திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்

வில்வ அர்ச்சனை நோய்க்கு மருந்தாகும் தேவாரத்தலம்

சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். 'கலி' (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், 'திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள். தலவிருட்சம் வில்வமரம். மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

பராசர முனிவர், உதிரன் என்னும் அசுரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. 'இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

 
Previous
Previous

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில்

Next
Next

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்