இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்

இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தரும் அபூர்வ பைரவர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி. இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி.

இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பைரவருக்கு, 'ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பு அம்சமாகும். வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள சொர்ண ஆகர்ஷண பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு வடை மாலை அணிவித்து, விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

தலையில் கிரீடம் அணிந்து காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

https://www.alayathuligal.com/blog/rzl5kenntal8nrcph3axm2bsdlrahe

 
Previous
Previous

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்

Next
Next

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்