அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்

பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக, அவர்களிடம் வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள்.
உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.
இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜ கோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச் சொன்னான். அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

வீதி உலாவின் போது ராஜகோபுரத்தை தவிர்க்கும் இறைவன்

https://www.alayathuligal.com/blog/lb62j4l527s8wcyrt4cak6z8m7e8zt

 
Previous
Previous

பிரசன்ன விநாயகர் கோவில்

Next
Next

சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்