திருப்புடைமருதூர்  நாறும்பூநாதர் கோவில்

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்

இரண்டு கால்களையும் மடக்கி தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அரிய கோலம்

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் நாறும்பூநாதர். இறைவியின் திருநாமம் கோமதி.

மருத மரத்தை தலவிருட்சமாக கொண்ட தலங்கள், 'அர்ச்சுன தலங்கள்' என்றழைக்கப்படும். 'அர்ச்சுனம்' என்றால் 'மருதமரம்' என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் 'தலையார்ச்சுனம்' என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், 'இடையார்ச்சுனம்' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் 'கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது.

பொதுவாக, சிவாலயங்களில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, இடது காலை மடித்தும் வலது காலை முயலகன் மேல் ஊன்றியும், அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

Read More
திருமயம் கோட்டை பைரவர் கோவில்

திருமயம் கோட்டை பைரவர் கோவில்

வடக்குப் பார்த்தபடி எழுந்தருளியிருக்கும் அபூர்வ பைரவர்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமயம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கோட்டை பைரவர் கோவில். இக்கோவில் 350 ஆண்டுகள் பழமையான திருமயம் கோட்டையின் வடபுற சுவற்றில் அமைந்துள்ளது.இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி, தனிக் கோவில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும். மேலும், கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக கோட்டை பைரவர் விளங்குகிறார். சகல தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது.

கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவார். இக்கோவில், விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு தலம் ஆகும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவரைக்கு அபிஷேகம், வடைமாலை, சந்தனகாப்பு செய்து, நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும். மற்றும் பிதுர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம் பழமாலை சூட்டி, எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதுர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

இப்பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனகாப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளிமாலை நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். எல்லா பரிகாரங்களுக்கும் நெயதீபமும், மிளகு தீபமும் பொதுவானது, இவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால், நன்மை கோடி வந்து சேரும்.

Read More
இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில்

இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில்

சனி பகவானை வலம் வந்து வணங்கக்கூடிய சிறப்பு பரிகாரத் தலம்

தென்காசியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மதுநாதீசுவரர். இறைவியின் திருநாமம் அறம்வளர்த்த நாயகி.

பொதுவாக சிவாலயங்களில் சனி பகவானுக்கு தனி சன்னதி இருந்தாலும் அவை கோயில் பிரகாரத்தை ஒட்டி

இருப்பதால் நாம் வலம் வந்து சனி பகவானை வழிபட முடியாது. ஆனால் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் சனிபகவானை நாம் வலம் வந்து வழிபட முடியும். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் அவர் கைகளை அபயஹஸ்த நிலையில் வைத்து எழுந்தருளி இருப்பதால், சனி சம்பந்தப்பட்ட எந்த வித தோஷமும் இங்கு வந்து வணங்கினால் விலகிப்போகும்.

அவர் இங்கு பொங்கு சனியாக அருள்பாலிப்பதால், இது ஒரு சனி பரிகாரத் தலமுமாகவும் திகழ்கின்றது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி நடைபெறுபவர்கள் இங்குவந்து மதுநாதீசுவரையும், சனீஸ்வரரையும் வழிபாடு செய்தால், இன்னல்கள் நீங்கி இனிய வாழ்வு பெறலாம்.

சர்க்கரை வியாதியை குணமாக்கும் தலம்

சனி பகவானுக்கு தண்மை (குளிர்ச்சி) என்ற காரகத்துவமும் உண்டு. நீர்க்கிரகமான சனியை இலத்தூரில் வழிபட்டால் சர்க்கரை வியாதி பறந்தே போய்விடும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை.

Read More
வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்

வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்

9 அடி உயர திருமேனியுடன் மூலவராக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி

தேனி - மதுரை வழியில் 1 கி.மீ. தொலைவிலிருக்கும் அரண்மனைப்புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. பயணித்தால் வேதபுரியை அடையலாம். முற்காலங்களில் வேதியர்கள் அதிகம் வாழ்ந்து வந்த போது எப்போதும் வேத பாராயணங்கள் நடைபெற்றதால் இந்த ஊருக்கு வேதபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

இக்கோயிலின் பிரதான மூலவர் நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தி ஆவார். இவர் இங்கு பிராக்ஞா தட்சிணாமூர்த்தி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் பாண்டிய மன்னர்களுக்கு பிறகு இப்பகுதியை ஆட்சி புரிந்த அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி, 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

கருவறையின் விமானத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன.இக்கோயிலில் பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கும் விதி பின்பற்றப்படுகிறது. மேலும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைக்கு பதிலாக, அதை பொட்டலமாக சமர்ப்பிக்கும் படி பக்தர்கள் கோயில் நிர்வாகத்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இக்கோவிலில் வியாழக்கிழமையன்று திருமண வரம், பிள்ளை வரம் ஆகியவற்றை வேண்டுபவர்களுக்கு அவை நிச்சயம் கிடைக்கும் என்றும், குழந்தைகள் கல்வி கலைகளில் சிறக்க, விரும்பிய காரியங்கள் நடக்க இங்கு வழிபட்டால் அது உறுதியாக கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்

திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்

வில்வ அர்ச்சனை நோய்க்கு மருந்தாகும் தேவாரத்தலம்

சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். 'கலி' (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், 'திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள். தலவிருட்சம் வில்வமரம். மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

பராசர முனிவர், உதிரன் என்னும் அசுரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. 'இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

Read More
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலம்

ஒருமுறை வழிபட்டாலே கோடிமுறை வழிபட்ட பலனைத் தரும் தலம்

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலங்கள் திருவைகாவூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், ஓமாம்புலியூர் கோகர்ணம், ஸ்ரீசைலம் ஆகியவை ஆகும். காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, காளஹஸ்தி, காஞ்சி போன்ற தலங்களில் உள்ள கோவில்கள் சிவபெருமானின் உடலாகவும், திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில் அவரின் இருதயம் ஆகவும் விளங்குகின்றது. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கும் முந்தையது. இறைவனின் திருநாமம் ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி.

ஒரு சமயம் தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் திருமேனியில் இருந்து ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர்க்க சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமான், அவர்கள் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவபூஜை செய்தால் பாவம் விலகும் என்று அருளினார். ஒரு கோடி ருத்திரர்களும் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவலிங்கம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். பூஜையின் முடிவில் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார்.கோடிருத்திரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவனின் திருநாமம் ருத்ரகோடீஸ்வரர் எனவும், தலம் ருத்ர கோடி தலம் எனவும் ஆயிற்று.

நாம் இத்தலத்தில் ஒரு முறை தானம் செய்தாலும், ஜெபம் செய்தாலும் அது கோடி முறை செய்ததற்கு ஈடான பலனைத் தரும். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி வழிபாடு செய்த தலம் என்பதால், சிவராத்திரியன்று இங்கு வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம்.

Read More
கழுவத்தூர்  ஜடாயுபுரீஸ்வரர் கோவில்

கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோவில்

பன்னிரண்டு ராசிகளின் மேல் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்

மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் இறைவனின் திருநாமம் ஜடாயுபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்திர நாயகி.

சீதையை ராவணன் கடத்திச் சென்றபோது பறவைகளின் அரசனான ஜடாயு அவனை மறித்தார். ராவணனோ அவரது இறக்கையை வெட்டி வீழ்த்தினான். காயத்துடன் கிடந்த அவர் ராமனிடம் ராவணன் சீதையைக் கடத்தி செல்லும் விஷயத்தைச் சொல்லி உயிர் விட்டார் அவருக்கு ராமன் ஈமக்கிரியை செய்து வைத்தார். ஜடாயு இந்தப்பகுதியில் தங்கியிருந்தபோது பூஜித்த சிவலிங்கத்திற்கு ஜடாயுபுரீஸ்வரர் என்ற பெயரும், தளத்திற்கு கழுகத்தூர் என்ற பெயரும் ஏற்பட்டது. பின்னர் கழுகத்தூர் மருவி கெழுகத்தூர், கழுவத்தூர் என்றானது.கெழுவம், சௌந்திரம் என்ற சொற்களுக்கு அழகு என்று பொருள். அம்பாள் பெயரால் ஊருக்கு கெழுவத்தூர் என்ற பெயரும் ஏற்பட்டது.

இந்தக் கோவிலின் பிரகாரத்தில் பன்னிரண்டு ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், பன்னிரண்டு ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

Read More
இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்

இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்

இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தரும் அபூர்வ பைரவர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி. இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி.

இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பைரவருக்கு, 'ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பு அம்சமாகும். வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள சொர்ண ஆகர்ஷண பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு வடை மாலை அணிவித்து, விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

சென்னை மாநகரில் , பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். கற்பகம் என்றாலே வேண்டும் வரங்களை தருபவள் என்று பொருள்.

இத்தலத்தில் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத சிங்கார வேலர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் நடக்கும் பல திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவை, தனித்துவமானவை. அப்படி நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு.

இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும் முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் திருக்குளத்தில் பவனி வருவார்கள்.

கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. அதேபோன்று, சிங்காரவேலர், ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை மயில் மேல் வைத்தபடியும், வள்ளி - தெய்வானையுடன் கம்பீரமாக, அழகிய கோலத்தில் காட்சி தந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Read More
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

திருமணத்தடை, வாஸ்து குறைபாடு, கட்டிடம் கட்ட தடை ஆகியவற்றை நீக்கும் தேவாரத்தலம்

கும்பகோணம் – நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலை வழியில் உள்ள திருவீழிமிழலை என்னும் தலத்திலிருந்து, வடக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அன்னியூர். இத்தலத்து இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் கௌரி பார்வதி.

வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் 'அன்னியூர்' ஆனது. இறைவன் 'அக்னிபுரீஸ்வரர்' ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் ஏழு செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால், தடையின்றி கட்டிடம் கட்டலாம் என்பது ஐதீகம்.

உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு (உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.‌

Read More
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

சனி பகவானின் முடக்கு வாதத்தை நீக்கிய தலம்

மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் திருவாதவூர். இறைவன் திருநாமம் திருமறைநாதர் . இறைவியின் திருநாமம் வேதநாயகி.

சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத் தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது.

சனி பகவானுக்கு, மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. தான் பெற்ற சாப நீக்கத்தை, பக்தர்களுக்கு அருளும் முகமாக இந்த ஆலயத்தில், சனி பகவான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

வாத நோயை நீக்கும் அபிஷேக நல்லெண்ணெய்

கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

தங்கள் வாத நோய் தீர வேண்டும் என்பதற்காக பல வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

Read More
பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்

மங்களாம்பிகை லோக தட்சிணாமூர்த்தி

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.

இக்கோவிலின் வெளிச்சுற்று சுவரில் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் கோலமானது மிகவும் சிறப்புடையது. அவர் மங்களாம்பிகை லோகத்தில் எந்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ அதே கோலத்தில் இங்கு நமக்கு அருள்பாலிக்கிறார். அவர் காலின் கீழ் உள்ள பூதகனின் தலைப்பாகம், வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாதவாறு கிழக்கு திசை நோக்கி இருக்கின்றது. மேலும் அவருக்கு கீழே உள்ள நந்தியம்பெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் தன் தலையை மட்டும் மேற்கு திசை நோக்கி திருப்பி இருப்பதும், ஒரு அபூர்வமான தோற்றமாகும்.

Read More
திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள தேவாரத்தலம் திலதர்ப்பணபுரி . இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இறைவன் திருநாமம் முக்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சொர்ணவல்லி.

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும். இக்கோவிலில் பித்ரு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் ஆகியவை பார்க்கத் தேவையில்லை. இத்தலத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.

பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

தை மாதம் ரதசப்தமிக்கு மறுநாள் வரும் அஷ்டமி தினம், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, பீஷ்மர் தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள்,கௌரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.

மஹாபாரதப் போரில் , பீஷ்மர் அர்ச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி தன் மரணத்தை தள்ளிப் போட்டு வந்தார். பீஷ்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது,மஹாவிஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவருக்கு கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை. உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை, அதாவது திரௌபதியை கௌரவர்கள் மானபங்கப் படுத்தியபோது தடுக்காததை, அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்து கொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.

பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது.

பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

Read More
இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்

இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்

தலையில் கிரீடம் அணிந்து காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி. இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி.

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி கொடுப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காணமுடியாத அரிய காட்சியாகும்.

நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட குட்டி விநாயகர்

சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும்.

Read More
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

புதன் கிரகத்திற்கான பரிகாரத் தலம்

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.இத்தலம் புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது இக்கோவிலில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசித்து, பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.

உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம். புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம். புத பகவானின் ஸ்தான பலன் சரியாக அமையப் பெறாத ஜாதகர்கள், இந்தத் திருத்தலத்திற்கு வந்து, இறைவனையும், இறைவியையும், புத பகவானையும் தரிசித்து வழிபாடுகள் செய்ய வேண்டும். புத பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி, பாசிப்பருப்பு சேர்த்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, பிரசாதத்தை விநியோகிக்க வேண்டும்.. இவ்வாறு செய்வதால் புத தோஷம் நீங்கப் பெறும். புத பகவான் அருளால், கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவை கிட்டும்.

திருவெண்காடு புதன் பகவானின் சன்னதியில் 17 தீபங்களை ஏற்றி, மற்றும் அந்த கோவிலை 18 முறை சுற்றி வந்து வழிபட்டால், நம் வாழ்வில் வரும் துன்பங்களை வராமல் தடுக்கலாம். மேலும் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானை வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

Read More
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

சிவபெருமான் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட தலம்

சிவலிங்கத்தின் பின்புற தரிசனம் கிடைக்கும் கோவில்

மதுரை மாநகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி இணையும் சந்திப்பில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் அமைந்துள்ளது. மக்கள் இப்பிறப்பில் செய்த பாவங்களை சிவபெருமான் இந்த பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால் இக்கோவில் மூலவர் சொக்கநாதரை, இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கின்றனர். சிவபெருமான் தன்னை தானே அர்ச்சித்துக்கொண்ட சிறப்புடையது இந்தக் கோவிலாகும். அன்னை மீனாட்சி மத்தியபுரி அம்பாள் என்ற பெயரில் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கிறாள். பொதுவாக செம்பில்தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியில், கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது.

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சியை, ஈசன் சுந்தரேஸ்வரராக வந்து மணந்து கொண்டார். பின் பாண்டிய மன்னராக பொறுப்பேற்க தயாரானார். அரசபீடத்தில் அமர்வதற்கு முன்தாக சிவபூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்தார். இதன் அடிப்படையில் இங்கு சிவனே, சிவலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார். இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர்.

திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் இக்கோயில் அம்மனுக்கு 'மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு. மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமித் தலமென்பதால் புது கட்டிடம் கட்டத் துவங்குபவர்கள், பிடி மண்ணை எடுத்து வந்து வழிபடுவதுண்டு. தலைமை பதவி கிடைக்கவும், பணி உயர்வு பெறவும் சிவனுக்கு, 'ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டி கொள்கிறார்கள்.

Read More
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

தை அமாவாசை நாளில் முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்க வழிபட வேண்டிய தலம்

ஒவ்வோர் ஆண்டின் தொடக்கமான சித்திரை முதல்நாள், ஆடிமாதப் பிறப்பு, ஐப்பசி மாதப் பிறப்பு, தை மாதப் பிறப்பு மற்றும் அனைத்து அமாவாசை தினங்களும் புண்ணிய காலங்கள். அனைத்து அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம் என்ற போதும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசைகள் மிகவும் முக்கியமானவை. ஒருவேளை அனைத்து அமாவாசைகளிலும் வழிபாடு செய்ய இயலாதவர்களாக இருந்தால் தவறாமல் இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாட்டைச் செய்ய வேண்டியது அவசியம். காரணம், ஆடிமாத அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்துக்குப் புறப்படுகிறார்கள். இரண்டு மாதப் பயணத்தில் புரட்டாசி மாதம் அவர்கள் பூமிக்கு வந்து சேர்கிறார்கள். புரட்டாசி மாதம் முன்னோர்கள் பூமியில் உறையும் காலம். அதனால்தான் அந்த மாதத்தைப் புனிதமான மாதமாகக் கருதிக் கடைப்பிடிக்கிறோம். உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கியிருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்லமுறையில் போற்றி அனுப்புவோமோ அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளைச் செய்து வழிபட்டு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

சீர்காழியிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது. நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலமாக திருவெண்காடு விளங்குகிறது. காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும் ஆறு புண்ணிய க்ஷேத்திரங்களில், திருவெண்காடும் ஒன்று. இந்தக் கோயிலில் அக்னி தீர்ததம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.

சந்திர நீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில், ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியை விட மூன்று மடங்கு பலனைத் தரக்கூடிய இந்த ருத்ர பாதத்தை, முறையாக வழிபட்டால், நம்முடைய 21 தலைமுறை பாவ வினைகளை நீக்கும் என்பது இந்தக் கோவிலில் இருக்கும் ஐதீகமாகும் .

தை அமாவாசை நாளில் வழிபட்டால் நன்மை பயக்கும் பிற புண்ணியத் தலங்கள் திலதர்ப்பணபுரி, திருவிளமர், ராமேஸ்வரம், தீர்த்தாண்டதானம், பவானி கூடுதுறை, கருங்குளம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருக்கண்ணபுரம், திருப்புல்லாணி, திருப்புள்ளம் பூதங்குடி ஆகியவை ஆகும்.

Read More
புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்

புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்

சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அபூர்வ அமைப்பு

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தலம் புளியரை. இறைவன் திருநாமம் சதாசிவ மூர்த்தி. இறைவியின் திருநாமம் சிவகாமி. புளிய மரத்தடியில் சிவபெருமான் காட்சி அளித்ததால், இத்தலம் புளியரை என அழைக்கப்பட்டது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி என்ற சிறப்பையும் பெற்றது.

கோவிலுக்கு செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றது. நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி சிவனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பொதுவாக சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி, தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றார். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாகும். நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

மூலவராக சதாசிவ மூர்த்தி விளங்கினாலும், தட்சிணாமூர்த்திக்கே சிறப்புத் தலமாக பார்க்கப்படுகின்றது. யோக தட்சிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுரக்கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள், கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனைக் கிரகங்களும் தென்முக தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கே வந்து இவரை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். தாலி பாக்கியம் கிட்டும், தார தோஷம் நிவர்த்தியாகும், குழந்தைப்பேறு, தொழில் வளம் முதலான சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Read More
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்

ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கும் தலம்

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தலம் குச்சனூர். இத்தலத்தில் சனிபகவான், தனிக் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்து மூலவரான சனீஸ்வர பகவான், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் தன்னுள் ஐக்கியம் என்பதை குறிப்பிடும் வகையில் மூன்று ஜோடி கண்களுடனும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம்,, அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என நான்கு கரங்களுடனும், இரண்டு பாதங்களுடனும் காட்சியளிக்கிறார். ஏழரை சனியின் தாக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறைந்து நன்மை ஏற்படும் என்பது ஐதீகம்.

பல நூற்றாண்டிற்கு முன்பு தினகரன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அந்த மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. 'உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது'. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். பின்னர் மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.

அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. 'வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது' என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். 'தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான் சந்திரவதனன். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார். வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் 'உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான்' என்றும் கூறி மறைந்தார்.

இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார். குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது. அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம், குழந்தையின்மை, திருமணத்தடை உள்ளிட்ட தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலத்தில், வேறு எந்த சனீஸ்வரன் எழுந்தருளியுள்ள தலத்திலும் இல்லாதவாறு, பக்தர்கள் மண் காக பொம்மையை தங்கள் தலையை ஒருமுறை சுற்றி காக பீடத்தில் வைத்து விட்டு, பின்னர் சனிபகவானை வழிபடும் முறை இருக்கிறது.

Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் திருவூடல் திருவிழா முதல், மறுநாள் நடைபெறும் மறுவூடல் திருவிழா வரை காணும் தம்பதியர்களின் வாழ்வில் பிரச்சனைகள் வராது. குடும்ப ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால்தான் 'திருவூடல் கண்டால் மறுவூடல்இல்லை? என்ற சொல் வழக்கில் வந்தது.

பிருங்கி முனிவர் என்பவர் தீவிர பக்தர். சிவபெருமானைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டார். ஒருமுறை சிவபெருமானை வழிபடுவதற்காக பிருங்கி முனிவர் கைலாயத்திற்கு சென்றார்.அப்போது சிவபெருமானின் அருகில் பார்வதியும் அமர்ந்து இருந்தார். இதைக்கண்ட பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் வணங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வண்டு வடிவம் எடுத்து, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையில் புகுந்து மூன்று முறை சிவனை மட்டும் வலம் வந்தார். இதைக் கண்டு கோபமுற்ற பார்வதி தேவி என்னை கண்டு வணங்க பிரியமில்லாத உனக்கு, உடல் இயக்கத்திற்கு தேவையான, நான் அளிக்கும் சக்தி மட்டும் எதற்கு? அதை என்னிடம் திருப்பி கொடுத்துவிடு என்றார். பிருங்கி முனிவரும் தன் உடல் சக்தியை பார்வதி தேவியிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். சக்தி இழந்து நின்ற பிருங்கி முனிவரிடம் சிவபெருமான், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் தனக்கு மோட்சத்தை அருளுமாறு வேண்டினார்.

சிவபெருமான் அந்த வரத்தை பிருங்கி முனிவருக்கு கொடுக்க முற்பட்டபோது, பார்வதிதேவி அதனை தடுத்தார். ஆனால் சிவபெருமான் பிருங்கி முனிவருக்கு வரத்தை அளிக்க எண்ணினார். இதனால் சிவபெருமான் மீது பார்வதிதேவிக்கு ஊடல் ஏற்பட்டது. அதனால் அவர் சிவபெருமானைப் பிரிந்து ஆலயத்துக்குள் வந்து கதவை பூட்டிக் கொண்டார். சிவபெருமான் முதலில் பக்தனுக்கு வரத்தை அளித்துவிட்டு பின்னர் பார்வதி தேவியை சமாதானம் செய்யலாம் என்று எண்ணினார்.அதன்படி அன்றிரவு ஓரிடத்தில் தனியாக தங்கிய சிவபெருமான் மறுநாள் காலையில் பிருங்கி முனிவருக்கு வரத்தை அளித்தார். பின்னர் மாலையில் பார்வதிதேவியை சந்தித்து அவரது ஊடலை போக்கினார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் மாட்டுப்பொங்கலன்று திருவூடல் திருவிழா என்று நடத்தப்படுகிறது.

அன்று காலை இறைவனும், இறைவியும் மாடவீதிகளை மூன்று முறை வலம் வருவார் கள். அன்று மாலை திருவண்ணாமலை திருவூடல் தெருவில், சிவனும், பார்வ தியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படும். ஊடல் அதிகமானதும் அம்பாள் கோவிலுக்குள் சென்று விடுவார். அவரது சன்னிதி கதவுகள் மூடப்படும். இதையடுத்து அம்மனை, ஈசன் சமாதானம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அவர் சமாதானம் ஆகாததால் அண்ணாமலையார், அன்று இரவு அருகில் உள்ள குளன் கோவிலில் சென்று தங்குவார். மறுநாள் காலையில், அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது. ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே அண்ணாமலையார், தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் நடைபெறும். அதில் ஒன்று, திருவூடல் திருவிழா அன்று நடைபெறும் கிரிவலம் ஆகும். மாலையில் அண்ணாமலையார் ஆலயம் திரும்பி , அங்கு உண்ணாமுலையம்மனை சமரசம் செய்து ஊடலைத் தீர்த்தார். இறுதியில் அண்ணாமலையாரும். உண்ணாமுலையம்ம னும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இப்படி காட்சி தருவதை மறுவூடல்' என்பர்கள்,

கணவன் மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த திருவூடல் திருவிழா, வேறு எந்த சிவாலயத்திலும் வெகுவிமரிசையாக நடைபெறுவதில்லை.

Read More