அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

திருமணத்தடை, வாஸ்து குறைபாடு, கட்டிடம் கட்ட தடை ஆகியவற்றை நீக்கும் தேவாரத்தலம்

கும்பகோணம் – நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலை வழியில் உள்ள திருவீழிமிழலை என்னும் தலத்திலிருந்து, வடக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அன்னியூர். இத்தலத்து இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் கௌரி பார்வதி.

வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் 'அன்னியூர்' ஆனது. இறைவன் 'அக்னிபுரீஸ்வரர்' ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் ஏழு செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால், தடையின்றி கட்டிடம் கட்டலாம் என்பது ஐதீகம்.

உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு (உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.‌

 
Previous
Previous

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்

Next
Next

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்