மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ முருகன்

நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலுள்ள மோகனூரில் உள்ள காந்தமலை என்ற குன்றின் மேல் அமைந்திருக்கிறது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற தலம் என்பதால் மகனூர் என்று அழைக்கப்பட்ட இத்தலம் பின்னர் மோகனூர் என்று மருவியது. பழனியைப் போலவே இத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். தனது வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் தோற்றம் அளிக்கிறார். இப்படி ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் இருக்கும் முருகனை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இந்தக் கோவிலுக்குச் செல்ல 39 படிகள் இருக்கின்றன. அவை 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் குறிக்கின்றது.

தல வரலாறு

முருகன், தனக்கு மாம்பழம் கிடைக்காததால், தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு கயிலாயத்தில் இருந்து பழனி நோக்கிப் புறப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்த பார்வதிதேவி 'முருகா நில்' என்று அழைத்தார். தாயின் சொல் கேட்டு முருகன் நின்றார். தாயின் அறிவுரை சொல் கேட்டும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பார்வதி தேவி அழைத்தபோது முருகன் நின்ற இடம் தான் இத்தலம் என்று தல வரலாறு கூறுகின்றது.

பிரார்த்தனை

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி வேண்டிக்கொள்கிறார்கள். ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உடையவர்கள் இவரை வழிபட்டால் அது நிவர்த்தி ஆகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து முருகனிடம் வேண்டிக் கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Read More
பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்

ஆங்கிலேய அதிகாரியின் வயிற்று வலியை தீர்த்த பழனி ஆண்டவர்

பழனிமலை தண்டாயுபாணிக்கு, ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகி றது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. தினமும் ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி ஆறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அந்த அலங்காரங்கள்

விளாபூஜை - காலை 6.40 மணிக்கு சன்யாசி அலங்காரம்

சிறுகாலசந்தி - காலை 8 மணிக்கு வேடர் அலங்காரம்

காலசந்தி - காலை 9 மணிக்கு பாலசுப்ரமணியர் அலங்காரம்

உச்சிகாலம் - பகல் 12 மணிக்கு வைதீகாள் அலங்காரம்

சாயரட்சைபூஜை - மாலை 5.30 மணிக்கு இராஜ அலங்காரம்

அா்த்தஜாம பூஜை - இரவு 8 மணிக்கு புஷ்ப அலங்காரம்

வெண்ணெய்யும், கோதுமை ரொட்டியும் நைவேத்தியம்

சிறுகாலச்சந்தி பூஜையின் போது ( காலை 8.00 - 8.30 மணி ) பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் முடிந்தபின் வேடர் அலங்காரம் செய்யப்படுகிறது. பழனி ஆண்டவருக்கு நைவேத்தியமாக மிளகு, சாம்பார்சாதம், வெண்ணெய், கோதுமை ரொட்டி படையலாகப் படைக்கப்படுகின்றது. அவருக்கு வெண்ணையும், கோதுமை ரொட்டியும் படைக்கப்படுவதின் பின்னணியில் அவர் ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இருக்கின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பழனிப் பகுதியை நிர்வகித்த ஆங்கிலேய அதிகாரிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வயிற்றுவலியைத் தீர்த்தருளுமாறு பழனியாண்டவரை அவ்வதிகாரி வேண்டிக் கொண்டார். வலி தீர்ந்தால்தாம் உண்ணும் உணவை பழனியாண்டவருக்குப் படைப்பதாகவும் வேண்டிக்கொண்டார். இறைவன் அவ்வதிகாரியின் தீராத வயிற்று வலியைத் தீர்த்து அருளினார். அன்று முதல் சிறுகாலபூஜையின்போது வெண்ணெய்யும், நெய்யால் சுடப்பட்ட கோதுமை ரொட்டியும் ஆண்டவருக்கு படையாலகச் சேர்த்துப் படைக்கப்படுகிறது.

பிரார்த்தனை

நெடுநாட்களாக முடியாமல் இழுத்தடிக்கும் வழக்கு தீராத நோய் போன்ற பிரச்சினைகள் தீர பழனி ஆண்டவரை, அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பது நல்லது. வீட்டில் நடைபெறப்போகும் திருமணம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

Read More
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில்

பீடத்தின் வடிவில் காட்சி தரும் அபூர்வ முருகன்

விருத்தாச்சலம் – சேலம் சாலையில், விருத்தாசலம் நகருக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். குளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே முருகன் தோன்றியதால் இவர் 'குளஞ்சியப்பர்' எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் 'கொளஞ்சியப்பர்' என திரிந்தது.

கருவறையில் எழுந்தருளி இருக்கும் முருகன், உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் – அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்டவர். ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார். 3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலிபீடப் பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.

பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்குப் பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேடம். குழந்தை பிறந்ததிலிருந்து இந்தக் கோவிலுக்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்; பொட்டு கூட வைக்க மாட்டார்கள். இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு, பொட்டு வைக்கிறார்கள்.

மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மருந்தாகும் முருகனின் விபூதி பிரசாதம்

ப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க, அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபட்டு, முருகனின் பிரசாதமான விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன. ஆறாத புண்கள், கட்டிகள், முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும், மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக் கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ்வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது. இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.

புதுமையான 'பிராது கட்டுதல்' என்ற பிரார்த்தனை நடைமுறையும், பின்னர் நேர்த்திக்கடன் நிறைவேற்ற ராஜினாமா கட்டணம் செலுத்தும் முறையும்

இத்தலத்தில் பக்தர்கள் தம்குறை தீர்க்க வேண்டி செய்யும் பிராது கட்டுதல் என்ற நேர்த்திக்கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது. இந்த பிராது கட்டுதல், நாம் நமது மேலதிகாரிகளுக்கு எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போல அமைந்துள்ளது. பிராது கட்டுவதற்காக கோயிலின் பிரகாரத்தில் முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். நியாயமான கோரிக்கைகள், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில், முருகக் கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எந்த ஊரிலிருந்து வருகிறோமோ, அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 25 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.

கோரிக்கை நிறைவேறினால், இந்த தேதியில் நான் வந்து வைத்த பிராது கட்டுதல் நிறைவேறியதால், அதை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தலாம்.

குழந்தை வரம், கடன் தொல்லை, திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம், பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

Read More
காட்டி சுப்ரமண்யா கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

காட்டி சுப்ரமண்யா கோவில்

ஏழு தலை நாக வடிவில் முருகனும், நரசிம்மரும் ஒருசேரத் தோன்றும் அபூர்வக் காட்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ளது காட்டி சுப்பிரமணியா கோயில். இக்கோவில் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் கருவறையில் சர்ப்ப வடிவில் முருகப்பெருமானும், லட்சுமி நரசிம்மரும் ஒன்றாக காணப்படுவது தனிச்சிறப்பாகும்.

கருவறையில் ஏழு தலை நாகம் கொண்ட முருகரின் சிலையானது ஒரே கல்லில் செய்யப்பட்டது. சிலையின் பின்புறத்தில் நரசிம்மரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் முருகன் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் உள்ளனர். இரு தெய்வங்களும் ஒரே நேரத்தில் பக்தர்களுக்குத் தெரியும் வகையில், கருவறையில் பின்புறத்தில் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

கதிகேசுரன் என்ற அரக்கனை வீழ்த்துவதற்காக முருகப்பெருமான் ஏழு முகமுள்ள பாம்பின் வடிவமாக இத்தலத்தில் அமர்ந்து தவம் செய்ததாக ஐதீகம். அதே கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பாம்பு வடிவத்தில் இருந்ததால், தனக்கு கருடனால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த முருகப்பெருமான், தன்னைக் காக்கும்படி திருமாலை வேண்டுகிறார். திருமாலும் லட்சுமியுடன் கூடிய நரசிம்ம மூர்த்தியாக வடிவம் கொண்டு சுப்பிரமணியரைக் காக்கிறார். மேலும், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனிடம் இருந்து, பாம்புகள் (நாகர்கள்) குடும்பத்தைக் காப்பாற்றும்படியும் முருகப் பெருமான், நரசிம்ம மூர்த்தியிடம் வேண்டினார். எனவே இத்தலம் நாகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் பெற்ற கோவிலாக விளங்குகிறது.

பிரார்த்தனை

இத்தலம் செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் உள்ளவர்களுக்கு நிவர்த்தி தலமாக விளங்குகின்றது. பெரும்பாலான நாட்களில் சர்ப்ப தோஷ பூஜை அல்லது சர்ப்ப சம்ஸ்காரம் செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, சஷ்டி, ஆயில்யம் நட்சத்திர தினங்கள் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுவதால், அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆவணி நாக பஞ்சமி, குமார சஷ்டி தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இத்தலத்தில் குழந்தையில்லாத தம்பதியினரின் வேண்டுதலுக்கு இணங்க குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு பக்தர்களால் நாகர் சிலைகளை நிறுவுவும் பழக்கம் உள்ளளது. இதனால் கோவிலுக்கு அருகில் ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம்.

Read More
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

வள்ளியும், முருகனும் கைகோர்த்து திருமணக் கோலத்தில் நிற்கும் அபூர்வ காட்சி

சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் அமைந்துள்ளது சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். ராமனிடம், அவருடைய மைந்தர்களான லவனும், குசனும் சண்டை போட்ட இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்று இத்தல வரலாறு கூறுகின்றது. சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும். அருணகிரி நாதரால் போற்றி பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.

மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க, பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.

முருகனுக்கு வலது பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும், முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை மற்ற முருகன் தலங்களில் காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்தது. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடக்கின்றது.

மரகதக்கல்லால் ஆன மயில் மற்றும் தெய்வச்சிலைகள்

இக்கோவில் சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலவர், நவக்கிரகம் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். கொடிமரத்துக்கு அருகில் இந்த மரகத மயில் வீற்று இருக்கின்றது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதக்கல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

பிரார்த்தனை

பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.

Read More
இளையனார்வேலூர்  பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

வேலுக்கென்று தனிச் சன்னதி உடைய முருகன் தலம்

காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள இளையனார்வேலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். இக்கோவிலில் முருகப் பெருமான் தனிச் சந்நிதி கொண்டு, தேவியர்கள் இன்றி தனி முருகப்பெருமானாக (பிரம்ம சாஸ்தா கோலத்தில்) சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில் கருங்கல்லிலான வேலானது, தனிச் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த முருகன் கோவிலிலும் வேலுக்கென்று தனிச் சன்னதி கிடையாது. இந்த வேல் சன்னதிக்கும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பாதி வள்ளியும், பாதி தெய்வானையும் ஒருங்கே அமைந்த கஜவள்ளியாக இங்கே எழுந்தருளி இருக்கிறார்கள். வள்ளி, தெய்வயானை இணைந்த கஜவள்ளி தோற்றத்தை நாம் ஒரு சில தலங்களில்தான் தரிசிக்க முடியும்.

தல வரலாறு

காசிப முனிவர், சேயாற்றங்கரையில் தங்கி உலக நலன் கருதி வேள்வி செய்யத் தொடங்கினார். அவ்வேள்வியை மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தடுத்து இடையூறு விளைவித்தனர். இவ்விரு அசுரர்களும் மாகறல் ஈஸ்வரனிடம் அழியாத வரம் பெற்றவர்களாவர்.

காசிப முனிவர் கடம்பரநாதரையும், அம்பிகை ஆவுடை நாயகியையும் வணங்கி, வேள்விக்கு மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தொல்லை கொடுப்பதைச் சொல்லி முறையிட்டார். இறைவனும் இறைவியும் காட்சியளித்து முருகக் கடவுளை அழைத்து வேலாயுதம் தந்து வேள்விக்கு ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கிடக் கட்டளையிட்டனர். முருகப்பெருமானும் அந்த மலையன், மாகறனை வதம் செய்து வேள்வியை நல்ல முறையில் நடத்த உதவினார். அந்த வேலை முருகப்பெருமான் இளையனார் வேலூரில் நாட்டினார். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவலாகச் சொல்லப்படுகிறது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை, தமது திருப்புகழ் பாடலில் போற்றிப் பாடியுள்ளார்

Read More
தவளகிரி தண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

தவளகிரி தண்டாயுதபாணி கோவில்

சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் அணிந்த முருகன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கொடிவேரி செல்லும் சாலையில் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது தவளகிரி தண்டாயுதபாணி கோவில். தவளகிரி மலை ஏறிச் செல்ல 270 படிகள் கொண்ட பாதையும், வாகனங்கள் செல்ல தார்ச் சாலையும் உள்ளன.

கருவறையில் தண்டாயுதபாணி சுவாமி, மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும், இடது கையினை இடுப்பில் வைத்தும் அழகு ததும்ப காட்சி தருகிறார். இவரின் இடது கை சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் உள்ளது. இது மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 'தர்ஜனி' என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனியில் முருகர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும், அங்கு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி சண்முகநதி பாய்வதும் போல் இங்கும் தண்டாயுதபாணி மேற்கு நோக்கியுள்ளார், பவானி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் பழனி சென்ற பலனை இத்தலத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

துர்வாசர் பிரதிஷ்டை செய்த தலம்

துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து விட்டு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி நதியினை அவர் கடக்கும் போது வெள்ளம் அதிகரித்தது. திடீரென பெருகிய ஆற்று வெள்ளத்தில் அவர் சிக்கித் தத்தளித்தபோது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்துள்ளது. முருகப் பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்று உணர்ந்தார் துர்வாசர். உடனே மெய்சிலிர்த்து நீந்தியபடியே கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார். ஆற்றில் வெள்ளம் பெருகியபோது முருகனே மயில் மூலமாக அருகில் குன்று இருப்பதை உணர்த்தியதோடு மனம் தளராத தைரியத்தையும் தனக்குக் கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து, அதற்கு நன்றிக்கடனாக மலையின் உச்சியில் முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

கன்னிப் பெண்களாக, தவக்கோலத்தில் காட்சி அளிக்கும் வள்ளி, தெய்வயானை

வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னிப் பெண்களாக, தவக்கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார்கள். வேறு எந்த தலத்திலும் வள்ளியும், தெய்வானையும் கன்னிப்பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவதில்லை. திருமணத்தடையுள்ள கன்னிப் பெண்கள் வள்ளிக்கும், தெய்வானைக்கும் பட்டுப் பாவாடை சாத்தி மன முருக வேண்டிக் கொண்டால் அந்தத் தடை நீங்குவதாக ஐதீகம்.

பிரார்த்தனை

திருமணத்தடையை நீக்குவது, பில்லி, சூனியம், தொழில் விருத்தி, செவ்வாய் தோஷம், விரோதி நிவர்த்தி, வியாபார விருத்தி ஆகிய பரிகாரம் செய்ய உகந்த கோயிலாக இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள வள்ளி, தெய்வானைக்கு 21 விளக்கு வைத்து பூஜைகள் செய்தால் திருமணத்தடைகள் நீங்கும்.

Read More
பெரியகுளம்  பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

சிவபெருமான், அம்பிகை, முருகர் ஆகிய மூவருக்கும் தனித்தனி கொடிமரங்கள் அமைந்த தலம்

தேனிமாவட்டம் பெரியகுளத்தில் 'வராகநதி''தென்கரையில், அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் கட்டியதால் இக்கோவில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற்து. இக்கோவில் சிவாலயமாக திகழ்ந்தாலும், இத்தலத்து முருகன் மிகவும் பிரசித்தம். அதனால் தான் இக்கோவில் முருகன் பெயராலேயே பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிற்து.

இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் லிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் தனிக் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இப்படி மூன்று தெய்வங்களுக்கும் தனிக் கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகும். முருகனுக்கு நேர் எதிரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

ஒரு முறை சோழ நாட்டின் மன்னன் ராஜேந்திர சோழன், அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டு அது இறந்து போனது. தாயை இழந்த பன்றிக் குட்டிகள், பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. அதனைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான். அப்போது அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட முருகப்பெருமான் அவ்விடத்தில் தோன்றி, அவைகளின் பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட முருகப்பெருமானின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழேத் தரைப்பகுதியில் இக்கோவிலைக் கட்டினான்.

காசிக்கு ஈடான தலம்

கோயில் அருகே ஓடும் 'வராகநதி நதிக்கு வலப்புறமும், இடப்புறமும் அமைந்துள்ள ஆண், பெண் மருது மரங்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. காசிக்கு அடுத்தபடியாக பெரியகுளத்தில் தான் இரண்டு மரங்களுக்கும் நடுவில் வராக நதி செல்கிறது. இங்கு குளித்து சென்றால் திருமணத்தடை, குழந்தையின்மை, நோய் தொற்று பிணி நீங்குவதாக ஐதீகம் உள்ளது. வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும்.

அருணகிரிநாதர் 'திருப்புகழ்' பாடலில் இக்கோவிலைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

Read More
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

பாயாச நிவேதனத்தை சிறுவர்கள் உருவில் வந்து ஏற்கும் முருகன்

தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.

படிப்பாயசம் நிவேதனம்

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார்.

குழந்தை பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் மழலை பேறு கிட்டும். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பாயாசத்தை நிவேதனமாக படைத்து அதனை கோவிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி சிறுவர்களை அருந்த சொல்கிறார்கள். இதனை படிப்பாயாச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயாச நிவேதனத்தை ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மயிலாடுமலை சக்திவேல் முருகன்  கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மயிலாடுமலை சக்திவேல் முருகன் கோவில்

உலகிலேயே மிகப் பெரிய மூலவர் திருமேனியுடைய முருகன் கோவில்

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் இருந்து, குடியாத்தம் போகும் வழியில் கே. வி. குப்பம் தாலுகா, மேல்மாயில் கிராமத்தில் உள்ள மயிலாடுமலையில் அமைந்துள்ளது சக்திவேல் முருகன் கோவில். இக்கோவிலில் முருகப்பெருமான் ஒன்பது அடி உயரத்தில், உலகிலேயே மிகப்பெரிய மூலவர் திருமேனியுடன், கருவறைக்கு உள்ளே கருவறை என்ற சூட்சுமமான அமைப்பில் எழுந்தருளி உள்ளார். மற்ற முருகன் கோயில்களில் இல்லாதவகையில் வள்ளி மற்றும் தெய்வானை அம்மன்கள் தனித் தனிச் சன்னதியில் அமைந்து அருள்பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை

இக்கோவிலில் முக்கிய நேர்த்திக்கடன் தேங்காய் கட்டுதல் ஆகும். வேண்டுதல் வைத்து தேங்காயில் அவர்களது பெயர் எழுதி கட்டினால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.

மயிலாடுமலை முருகன் கோவிலுக்கு படிகள் மற்றும் மலைப்பாதை சாலை வழியாகவும் செல்லலாம்.

Read More
விளத்தொட்டி பிரம்மபுரீசுவரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

விளத்தொட்டி பிரம்மபுரீசுவரர் கோவில்

பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம்

நாகப்பட்டினம் மாவட்டம் பந்தநல்லூருக்கும், மணல் மேட்டிற்கு இடையே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது விளத்தொட்டி என்ற தேவார வைப்புத்தலம். இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் இட்சுரச நாயகி. இட்சு என்றால் கரும்பு, ரசம் என்றால் சாறு என்ற வகையில் கரும்புச் சாறு போல பக்தர்களுக்கு நல்ல அருளையும், இனிய வாழ்வினையும் அளிப்பதால் இறைவி அவ்வாறு அழைக்கப்படுகிறார்.

மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் பால முருகன் தனிச் சன்னதியில் உள்ளார். சுவாமிமலை - முருகன் பிரணவம் உபதேசித்த தலம். திருச்செந்தூர் - சூர வதம் நடந்த தலம். முருகன் கோபம் கொண்டு குடியேறிய தலம் பழனி. முருகன் சக்திவேல் பெற்ற திருத்தலம் சிக்கல். இந்த வரிசையில் விளத்தொட்டி தலம், பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி, தூங்க வைத்தாளாம்.

சிவாலயமாக இந்த ஆலயம் திகழ்ந்தாலும், முருகனே இந்த ஆலயத்தில் பிரதானம். முருகப்பெருமான் குழந்தையாய் தொட்டிலில் வளர்ந்த தலம் இது என்பதால், வளர் தொட்டில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப் போக்கில் மருவி விளத்தொட்டி என மாறியுள்ளது.

பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், இந்த ஊர் மக்களிடையே வினோதமான பழக்கம் ஒன்று உள்ளது. பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை. தூளியில் போட்டுதான் தாலாட்டுகின்றனர்.

'தொட்டில் முருகன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் இத்தல முருகப்பெருமான் இவ்வூர் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு குழந்தை மட்டுமல்ல காவல் தெய்வமும் கூட. பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Read More
நட்சத்திர கோயில் (வில்வாரணி)  சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

நட்சத்திர கோயில் (வில்வாரணி) சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

நாகாபரணத்துடன், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் காட்சி தரும் அபூர்வ முருகன்

திருவண்ணாமலை-வேலூர் சாலையில், கலசபாக்கத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ளது நட்சத்திர கோயில் (வில்வாரணி) என்னும் சிற்றூர். இந்த ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருவது தனிச்சிறப்பாகும். வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க ஆலயம் இதுவாகும்.

கார்த்திகைப் பெண்களும் 27 நட்சத்திரங்களும் தினமும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை. அதனால் இத்தலம் ,27 நட்சத்திரங்களுக்கும் அனுகிரகத் தலமாகவும் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோவில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர். 27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை. இக்கோவிலின் சுயம்பு முருகனை வழிபட்டால் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. கிருத்திகைதோறும் பக்தர்கள் நட்சத்திரகிரி மலையை வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகத்தின் போது, மலேசியா நாட்டில் உள்ள முருகன் சிலையை போல் 42 அடி உயர முருகன் சிலை இக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்டது.

பிரார்த்தனை

இக்கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும். பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த கோவில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 227 படிகள் அமைக்கப்பட்டுள் ளன. சன்னதி வரை வாகனங்கள் செல்லவும் சரிவுப் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.

Read More
மேலக்கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மேலக்கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

இரவு வேளைகளில் மட்டும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் முருகன் தலம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூர சம்ஹாரத்துக்குப் புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல ஆயுதங்களைப் பெற்றுச் சென்றார். அவற்றுள் பிரதானமான `மழு' எனும் ஆயுதத்தை முருகப் பெருமான் பெற்ற தலம்தான் கொடுமழுவூர் என்றழைக்கப்படும் மேலக்கொடுமலூர்.

மேலக்கொடுமலூர் என்றால் 'வலிமைமிக்க மழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்' என்ற அர்த்தமும் உண்டு. அதாவது முருகப் பெருமான் அசுரனை மழு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும் பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர். அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அவர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது. இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.

முருகனுக்கு முப்பழ பூஜை

இங்கே முருகப்பெருமான் அஸ்தமன வேளையில் முனிவர்களுக்குக் காட்சி தந்ததால், சூரிய அஸ்தமன த்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனைகள் நடைபெறு கின்றன. திங்கள், வெள்ளி, கிருத்திகை ஆகிய நாள்களில் இரவு வேளைகளில் 33 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. வைகாசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் செய்யப்படும் முப்பழ பூஜை மிகவும் பிரசித்திபெற்ற பூஜையாகும். முப்பழ பூஜையின்போது முருகப்பெருமானின் அழகைக் காண்பதற்காகவே தமிழகமெங்கும் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.

முழங்கால் வலி தீர்க்கும் முருகன்

தீராத முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு, மஞ்சள் பூசப்பட்ட உடைமரக் கால்களை (கவட்டையுடன் கூடியது) வாங்கி சமர்ப்பித்தால், நாள்பட்ட முழங்கால் வலி நீங்கி விடும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

மேலும் வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகிய பாதிப்புகளால் அவதிப்படும் அன்பர்கள், இங்கு வந்து மாவிளக்கு ஏற்றி வைத்து முருகப்பெருமானை வணங்கி வழிபட்டுச் சென்றால், விரைவில் அந்தப் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள்.

அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து, கோயிலின் தலவிருட்சமான உடைமரத்தின் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Read More
வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர்

திருச்சியில் இருந்து 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டுதான், முதலில் தனது திருப்புகழ் பாடல்களை பாடத் துவங்கினார்.

முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த தலமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. இத்தலத்து இறைவன் திருநாமம் ஆதிநாதர். தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும்பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ஆதிநாயகி.

சிவபெருமான் நடராஜராக ஆடும் ஆனந்த தாண்டவத்தின் போது தனது வலது காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலைத் தூக்கிய வண்ணம் காட்சி அளிப்பார். ஆனால் வயலூர் தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜரோ சதுர தாண்டவ கோலத்தில், காலடியில் முயலகன் இல்லாமல் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியபடி காட்சியளிக்கிறார். நடராஜரின் சதுர தாண்டவ கோலம் என்பது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.

Read More
வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

வேடுவக் கோலத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தரும் முருகன்

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் எல்லைக்குள் உள்ள வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சிவசுப்ரமணிய சுவாமி கோவில். அருணகிரிநாதரின் திருப்புகழலில் இத்தலம் அத்திப்பட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் முருகப் பெருமான் வேலுடனும் அல்லது தண்டத்துடனும்தான் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் மூலவர் சிவசுப்ரமணியசாமி, வேடுவக் கோலத்தில் சடா முடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, இடுப்பில் சல்லடத்துடன், காலில் இறகு அணிந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது அதன் சிறப்பம்சம் ஆகும். கொடிமரத்தின் அருகேபெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவிற்காகக் காத்து நிற்கும் சேவகர்களைப் போல் இருப்பது வேறு எந்த முருகன் தலத்திலும் காணமுடியாத அமைப்பாகும்.

பிரார்த்தனை

கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக இத்தல முருகனை பக்தர்கள் போற்றுகிறார்கள்.

Read More
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும் அபூர்வ முருகன்

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கும்,காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்தக் கோவிலில்தான் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. கருவறையில் முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி தவக்கோல மூர்த்தியாகக் காட்சிதருகிறார். முருகன் தவக்கோலத்தில் இருப்பதால், இங்கு வள்ளி, தெய்வயானை சந்நிதிகள் தனியே உள்ளன. இந்த முருகனை தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பதால் இவரை 'ஒருவரில் மூவர்' என்று விசேஷ பெயரிட்டு அழைக்கின்றனர்.

நாகதோஷம் போக்கும் முருகன்

பொதுவாக பெருமாளுக்குத்தான் நாகம் குடை பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இக்கோவிலில், கல்யாண சுந்தரர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் உற்சவத் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உலா மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இந்த மூர்த்தியை தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். அதுபோலவே வள்ளி, தெய்வயானை உலா மூர்த்தத் திருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி உள்ளன. வள்ளி தெய்வயானைக்கு மூன்று தலை நாகம் குடை பிடிக்கிறது. இப்படி நாகம் குடை பிடித்தபடி காட்சி தரும் முருகனை தமிழ்நாட்டில் நாம் வேறு எங்கும் காணமுடியாது. இந்த முருகனை நாகம் வழிபடுவதால் இவருக்கு நாக சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. இந்த நாக சுப்பிரமணியர் வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருஆவினன்குடி வேலாயுத சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருஆவினன்குடி வேலாயுத சுவாமி கோவில்

பழனியில் மூன்று கோலங்களில் அருள் பாலிக்கும் முருகன்

முருகன், தனக்கு மாம்பழம் கிடைக்காததால் தாய் தந்தையரிடம் கோபித்து முதலில் வந்து நின்ற தலம் என்பதால், பழனி மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே 'மூன்றாம் படை வீடு' ஆகும். குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், ‘திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. பழனிக்கு செல்பவர்கள் முதலில் திருஆவினன்குடியில் இருந்து 4 கி. மீ, தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோவிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

பழனியில் முருகப்பெருமான் மூன்று கோலங்களில் அருள்பாலிக்கிறார். பெரியநாயகி கோவிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோவிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது மிகவும் அபூர்வம்.

ஆனி மாதத்தில் நடக்கும் அன்னாபிஷேகம்

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால்,பழனி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோவிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோவிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோவிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அருணகிரியார் வேலாயுத சுவாமியை வணங்கி, திருப்புகழ் பாடியபோது முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் .

Read More
நாகப்பட்டினம் குமரன் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

நாகப்பட்டினம் குமரன் கோவில்

மயிலுக்கு பதில் யானை வாகனமாக விளங்கும் முருகன் தலம்

நாகப்பட்டினம் நகரத்தில், நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ளது குமரன் கோவில். இக்கோவிலில் மூலவராக, முருகப் பெருமான் வள்ளி தேவசேனாபதியாக 'மெய்கண்ட மூர்த்தி' என்னும் நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான். இதன் காரணமாக, மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் புதைந்து விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.

தோல் நோய் தீர்க்கும் முருகன்

இந்தக் கோவிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். பின்னர் அவர் பல தலங்களுக்குச் சென்று அங்கு தமிழில் கவி பாடி வழிபட்டு வந்தார். அவர் சிதம்பரம் கோவிலில் உயிர் நீத்தார். அப்போது இக்கோவிலில் மாலை வேளை பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது முருகன் அசரீரியாக, அழகு முத்துவின் ஆன்மா என்னுடன் ஐக்கியமாக இங்கே வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் வழி விடுங்கள் என்று உத்தரவிட்டார். இந்த நிகழ்வு இன்றும் வைகாசி விசாகத்தன்று இங்கு அனுசரிக்கப்படுகின்றது.

தோல்நோய் மற்றும் தொழுநோய் உடையவர்கள் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக பக்தர்களின் நம்பிக்கை.

செல்வ விருத்தி அளிக்கும் குபேரன் தலம்

இக்கோவிலின் வடக்கு பிரகாரத்தில் குபேரனுக்காக தனி சன்னதி அமைந்துள்ளது. அதனால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது.

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.

Read More
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். ஆகவே திருப்பரங்குன்றத்தை, 'திருமணத் திருத்தலம்' என்று கூறுவார்கள். எனவே பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த தலத்தில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அதனால் தென் மாவட்டத்திலேயே, அதிக திருமண மண்டபங்கள் உள்ள ஊராக திருப்பரங்குன்றம் விளங்குகின்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களிலும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5 பங்குனி உத்திரத்தன்று, முருகப் பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 6ல் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை, ஏப்ரல் 7ம் தேதி இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 8ல், பகல் 12.20 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைக்க, மதுரையிலிருந்து சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனி பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருவார்கள். அவர்களை முருகப்பெருமான் வரவேற்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அழைத்து வருவார். பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை திருமணத்தை, சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் நடத்தி வைப்பார்கள்.

திருக்கல்யாணம் முடிந்ததும், சுமங்கலிப்பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்வார்கள். திருக்கல்யாணத்துக்கு. முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையிலிருந்து சீர்வரிசை கொண்டு வரப்படும்.

முருகப்பெருமான் திருக்கல்யாண வைபோகத்துக்கு மீனாட்சி அம்மன் சென்றிருக்கும் வேளையில், மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். அப்போது பக்தர்கள் வேறு வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்

Read More
எட்டுக்குடி  சுப்பிரமணியசுவாமி கோயில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்

தரிசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப குழந்தையாய், இளைஞனாய்,முதியவராய் காட்சி தரும் முருகன்

திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே அமைந்துள்ள முருகன் தலம் எட்டுக்குடி. எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர் என்பதால் எட்டுக்குடி என்ற பெயர் வந்தது.முருகனின் அறுபடை கோவில்கள் தவிர, புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இங்கு முருகன், வள்ளி தெய்வானை உடன் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவர் அமர்ந்திருக்கும் மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது ஆச்சரியமும் , அதிசயமுமான விஷயம் ஆகும். பொரவாச்சேரி மற்றும் எண்கண் முருகன் தலங்களிலும் இதேபோன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை நாம் தரிசிக்கலாம். அற்புத அழகுடன் கூடிய இந்த மூன்று முருகன் சிலைகளையும் வடித்தவர் ஒரே சிற்பிதான்.

இந்த கோவிலில், முருகன் தன்னை தரிசிக்கும் பக்தர்களின் மனநிலைக்கேற்ப மூன்று விதமான கோலங்களில் காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமி திருவிழா

இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாலை தொடங்கும் இந்த அபிஷேகம் , மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். சித்ரா பௌர்ணமி திருவிழாவில் 25 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.

பிரார்த்தனை

குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

Read More