உடையவர் இவர். மிகப்பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்று தான் முழுமையாக தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், நாபிக்கமலத்தில் கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமா தேவி, நாரதர், பிரகலாதன், பிருகு, அத்திரி போன்ற முனிவர்களை காணலாம்.எம்பெருமானின் பிரம்மாண்ட பாத தரிசனம் பாவம் நீக்கும் தரிசனம் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

பிரார்த்தனை

பெருமாள் இத்தலத்தில் எமனை எச்சரிக்கை செய்வது போல தெற்கு நோக்கி தன் திருமுகத்தை வைத்துள்ளதால், இவரைத் தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. எனவே சஷ்டியப்த பூர்த்தி மற்றும் எண்பதாம் கல்யாணம் நடத்த சிறந்த தலமாக விளங்குகின்றது.

இவரது பாதம் பார்த்து வணங்குபவர்களுக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும்.

தேசிங்கு ராஜாவால் ஏற்பட்ட வருத்தத்தினால் முகத்தை திருப்பிக் கொண்ட ரங்கநாதர்

செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜனுக்கு இந்த பெருமாளே குலதெய்வம், ஒருமுறை தேசிங்கு தன்னை எதிர்த்த ஆற்காடு நவாப்புடன் போருக்கு செல்லும் முன், இங்கு வந்து பெருமாளை வணங்கினார். ஆனால் பெருமாளுக்கோ, தேசிங்கு ராஜன் போருக்கு செல்வது பிடிக்கவில்லை. அதற்கு பெருமாள் இன்று உன்னுடைய ஜென்ம நட்சத்திர நாள். அதனால் போருக்கு போக வேண்டாம், தோல்வியை தழுவுவாய் என பெருமாள் அசரீரியாக கூறியுதாகவும், அதற்கு தேசிங்குராஜன் நான் சத்திரியன், போருக்கு புறப்பட்டு வந்து விட்டேன், முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன், போருக்கு போய் தீருவேன் என கூறினார். எனவே பெருமாள் தன் முகத்தை திருப்பிக் கொண்டார். இருந்தாலும் தேசிங்கு ராஜன் போருக்கு சென்று எதிரிகளை விரட்டி அடித்து விட்டு வீர மரணம் எய்தினார் என்பது வரலாறு. இப்போதும் ரங்கநாதர் முகம் திரும்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும் திருமலை அமிர்தகலசப் பிரசாதம்

திருமலை ஏழுமலையான் மடைப்பள்ளியில் தயாராகும் சிறப்பு நிவேதனம் லட்டு. திருமலை வேங்கடவனுக்கு 1715 ஆகஸ்ட் 2 முதல் லட்டை நைவேத்தியமாக படைப்பது துவங்கியது.உலகப் பிரசித்தி பெற்ற இப்பிரசாதம் புவிசார் குறியீடு( Geographical Indication) பெற்றுள்ளது. லட்டு தவிர வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கேசரி பாத், சர்க்கராபாத், ஜீராபாயசம், மோளா, ஹோரா, கதம்பசாதம், பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம், ஜிலேபி, மனோகரம், ஹோலிபூ, தேன்குழல், கயாபடி, வட்டபடி, மாவுதோசை, நெய்தோசை, வெல்லதோசை ஆகிய நிவேதனங்களும் தயாராகின்றன. மேலும், சித்ரான்னம், வடை, முறுக்கு, அதிரசம், போளி, மவுகாரம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவையும் பெரிய அளவில் தினமும் தயார் செய்யப்பட்டு, ஏழுமலையானின் அடியார்களான பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. திருமலை மடைப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகளை, சீனிவாசப் பெருமாளின் தாயாரான வகுளவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.

அமிர்தகலசப் பிரசாதம்

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருப்பதி பெருமாளுக்கு அமிர்தகலசம் என்ற பிரசாதம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. இது அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செய்த பிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். இப் பிரசாதத்தின் சிறப்பு என்னவென்றால், அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான். அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது. அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம். இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Read More
செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்

சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தரும் வீர ஆஞ்சநேயர்

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது 1100 ஆண்டுகள் பழமையான செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில். கருவறையில் ராமபிரான், ஸ்ரீ பட்டாபிராமன் என்ற திருநாமத்தோடு, வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் , ராமபிரானோடு ஓடும் சத்ருகனும், பரதனும் உடன் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

இக்கோவிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது தனது காலால் சனி பகவானை அழுத்திய படியும் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

சனிபகவானுக்குரிய பரிகார தலம்

அனுமன் சீதையைத் தேடி, சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு தாவ முயன்ற போது, அவரை ஏழரை சனி காலம் நெருங்க இருப்பதால் சனிபகவான் அவரை பிடித்துக் கொண்டார். அனுமன் தான் முக்கிய காரணத்திற்காக இலங்கை செல்ல இருப்பதால், தன்னை பின்னர் பிடித்துக் கொள்ளுமாறு சனி பகவானிடம் கூறினார். சனிபகவானும் அவரை அப்போது விட்டுவிட்டார். பின்னர் வானரப் படைகள், சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு கற்பாறைகளை கொண்டு பாலம் அமைத்துக் கொண்டிருந்த போது சனி பகவான் மீண்டும் வந்தார். அனுமன் சனி பகவானை தன் தலையை மட்டும் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சனியும் அவ்வாறே அனுமன் தலையை பிடித்துக் கொண்டார். ஆனால் அனுமன் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால், அவர் தலையில் தூக்கிய பாறைகளுக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்குண்டு தவித்தார். அதனால் அனுமன் தலையில் இருந்து விடுபட்டு, அனுமன் காலை பிடிக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில் அனுமன் காலால் மிதித்து தரையில் அழுத்தினார். சனிபகவான் அனுமனிடம் தன்னை விட்டுவிடும்படி மன்றாடினார். தன்னை விடுவித்த அனுமனிடம் சனி பகவான் உன் பக்தர்கள் அனைவரையும், ஏன் உங்களை ஒரு கணம் நினைப்பவர்களைக் கூட நான் நான் பிடிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அனுமாரே சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் என்றால் அவரை தரிசித்து வழிபட்டால் சனி பகவானின் கொடூர பார்வையில் இருந்து பக்தர்களை காத்து விடிவு அளிக்கிறார் என்பது உண்மை. அதனால் தான் இத்தலம் , சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக் கொள்ளும் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

வைகுண்ட ஏகாதசி பலனை கொடுக்கும் ஆனந்த நிலைய பரமபதநாதர் தரிசனம்

திருமலையில் வெங்கடாஜலபதி கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது. இது முழுவதும் கல்லால் வேயப்பட்டு, பொன்னால் போர்த்தப்பட்டதாகும். பொதுவாக இறைவன் வீற்றிருக்கும் கருவறையின் மேற்கூரை '"விமானம்' என அழைக்கப்படும்.அவ்விமானத்திற்கு பெயரிட்டு பெருமையோடு அழைப்பது வைணவ ஆகமத்தின் சம்பிரதாயமாகும். சடாவர்மன் சுந்தர பாண்டிய மன்னனால் கிபி 12ம் நூற்றாண்டில் இக்கோவில் விமானம் புதுப்பிக்கப் பட்டதாகவும், பின்னர் .வீரநரசிங்கராயர் என்னும் மன்னன் தன்னுடைய எடைக்கு இணையாக கொடுத்த பொன்னால் இவ்விமானம் வேயப்பட்டதாகவும் கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.

ஆனந்த நிலைய விமானத்தில் வடக்கு முகமாக வெள்ளியினால் வேயப்பட்ட ஒரு திருவாசியின் கீழ் விமான வெங்கடேஸ்வரர் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார். வைகுண்டத்தில், பாற்கடலில் மஹாவிஷ்ணு ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் தொங்கவிட்டு எந்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ, அந்த கோலத்தில் தான் இங்கேயும் எழுந்தருளி இருக்கிறார். இவரை வருடத்தின் 365 நாளும் தரிசிக்கலாம், இவரை தரிசிப்பது வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளை தரிசித்த பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

பிரம்மதேவன் பெருமாளுக்கு நடத்திய திருமலை பிரம்மோற்சவம்

படைப்புத் தொழிலை செய்பவர், பிரம்மதேவன். தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, பிரம்மதேவனால் நடத்தப்படும் உற்சவமே 'பிரம்மோற்சவம்' ஆகும். திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகும். படைக்கும் கடவுளான பிரம்ம தேவரால், வேத ஆகமங்களின் அடிப்படையில், அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, நடத்தப்படும் உற்சவம் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. இந்து சமய நம்பிக்கையின்படி மற்ற திருவிழாக்களை விட இந்த பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெருமாளை தரிசிக்க திருமலைக்கு வந்த பிரம்ம தேவர், பெருமாளுக்கு விழா எடுத்தார். இதுவே புகழ்பெற்ற பிரம்மோற்சவ விழாவாக தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கோவில்களை விட திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவம் தனித்துவமானது.

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், 'போக சீனிவாசமூர்த்தி' என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரம்மோற்சவத்தின் காலை மாலை இருவேளைகளிலும்,வெங்கடேசப் பெருமாள் தனது துணைவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் விதவிதமான வாகனங்களில் கோவிலைச் சுற்றி வலம் வருவார். இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திருமலையில் வந்து கூடுவார்கள். ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா திருவோண நாளில் நிறைவு பெறும்.

இந்த ஆண்டு திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, செப்டம்பர் 26 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் விபரங்கள்

செப்டம்பர் 18 மாலை - த்வஜரோஹனம்

செப்டம்பர் 18 இரவு - பெரிய ஷேச வாகனம்

செப்டம்பர் 19 காலை - சின்ன ஷேச வாகனம்

செப்டம்பர் 19 இரவு - ஹம்ச வாகனம்

செப்டம்பர் 20 காலை - சிம்ம வாகனம்

செப்டம்பர் 20 இரவு - முத்துப்பந்தல் வாகனம்

செப்டம்பர் 21 காலை - கற்பக விருட்ச வாகனம்

செப்டம்பர் 21 இரவு - சர்வ பூபால வாகனம்

செப்டம்பர் 22 காலை - மோகினி அவதாரம்

செப்டம்பர் 22 இரவு - கருட வாகனம்

செப்டம்பர் 23 காலை - ஹனுமந்த வாகனம்

செப்டம்பர் 23 மாலை - தங்க ரத ஊர்வலம்

செப்டம்பர் 23 இரவு - கஜ வாகனம்

செப்டம்பர் 24 காலை - சூர்ய பிரபை வாகனம்

செப்டம்பர் 24 மாலை - சந்திர பிரபை வாகனம்

செப்டம்பர் 25 காலை - ரதோற்சவம்

செப்டம்பர் 25 மாலை - அஸ்வ வாகனம்

செப்டம்பர் 26 அதிகாலை - பல்லக்கு உற்சவம்

செப்டம்பர் 26 காலை - சக்ர ஸ்நானம்

செப்டம்பர் 26 மாலை - த்வஜ ஆவரோஹனம்

Read More
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்கும் பத்மாவதி தாயார்

கீழ்த் திருப்பதிக்கு அருகே 5 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். ஆகாசராஜன் எனும் சோழ மன்னனுக்கும், தரணி தேவிக்கும் மகளாக பிறந்து வெங்கடாசலபதி என்ற திருமாலின் அவதாரத்தின் போது அவருக்கு மனைவியும் ஆனவர். இவருக்கு அலர்மேல் மங்கை தாயார் என்ற பெயரும் உண்டு.

அலர் என்றால், தாமரை. மேலு என்றால், வீற்றிருப்பவள். இதையே, பத்மாவதி என்கின்றனர். பத்மம் என்றாலும், தாமரை என்று பொருள். வதி என்றால், வசிப்பவள். ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள். பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில், கறிவேப்பிலையால் ஏற்பட்ட ஊடல்

மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால், ஸ்ரீநிவாசன் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் . பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் ஸ்ரீநிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அஹோபிலம் நரசிம்மருக்கு, இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியது என்று சீனிவாசனின் தாயார் வகுளாதேவி கர்வம் அடைந்தார். அவரது கர்வத்தை அடக்க நினைத்த நாரதர், பத்மாவதி தாயாரிடம் சென்று திருமணத்தில் கருவேப்பிலையும், கனகாம்பரம் மலரும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனால் திருமணத்திற்கு பின்னர் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் ஊடல் ஏற்பட்டது. இந்த ஊடல் பெரிதாகி, பத்மாவதி தாயார் பெருமாளை விட்டுப் பிரிந்து சென்று திருச்சானூரில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளினாள். இதனால்தான் திருமலை கோவிலில் இன்றும் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை.

திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. 'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முறை

திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.

Read More
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணன் கோவில்

நரசிம்ம அவதாரம் எடுக்கு முன்னரே அக்கோலத்தை பெருமாள் காட்டி அருளிய திவ்ய தேசம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருக்கோஷ்டியூர். கருவறையில், சௌமிய நாராயண பெருமாள், பிரம்மாண்டமான வடிவில் ஐந்து தலை நாகத்தின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவிருடன் மற்றும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா மற்றும் அவரது மூன்று மனைவியர்கள் சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி ஆகியோருடன் காட்சி அளிக்கிறார். இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்குப் பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். தாயார் திருநாமம் திருமாமகள்.

ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோவிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஒரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது. விமானத்தின் கீழ்த் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சௌமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபத நாதர் (வைகுண்ட பெருமாள்) என பெருமாள் நான்கு நிலைகளில் அருளுகிறார். பொதுவாக கோவில்களில் உற்சவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.

தல வரலாறு

பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார். மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியருளும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம்

இத்தலத்தில் வாழ்ந்த திருக்கோட்டியூர் நம்பியிடம், வைணவ ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர் எட்டெழுத்து மந்திரத்தை 'எவருக்கும் வெளியிடக்கூடாது' என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மக்கள் அனைவரும் கேட்கும்படி, மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். ராமானுஜர் உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இதற்குண்டு.

பிரார்த்தனை

இந்தக் கோவிலில் விளக்கு நேர்த்திக் கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி பெருமாளிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Read More
கோவிலூர்  சென்னகேசுவர பெருமாள் கோவில்.
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோவிலூர் சென்னகேசுவர பெருமாள் கோவில்.

பெருமாளுக்கு பொரிகடலை மாவு நைவேத்தியம்

தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைந்துள்ளது கோவிலூர் சென்னகேசுவர பெருமாள் கோவில். கருவறையில் மூலவர் சென்னகேசுவரப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சென்னகேசுவர பெருமாளின் விக்ரகம் சில சமயங்களில் நரசிம்மரைப் போன்றே காட்சி தருகிறது. பொதுவாக பெருமாள்கோவில்களில் பைரவர் இருப்பதில்லை. ஆனால், இந்தக் கோவிலில் மூலவருக்கு அருகாமையிலேயே பைரவர் குடி கொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் காட்சி தருகிறார். ஆகையால், இந்த ஆஞ்சநேயர் வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.

திருமலை வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர்

பதினேழாம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இந்த ஊர் இருந்த போது இந்தக் கோயிலுக்கு மைசூர் மன்னர்களால், ஸ்ரோத்ரியம் எனப்படும் மானியம் வழங்கப்பட்டது. ஆகையால் இந்த ஊஞக்கு ஸ்ரோத்ரியம் கோவிலூர் என்று பெயர் ஏற்பட்டது. மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வர் பெருமாளிடம் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தனர். அதன் பலனாக ஆண் சந்ததிகளை பெற்றனர். இவரை திருமலை வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர் என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக இவர் விளங்குகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பெருமாள் கோவில்களில் விதவிதமான நைவேத்தியங்கள் செய்யப்படும். ஆனால் இக்கோவிலில் வித்தியாசமாக, பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிமாவு கடலையை நைவேத்தியமாக படைக்கிறார்கள்

பிரார்த்தனை

கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத் தடை நீங்கவும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும் இந்தக் கோவில் பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
பட்டீஸ்வர  கோபிநாதப் பெருமாள்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பட்டீஸ்வர கோபிநாதப் பெருமாள் கோவில்

தென்னாட்டின் துவாரகை

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீசுவரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது கோபிநாதப் பெருமாள் கோவில். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர் இக்கோவிலை தென்னாட்டின் துவாரகை என்று குறிப்பிட்டார். மூலவர் கோபிநாதப் பெருமாள், ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சியளிக்கிறார். இந்த கோவிலின் தல புராணத்தின்படி, பெருமாள் ராமாயணத்தில் அனுமனுக்கு ராமனாக தனது வடிவத்தை காட்டியது இங்குதான்.

1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை ஏந்தி இருக்கும் இரட்டை ஆஞ்சநேயர்

இத்தலம் மகாபாரதத்துடனும் தொடர்புடையது. இங்கு ஒரு காலத்தில் அழகான நீர் அல்லிகள் கொண்ட ஒரு பெரிய குளம் இருந்தது. அல்லி மலர்கள் 1000 இதழ்களுடன் மலர்ந்து காணப்பட்டன. திரௌபதி ஒருமுறை பீமனை அல்லி மலர்களை கொண்டு வர அனுப்பினாள். பீமன் இங்கு அல்லி மலர்களைப் பறிக்க வந்த போது, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்த அனுமனை எதிர்கொண்டான். அவன் அனுமனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அனுமனை ஒரு குரங்காக பாவித்து அவருடைய வாலை நகர்த்தி வழி விடச் சொன்னான். ஆனால் அதற்கு பதிலாக அனுமன் தனக்கு வயதாகிவிட்டதாகக் கூறி, பீமனை தன்னுடைய வாலை நகர்த்தச் சொன்னார் பீமன் பலமுறை முயற்சித்தும் தோல்வியுற்றான், அது சாதாரண குரங்காக இருக்காது, மாறாக அனுமன் என்பதை உணர்ந்தான். பீமன் தன் தவறை உணர்ந்து கொண்டதை அனுமன் அறிந்து, தன் விஸ்வரூபத்தின் மூலம் பீமனுக்கு தன்னை வெளிப்படுத்தினான். பீமன் அவரை வணங்கிய பிறகு, அனுமன் திரௌபதியிடம் திரும்ப எடுத்துச் செல்ல 1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை அவருக்கு வழங்கினார்.

இக்கோவிலில் தனி சந்நிதியில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். இரண்டு ஆஞ்சநேயகளும் தங்கள் கையில் 1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை வைத்திருக்கிறார்கள்.

Read More
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்

ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர்

நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.

திருச்செங்கோடு தலத்தில் சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி தருவது போல, இத்தலத்தில் கிருஷ்ணனும், ருக்மிணியும் இணைந்த 'சம்மோகன கிருஷ்ணர்' எனும் அபூர்வ கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவரும் இணைந்திருக்கும் கோலத்திற்கு கோபால சுந்தரி என்ற பெயரும் உண்டு.

இக்கோவில் மகாமண்டபத்தின் வலது புற விளிம்பில் ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில், இந்த இருவரும் இணைந்த கோலத்தில் வலப்புறம் ஆண் உருவமும், இடப்புறம் பெண் உருவமும் கொண்டு, சங்கு, சக்கரம் அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், சம்மோகன கிருஷ்ணர் தோற்றமளிக்கிறார்.

பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழை பொழியும் கண்களோடு அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர் திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்யங்களும் வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.அனைத்து சம்பத்துக்களும் சேரும். இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.

சம்மோகன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) ஸ்லோகம்

மரிசீ மகரிஷி இயற்றிய கீழ்க்கண்ட அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) ஸ்லோகம் நிம்மதியற்ற குடும்பங்களில் மன நிம்மதியையும் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும்.

“ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்

த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்

பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா

சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்

இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை

ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்

ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!”

காலையில் நீராடிய பின்பு மூன்று முறையும், இரவில் உறங்கப் போகும். முன்பு ஒரு முறையும் இந்த ஸ்லோகத்தை சொல்வது அளவற்ற நன்மையைத் தரும். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தரும். திருமணமாகாத பெண்களுக்குக் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.

இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களுக்காக நடத்தப்படும் லட்சார்ச்சனை

இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டிறுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இத்தலத்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எங்கும் இப்படிப்பட்ட லட்சார்ச்சனை நடத்தப்படுவதில்லை.

Read More
வடசேரி கிருஷ்ணன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வடசேரி கிருஷ்ணன் கோவில்

சந்தான வரம் அருளும் பாலகிருஷ்ணன்

நாகர்கோவில் நகரத்தின் வடசேரி பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். இத்தலம் தென் திசையின் குருவாயூர் என்று அழைக்கப்படுகிறது. குருவாயூர் கிருஷ்ணனைப் போலவே, இத்தலத்து மூலவர் பாலகிருஷ்ணன் குழந்தை வடிவில், தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்றபடி காட்சி அளிக்கிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜகோபாலரையும் வடித்துள்ளனர். உற்சவர் ராஜகோபாலர் ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார். தினந்தோறும் பாலகிருஷ்ண சாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக, குழந்தை போலவே காட்சியளிப்பார்.

தல வரலாறு

கி.பி. 13-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்ம மகாராஜா, குருவாயூர் கிருஷ்ணனின் சிறந்த பக்தர். ஒருமுறை கிருஷ்ணர் இவரது கனவில் கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக காட்சி தந்தார். அது மட்டுமன்றி தனக்கு கோயில் அமைய இருக்கும் இடத்தையும் குருவாயூரப்பனே கூறியுள்ளார். நாளை காலை சூரிய உதயத்தின் போது அருகே இருக்கும் கானகத்திற்கு செல். அடர்ந்த மரச்சோலைக்குள் சிறிய குளம் ஒன்றின் அருகே கருடன் இருப்பான்.அவ்விடமே எனக்கு கோவில் அமைய ஏற்ற இடம் என்று கூறியுள்ளார். அதன்படி மறுநாள் காலை அவ்விடம் வந்த ஆதித்தவர்ம மகாராஜா கருடனை கண்ட இடத்திலேயே கோயில் எழுப்பினார். அதுதான் இப்பொழுது கோவில் அமைந்திருக்கும் இடம். தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினார்.

குழந்தை கிருஷ்ணருக்கு வெள்ளி தொட்டிலில் தாலாட்டு

ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ணன் சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி, பால் பாயாசம், உன்னியப்பம், பால்,பழம்,அரிசிப்பொரி,வெண்ணெய்,அவல்,சர்க்கரை படைக்கின்றனர். தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து பால கிருஷ்ணனை வழிபட்டு வெண்ணையும், பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More