மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

சிவபெருமான் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட தலம்

சிவலிங்கத்தின் பின்புற தரிசனம் கிடைக்கும் கோவில்

மதுரை மாநகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி இணையும் சந்திப்பில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் அமைந்துள்ளது. மக்கள் இப்பிறப்பில் செய்த பாவங்களை சிவபெருமான் இந்த பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால் இக்கோவில் மூலவர் சொக்கநாதரை, இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கின்றனர். சிவபெருமான் தன்னை தானே அர்ச்சித்துக்கொண்ட சிறப்புடையது இந்தக் கோவிலாகும். அன்னை மீனாட்சி மத்தியபுரி அம்பாள் என்ற பெயரில் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கிறாள். பொதுவாக செம்பில்தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியில், கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது.

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சியை, ஈசன் சுந்தரேஸ்வரராக வந்து மணந்து கொண்டார். பின் பாண்டிய மன்னராக பொறுப்பேற்க தயாரானார். அரசபீடத்தில் அமர்வதற்கு முன்தாக சிவபூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்தார். இதன் அடிப்படையில் இங்கு சிவனே, சிவலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார். இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர்.

திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் இக்கோயில் அம்மனுக்கு 'மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு. மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமித் தலமென்பதால் புது கட்டிடம் கட்டத் துவங்குபவர்கள், பிடி மண்ணை எடுத்து வந்து வழிபடுவதுண்டு. தலைமை பதவி கிடைக்கவும், பணி உயர்வு பெறவும் சிவனுக்கு, 'ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டி கொள்கிறார்கள்.

சிவனே, சிவலிங்கத்தை பூஜிக்கும் கோவில்

 
Previous
Previous

கஞ்சாம் நிமிஷாம்பாள் கோவில்

Next
Next

திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவில்