திருவாலி அழகிய சிங்கர் கோவில்

பத்ரிகாசிரமத்துக்கு இணையான திவ்ய தேசம்

108 திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலி அழகிய சிங்கர் கோவில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோவில் ஆகியன இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன. இவ்விரு கோவில்களும் ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகின்றன.

மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

நரசிம்ம அவதாரம் எடுத்த திருமாலுக்கு இரணியனை வதம் செய்த பிறகும் கோபம் தணியவில்லை. மகாலட்சுமி, அவரின் தொடையில் சென்று அமர்ந்ததும் நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்தமானார். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த கோலத்தில் நரசிம்ம பெருமாள், அழகிய சிங்கர் என்ற திருநாமத்துடன் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில் பெருமாளின் இடது புறத்தில் தான் லட்சுமி அமர்ந்திருக்கும் தோற்றம் இருக்கும். ஆனால் மிக அரிதாக இந்த தலத்தில், மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த காரணத்தால், இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும்.

பத்ரிநாத்தில் பெருமாளே குருவாகவும், தானே சீடனாகவும் இருந்து (நாராயணனாகவும், நரநாராயணனாகவும்) திருமந்திரத்தை உபதேசித்தார். பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. மகாலட்சுமி பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது, திருமங்கை மன்னை பெருமாளை வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கை மன்னனுக்கு காதில் அஷ்டாட்சர மந்திரத்தை ஓதி, உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில், திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெரும் விழா நடக்கின்றது.

 
Previous
Previous

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்

Next
Next

கோடகநல்லூர் கைலாசநாதசுவாமி கோவில்