பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில்

நவபாஷாணத்தால் ஆன அபூர்வ பைரவர்

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சமீபவல்லி.

இக்கோவிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். இந்த காசி பைரவரின் சிறப்பு என்னவென்றால் இவர், பழனிமலை தண்டாயுதபாணியை போல், நவபாஷாணத்தால் ஆனவர். இச்சிலையை போகர், பழனிமலை தண்டாயுதபாணிக்கு முன், பிரதிஷ்டை செய்தார். இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில், பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில், முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர்.

நீல நிறமாக மாறும் நைவேத்திய பொருட்கள்

இந்த காசி பைரவர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார் அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி பாலதேவர் இருக்கிறார். இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரிலும், சார்த்தும் வடைமாலையிலும் கூட விஷமேருகிறது. இதனால் நீரும், வடைமாலையும் சில மணி நேரங்களில் நீல நிறமாக மாறி விடுவது அதிசயம். ஆகையால் தீர்த்தமோ,வடைமாலையோ இங்கு பிரசாதமாக தருவது கிடையாது. இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் சன்னிதியின் கூரை மீது போடப்படும். வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்

இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது. இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு . பக்தர்கள் பைரவரின்பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். வன்னி மரத்தின் அடியிலிருந்து அவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள். பௌர்ணமி அன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

நவபாஷாணத்தால் ஆன பைரவர்

முன்மண்டபத்தில் இருக்கும் பைரவர்

 
Previous
Previous

ராமர் கோவில் தாசரதி கல்யாணராமர் கோவில்

Next
Next

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்