காவலூர் சண்முகசுப்பிரமணியசுவாமி  கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

காவலூர் சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில்

திருச்செந்தூருக்கு இணையான திருப்புகழ் தலம்

தஞ்சாவூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில், பெருமாக்கநல்லூர் அருகே உள்ள காவலூர் கிராமத்தில் அமைந்துள்ளது சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான முருகன் கோவில்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர் இக்கோவில் முருகன் மீது திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு அருகில் ஓடும் வெட்டாறு, தெற்கில் இருந்து வடக்கு திசை நோக்கிப் பாய்வதால், உத்திர வாஹினி என்று கருதப்படுகிறது. எனவே இத்தலம் காசிக்குச் சமமாக கருதப்படுகிறது. அதனால் காசிக்குப் போக வேண்டாம், காவலூர் சென்றாலே போதும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

இந்தக் கோவில் மாடக்கோவில் வகையைச் சேர்ந்ததாகும். கோவிலை அடைவதற்கு 12 படிக்கட்டுகள் உள்ளன. இந்த 12 படிகள் 12 ராசிகளைக் குறிக்கும். கருவறையில் ஆறு முகங்களுடன் 12 கைகளுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக மயில் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள முருகன், திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார்.

பிரார்த்தனை

செவ்வாய் தோஷம் நீங்கவும், திருமண தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செவ்வாய் கிரகத்துக்கான தெய்வமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். திருக்கருகாவூர் கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் இக்கோவிலின் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். காசிக்கு இணையான தலம் என்பதால், இக்கோவில் பித்ரு தோஷ நிவர்த்திக்கும் புகழ்பெற்றது.

Read More
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்

மீனபரணி தூக்க திருவிழா - குழந்தை பாக்கியம் கிடைத்ததற்காக, செய்யப்படும் வித்தியாசமான நேர்த்திக்கடன்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது கொல்லங்கோடு. இந்த கிராமத்தில் உள்ள, 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கருவறையில் இரண்டு வடிவங்களில் அம்மன், சாந்தமாகவும், ஆக்ரோஷமாகவம் அருகருகே அமர்ந்து அருள் புரிகிறார். கொல்லங்கோடு பத்திரகாளி அம்மனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று பழைய முடிப்புரை என்றும், மற்றொன்று புதிய முடிப்புரை என்றும் அழைக்கப்படுகிறது.

வருடம் தோறும் பங்குனி மாதம் நடைபெறும், தூக்க திருவிழாமிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. திருவிழாவின் கடைசி நாளான பரணி நட்சத்திரத்தன்று, குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சி நடைபெறும். பங்குனி மாதத்தை மலையாளத்தில் மீன மாதம் என அழைப்பதால் 'மீன பரணித் தூக்கம்' திருவிழா என இவ்விழா பிரபலம் ஆகி உள்ளது. மீன பரணித் தூக்கம் திருவிழா புதிய முடிப்புரை கோவிலில் நடைபெறுகின்றது.

குழந்தை வரம் வேண்டி தம்பதியினர், இந்தக் கோவிலில் தூக்க நேர்ச்சை நடத்திக்கொடுப்பதாக, அம்மனிடம் வேண்டுதல் செய்கிறார்கள். அம்மன் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்குத் தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகின்றனர். அதுபோல, குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன் பெற்றோர் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர்.

நான்கு மரச்சக்கரங்களுடன் கூடிய ரதம் போன்ற ஒரு அமைப்பே தூக்க வண்டியாகும். ஐம்பதடிக்கும் மேல் உயரமான தூக்க வில்லு என்று அழைக்கப்படும் இந்தத் தேரில், கோவிலை சுற்றி ஒரு முறை தங்கள் குழந்தையை வலம் வர வைப்பது, குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதிகளின் நேர்த்திக்கடன் ஆகும். தேரின் உச்சியில் நீளமான இரண்டு வில்கள் (கம்பு) பொருத்தப்பட்டுள்ளன. வில்களின் நுனியில் குறுக்கு வாட்டில் தலா இரண்டு மர்ச் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு தூக்கக்காரர்களை மார்பிலும் இடுப்பிலும் வஸ்திரத்தால் பிணைத்து அந்த மரச்சட்டங்களில் தொங்க விடுகிறார்கள். அவர்களின் கழுத்தில் மாலை, புஜத்தில் பூ சுற்றப்பட்டுள்ளது. வில்லில் பூட்டும் முன்பு அவர்களின் விலாப்புறத்தில் வெள்ளி ஊசியால் குத்தி துளி உதிரம் எடுத்து, அதை ஊசியுடன் ஒரு தண்ணீருள்ள பாத்திரத்தில் போடுகிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான தூக்கக்காரர்களின் இரத்தத்தை விழா முடிந்ததும் தூக்கும் வண்டியின் அருகில் கொட்டுகிறார்கள். இது 'குருதி தர்ப்பணம்' எனப்படுகிறது. 'அம்மனோடு தூக்கக்காரர்கள் இணைவதன் அடையாளம் இது' என்கினறனர்.

மரச்சட்டங்களில் அவர்கள் கட்டப்பட்டதும் அவர்கள் கைகளில் ஒரு குழந்தை கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு வில்களில் பின் பகுதியை கயிற்றால் பிணைந்து சிலர் கீழே இழுக்கிறார்கள். இதனால் முன்பகுதி சரேலென மேலே போகிறது. இப்போது நான்கு தூக்கக்காரர்கள், குழந்தைகளோடு நாற்பதடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்! சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், குலவையிடுகின்றவர்களும், 'ஆத்தா! காளியம்மா' என்று கோஷம் போடுகிறவர்களுமாக ஒரே ஆரவாரமாயிருக்கும். செண்டை மேளம் சப்தத்தில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் வடம் பிடித்து இழுக்க தூக்கத் தேர் கோவிலை வலம் வருகிறது. ஒரு சுற்று முடிந்ததும் தூக்கக் காரர்களிடமிருந்து குழந்தையை உரியவர் பெற்றுக் கொள்ள, அடுத்த நான்கு நபர்கள் தூக்க வண்டியில் பிணைக்கப்படுகின்றனர். ஒரு முறை நான்கு தூக்கக்காரர்களும், நான்கு குழந்தைகள் ஆகியோர் தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ள முடியும்.

அந்தரத்தில் குழந்தைகளைத் தூக்கிச் சென்றபடி வழிபடுவதால் இதற்குத் தூக்கத் திருவிழா என்று பெயர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும், தூக்கக்காரர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். தூக்க வில்லில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் தூக்கக்காரர்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள்.

சந்தான பாக்கியம் வேண்டி ஏராளமானோர் தூக்க நேர்ச்சைக்கு நேர்ந்து கொள்கிறார்கள். தூக்க நேர்ச்சியின் ஐதீகம் எஎன்னவென்றால் தாரியாசுரனை சம்ஹாரம் செய்த பிறகும் பத்ரகாளியின் சினம் அடங்கவில்லையாம். அம்மனை சாந்தி பெறச் செய்ய, ரத்தக் குறி காண்பித்து கருடனைப் போல் சக்தியைச் சுற்றிப் பறந்து சென்று ஆராதிப்பதாக ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.

Read More
அகரம் (தாடிக்கொம்பு) முத்தாலம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அகரம் (தாடிக்கொம்பு) முத்தாலம்மன் கோவில்

கைகளில் அட்சய பாத்திரம் ஏந்தி நிற்கும் மூன்று அம்பிகையர்

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் தாடிக் கொம்பு உள்ளது. இவ்வூரில் இருந்து ஒரு கி.மீ., சென்றால் அகரம் முத்தாலம்மன் கோவிலை அடையலாம். முத்தாலம்மன் சக்தி வாய்ந்த நாட்டுப்புற பெண் தெய்வமென்பது நம்பிக்கை. கொங்கு நாட்டில் எல்லா கிராமங்களிலும் முத்தாலம்மன், குலதெய்வமாக வணங்கப்படுகிறார். முத்தாலம்மனுக்கு தோன்றிய முதல் இடமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில், ஊருக்கு 'அகரம்' என்ற பெயர் ஏற்பட்டது.

கருவறையில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்றையும் அருளும் மூன்று அம்பிகையர் நின்ற கோலத்தில் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். இதனால் இவர்களிடம் கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பக்தர்கள் வேண்டுதலுக்கும், கோவில் திருவிழா நடத்துவதற்கும் பல்லி சத்தம் கேட்கும் நடைமுறை

கோவிலில் கருவறைக்கு இரு பக்கங்களிலும் பூதராசா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, புதிதாகச் செயல் தொடங்க, நிலம், வீடு குறித்த பிரச்னைகள் தீர பூதராசாவிடம் வேண்டுகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராசா முன் நின்று கொண்டு, தங்கள் வேண்டுதல்களைச் சொல்வர். அந்த சமயம், பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை தொடங்குகின்றனர். இந்த நேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப் போட்டு விடுகின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை திருவிழா நடத்தப்படும். முன்னதாக ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமையன்று அம்மன் சன்னதியில் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். அப்போது கோயில் பிரகாரத்தில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்கு பிரகாரத்தில் உள்ள திருவாச்சி சிலை பக்கமோ பல்லி சத்தம் கேட்கும். அந்த சத்தத்தையே அம்மனின் உத்தரவாக நினைத்து திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு வேண்டும் போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூத ராஜா சிலை இருக்கும் இடத்தில் பல்லி சத்தம் கேட்டால் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை என கருதப்பட்டு திருவிழாவும் நடத்தப்படாது. மேலும் பல்லி சத்தம் கொடுக்கவில்லை என்றாலும் திருவிழா நடத்தப்படாது.

அம்மன் உத்தரவு கிடைத்ததும், ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாரம்பரிய முறைப்படி அடிப்படையில், திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த நாள் திங்கட்கிழமை முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டார பெட்டி சன்னதியில் இருந்து புறப்பட்டு, கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

மண்ணால் உருவாக்கப்படும் அம்மனின் உற்சவமூர்த்தி

உற்சவ காலத்தில் அம்மனின் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை, முட்டை, களிமண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு விழா சாட்டப்பட்ட 6ம் நாள் உற்சவ கால அம்மன் உருவாக்கப்படுகிறது. அதையடுத்து உற்சவ கால அம்மன் கண்திறப்பு மண்டபத்துக்கு எடுத்துச்சென்று அம்மனின் கண்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி கொலு மண்டபத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

அப்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அத்துடன் தங்களது நிலத்தில் விளைந்த கம்பு, சோளம், நெல், மக்காச்சோளம், வாழைப்பழம் ஆகியவற்றை சூறையிட்டும், கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு பொம்மைகளை காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

பத்தாம் நாளில் மண்ணால் செய்யப்பட்ட அம்பிகை, சொருபட்டை என்னும் விமானத்தில் பூஞ்சோலை எனப்படும் மைதானத்திற்கு செல்வாள். மழையில் கரையும் விதமாக அமைக்கப்படும் விமானம் இது. மைதானத்தில் சிறப்பு பூஜை செய்தபின், அம்பிகையை அங்கேயே வைத்து விடுவர். அதன்பின் மூன்று, நான்கு நாட்களுக்குள் மழை பெய்து சிலை கரைந்து விடும்.

Read More
தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

கையில் யாழ் இசைக்கருவி உடன் இருக்கும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை. இத்தல இறைவனுக்கு யாழ்மூரிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.

எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தர் சிவத்தல யாத்திரை மேற்கொண்டு தேவாரப் பதிகங்கள் பாடி வருவதை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் திருஞானசம்பந்தருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும், இனிமையாக யாழ் இசைக்கருவி இசைக்கும் திறமை பெற்றிருத்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார் அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் யாழ் இசைக்கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.

யாழை இசைத்து யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன், யாழ்மூரிநாதர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சிவபெருமான் கையில் யாழ் இசைக் கருவியுடன் காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

கருவறையில் லிங்க வடிவில் உள்ள சுவாமி, எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம் தருகிறார். சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும், அமிர்தமும் சேர்ந்தது போல இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை, தேனாமிர்தவல்லி என்கின்றனர். குரல் வளம் வேண்டுபவர்கள் இவளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். சிவன் யாழ் இசைத்தபோது குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர் 'எழில் பொழில் குயில் பயில் தரும்புர பதியே' என்று பாடியிருக்கிறார்.

பிரார்த்தனை

எமதர்மன் இங்கு தவம் செய்து வழிபட்டு அருள் பெற்றதால், இத்தலத்தில் ஆயுள் விருத்தி ஹோமமும், சஷ்டியப்தபூர்த்தி செய்வதும் சிறப்பாகும்.

Read More
வெங்கனூர்  விருத்தாச்சலேஸ்வரர் கோவில்

வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில்

மிக அற்புதமான கலைநயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட வெங்கனூர் கோவில்

பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள வெங்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் வருடங்கள் பழமையான விருத்தாச்சலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். இந்தக் கோவில் திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதில் அழகு என்ற வரிசையில் வெங்கனூர் கோவில் வேலை அழகு என்ற பெருமைக்குரியதாகும். சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோவிலில் 'கற்றளி' எனப்படும் கல்லால் ஆன 33 அம்சங்களுடன் செதுக்கப்பட்ட உயிரோட்டமான சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்திருக்கின்றன.இத்தலத்தில் உள்ள தூண்களை தட்டினால், வெண்கலத்தை தட்டுவது போல் ஒலி வந்தது. எனவே வெண்கல ஊர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் வெங்கனூர் என்று மருவியது.

இந்த கோவில் மற்ற கோவில்களைப் போல பூச்சு முறை இல்லாமல் கருங்கற்களை பொறுத்து முறையில், வடிவமைத்து கட்டப்பட்டுள்ள கோவிலாகும். இது, அக்காலத்தின் கட்டடக் கலையில் கையாளப்பட்ட நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது. இக்கோவில் கருவறை ஓம் வடிவ அமைப்பில் இருப்பது தனிச்சிறப்பாகும். கருவறை மண்டபமும், அதனைச் சுற்றியுள்ள சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள பல்லி, ஓணான், குரங்கு, கிளி உள்ளிட்ட உயிரினங்களின் சிற்பங்களும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள 2 சிற்பங்கள் எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் நான்கு விலங்குகளின் தோற்றமும், நான்கு முகங்களாகவும் தோற்றமளிக்கின்றன. இந்தக் கோவிலில் உள்ள தூண்களை விரல்களால் தட்டினால் விதவிதமான சங்கீத ஓசைகள் வருவதோடு, கோவிலினுள் கல்களால் ஆன சங்கிலி வளையம், சுழல்தாமரை போன்ற சிற்பங்களும் காண்போரைக் கவரும் விதமாக உள்ளது.

Read More
திருநந்திக்கரை நந்தீசுவரர் கோவில்

திருநந்திக்கரை நந்தீசுவரர் கோவில்

சிவபெருமானே நந்தியை பிரதிஷ்டை செய்த, பிரதோஷ கோவில்

நாகர்கோவிலில் இருந்து 32 கி.மீ. தொகையில் உள்ள நந்திக் கரைதிருநந்திக்கரை என்னும் ஊரில், நந்தியாறு கரையோரப் பகுதியில் அமையப் பெற்ற சிவத்தலம் நந்தீசுவரர் கோவில். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற 12 சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் கருவறை மண்டபம் வட்ட வடிவில் காணப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் நந்தீசுவரர் ஆவார். சிவபெருமான் பார்வதியுடன், விநாயகரை மடியில் அமர்த்தியவாறு அருள்புரிகிறார். இந்தக் கருவறையை ஒருமுறை வலம் வந்தால், 52 வாரங்கள் அதாவது ஒருவருடம் கோவிலை வலம் வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சிவன் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த இக்கோவிலுக்கு வந்து காளையை அடக்கும்படி வேண்டினர். சிவபெருமான் அந்த காளையை இழுத்து வந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காளை அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது. இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதோஷ நாட்களில் வழிபட சிறந்த கோவில்

சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது. சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்தக் கோவிலை விட ஏற்ற கோயில் எதுவுமே இல்லை எனலாம். அறிந்தோ, அறியாமலோ கொலைப்பழி பாவம் ஏற்பட்டவர்கள் நந்தீஸ்வரரை வணங்கி மனம் திருந்தப் பெறலாம்.

இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். அசுபதி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில், 27 கண துவாரங்கள் இம்மண்டபத்தில் உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.

சிவாலய ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்கின்றனர். சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலும் ஒன்று.

சனி பிரதோஷம்

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

Read More
திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்

தாயார் வெள்ளி கருடி வாகனத்தில் எழுந்தருளும் திவ்ய தேசம்

நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவில், சோழ நாட்டு திவ்யதேசங்களில் ஒன்று. மூலவரின் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் சௌந்தர்யவல்லித்தாயார். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது.

கருவறையில் நின்ற கோலத்தில், நெடியோனாக மார்பில் பெரிய பிராட்டியாருடன், சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன் திருமங்கையாழ்வாரை மயக்கிய 'நாகை அழகியாராக' நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்க கவசத்தில் பெருமாளை சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரித்தான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம் .

ஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு 'கருடி வாகனம்'(பெண் கருட வாகனம்) இருப்பது வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இத்திருக்கோயிலில் கருடபகவானை ஸ்ரீசௌந்தரராஜ பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன் கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். அதன் படி, ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாள் மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோவில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். பெருமாள் கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. தாயார் கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.

இக்கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை, சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள், வெள்ளிக் கருடி வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் .

Read More
மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில்

மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில்

தட்சிணாமூர்த்தி முன் நந்திதேவர் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள வதாரண்யேசுவரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. இக்கோவில் பிரசித்தி பெற்ற ஒரு குரு பரிகாரத் தலமாகும்.

இக்கோவிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இந்த வடிவை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி, மூலவரான லிங்கத்திருமேனி முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுவது தனிச்சிறப்பாகும். .இந்த தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.

ஒரு சமயம், ரிஷப தேவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார், சிவபெருமானை சுமந்து செல்வதால் தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று கர்வம் கொண்டார். சிவபெருமான் அவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்து, ரிஷப தேவரின் முதுகில் தன்னுடைய சடையின் ஒரு முடியை வைத்தார். ரிஷப தேவர் அந்த ஒரு முடியின் எடையைத் தாங்க முடியாமல், தனது முட்டாள்தனத்தை உணர்ந்தார். சிவபெருமானை வணங்கி மன்னிப்புக் கோரினார். சிவபெருமான் அவரை மன்னித்தது மட்டுமல்லாமல், தெய்வீக அறிவையும் அவருக்கு அருளினார். இங்குள்ள இறைவன் தம் பக்தர்களுக்கு அறிவு, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை அருளுவதால் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். தமிழ் மொழியில், வள்ளல் என்றால் மிகுதியாக கொடுப்பவர் என்று பொருள். இறைவன் நந்தியின் மீது அமர்ந்து, தன் எதிரில் அமர்ந்திருக்கும் ரிஷப தேவருக்கு அறிவை அருளுகிறார். ரிஷபதேவர், தர்மத்தின் வடிவம். தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியுடன், ரிஷப தேவரையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. மேதா என்றால் அறிவு அல்லது ஞானம். இந்த கோவிலில், மேதா தட்சிணாமூர்த்தி தனது வலது கையில் 'சின் முத்திரை' மற்றும் இடது கையில் புத்தகம் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். குருபகவான் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பக்தர்களுக்கு வரம் அருளும் ஆற்றல் பெற்றதால் இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அதனால் குருபெயர்ச்சி இங்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். குருபெயர்ச்சியின் போது தொலைதூர மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கு திரளுவார்கள்

காவிரியில் நந்தி நீராடிய இடம், ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோவில் உள்ளது. இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்கும். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்ததற்கு நிகரான பலன் கிடைக்கும்.

Read More
ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்

திருமணத்தடை நீங்க சீதா தேவிக்கு மஞ்சள் கிழங்கு மாலை

சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் தொடர்வண்டி பாதையில், கடம்பத்தூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது ராமர் கோவில் என்னும் ஊர். இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாசரதி கல்யாணராமர் அமைந்துள்ளது.

ராமரும் அவரது வானரப் படையினரும் சீதையைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தலத்துக்கு வந்தனர். அப்போது குஸஸ்தலை ஆற்றங்கரை ஓரத்தில் வானரப்படைகளுக்காக உணவு சமைத்திட மடம் அமைத்து சமைக்கும் பணி நடந்தது. அந்த மடம் அமைந்த இடம் மடத்து குப்பம் என்று இன்று அழைக்கப்படுகிறது. சீதையைத் தேடுவது குறித்து சற்றுத் தொலைவில் கவலையுடன் ராமர் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவ்வாறு ராமர் நின்ற இடமே இன்று ஊராகி, ராமர் கோவில் என வழங்கப்படுகிறது.

ராமாவதாரம் நிறைவடைந்து கிருஷ்ணர் அவதரிக்க வேண்டிய காலம் வந்தது. விசுவாமித்திரர் மற்றும் சப்தரிஷிகள் ராமனின் திருக்கல்யாணக் காட்சியைக் காண விரும்பினர். அதற்காக குஸஸ்தலை ஆற்றின் கரையில் ஒரு பெரிய யாக வேள்வி நடத்தினர். ராமனும் சீதையும் திருமணக் கோலத்தில் காட்சிதர, அருகில் லட்சுமணன் துணை நிற்க, அனுமன் கைபொத்தி வணங்க, அங்கிருந்த அனைவருக்கும் காட்சி தந்தனர். பின்னர் உலக மக்கள் அனைவரும் வழிபட வேண்டி, இத்தலத்திற்கு அருகில் பர்ணசாலையில் தவம் செய்து கொண்டிருந்த சாலிஹோத்ர மஹரிஷி, ஸ்ரீலட்சுமணன் உடனுறை சீதாதேவி சமேத தாசரதி கல்யாணராமர் பிரதிஷ்டை செய்து கோவிலை உருவாக்கினார். முன்பு ராமன் நின்ற அந்த இடம், திருமணக்கோல ராமன் காட்சி தந்த அந்த கிராமமே,பின்பு ராமன் கோவில் என்று ஆனது.

கருவறையில் மூலவராக, ஸ்ரீ ராமர், ஸ்ரீலட்சுமணன், சீதாபிராட்டி, அனுமன் ஆகியோர் உள்ளனர். ஆனால் மற்ற ராமர் கோவில்களில் உள்ளது போல் இல்லாமல், இங்கே சீதை ராமனுக்கு வலது புறத்திலும், லட்சுமணன் இடது புறத்திலும், அனுமன் ராமருக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தத்துடன் இருக்கிறார். வலது புறத்தில் சீதையுடன் கல்யாணக்கோலத்தில் நின்றதால் தந்தை பெயருடன் சேர்த்து தாசரதி கல்யாணராமன் சந்நிதி என்று அழைக்கிறனர்.

பிரார்த்தனை

இக்கோவிலில் ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வோருக்கு திருமணம் கைகூடும். திருமணத் தடை, குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இங்கு சீதைக்கு மஞ்சள் கிழங்கு மாலை சாற்றி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கருவறையில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமிக்கு செந்தூரக்காப்பு பிராத்தனை செய்து கொண்டால், வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில்

பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில்

நவபாஷாணத்தால் ஆன அபூர்வ பைரவர்

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சமீபவல்லி.

இக்கோவிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். இந்த காசி பைரவரின் சிறப்பு என்னவென்றால் இவர், பழனிமலை தண்டாயுதபாணியை போல், நவபாஷாணத்தால் ஆனவர். இச்சிலையை போகர், பழனிமலை தண்டாயுதபாணிக்கு முன், பிரதிஷ்டை செய்தார். இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில், பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில், முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர்.

நீல நிறமாக மாறும் நைவேத்திய பொருட்கள்

இந்த காசி பைரவர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார் அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி பாலதேவர் இருக்கிறார். இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரிலும், சார்த்தும் வடைமாலையிலும் கூட விஷமேருகிறது. இதனால் நீரும், வடைமாலையும் சில மணி நேரங்களில் நீல நிறமாக மாறி விடுவது அதிசயம். ஆகையால் தீர்த்தமோ,வடைமாலையோ இங்கு பிரசாதமாக தருவது கிடையாது. இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் சன்னிதியின் கூரை மீது போடப்படும். வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்

இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது. இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு . பக்தர்கள் பைரவரின்பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். வன்னி மரத்தின் அடியிலிருந்து அவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள். பௌர்ணமி அன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை சிறப்பு

பொதுவாக கோவில்களில் நடக்கும் ஒவ்வொரு பூஜையும் சிறப்புக்குரியது. காலை பள்ளியறை பூஜை துவங்கி, இரவு பள்ளியறை பூஜை வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு பலன் உண்டு. ஆனால் அவற்றில் சகல நலன்களையும் பெற்று தருவதும், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியதுமான முக்கிய பூஜை, இரவு பள்ளியறை பூஜை ஆகும். மேலும், சிவன் கோவில்களில் நடக்கும் பள்ளியறை பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும். அதாவது சுவாமி, தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதியில் எழுந்தருளி, சிவ சக்தி ஐக்கியமாக நடத்தப்படுவது தான் இந்த பள்ளியறை பூஜை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினசரி நடைபெறும் பள்ளியறை பூஜையை காண்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும் . மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பள்ளியறை, அம்மன் சன்னிதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து இருப்பார்கள். இரவு பள்ளியறைக்கு சுந்தரேசுவரரின் வெள்ளி பாதுகைகள் சுவாமி சன்னிதியில் இருந்து பள்ளியறைக்கு வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி, அதாவது மூக்குத்தி தீபாராதனை நடைபெறுகிறது. அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும். அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும்போது மிகத் தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னிதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாகத் தள்ளப்பட்டு விடும். மூக்குத்தியானது ஒரு செயினு டன் இணைக்கப்பட்டு அந்த செயினில் இன்னொரு பகுதி அம்மனின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு செய்த பிறகு அன்னையின் சார்பாக பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதன்பின்னர் அம்பிகையின் சன்னிதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை , பால், பழங்கள், பாடல்கள், இசை என்று சகல உபச்சாரங்களுடன் இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பள்ளியறை பூஜையை காண முடியும்.

பள்ளியறை பூஜை தரிசன பலன்கள்

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும் கணவனின் நோய் தீரவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

அற்புதமான வாரிசுகளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமை அன்று நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசனம் செய்ய வேண்டும்.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், சண்டை நீங்கி சமாதானம் ஏற்படவும் ஞாயிறு அன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

பள்ளியறை பூஜைக்கு பால் வாங்கித் தருபவர்கள், நைவேத்தியம் செய்து தானம் கொடுப்பவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த பிள்ளைகள் பிறப்பார்கள். பல தலைமுறைக்கும் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும்.

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிகள் பங்கேற்று பசுவிற்கு பழங்கள் கொடுத்து வர சுகப்பிரசவம் ஏற்படும். நெய்வேத்திய பாலை தானும் குடித்து மற்றவர்களுக்கும் தானம் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

பள்ளியறை பூஜை முடிந்து அன்னதானம் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி அடையும். லாபம் பல மடங்கு கிடைக்கும்.

பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களின் கண் பிரச்னைகள் தீரும்.

பள்ளியறை பூஜையை தினமும் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும்.

Read More
கோலார் கோலாரம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கோலார் கோலாரம்மன் கோவில்

சிற்ப கருவூலமாக விளங்கும் கோலாரம்மன் கோவில்

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கோலாரில் அமைந்துள்ளது, கோலாரம்மன் கோவில். கோலார் மக்கள் பார்வதி தேவியை, கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர். பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்று பெயர். இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்து பாதிப்பு ஏற்படும்போது, இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.

ராஜராஜ சோழன் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டிய கோவில்

கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் கோலார் பகுதியை கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 - 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள், குவளாலநாடு (கோலார்), நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. கோலார் நகரை, சோழர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட நாட்கள் வைத்திருந்தமைக்கு பிரதான காரணமே அது தங்க பூமி என்பதாலேயே என்கின்றனர் சில வரலாற்று அறிஞர்கள். கோலார் நகருக்கு பெருமை சேர்பதாக இருப்பது முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் கட்டிய உலகப் புகழ்பெற்ற, இந்த கோலார் அம்மன் கோவிலாகும்.

இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டுமே சப்த மாதர்களுக்காக முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்டவை. குறிப்பாக போரில் வெற்றியை பெற்றுத்தரும் கடவுள்களான சப்த மாதர்களுக்காக (சாமுண்டி) இக்கோவில் கட்டப்பட்டதாகும்.

மிரள வைக்கும் போர்க்களக் காட்சியின் சிற்பத் தொகுப்பு

கோலார் அம்மன் கோவில் ஒரு சிறந்த சிற்ப கருவூலமாக விளங்குகிறது. குறிப்பாக இக்கோவிலின் முதல் பிரகாரத்தின் நுழைவாயிலின் வடக்கு பகுதி மண்டபத்தில் சுமார் ஐந்து அடி, உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட கற்பலகையில் இரு நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நேரடிக் காட்சி அப்படியே சிற்பமாக்கப் பட்டுள்ளது. சிற்ப தொகுப்பின் மேற்புறம் அரசன் போர்க்களம் புறப்படும் காட்சியும். பிறகு போர்களத்தில் தங்கியிருக்கும் காட்சியில் ஆடல் மகளிர் நடனம்புரியும் காட்சியும் உள்ளன. மறுநாள் போர் ஆரம்பம். இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் போர்களக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் யானை ஒன்று போர்க்களத்தில் எதிரி படையினரை நோக்கி வேகமாக தாக்குதல் நடத்த ஓடிவரும் காட்சி பார்ப்பவரை மிரளவைக்கிறது. அதைத் தொடர்ந்து குதிரை வீரனின் வாள் வீச்சில் எதிரி வீரன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு தலை வேறு உடல் வேறாக கிடக்கும் காட்சியில் போரின் உக்கிரத்தை காண முடிகிறது.

மேலும் குதிரையின் காலடியில் வீரன் ஒருவனின் உடல் இரண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி பார்ப்பவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சிற்பத் தொகுப்பின் கீழ் பகுதியில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கழுகு கொத்தி தின்னுவது போன்றும், நரியொன்று இறந்த வீரனொருவனின் உடலில் இருந்து சதைகளை பிய்த்து தின்னுவது போன்ற சிற்பங்களில் போரின் கொடூரத்தை உணரமுடிகிறது.

மொத்தத்தில் இந்த சிற்பத்தை பார்ப்பவர்களுக்கு அந்தகால போர்களத்திற்கு நம்மை கூட்டி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ஒரு போர்க் களத்தின் நேரடி காட்சியைத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ள முதல் சிற்பத் தொகுப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும்.

Read More
தேப்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விஸ்வநாத சுவாமி கோவில்

இடுப்புக்குக் கீழே இடக்கையை ஒய்யாரமாக வைத்துக்கொண்டு, ஆணவத்தோடு நிற்கும் சனி பகவான்

தஞ்சாவூர் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலிலிறந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இத்தலத்து இறைவன் திருநாமம் விஸ்வநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்தநாயகி.

இத்தலத்தில் அம்பிகை சன்னதியின் எதிரில் மகாபைரவர் என்ற பெயரில் ஐந்தடி உயர திருமேனியுடனும், சாந்த பைரவர் என்ற பெயரில் சிறிய உருவத்துடனும் இரண்டு பைரவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக, ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்ற அகந்தையுடன் இறைவனைப் பார்த்த வண்ணம் நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார். இப்படி இவர் நிற்பதற்கு பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால், அம்பாளிடம் சென்று, நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது சிவபெருமானைப் பிடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள். எப்படியும் சிவபெருமானை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், மறுநாள் சிவபெருமானைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை. சிவபெருமானைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். சிவபெருமானும் அப்படியே செய்தார். அங்கு வந்த சனி பகவான அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து சிவபெருமான் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்று விட்டார் சனிபகவான். ஏழேகால் நாழிகை கழிந்ததும் சனிபகவான் அங்கிருந்து மெதுவாக நகரத் தொடங்கினார். அப்போது அம்பாள் சனி பகவானைப் பார்த்து என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா? என்று கேட்டாள். அதற்கு சனிபகவான் நான் வந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இறைவனே அரச மரத்தின் பின்பக்கம் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது அல்லவா? அதுவே நான் அவரை பிடித்த நேரம் என்று ஆணவத்துடன் சொன்னான். அதுமட்டுமில்லாது இடுப்பில் கைவைத்து சற்று ஒய்யாரமாக அம்பிகை முன் நின்றான்.

சனி சொல்வதைக் கேட்டுக கொண்டிந்த சிவபெருமான் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான சிவபெருமானை நோக்கி, ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி நான் இயங்குகிறேன். நான் இல்லையேல், உலகில் ஆணவக்காரர்களும், அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான இரண்டு கூரான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

Read More
சிலம்பிமங்கலம் சிலம்பியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிலம்பிமங்கலம் சிலம்பியம்மன் கோவில்

தில்லை காளியின் மறுவடிவமான சிலம்பியம்மன்

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது, சிலம்பிமங்கலம். சிலம்பிமங்கலம் கிராமத்தில் அடர்ந்த முந்திரிக்காடு மத்தியில் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்தால், ஒரு பெரிய மணல் மேடு வரும். இந்த மணல் திட்டு 10 அடி உயரம் உள்ளது. கால்கள் மணலுக்குள் புதைய நடந்து சென்றால், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதன் கீழ் தான், சிலம்பியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.

கருவறையில் சிலம்பியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவருக்கு வலதுபுறம் 3 அம்மன்களும், இடதுபுறம் 3 அம்மன்களும் அருள்பாலிக்கிறார்கள். ஒரு முறை சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கும். தில்லை காளிக்கும் நடனத்தில் போட்டி உண்டானது. அப்போது ஈசனுடன், தில்லைக்காளி அம்மன் ஆக்ரோஷமாக நடனம் ஆடினாள். அவளின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவளது காலில் இருந்து சிலம்பு ஒன்று கழன்று ஓரிடத்தில் போய் விழுந்தது. அந்த இடம்தான் சிலம்பிமங்கலம் என்று தல புராணம் சொல்கிறது. சிலம்பிமங்கலத்தில் விழுந்த அந்த சிலம்பு உடைந்து, அதில் இருந்த 7 முத்துக்களும் சிதறி விழுந்தன. அவற்றில் இருந்து 7 அம்மன்கள் தோன்றினர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த அம்பாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய 7 சக்திகளும், நாங்கள் மணல் திட்டின் மேல் வீற்றிருக்கிறோம் என்று தெரிவித்தனர். அவர் ஊர் மக்களிடம் இது பற்றி சொல்லி, ஊர்மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு மணல் திட்டின் மேல் பகுதியில் அமர்ந்த கோலத்தில் 7 அம்மன் சிலைகள் காணப்பட்டன. அம்மன் சிலைகள் கிடைத்த இடத்திலேயே அந்தப் பகுதி மக்கள் கோவில் எழுப்பினர்.

கோவிலில் நடுநாயகமாக கையில் சிலம்போடு சிலம்பியம்மனும், அவளுக்கு வலது புறத்தில் பிரம்ஹி, வைஷ்ணவி, ருத்ராணி ஆகியோரும். இடதுபுறத்தில் கவுமாரி, வாராகி, இந்திராணி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன். தில்லை காளியின் மறுவடிவம் என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது. அதாவது இந்த ஆலய சன்னிதிகளில் அருள்பாலிக்கும். தெய்வ சிலைகள் அனைத்தும், இந்த ஆலயம் இருக்கும் பூமியின் அடியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டவை.

அம்மனுக்கு முந்திரி மாலையை நேர்த்திக் கடனாக செலுத்தும் விவசாயிகள்

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மனை குலதெய்வமாகவும், ஊரின் காவல் தெய்வமாகவும் இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான விவசாயமாக இருக்கிறது. இதனால் முந்திரி விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி, விவசாயிகள் அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். இன்றளவும் அமோகமான விளைச்சலை பெறும் விவசாயிகள், அதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், முந்திரியால் ஆன மாலையை அம்மனுக்கு அணிவித்து தங்களின் நன்றிக்கடனை செலுத்துகிறார்கள்.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தை குடைபோல் இருந்து காத்து வரும் பழமையான ஆலமரம் இத்தலத்தின் சிறப்புக்குரியதாகும். திருமணம் தடைபடும் பெண்கள், 'ஓம் சக்தி.. பராசக்தி..' என்று உச்சரித்தபடியே இந்த ஆலமரத்தை 7 முறை சுற்றி வந்து வணங்கினால், மனதுக்குப் பிடித்த வரன் விரைவில அமையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

Read More
குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில்

ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் அபூர்வ விநாயகர்

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி-செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள தூசி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1½ கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற தலம் குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் இறையார் வளையம்மை.

சிவாலயத்தில், சிவலிங்கத் திருமேனியின் கீழ் பாகமான ஆவுடையார், சக்தியின் அம்சமாக இருக்கின்றது. இங்குள்ள விநாயகர், தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இப்படி ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் விநாயகரை காண்பது அரிது.

இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன், இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பாகும்.

Read More
வேளச்சேரி யோக நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வேளச்சேரி யோக நரசிம்மர் கோவில்

மூலவர் நரசிம்மருக்கு எதிரில் கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதன் இருக்கும் அபூர்வ காட்சி

சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் கோவில். மூலவரின் திருநாமம் யோக நரசிம்மர். தாயாரின் திருநாமம் அமிர்தபாலவல்லி. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சதுர்வேதிமங்கலம் /வேதநாராயணபுரம், அதாவது நான்கு வேதங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்ட இடம் இத்தலம் ஆகும். வேள்விகள் நிறைய நடந்ததால் வேதஸ்ரேணி, வேள்விச்சேரி என்ற பெயர் கொண்ட இந்த இடம், பிற்காலத்தில் வேளச்சேரி என மறுவியதாம்.

மூலவர் யோக நரசிம்மர் மிக அழகாக கம்பீரமான தோற்றத்துடன், நான்கடி உயர திருமேனி உடையவராய். நான்கு கரத்துடன் யோக நிலையில் அருள் செய்கிறார் . இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரம் வைத்துள்ளார் , மற்ற இரு கைகளையும் தன் கால்களின் முட்டியின் மீது வைத்துள்ளார். இங்கு மூலவர் யோக நரசிம்மர், சிறுவன் பிரகலாதனுடன் உரையாடுவதற்கு வசதியாக, சந்நிதிக்கு எதிரே கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதன் நிற்கிறார். இப்படி மூலவருக்கு எதிரே பிரகலாதன் எழுந்தருளி இருப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

இங்குள்ள வேதநாராயணப் பெருமாள் தன கையில் உள்ள சுதர்சன சக்கரத்தை, அசுரர்களின் மீது வீசுவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதும் ஒரு அரிய காட்சியாகும். இக்கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ள ராமபிரானின் உற்சவ மூர்த்திக்கு, வில்லில் பூ முடிந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

Read More
ஞானமலை முருகன் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

ஞானமலை முருகன் கோவில்

முருகனின் திருவடி பதிந்த திருப்புகழ் தலம்

சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில், சோளிங்கரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஞானமலை முருகன் கோவில். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு செல்ல 150 படிக்கட்டுகள் உள்ளன. அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.

கோவில் கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டிதசுவாமி காட்சி அளிக்கிறார். ஒருமுகம், நான்கு கரங்கள், பின் இரு கரங்களில். கமண்டலம், ஜபமாலை, முன்வலக்கரத்தில் அபயமுத்திரை, முன் இடக்கரம் இடுப்பில் வைத்து, முருகப்பெருமான் நின்ற கோலத்தில், 'பிரும்மசாஸ்தா' வடிவத்தில்' காட்சி அளிக்கிறார். வள்ளியை மணந்துகொண்டு முருகப்பெருமான் இங்கு வந்தபோது, இம்மலையில் முருகன் வள்ளியோடு உலாவினார். இம்மலையில் முருகப்பெருமானின் திருவடி பதிந்துள்ள புனிதமான இடம் உள்ளது.'ஞானம்' என்பதற்கு திருவடி என்றும் பொருள். எனவே, ஞானமலை என்பதை திருவடி மலை என்றும் கூறலாம்.

அருணகிரிநாதருக்கு முருகனின் திருவடி தரிசனம் கிடைத்த ஞானமலை

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனித்தபோது முருகப்பெருமான் தனது திருவடிகளை அவருக்கு காட்சி தந்து ஆட்கொண்டான். முருகனின் திருவடியை மறுபடியும் தரிசிக்க வேண்டிய அருணகிரிநாதருக்கு, மீண்டும் ஞானமலையில் அவருக்கு திருவடி தரிசனம் தந்து அருளினான். கோவில் தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த 'குறமகள் தழுவிய குமரன்' வடிவம், வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவமாகும். நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் அரிய வடிவம். அருகில், அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக்காட்சியைக் கண்டு இன்புறுவார்.

ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய மூன்று முருகன் தலங்கள்

ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும் வடகிழக்கில் தணிகை மலையும் வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கன் மலையும் அமைந்துள்ளன. வள்ளிமலை, தணிகைமலை, ஞானமலை, மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் மூன்று மலைகளையும் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

Read More
திங்களூர் கைலாசநாதர் கோவில்

திங்களூர் கைலாசநாதர் கோவில்

பங்குனி உத்திரத்தன்று சூரிய பூஜையும், பௌர்ணமி பிரதமையில் சந்திர பூஜையும் நடைபெறும் தலம்

திருவையாற்றில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவார வைப்புத் தலம் திங்களூர் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகளின் அவதாரத் தலம்.

சந்திரனின் சாபத்தைப் போக்கிய தலம்

நவக்கிரக தலங்களில் திங்களூர் இரண்டாவது தலமாகும். தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். ஒவ்வொரு நட்சத்திரமாக திகழும் 27 மனைவிகளிடமும், ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 நட்சத்திர மனைவிகளும் தங்கள் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் சமமாக அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். தட்சன் இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார். அதனால், இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் காணலாம்.

பங்குனி உத்திரத்தன்று சூரிய பூஜையும், பௌர்ணமி பிரதமையில் சந்திர பூஜையும் நடைபெறும் தலம்

ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு சூரியபகவான் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வணங்கி ஆராதனை செய்யும் சூரிய பூஜையும், மறுநாள் பௌர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும். இப்படி அடுத்தடுத்த நாட்களில் சூரிய பூஜையும், சந்திர பூஜையும் நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். அஸ்வினி, சுவாதி, மிருகசீரிடம், உத்திரம், திருவோணம், சதயம் மற்றும் ரேவதி போன்ற நட்சத்திர தினங்களிலும், சந்திரஹோரை வேளைகளிலும் இந்த கோவிலில் குழந்தைகளுக்கு சந்திரனையும், பசுவையும் காண்பித்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் பால், தேன் கலந்து குழந்தைக்கு சோறூட்டும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

Read More
மானூர்  சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மானூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

பங்குனி உத்திர திருவிழா - வாழைப்பழம் சூறை வீசும் விநோத நேர்த்திக்கடன்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மானூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடைபெறும் தேர் திருவிழாவும், அப்பொழுது பக்தர்கள் வாழைப்பழம் சூறை வீசும் நிகழ்ச்சியும், இப்பகுதி சுற்றுவட்டாரங்களில் மிகவும் பிரசித்தம்.

பங்குனி உத்திர திருவிழா முக்கிய நிகழ்வாக மூலவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மூலவர் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோர் சிறப்பு பூஜைகளுக்கு பின் ரதத்தில் எழுந்தருளுவார்கள். ஊரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ரத உற்சவம் நடைபெறும். தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் வாழைப் பழம் மற்றும் தானியங்கள், மிளகாய் வத்தல் ஆகியவற்றை சூறை வீசும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். சூறை வீசிய பழங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் மிகவும் ஆர்வமுடன் எடுத்துச் செல்வார்கள். இந்த சூறை வீசும் நிகழ்ச்சிக்கு ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வார்கள்.

Read More
திருமழிசை  ஒத்தாண்டேஸ்வரர்  கோவில்

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில்

சுவாமி கருவறை விமானத்தின் மேல் அறுபத்து மூவர் நாயன்மார்கள் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

சென்னைக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில்,பூந்தமல்லியை அடுத்து உள்ள திருமழிசையில் அமைந்துள்ளது ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குளிர்ந்த நாயகி. கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

அறுபத்து மூவர் நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சிவனடியார்கள் ஆவர் . நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை நமக்கு தரும் பாடமாக உள்ளது.

பல சிவாலயங்களில்அறுபத்து மூவர் நாயன்மார்களின் சிலைகள், இறைவன் கருவறையின் சுற்றுப்பிரகாரத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த அறுபத்து மூவர் நாயன்மார்கள் இறைவனோடு எழுந்தருளும் வீதி உலா அந்தந்த கோவில் பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும். இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில், 63 நாயன்மார்களும், இறைவன் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் இடம் பெறவில்லை. அதற்கு மாறாக சுவாமி கருவறை விமானத்தின் மேல் அவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி 63 நாயன்மார்களும் சுவாமி கருவறை விமானத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் காட்சியானது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.

Read More