அகரம் (தாடிக்கொம்பு) முத்தாலம்மன் கோவில்

கைகளில் அட்சய பாத்திரம் ஏந்தி நிற்கும் மூன்று அம்பிகையர்

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் தாடிக் கொம்பு உள்ளது. இவ்வூரில் இருந்து ஒரு கி.மீ., சென்றால் அகரம் முத்தாலம்மன் கோவிலை அடையலாம். முத்தாலம்மன் சக்தி வாய்ந்த நாட்டுப்புற பெண் தெய்வமென்பது நம்பிக்கை. கொங்கு நாட்டில் எல்லா கிராமங்களிலும் முத்தாலம்மன், குலதெய்வமாக வணங்கப்படுகிறார். முத்தாலம்மனுக்கு தோன்றிய முதல் இடமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில், ஊருக்கு 'அகரம்' என்ற பெயர் ஏற்பட்டது.

கருவறையில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்றையும் அருளும் மூன்று அம்பிகையர் நின்ற கோலத்தில் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். இதனால் இவர்களிடம் கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பக்தர்கள் வேண்டுதலுக்கும், கோவில் திருவிழா நடத்துவதற்கும் பல்லி சத்தம் கேட்கும் நடைமுறை

கோவிலில் கருவறைக்கு இரு பக்கங்களிலும் பூதராசா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, புதிதாகச் செயல் தொடங்க, நிலம், வீடு குறித்த பிரச்னைகள் தீர பூதராசாவிடம் வேண்டுகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராசா முன் நின்று கொண்டு, தங்கள் வேண்டுதல்களைச் சொல்வர். அந்த சமயம், பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை தொடங்குகின்றனர். இந்த நேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப் போட்டு விடுகின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை திருவிழா நடத்தப்படும். முன்னதாக ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமையன்று அம்மன் சன்னதியில் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். அப்போது கோயில் பிரகாரத்தில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்கு பிரகாரத்தில் உள்ள திருவாச்சி சிலை பக்கமோ பல்லி சத்தம் கேட்கும். அந்த சத்தத்தையே அம்மனின் உத்தரவாக நினைத்து திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு வேண்டும் போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூத ராஜா சிலை இருக்கும் இடத்தில் பல்லி சத்தம் கேட்டால் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை என கருதப்பட்டு திருவிழாவும் நடத்தப்படாது. மேலும் பல்லி சத்தம் கொடுக்கவில்லை என்றாலும் திருவிழா நடத்தப்படாது.

அம்மன் உத்தரவு கிடைத்ததும், ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாரம்பரிய முறைப்படி அடிப்படையில், திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த நாள் திங்கட்கிழமை முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டார பெட்டி சன்னதியில் இருந்து புறப்பட்டு, கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

மண்ணால் உருவாக்கப்படும் அம்மனின் உற்சவமூர்த்தி

உற்சவ காலத்தில் அம்மனின் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை, முட்டை, களிமண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு விழா சாட்டப்பட்ட 6ம் நாள் உற்சவ கால அம்மன் உருவாக்கப்படுகிறது. அதையடுத்து உற்சவ கால அம்மன் கண்திறப்பு மண்டபத்துக்கு எடுத்துச்சென்று அம்மனின் கண்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி கொலு மண்டபத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

அப்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அத்துடன் தங்களது நிலத்தில் விளைந்த கம்பு, சோளம், நெல், மக்காச்சோளம், வாழைப்பழம் ஆகியவற்றை சூறையிட்டும், கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு பொம்மைகளை காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

பத்தாம் நாளில் மண்ணால் செய்யப்பட்ட அம்பிகை, சொருபட்டை என்னும் விமானத்தில் பூஞ்சோலை எனப்படும் மைதானத்திற்கு செல்வாள். மழையில் கரையும் விதமாக அமைக்கப்படும் விமானம் இது. மைதானத்தில் சிறப்பு பூஜை செய்தபின், அம்பிகையை அங்கேயே வைத்து விடுவர். அதன்பின் மூன்று, நான்கு நாட்களுக்குள் மழை பெய்து சிலை கரைந்து விடும்.

 
Previous
Previous

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்

Next
Next

தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்