தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்

வயிற்றில் கயிற்றால் கட்டிய வடுவுடன் காட்சி அளிக்கும் பெருமாள்

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இத்தலத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாமோதரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் திருமாலழகி.

கேசவன், நாராயணன், மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. மூலவர் தாமோதரப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

ஆயர்பாடியில், நந்தகோபர் யசோதை தம்பதியின் மகனாக, திருமால் கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார். சிறுவனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித குறும்பு விளையாட்டுகளை நடத்தினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி, யசோதையிடம் முறையிட்டனர். கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, யசோதை அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள். அப்போது கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.. அதனால் தாமோதரன் எனப் பெயர் பெற்றான். 'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் 'வயிறு'. அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர், இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.

குழந்தை கண்ணன் வயிற்றில் கட்டிய கயிற்றின் வடுவானது இன்றும் அபிஷேகத்தின் போது மூலவர் விக்கிரகத்தில் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று தாமோதர பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடக்கும்.

நின்ற கோலத்தில் அருள்புரியும் தாமல் ஸ்ரீ தாமோதர பெருமாள், கிடந்த கோலத்தில் காட்சி அருளும் திருப்பாற்கடல் மற்றும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருப்புட்குழி ஆகிய மூன்று வைணவ தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை

இத்தலத்தில் பெருமாளிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தாமோதரப் பெருமாளுக்கு தங்கள் காணிக்கையாக வெள்ளிக் கொலுசை அணிவிக்கின்றனர்.

Read More
அனுமன் சாலிசா
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அனுமன் சாலிசா

அனுமன் சாலிசாவின் சிறப்புகள்

ஆலயத்துளிகள் தனது நான்காம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.

வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுகுமார் & பல்லவி

துளசி இராமாயணம் என்பது துளசிதாசர் என்று அழைக்கப்படும் இராம்போலா துபே எழுதிய நூலாகும். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் ராமர் மீதான பக்திக்கு புகழ்பெற்றவர். துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். இவர் வாரணாசியில், அனுமன் தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.

துளசிதாசர் காட்டிலே வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர்மீட்டார். இந்தச் செய்தியானது முகலாய அரசர் அக்பர் செவிக்கும் எட்டியது. இதனால் அக்பருக்கு துளசிதாசரை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எவ்வாறேனும், துளசிதாசரை தன் தர்பாருக்கு அழைத்து வந்து, நேரடியாக அவர் செய்யும் அற்புதத்தைக்கண்டு ரசிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். அரசவைக்கு அழைத்து வரப்பட்ட துளசிதாசரிடம் அக்பர், ராமனின் அருளாலும், உங்களின் அருளாலும், இறந்தவரின் உயிரை மீட்டது போல, என்னுடைய அரசவையிலும் ஒரு அற்புதத்தை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு, நான் மாயாஜாலக்காரன் அல்ல. ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி தினம் ஒரு பாடலாக, சிறையில் இருந்தபோது 40 நாட்கள் அவர் எழுதிய 40 பாடல்கள் தான் அனுமன் சாலிசா.

முகலாய அரசர் அக்பரை பணிய வைத்த அனுமன் சாலிசா

அனுமன் சாலிசாவை துளசிதாசர் எழுதி முடிக்கும் தருவாயில் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது நகரம் முழுவதும் பெரிய குரங்கு கூட்டம் ஒன்று புகுந்தது. அந்தக் குரங்குகள் சேட்டைகள். அரண்மனை, அந்தப்புரம், கடைவீதிகள், தோட்டத்துரவுகள், மரங்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் தங்கள் சேட்டைகளை செய்யத் தொடங்கின. மக்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர். இதனைக் கண்ட அக்பர், செய்வது தெரியாது குழப்பம் அடைந்தார். ஹஜித் என்ற ஒரு பெரியவர், மன்னரிடம் சென்று, 'துளசிதாசரிடம் நீங்கள் கேட்ட அற்புதம் நிகழ்ந்து விட்டது. ராமதூதனுடைய அவதாரமான குரங்குகள் படையெடுப்பின் மூலம், ஒவ்வொரு மக்களுக்கும் ராம தரிசனம் கிடைத்து விட்டது. எனவே துளசிதாசரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறினார். துளசிதாசரை விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார். துளசிதாசரிடம், 'குரங்குகள் தொல்லையினால் நகர மக்கள் அவதிப்படுகிறார்கள். குரங்குகள் இங்கிருந்து மீண்டும் காட்டுக்குச் செல்ல தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும்' அக்பர் கேட்டுக் கொண்டார். உடனே துளசிதாசர் அனுமனிடம் மக்களின் துயரத்தை நீக்குமாறு வேண்டிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார். துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்திருந்த பொழுது, நகரத்தில் ஆங்காங்கே சேட்டை செய்து கொண்டிருந்த குரங்குகள் மாயமாக மறைந்தன. இதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். குரங்குகள் மறைந்ததை எண்ணி, துளசிதாசரின் மகிமையை அக்பர் உணர்ந்தார். ராமனின் பெருமையை அறிந்தார்.

அனுமன் சாலிசாவின் பலன்கள்

அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களுக்கும் , ஒரு நற்பலனை பெற்றுத் தரும் தன்மை உண்டு. அதுபோல, 40 பாடல்கள் கொண்ட அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு பாடலும், ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் பக்தி அல்லது சிரத்தையைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள். அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள், தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு, அதிக ஆனந்தத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)

திருமால் திருமார்பில் இடம் பிடிக்க திருமகள் தவம் செய்த தலம்

கும்பகோணத்திற்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் நாதன்கோவில். பெருமாள் திருநாமம் ஜெகந்நாதன். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் கையில் மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள் வட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்த அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.

திருப்பாற்கடலில் திருமகள் எப்போதும் திருமாலின் பாதத்தருகே இருந்து சேவை சாதிப்பது வழக்கம். அவளுக்கு ஒருநாள் திருமாலில் திருமார்பில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் உதித்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டி செண்பகாரண்யம் (செண்பக மரங்கள் நிறைந்த வனம்) என்ற இத்தலத்துக்கு வந்து கிழக்கு நோக்கி தவம் புரிந்தாள். திருமகளின் பிரிவை திருமாலால் தாங்க முடியவில்லை. ஓர் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வெள்ளிக்கிழமை அன்று திருமகளை தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் திருமால். அதன் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.

செண்பக வனத்தில் தவம் செய்ததால் தாயாருக்கு செண்பகவல்லி என்ற பெயர் வழங்கலாயிற்று. தாயார் கிழக்கு நோக்கி தவம் செய்தாள். திருமால் அவளை மார்பில் ஏற்றதால் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இத்தல பெருமாள் ஜெகநாதன் என்பதால் இவ்வூர் நாதன்கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

திருமண தடை நீக்கும் செண்பகவல்லி தாயார்

திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர திருமணம் கைகூடும். பிரிந்திருக்கும் தம்பதிகள் இணையவும், தம்பதிகள் பிரியாமல் இருக்கவும், குடும்ப நலத்திற்கு உதவும் சுக்ல பட்ச அஷ்டமியில் இக்கோவிலில் ஸ்ரீ சூக்த ஹோமம் நடக்கிறது. ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் தாயாருக்குத் திருமஞ்சனம் செய்தால், குழந்தைப்பேறு உண்டாகும்.

Read More
நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)

மூலஸ்தானத்தில், பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தரும் நந்தியும், பிரம்மாவும்

தட்சிண ஜகந்நாதம் என்று போற்றப்படும் திவ்யதேசம்

கும்பகோணத்திற்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் நாதன் கோவில். பெருமாள் திருநாமம் ஜெகந்நாதன். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. இத் திவ்ய தேசம் 'தட்சிண ஜகந்நாதம்' என்று அழைக்கப்படுகிறது.

இத்தல பெருமாள் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் சிவபெருமானின் வாகனமாகிய நந்தியும், பிரம்மாவும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

நந்தி சாப விமோசனம் பெற்ற தலம்

ஒரு சமயம் நந்தி தேவர் திருவைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார். இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், நந்தி தேவரின் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். சாப விமோசனத்திற்காக சிவபெருமானிடம் தீர்வு கேட்டார். அதற்கு சிவபெருமான், 'சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்' என்றார். அதன்படி நந்தி தேவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார். அதன் பிறகு இத்தலம், நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் பெற்றது. நந்தி சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் சன்னதி, ஊர், தீர்த்தம் என அனைத்தும் நந்தியை முதன்மைப்படுத்தியே அமைந்திருக்கின்றது. இந்த தலத்தின் குளத்திற்கு நந்தி தீர்த்தம் என்றும், விமானத்திற்கு நந்தி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன.

சிபிச் சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலமாகும். தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார். காளமேகப் புலவர் இவ்வூரில் அவதரித்தவர்.

சந்திர தோஷ பரிகார தலம்

நந்தி சாபம் விலகி தலம் என்பதுடன், சந்திர தோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் உள்ளது. சந்திர தோஷம் நீங்க, வேண்டியது நிறைவேற, திருமணத் தடை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற, குழந்தை வரம் கிடைக்க, பிரிந்த தம்பதி ஒன்று சேர, நரம்பு நோய் நீங்க பக்தர்கள் இப்ப பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்

நவ நரசிம்மர் அருளும் தட்சிண அகோபிலம்

திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் தலம்

ஐந்து பெருமாள் எழுந்தருளி இருக்கும் பஞ்ச திருப்பதி தலம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 15 கி.மீ, தூரத்தில் அமைந்திருக்கிறது அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தட்சிண அகோபிலம் என்று சொல்லப்படும் இந்த நவநரசிம்ம தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி அவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட புராணத்தில் இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.

அவணியாபுரம் பஞ்ச திருப்பதி என போற்றப்படுகிறது. பிருகு முனிவருக்கு அருள் செய்ய, பெருமாள் அவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் கோலத்தில் இங்கு எழுந்தருளி அருள் புரிந்தார்.

இக்கோவில் சன்னதிகள் மலையில் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும், ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜபெருமாளும், ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர்.

கீழே குகை போன்ற கர்ப்பகிரகத்தில் லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம், சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம் அமைந்திருக்கின்றது. இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்தபிறகு, தட்சிணப் பகுதியில் இந்த மலைக் குகையில்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் பெருமாள். அவரே இப்போது மூலவராக உள்ளார். புராண காலத்தில் இந்தத் தலத்தில் ஸ்ரீநரசிம்மர் உக்கிரமாக இருந்தார். அவரின் சினத்தைக் குளிர்விக்க பிரம்மா இங்கே யாகம் செய்தார். அப்போது, யாகத் தீயால் பெருமாளின் திருமுகம் பின்னமானது. இதனால் பதறிப்போன திருமகள், நரசிம்மரின் திருமுகத்தை தான் ஏற்று பெருமாளின் மடியில் அமர்ந்து அருள் செய்யத் தொடங்கினாள். பெருமாளுக்காக, அவரின் முதல் அடியாரான கருடாழ்வாரும் சிம்ம முகம் தாங்கி சேவை புரிந்தார்.

லட்சுமி நரசிம்மர் கர்ப்பகிரகத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், 'தட்சிண அகோபிலம்' என்று போற்றப்படுகிறது.

பிரார்த்தனை

இந்தக் கோவிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

Read More
நாம மலை சீனிவாசப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாம மலை சீனிவாசப் பெருமாள் கோவில்

பூஜையின்போது திருமுகம் வியர்க்கும் பெருமாள்

சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் பெருமாள்

திருப்பதி ஏழுமலையான் தினமும் உறங்கி ஓய்வெடுக்க வரும் தலம்

சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் சீனிவாசப் பெருமாள், நின்ற கோலத்தில் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் நிறைய

திருப்பணிகள் செய்திருக்கிறார். மலை அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை, பக்தர்கள் நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.

இக்கோவிலில் பூஜையின்போது மூலவர் சீனிவாசப் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பது ஒரு அதிசயமான காட்சியாகும். மேலும் பெருமாள் இங்கு தரிசிக்கும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டுவதும் ஒரு ஆச்சரிய நிகழ்வாக இருக்கின்றது. மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தினமும் தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பக்தரின் வேண்டுதலுக்கு ஏற்ப பால் திரிந்து தயிராகும் அதிசயம்

ஒருமுறை இந்தக் கோவிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், 'ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை' என்றாராம். பக்தர்கள், அந்தக் குறையைக் களையும் விதமாக, ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டுதலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்து போனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை

இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர்.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

அனுமனை விழுங்கிய முதலை சிற்பம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷமாகவும் விளங்குகின்றது. இக்கோவிலில் இருக்கும் மண்டபத் தூண்கள், சிற்பங்கள், வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள் நம் முன்னோர்கள் சிற்பக் கலையில் அடைந்திருந்த மகோன்னத நிலையையும், பெருமையையும் உணர்த்துகின்றது.

இக்கோவில் சேசராயர் மண்டபத்தில் பல அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்மண்டபத்து தூண் ஒன்றில், முதலை ஒன்று அனுமனை விழுங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சுவாரசியமான, ஒரு ராமாயண நிகழ்ச்சி உள்ளது

ராமாயணத்தில், ராவணன் மகனான இந்திரஜித்துக்கும், லட்சுமணனுக்கும் இடையே போர் நடந்தது இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் வட்சுமணன் மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவரான சுசேனர் இமயமலையில் விளையும் சஞ்சீவினி என்னும் மூலிகையை கொண்டு வந்தால் குணப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். உடனடியாக இமயமலைக்கு விரைந்தார் அனுமன். இதையறிந்த ராவணன், தடைகளை ஏற்படுத்த அவற்றை அனுமன் முறியடித்தார். இமயமலைக்கு காலநேமி என்னும் அசுரனை அனுப்பினான் இந்திரஜித். காலநேமி மாரீசனின் மகன் ஆவார். சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அனுமன் அடைந்த போது, அங்கு முனிவர் வடிவில் நின்றிருந்தான் காலநேமி. முனிவரைக் கண்ட அனுமன் வணங்க, அருகில் இருந்த குளத்தைக் காட்டி, இதில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். உன் எண்ணம் ஈடேறும் என்றான். அனுமன் நீராடிய போது காலநேமியால் ஏவப்பட்ட மாய முதலை அவரை விழுங்கியது. அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு அனுமன் வெளியேறினார். அத்த முதலை ஒரு தேவனாக மாறியது. "என் பெயர் தான்யமாகி. சாபத்தால் முதலையாக குளத்தில் இருந்தேன். உங்களால் சாப விமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன். முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து, காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன், அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் சேசராயர் மண்டபத்தில் உள்ள தாணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

Read More
கோட்டைப்பட்டி  சென்றாயப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோட்டைப்பட்டி சென்றாயப் பெருமாள் கோவில்

சின்னஞ்சிறு பாலகனாக, தாடி மீசையுடன் காட்சி தரும் பெருமாள்

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில், 500 படிகள் கொண்ட மலையின்மீது அமைந்திருக்கிறது சென்றாயப் பெருமாள் கோவில். இக்கோவிலில் சின்னஞ்சிறு பாலகனாக, அதே நேரம் முறுக்கு மீசையும் தாடியுமாகப் பெருமாள், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். தாடி மீசையுடன் இருக்கும் பெருமாளுக்கு சங்கும் சக்கரமும் இல்லை. ஆனால் அவருக்கு, சங்கும், சக்கரமும் ஏந்திய திருப்பதி வேங்கடாசலபதி போன்று அலங்காரம் செய்யப்படுகிறது.

பெருமாள் தாடி மீசையுடன் காட்சி தருவதற்கான காரணம்

பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் கிருஷ்ணதேவராயர் வம்சத்தை சேர்ந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார். அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பாலகன் பால் அருந்திக் கொண்டு இருந்தான்.

இயற்கைக்கு மாறாக நடைபெற்ற அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போனார் சென்னம நாயக்கர். அவருக்கு, தான் சென்றாயப் பெருமாளே என்பதை உணர்த்தி, அங்கேயே கோவில் கொள்ள விரும்புவதாகவும், அவரும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுமே தனக்குப் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறினான் அந்த பாலகன்.

வம்சமே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சென்னம நாயக்கருக்கு, இறைவனின் அருளால் ஒன்றல்ல, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பிள்ளையே கோவிலில் பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவர். குழந்தை வடிவில் வந்து, சென்னம நாயக்கருக்கு அருள்புரிந்த இறைவன், அவர்களின் அடையாளமான தாடி மீசையுடனே காட்சி தருகின்றார்.

இக்கோவிலில், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பங்குனித் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, மூலவரே உற்சவராக வீதி உலா வருகிறார். மேலும், பெருமாள் குழந்தைத் திருவுருவம் ஏற்றிருப்பதால், கிருஷ்ண ஜயந்தி இங்கு மிகவும் விசேஷம். ஓணம் பண்டிகையன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலையை இவருக்கு அணிவிக்கிறார்கள்.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, குடும்பம் தழைக்க பெருமாளிடம் மக்கள் வேண்டிக்கொள்கின்றனர். சென்றாயர் சன்னதிக்கு வலப்புறம், சுவாமி பசுவிடம் பால் குடித்த இடத்தில் சித்திர ரத மண்டபத்தில் கிருஷ்ண மேடை என்ற பெயர் கொண்ட ஒரு மேடை உள்ளது பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த மேடையின் இரு மூலைகளில் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர் சற்று நேரத்தில் அவர்களது இரு கைகளும் ஒன்றாக கூடிவிடும். இதை, அச்செயல் நடக்க சுவாமி தரும் உத்தரவாகவே கருதுகின்றனர்.

Read More
ஆவூர்  லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆவூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்

கருவறை விமானத்து கலசம் கருங்கல்லால் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பு

கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள கிராமம் ஆவூர். இங்குள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் பழமை மிக்கது. தேவலோகப் பசுவான காமதேனு தனது பெண் நந்தினியுடன் இத்திருத்தலத்தில் தங்கி இங்கு எழுந்தருளி அற்புத சேவை சாதிக்கும் ஸ்ரீ லஷ்மிநாராயணப் பெருமாளைக் குறித்து நீண்ட காலம் தவம் இயற்றியதால், இத்தலத்திற்கு 'ஆ'வூர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது எனத் தல வரலாறு கூறுகிறது. 'ஆ'என்றால் 'பசு' என்று பொருள். கருவறையில் லட்சுமி நாராயணப் பெருமாள் தனது இடது கரத்தால் தாயாரை அரவணைத்து, வலது கரத்தால் பக்தர்களுக்கு அபயம் அருள் பாலிக்கிறார். பொதுவாக கோவில் கருவறை விமானத்தின் கலசங்கள் தாமிரம், தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவில் கருவறை விமான கலசம் கருங்கல்லால் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இத்தகைய அமைப்பை நாம் காண்பது அரிது.

வரப்பிரசாதியான ஜெயவீர ஆஞ்சநேயர்

மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமாகப் பூஜிக்கப்படும் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர், புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின மன்னராக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாக இருந்த அவதார புருஷர் ஆவார். பீஜப்பூர், கோல்கொண்டா, அஹமது நகர் ஆகிய மூன்று கல்தான்களுக்கும். விஜயநகர சாம்ராஜ்யத்திற்கும் நடந்த மிகப் பெரிய போரில், சூழ்ச்சிகளால் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. பின்னர் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர் பாரத தேசம் முழுவதும் பயணித்து 700க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் விக்ரகங்களை பிரதிட்டை செய்தார். அவர் பிரதிட்டை செய்தது தான் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர். சுமார் நான்கரை அடி உயரம் கொண்ட இந்த ஜெயவீர ஆஞ்சநேயர் வாலில் மணி கட்டிய கோலத்தில், தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். வலது கரம் பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாகவும், இடது கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்திக் காட்சியளிக்கிறார். பகைவர்களால் ஸ்ரீ அனுமனின் சிலா திருமேனிக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த மணியில் அதர்வண வேத மந்திரம் பிரயோகத்தையும் செய்தருளியுள்ளார் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர்.

பொதுவாக வாலில் மணி கட்டிய அனுமனை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். தெற்கு நோக்கியபடி வீற்றிருக்கும் இந்த அனுமனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. விரும்பிய வரங்களை தரும் சிறந்த வரப்பிரசாதியாக இவர் திகழ்கின்றார்.

Read More
தேன்கனிக் கோட்டை  பேட்டராய சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தேன்கனிக் கோட்டை பேட்டராய சுவாமி கோவில்

வேட்டையனாக வந்த பேட்டராய சுவாமி பெருமாள்

ஒசூர் அருகே தேன்கனிக் கோட்டையில் அமைந்துள்ளது பேட்டராய சுவாமி கோவில். தாயார் திருநாமம் சவுந்தர்யவள்ளி. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது

இக்கோவில். கருவறையில் பேட்டராய சுவாமியின் உருவம், திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் வெங்கடேஸ்வரரின் உருவத்தைப் போலவே நிற்கும் தோரணையில் உள்ளது.

அத்ரி மகரிஷி மற்றும் கன்வ மகரிஷி ஆகியோர் யாகம் நடத்தும் போது அதை கலைக்கும் எண்ணத்தோடு புலித்தோற்றத்தில் வருகிறார் யட்சன். இதைப் பார்த்த மகரிஷிகள் புலியை விரட்ட பெருமாளை அழைக்கின்றனர். அப்போது திருப்பதியில் இருந்து வேட்டையன் வடிவத்தில் வருகிறார் பெருமாள். புலியாக நின்ற யட்சனின் தலையில் பெருமாள் தான் வைத்திருந்த கதாயுதத்தை கொண்டு அடிக்க யட்சன் புலி தோற்றத்தை விடுத்து பழைய நிலையை அடைகிறார். கதாயுதத்திற்கு டெங்கினி என்ற நாமும் உண்டு. அதனால் இத்தலத்திற்கு டெங்கினிப்புரம் என்ற பெயர் ஏற்பட்டது. அது பின்னர் தேன்கனிக்கோட்டை என்று மாறியது.

வைணவ சம்பிரதாயத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு முக்கிய தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மேலக்கோட்டை ஆகிய தலங்களில் உள்ளவழிபாட்டு முறைகள் இத்தலத்தில் ஒருங்கே கடைபிடிக்கப்படுகின்றன

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களுக்கும் அருகாமையான பகுதி என்பதால் இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். வேட்டையனாக வந்த பேட்டராய பெருமாளை வணங்கினால், நம் பாவங்கள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
விஷ்ணு சஹஸ்ரநாமம்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்

சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். திருமாலின் ஆயிரம் திருநாமங்களை சொல்லி போற்றுவது விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். இது மகாபாரத போரின் போது அம்பு படுக்கையில் இருந்த பிதாமகன் பீஷ்மர், தர்மனுக்கு உபதேசித்ததாகும்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் உருவான கதை

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்து கொண்டிருந்த மகாபாரதப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்த நேரம் அது. பிதாமகர் பீஷ்மர் உத்திராயண காலத்தில் தன் உயிர் பிரிய வேண்டும் என்று அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறார். கொடையாளி கர்ணன் கிருஷ்ணரின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். குந்திதேவி இறந்த கர்ணனின் சடலத்தை தன் மடியில் கிடத்தி அவன் தான் தன் மூத்த மகன் என்று உலகறிய கதறுகிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.

அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து 'இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், 'இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப் போகிறாள் அவள்' என்றார்.

தர்மபுத்திரரைப் பயம் சூழ்ந்து கொண்டது. தங்கள் வம்சாவளியினர் நாடாளும் போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. ‘தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்’ என்று கிருஷ்ணனை தர்மர் கேட்க, கிருஷ்ணன் 'அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்' என்றார்.

பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார். 'இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள். அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர்களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள். படித்த வன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது. நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது. பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரி வர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்'

இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார்கள்.

'அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, 'நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்து நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்' என்று சொன்னார்.

அப்போது பீஷ்மரால் சொல்லப்பட்டதுதான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்.

அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை. பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று வியப்படையலாம்.

இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, 'சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டிதர்களால் சொல்ல முடியலாம். படித்தவர்களா ல் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?' என்று கேட்டாள். சிவபெருமான் புன்னகைத்தார்.'தேவி, நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.'

ஸ்ரீராம ராம ராமேதி

ரமே ராமே மனோரமே

ஸஹஸ்த்ர நாம தந்துல்யம்

ராம நாம வரானனே

இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்' என்று பார்வதிதேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் சிவபெருமான்.

அனைவருக்கும் நற்பலன்களை தரும் விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.

பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும் படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதியிருக்கிறார்கள்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது இறைவனின் கல்யாண குணங்களை தெரிவிக்கும்படியான திரு நாமாக்கள். பெருமாளுக்குரிய ஏகாதசி, திருவோணம் போன்ற நாட்களில் இந்த ஸ்லோகத்தை படிப்பது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும். இந்த ஸ்லோகத்தை அர்த்தம் புரியாமல் சொன்னாலும் கூட, முழு பலனும் கிடைக்கும். விஷ்ணுவின் திருநாமங்களிலேயே மிகவும் உயர்வானதாக கருதப்படுவது விஷ்ணு சகஸ்ரநாமம்தான். இதை காதால் கேட்டாலும் கூட மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை வாயால் உச்சரித்த பலன் கிடைக்கும். இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். இதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம்.

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசியின் சிறப்பு

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி 'வருதினி' என்றும், வளர்பிறை ஏகாதசி 'மோகினி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் விரதம் இருப்பது, இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைத் தரும்.

மார்கழி மாதத்தில் வருகின்ற வைகுண்ட ஏகாதசி பிரதானமான ஏகாதசி திதி என்றாலும், அந்த வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும், இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.

Read More
மருதூர்  நவநீத கிருஷ்ணர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மருதூர் நவநீத கிருஷ்ணர் கோவில்

குழந்தை வரம் அளித்திடும் நவநீத கிருஷ்ணர்

நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. மருத மரங்கள் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த ஊர் மருதூர் ஆனது. மருதூர் அணைக்கட்டின் அருகே தாமிரபரணி கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கருவறையில் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.

கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் டைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப்போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தப்படி சென்றான். அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளசுன், மணிக்ரீவன் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் நவநீத கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரம் அளித்திடுவார் என்பது ஐதீகம்.

Read More
ராமேசுவரம் அபய(வாலறுந்த) ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ராமேசுவரம் அபய(வாலறுந்த) ஆஞ்சநேயர் கோவில்

பக்தர்களின் பயத்தைப் போக்கும் வாலறுந்த ஆஞ்சநேயர்

ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அபய ஆஞ்சநேயர் கோயில். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது. பக்தர்களின் பயத்தைப் போக்கி காத்தருள்பவர் என்பதால் அபய ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றார். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வால் அறுந்த ஆஞ்சநேயர் என்று இரண்டு மூர்த்திகள் உள்ளனர். சிவலிங்கத்தை உடைக்க முயன்று வால் அறுந்ததால் இங்குள்ள ஆஞ்சநேயர் வால் அறுந்த கோலத்திலேயே காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் கடல் மணலில் உருவான ஒரு சுயம்பு ஆஞ்சநேயர் என்பது கூடுதல் சிறப்பு. அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே கோடி ராமாரக்ஷச மந்திர எழுத்துகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.

ராவணனை வென்று சீதையை மீட்டு வந்த ராமபிரானுக்கு தோஷம் பிடித்தது, இந்த தோஷம் நீங்க ராமர் அக்னி தீர்த்தம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய லிங்கம் எடுத்து வர, ஆஞ்சநேயர் கைலாயம் சென்றார். கைலாயம் சென்ற ஆஞ்சநேயர் திரும்பி வர தாமதமானதால் சீதாப்பிராட்டி மணலினால் ஆன லிங்கம் பிடித்து பூஜை செய்து வழிபட்டனர். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர் அதனை கண்டு கோபமுற்றார். கோபமடைந்த ஆஞ்சநேயர் தனது வாலால் லிங்கத்தை சுற்றி அதனை பெயர்த்து எடுக்க முற்பட்டார், அதனால் அவரது வால் அருந்ததுதான் மிச்சம். லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை. தான் செய்த தவறை உணர்ந்த ஆஞ்சநேயர் சிவ அபச்சாரம் செய்த குற்றம் நீங்க இவ்விடத்தில் தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஆலயத்தின் ஆஞ்சநேயர் வாலறுந்த நிலையில் மூலவராக காட்சி அளிக்கிறார். இதற்காக வாலறுந்த ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆஞ்சநேயர் உருவாக்கிய 'அனுமன் தீரத்தம்' கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் கடல் மண்ணில் உருவான சுயம்பு மூர்த்தியாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.

பிரார்த்தனை

இக்கோயிலில் இருக்கும் தல விருட்சமான அத்தி மரத்தில் இளநீரை கட்டி ஆஞ்சநேயரை வேண்டிக்கொள்கின்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது. உக்கிரமடைந்து சிவலிங்கத்தை உடைக்க முயன்ற ஆஞ்சநேயர் என்பதால் இவரை குளிர்விக்கும் விதமாக இவ்வாறு இளநீர் கட்டி வைத்து வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை பாக்கியம், பயம் மற்றும் மனக்குழப்பம் நீங்க, ஆபத்துகளிலிருந்து காத்து கொள்ள போன்ற பல காரணங்களுக்காக பக்தர்கள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.

Read More
காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்

கருடசேவையின் போது இராபர்ட் கிளைவின் ஆணவத்தை அடக்கிய வரதராஜப் பெருமாள்

வைணவத்தில் கோவில் என்றால் அது திருவரங்கம், மலை என்றால் திருமலை. பெருமாள் கோவில் என்றால் திருக்கச்சி என்பது சிறப்பு. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு உண்டு, திருமலையிலே ரதோற்சவம், திருவரங்கத்தில் குதிரை வாகன ஒய்யாளி, திருமாலிருஞ்சோலையிலே குதிரை வாகனம் சிறப்பு, திருக்கச்சியில் வரதருக்கு கருட சேவை சிறப்பு.

காஞ்சிபுரம் நகரில் வருடத்திற்கு மூன்று முறை கருட சேவை கொண்டாடப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய விழாக்களின்போது கொண்டாடப்படுகிறது.

தனது யாகத்தில் தோன்றிய ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்கு பிரம்மனே உற்சவம் நடத்தியதாகவும், அதன் வழியாக வருடாவருடம் வைகாசி பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேதாந்த தேசிகரை பெருமாள் வைகுந்தத்திற்கு அழைத்தபோது, இங்கு காஞ்சியில் மிகவும் கோலாகலமாக கருட சேவை நடைபெறுவது போல வைகுந்தத்தில் நடைபெறாதே என்று காஞ்சியிலேயே இருக்கின்றேன் என்று பதிலிறுத்தாராம்.

15ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவி காளமேகம் அவர்கள் இந்த அத்தி வரதனின் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது ஓளி மிக்க கருடன் மீது பொன் வண்ணத் திருமேனியுடன் அத்திவரதன் திருவீதி வலம் வரும் அழகைக் கண்டு இகழ்வது போல் புகழும் நிந்தாஸ்துதி வகையில் பாடியுள்ளார்.

இராபர்ட் கிளைவ் (1725 -1774) என்னும் ஆங்கில அதிகாரி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக காரணமாக இருந்தவர். காஞ்சிபுரத்தில் ஒரு கருடசேவையின் போது வரதராஜப் பெருமாள், இராபர்ட் கிளைவின் ஆணவத்தை நீக்கி தன் பக்தனாக்கிய நிகழ்வு மிகவும் சுவையானது. ஒரு வருடம், வரதராஜப் பெருமாள் கருடனில் ஆரோகணித்து பக்தருக்கு அருளிக்கொண்டு பவனி வரும் போது குதிரையில் வந்த இராபர்ட் கிளைவ், பவனியை நிறுத்துமாறு ஆணையிட்டான். அதற்கு பட்டர்கள் வெயில் அதிகமாக உள்ளதால் பெருமாளுக்கு ஆகாது. அவர் உடனடியாக திருக்கோவிலுக்கு திரும்ப வேண்டும் என்று பதிலிறுத்தனர். இதைக் கேட்ட இராபர்ட் கிளைவ், எள்ளி நகையாடினான். இது ஒரு சிலை, இதற்கு என்ன வெயில் என்று பரிகாசம் செய்தான். கோபம் கொண்ட ஒரு பட்டர் அவனிடமிருந்து ஒரு துணியைப் பெற்று பெருமாளின் திருமேனியை ஒற்றி அவனிடம் திருப்பித் தந்தார். சொத சொத என்று பெருமாளின் வியர்வையால் நனைந்த அந்த துணியைத் தொட்ட இராபர்ட் கிளைவ், மின்னல் தாக்கியது போல் அதிர்ந்தான். அவன் மனம் மாறியது. பெருமாளின் பக்தனானான். பெருமாளுக்கு ஒரு விலையுயர்ந்த மகர கண்டிகையை சமர்ப்பணம் செய்து வணங்கினான். இன்றும் இந்த மகரகண்டி பெருமாளுக்கு சிறப்பு நாட்களில் அணிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 22.5.2024 புதன்கிழமையன்று நடைபெறுகின்றது.

Read More
திருவாலி அழகிய சிங்கர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவாலி அழகிய சிங்கர் கோவில்

பத்ரிகாசிரமத்துக்கு இணையான திவ்ய தேசம்

108 திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலி அழகிய சிங்கர் கோவில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோவில் ஆகியன இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன. இவ்விரு கோவில்களும் ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகின்றன.

மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

நரசிம்ம அவதாரம் எடுத்த திருமாலுக்கு இரணியனை வதம் செய்த பிறகும் கோபம் தணியவில்லை. மகாலட்சுமி, அவரின் தொடையில் சென்று அமர்ந்ததும் நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்தமானார். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த கோலத்தில் நரசிம்ம பெருமாள், அழகிய சிங்கர் என்ற திருநாமத்துடன் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில் பெருமாளின் இடது புறத்தில் தான் லட்சுமி அமர்ந்திருக்கும் தோற்றம் இருக்கும். ஆனால் மிக அரிதாக இந்த தலத்தில், மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த காரணத்தால், இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும்.

பத்ரிநாத்தில் பெருமாளே குருவாகவும், தானே சீடனாகவும் இருந்து (நாராயணனாகவும், நரநாராயணனாகவும்) திருமந்திரத்தை உபதேசித்தார். பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. மகாலட்சுமி பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது, திருமங்கை மன்னை பெருமாளை வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கை மன்னனுக்கு காதில் அஷ்டாட்சர மந்திரத்தை ஓதி, உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில், திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெரும் விழா நடக்கின்றது.

Read More
அரியலூர் கோதண்டராமசாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அரியலூர் கோதண்டராமசாமி கோவில்

தேர் போன்ற வடிவில் கருவறை அமைந்திருக்கும் கோவில்

அரியலூர் நகரில் அமைந்துள்ளது மிகப்பழமையான கோதண்டராமசாமி கோவில். இந்த நகரத்தின் பெயர், அரி (விஷ்ணு)+இல் (உறைவிடம்)+ஊர் (பகுதி) . அதாவது, விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்று பொருள். இந்தப் பெயரே, பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.

இந்தக் கோவிலில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஒரே பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் எழுந்தருளி இருக்கும் கருவறையானது தேர் போன்ற வடிவில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

பெருமாளின் தசாவதார கோலங்கள்

இந்தக் கோவில் தசாவதார மண்டபத்தில் காட்சி அளிக்கும் பெருமாளின் தசாவதாரம் கோலங்கள் நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். ஒவ்வொரு தசாவதார கோலமும் ஆறரை அடி உயரத்தில், தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தசாவதாரம் மண்டபத்தில், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர்,

இரண்யவத நரசிம்மர், பிரகலாத நரசிம்மர் என்று நான்கு வித தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.

பிரார்த்தனை

இந்த கோவிலில் உள்ள கோதண்ட ராமரை தரிசித்தால் நம் வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமணம் கை கூடாதவர்கள் வழிபட்டால் விரைவில் வரன் கைகூடி வரும்.

Read More
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்

நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்

ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் பூவராகப் பெருமாள். தாயார் திருநாமம் அம்புஜவல்லி. பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் தோன்றிய எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களில் ஒன்று இத்தலம்.

பல நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இது. இக்கோவிலில் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட புருஷசூக்த மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம் உள்ளது. சிற்ப அழகு மிளிரும் நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. 72 பரதநாட்டிய நிலைகளுக்கான சிற்பங்கள் நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தின் பிற இடங்களில் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் பெண்களின் நீளமாகப் பின்னலிட்ட ஜடையும், ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் போன்ற அலங்கார அணிகலன்களின் அழகும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

Read More
தென்குடி திட்டை  நவநீத கிருஷ்ணன்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில்

அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் செந்தூர நிறத்திற்கு மாறும் அபூர்வ ஆஞ்சநேயர்

தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில். இக்கோவில், தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் (குரு பரிகார தலம்) அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ராம பக்த காரிய ஆஞ்சநேயர், மிகவும் பிரசித்தி பெற்றவர். இத் தலத்தில், வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு இவர் காட்சி தருகின்றார். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் செந்தூர நிறத்திற்கு மாறுவதை காணலாம். அப்போது அவர் முகத்தில் ஓடும் நரம்புகளையும் நாம் தெள்ளத்தெளிவாக தரிசிக்க முடியும்.

வேண்டும் வரம் உடனடியாக அருளும் ஆஞ்சநேயர்

மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு, இந்த ஆஞ்சநேயரின் சன்னதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள், இனிதே நிறைவேறும். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நீண்ட நாட்களாக,நிறைவேறாமல் தடைபட்டு வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது. கோவிலில் நுழையும்போதே, ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்தி விடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.

Read More
நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் கோவில்

தீபாராதனை காட்டும் போது கண் திறந்து பார்க்கும் அதிசயப் பெருமாள்

சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் நெற்குன்றம் வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளதுகரிவரதராஜ பெருமாள் கோவில்.

400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் கருவறையில், மூலவர் கரிவரதராஜ பெருமாள், ஐந்து அடி உயரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மற்றும் மார்பில் மஹாலக்ஷ்மியுடன் காட்சி தருகிறார். வலதுகரம் அபய ஹஸ்தம் உள்ளது. மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும், நாபியிலே சிம்ம முகம் இருப்பதும் தனிச்சிறப்பாகும்.

மூலவர் கரிவரதராஜ பெருமாளுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்டுவதற்குமுன் கருவறையில் உள்ள மின்விளக்குகள் அணைக்கப்படுகிறது. தீபாராதனை ஒளியில் பெருமாளின் திருமுகத்தை தரிசிக்கும் போது தீப ஒளியில் அதுவரை மூடியிருந்த இறைவனின் கண்கள் சற்றே திறந்து இரு கண்களும் வெண்மையாக, பெருமாள் நம்மைப் பார்ப்பது போன்ற அதிசயம் நிகழ்கிறது. பெருமாளின் இந்த தோற்றம் பார்ப்பவர்களை மெய்சிலிரிக்க வைக்கும்.

பிரார்த்தனை

இப்பெருமானிடம் தரிசிக்க வரும் பக்தர்கள் எத்தகைய பாவங்களைப் செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வரத்தினை இங்கு தனி சந்நிதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் பெற்றுள்ளாள். எனவே மூலவர் பெருமாளும் தன்னை சேவிக்க வரும் பக்தர்களின் பாவங்களைப் போக்கி அபயஹஸ்தத்தில் நமக்கு அருள்புரிகிறார்.

புத்திர பாக்கியம் வேண்டி வருவோர், திருமணத் தடையால் கவலையடைந்தோர் இப்பெருமானிடம் வேண்டி தமது வேண்டுதல்களை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். கரி வரதராஜ பெருமாள் 27 நட்சத்திரங்களின் இறைவன். தங்கள் பிரார்த்தனைகளை மனதில் நினைத்து பக்தர்கள் 27 ரூபாயை இறைவனின் பாதத்தில் வைக்கின்றனர். இதேபோல் ஒன்பது நாள், ஒன்பது வாரம் என்று வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் செய்தால் வேண்டுதல் நிறைவேறி விடும். தங்கள் ஜன்ம நட்சத்திரத்தில் 27 மாதங்கள் வந்து வழிபட, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. இங்குள்ள இறைவனின் ஜன்ம நட்சத்திரம் ஹஸ்தம். எனவே, ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.

இக் கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சம் சந்தான கோபாலகிருஷ்ண விக்கிரகம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து சந்தானகோபாலகிருஷ்ணனை மடியில் ஏந்தி சீராட்டி மகிழ்ந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.

Read More
காஞ்சிபுரம்  நிலா துண்டப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

காஞ்சிபுரம் நிலா துண்டப் பெருமாள் கோவில்

பெருமாளின் நாபிக் கமலத்தில் மகாலட்சுமி எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு கோவில்கள் தான் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், திவ்ய தேசமாகவும் அமைந்திருக்கின்றன. ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில். மற்றொன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலில் அமைந்திருக்கும் திவ்யதேசம் நிலா துண்டப் பெருமாள் கோவில். ஏகாம்பரேசுவரர் கோவிலின் முதல் பிரகாரத்தில், ஒரு சிறிய சன்னதியில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். மகாலட்சுமி. மகாவிஷ்ணுவின் இடது மார்பில் காட்சி தருபவள். ஆனால், இத்தலத்தில் பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் மகாலட்சுமி பிரம்மாவின் அம்சத்துடன் இருக்கின்றாள். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள். இதனால் இங்கு பெருமாளையும் மகாலட்சுமியும் வழிபடுவதால், பக்தர்களின் விதியை எல்லா வகையிலும் சிறப்பாக மாற்ற முடியும் என்பது ஐதீகம்.

பெருமாளுக்கு நிலா துண்டப் பெருமாள் என்ற பெயர் வந்த காரணம்

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாக பயன்பட்ட மேருமலையை தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப, மகாவிஷ்ணு நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால், வருத்தம் கொண்ட வாசுகி பாம்பு, அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இக்கலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ‘நிலாத்திங்கள் துண்டத்தாய்’ என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். ‘சந்திர சூடப் பெருமாள்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. சிவனை வணங்கி குணமாகியவர், என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.

மகாவிஷ்ணு தன்னுடைய நோய் நீங்குவதற்காக இத்தலத்திற்கு தனியே வந்ததால், தாயாருக்கு இங்கு சன்னதி கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே 'நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது.

பிரார்த்தனை

பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தோல் வியாதிகள், வயிறு சம்பந்தமான நோய்கள், தோஷங்கள் நீங்கும், உடல் உஷ்ணம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக் கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை.

Read More