விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்

சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். திருமாலின் ஆயிரம் திருநாமங்களை சொல்லி போற்றுவது விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். இது மகாபாரத போரின் போது அம்பு படுக்கையில் இருந்த பிதாமகன் பீஷ்மர், தர்மனுக்கு உபதேசித்ததாகும்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் உருவான கதை

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்து கொண்டிருந்த மகாபாரதப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்த நேரம் அது. பிதாமகர் பீஷ்மர் உத்திராயண காலத்தில் தன் உயிர் பிரிய வேண்டும் என்று அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறார். கொடையாளி கர்ணன் கிருஷ்ணரின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். குந்திதேவி இறந்த கர்ணனின் சடலத்தை தன் மடியில் கிடத்தி அவன் தான் தன் மூத்த மகன் என்று உலகறிய கதறுகிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.

அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து 'இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், 'இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப் போகிறாள் அவள்' என்றார்.

தர்மபுத்திரரைப் பயம் சூழ்ந்து கொண்டது. தங்கள் வம்சாவளியினர் நாடாளும் போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. ‘தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்’ என்று கிருஷ்ணனை தர்மர் கேட்க, கிருஷ்ணன் 'அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்' என்றார்.

பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார். 'இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள். அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர்களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள். படித்த வன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது. நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது. பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரி வர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்'

இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார்கள்.

'அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, 'நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்து நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்' என்று சொன்னார்.

அப்போது பீஷ்மரால் சொல்லப்பட்டதுதான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்.

அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால், தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை. பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று வியப்படையலாம்.

இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, 'சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டிதர்களால் சொல்ல முடியலாம். படித்தவர்களா ல் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?' என்று கேட்டாள். சிவபெருமான் புன்னகைத்தார்.'தேவி, நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.'

ஸ்ரீராம ராம ராமேதி

ரமே ராமே மனோரமே

ஸஹஸ்த்ர நாம தந்துல்யம்

ராம நாம வரானனே

இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்' என்று பார்வதிதேவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் சிவபெருமான்.

அனைவருக்கும் நற்பலன்களை தரும் விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால் பலன்களை அவன் தருவான்.

பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும் படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதியிருக்கிறார்கள்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது இறைவனின் கல்யாண குணங்களை தெரிவிக்கும்படியான திரு நாமாக்கள். பெருமாளுக்குரிய ஏகாதசி, திருவோணம் போன்ற நாட்களில் இந்த ஸ்லோகத்தை படிப்பது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும். இந்த ஸ்லோகத்தை அர்த்தம் புரியாமல் சொன்னாலும் கூட, முழு பலனும் கிடைக்கும். விஷ்ணுவின் திருநாமங்களிலேயே மிகவும் உயர்வானதாக கருதப்படுவது விஷ்ணு சகஸ்ரநாமம்தான். இதை காதால் கேட்டாலும் கூட மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை வாயால் உச்சரித்த பலன் கிடைக்கும். இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். இதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம்.

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசியின் சிறப்பு

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி 'வருதினி' என்றும், வளர்பிறை ஏகாதசி 'மோகினி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் விரதம் இருப்பது, இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைத் தரும்.

மார்கழி மாதத்தில் வருகின்ற வைகுண்ட ஏகாதசி பிரதானமான ஏகாதசி திதி என்றாலும், அந்த வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும், இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.

Previous
Previous

கோட்டைமேடு பத்ரகாளி கோவில்

Next
Next

தஞ்சைப் பெரிய கோவில்