மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஆடி முளைக்கொட்டு விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பனிரெண்டு மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும்.

உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் இருக்கும் அதிசயம் மதுரையில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.

'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பதால் விவசாயிகள், ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விளைநிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக்கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு விழா 20.7.2023 வியாழக்கிழமையன்று துவங்குகிறது. விழாவின்

முதல் நாள் -சிம்ம வாகனம்

2ம் நாள்- அன்ன வாகனம்

3ம் நாள்- காமதேனு வாகனம்

4ம் நாள்- யானை வாகனம்

5ம் நாள் -ரிஷப வாகனம்

6ம் நாள்- கிளி வாகனம்

7ம் நாள்- மாலை மாற்றுதல்

8ம் நாள் -குதிரை வாகனம்

9ம் நாள்- இந்திர விமானம்

10ம் நாள்- கனகதண்டியல் வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் பவனி வரும் மீனாட்சி அம்மன்

திருவிழாவின் ஆறாம் நாளன்று, கிளியை தனது கையில் வைத்திருக்கும் அன்னை மதுரை மீனாட்சி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பது விசேஷமான ஒன்று.

Read More
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில்

கையில் கிளி ஏந்திய அபூர்வ துர்க்கை அம்மன்

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாளப்புத்தூர். இறைவன் திருநாமம் மாணிக்கவண்ணர். இறைவியின் திருநாமம் வண்டமர்பூங்குழல் நாயகி.

இறைவன் மாணிக்கவண்ணர் எழுந்தருளி இருக்கும் கருவறையின் வெளிச் சுற்றுச் சுவரில் துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன், நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை அம்மன் இத்தலத்து இறைவனை வணங்கி தோஷ நிவர்த்தி அடைந்தாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும், புன்முறுவல் பூத்த முகத்தோடு சாந்த துர்க்கையாக அருளுவதும் இத்தலத்தின் சிறப்பாகும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும். மேலும், துர்க்கை அம்மனின் காலடியில் கிடக்கும் மகிஷாசுரனின் முகத்தில் நாசித் துவாரங்கள் தெரிவதும் ஒரு அபூர்வமான தோற்றம் ஆகும்.

பிரார்த்தனை

இத்தலத்தில் துர்க்கை அம்மனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பெற்றதால், இந்த துர்க்கையை வழிபடுபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரக தோஷங்கள் விலகும். திருமண தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.

Read More
குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவில்

லட்சுமி, சரசுவதி தேவியருடன் இணைந்து அருள் பாலிக்கும் செண்பகாதேவி அம்மன்

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார். செண்பகாதேவியானவள், துர்க்கை அம்மனின் பிறப்பாக பராசக்தி வடிவில் அருள்பாலிக்கிறார். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது.

இக்கோவில் செண்பகாதேவி அருவி அருகில் அமைந்துள்ளது. இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் இருப்பதாலேயே இங்குள்ள அருவிக்கு செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி, சரசுவதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் பௌர்ணமி பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Read More
வன்னிக்காடு அகத்தீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

வன்னிக்காடு அகத்தீசுவரர் கோவில்

ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் அபூர்வ தோற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னி வேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் புவனேசுவரி.

இத்தலத்து மூலவரை அகத்திய முனிவர் மணலால் அமைத்து வழிபட்டார். அகத்தியர் அமைத்த லிங்கம் என்பதால் லிங்கம் குள்ளமாக இருக்கிறது.

அம்பாள் புவனேசுவரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பௌர்ணமியன்று அம்பிகைக்கு நடைபெறும் லகுசண்டி ஹோமம்

பௌர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விசுவாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் அம்பாளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சன்னதி முன்பு, லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கலசத்திலிருந்து நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்வதாக ஐதீகம். இந்த பூஜை நடக்கும்போது ஏழு இலைகளில் சப்த ரிஷிகளுக்கும் நைவேத்யம் படைப்பார்கள்.

பௌர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்கலின்றிக் கட்டி முடிப்பார்கள்.

Read More
திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோவில்

சிவனை தழுவிய கோலத்தில் அம்பாள் காட்சியளிக்கும் தேவாரத்தலம்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள தேவாரத்தலம் திருச்சத்தி முற்றம். மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.

விஜயாலய சோழன் முதல் மூன்றாம் ராஜராஜ சோழன் வரை அனைவரும் தங்கள் இளமைக் காலத்தைக் கழித்த பகுதியாக இவ்வூர் திகழ்ந்தது. சைவத்தை நிலைநாட்டி வளர்த்த மங்கையர்க்கரசியார், செம்பியன் மாதேவி, குந்தவை பிராட்டியார் வாழ்ந்து அரசாட்சி செய்த ஊராகவும் இவ்வூர் திகழ்கிறது.

சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் சக்தி தழுவிய நாதரின் திருமேனியும், அதன் பின்புறம் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் அம்மன் திருமேனியும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.

தல வரலாறு

பக்தியே முக்திக்கு வித்து என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ, பார்வதி விரும்பினர். இதற்காக, சக்திமுற்றத்தில் இருந்து அம்பிகை, ஈசனை நினைத்து தவம் இருந்தார். ஆனால் ஈசன் வராமல் காலம் தாழ்த்தினார். மனம் தளராமல் பக்தியையும், தவத்தையும் தீவிரப்படுத்தி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன் ஜோதி சொரூபமாக காட்சி தந்தார். தன்முன் இருப்பது ஈசன் என்பதை உணர்ந்த அம்பிகை தீப்பிழம்பையே தழுவி ஆனந்தப்பட்டாள். அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, அதேசமயம் சிவனாரின் திருமேனி மீது, பாதம் படாமல் கட்டியணைத்தபடி தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம், வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும்.

பிரார்த்தனை

இத்தலம் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகும். சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி, நல்ல இல்வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு பலப்படவும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் இங்கு வந்து வணங்கினால் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
பள்ளியூர்  ஆதி வீரமாகாளியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பள்ளியூர் ஆதி வீரமாகாளியம்மன் கோவில்

திருமணம் நடைபெற வேண்டி ஜாதகத்தை உண்டியலில் போடப்படும் தலம்

தஞ்சையில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது ஆதி வீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பௌர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு. காரணம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும்

ஆதி வீரமா காளியம்மன் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியூர் பகுதியில் இருந்துள்ளது. அந்த பகுதியில் குடியிருந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு சென்ற பின்னர் அந்த பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது . அதில் ஒரு புற்று இருந்துள்ளது . இதனை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒருநாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல் பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது அந்த புற்றிலிருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை.இதை அடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை ஒன்றரை அடி உயர கருங்கல் சிலையாகும்.

இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும்,குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

திருமணமாகாதவர்கள் தங்கள் ஜாதகத்தின் நகல்களில் இரண்டு பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டுவர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும் . அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு மூன்று பௌர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும் . மூன்றாவது பௌர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும்போது ஆண் , பெண் உருவம் கொண்ட இரண்டு மரப்பாச்சி பொம்மைகள் எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்துவிட்டு ஒரு பொம்மை கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது .

நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக் கொண்டு வருபவர்களுக்கும் அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள் .

Read More
தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்

பாண்டவர்கள் வழிபட்ட வனபத்ரகாளியம்மன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது.

தல வரலாறு

சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால் இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றாள். இது தவிர ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் கதையோடும் இக்கோவில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி என்ற ஏழு சகோதரிகளை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு பாண்டவர்கள் அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை சங்கவதியின் மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.

அவன் இங்குள்ள வனபத்ரகாளி அம்மனை வழிபட்டுச் சென்று ஆரவல்லியின் பெண்கள் சாம்ராஜ்ஜியத்தைத் தவிடு பொடியாக்க அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர். இதையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விஷயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து வெகுண்டெழுந்து ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராஜ்ஜியத்தை அழித்தான்.

பிரார்த்தனை

அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர்.

Read More
அச்சங்குட்டம்  காளி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அச்சங்குட்டம் காளி கோவில்

அக்னி ரூபமாக இருக்கும் அம்மனுக்கு வியர்க்கும் அதிசயம்

திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் சுரண்டை என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது அச்சங்குட்டம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள காளி கோவில் பல அதிசயங்கள் நிறைந்த கோவிலாக இருக்கின்றது.

இக்கோவிலில் மூலவர் காளி அம்மன் அக்னி ரூபமாக இருப்பதால், அலங்காரம் செய்யும் போது காளி அம்மன் சிலையில் வியர்க்கிறது. வியர்வையை துடைக்க துடைக்க அது வடிந்து கொண்டிருப்பது தான் அதிசயம், மேலும் அலங்காரம் செய்து முடித்த பிறகும் சிலையின் முகத்தில் வியர்வை வருவதும் முக்கிய அம்சமாகும். காளி அம்மனின் இரண்டு பக்கமும், முத்தாரம்மன் மற்றும் மாரியம்மன் மண் வடிவில் இருக்கிறார்கள். காளியம்மன் அபிஷேகத்தின் போது மண் குவியல் வடிவில் இருக்கும் இரண்டு அம்மன் பீடங்கள் கரைவதும் சில தினங்களில் மீண்டும் அவை பழைய நிலைக்கு வளர்வதும் மற்றொரு அதிசயமாகும்.

கோவில் வரலாறு

இக்கோவில் அமைந்துள்ள இடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துமலை ஐமீனின் கணக்கு பிள்ளைக்கு சொந்தமாக இருந்துள்ளது. அவரிடம் வேலை பார்த்தவர்கள் தங்களை காப்பாற்ற தங்களுக்கு ஒரு தெய்வம் வேண்டும் என்று கருதி காளி அம்மனை மண்ணில் பிடித்து அம்மனுக்கு பனை ஒலையால் ஒரு குடில் அமைத்து புரட்டாசி மாதம் கொடை விழாவும் நடத்தி, வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் அந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட, மாடக்கண்ணு என்பவரின் கணவில் தோன்றிய அம்மன் கோவில் முன்பு ஒரு இடத்தை காட்டி அங்கு கிணறு தோண்டினால் எந்த கோடையிலும் வற்றாத தீர்த்தம் கிடைக்கும் என்று வாக்கு அளித்தார். அதனை தெடர்ந்து பெண்களே ஒன்று சேர்ந்து ஒரு கிணற்றை தோண்ட இன்று வரை எந்த கோடையானாலும் இந்த கிணற்றில் மட்டும் தண்ணீர் வற்றாமல் உள்ளதும் ஒரு அதிசயம்.

70 ஆண்டுகளுக்கு முன்பு குத்தாலிங்கம் என்ற பார்வையிழந்தவரின் கனவில் அம்மன் தோன்றி நான் சிலை வடிவில் பூமிக்கு அடியில் ஒர் இடத்தில் இருப்பதாகவும் அந்த இடத்தையும் காண்பித்து விட்டு மறைந்தாள், இது குறித்து அவர் ஊர்மக்களிடம் தெரிவிக்கும் போது யாரும் அவர் கூறுவதை நம்பவில்லை. ஆனால் அவர் நண்பர் அய்யாதுரை மட்டும் அதை நம்பினார். பின் குத்தாலிங்கமும், அய்யா துரையும் அம்மன் சொன்ன இடத்திற்கு சென்று மண்ணை தோண்டி பார்க்க 3 அடியில் ஒரு சிலை கிடைத்தது. பின்னர் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அம்மனுக்கு கோயில் கட்ட முடிவு செய்து, இக்கோவிலை கட்டினார்கள். கருவறையில், சாந்த சொருபமாக அமைதியாக சிரித்த முகத்தோடு பக்தர்களுக்கு மகுடம் தரித்த காளியாக சூலம், குங்குமக் கிண்ணம், நாகம் புரளும் உடுக்கை, என சிம்ம வாகனத்தல் காட்சி கொடுக்கிறாள்.

இந்த காளி தேவியை நம்பி வந்து சன்னதியில் விழுந்து வணங்கும் போது, கேட்ட வரங்களை அள்ளி தருபவளாகவும், கிராம மக்களுக்கு காவலாகவும் இருக்கின்றாள் என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read More
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்

நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு நல்வழி காட்டும் முத்துமாரியம்மன்

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 1960களில்தான் உருவானது. இக்கோவில் திருவிழா காலங்களில், மதுரை சித்திரை திருவிழாவில் கூடும் கூட்டத்தோடு ஒப்பிடும் வகையில், ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். திருவிழாக்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்பது சிறப்பம்சமாகும். கிறித்துவர்களும், இசுலாமியர்களும்கூட இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்

கோவில் உருவான பின்னணி

1956ம் ஆண்டில் இந்த ஊருக்கு வந்த ஒரு சிறுமி திடீரென மக்களின் குறைகளை தீர்க்க அம்மன் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள் இதை சில நாத்திகவாதிகள் எதிர்த்தனர்.இந்தசிறுமிக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டது.இருந்தாலும் அந்த சிறுமி அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. திடீரென சின்னம்மை நோய் பெரியம்மை நோயாக மாறியது. சிறுமி இறக்கும் தருவாயில்கூட அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. சிறுமி இறக்கும் தருவாயில் அவரை கேலிசெய்த ஒரு நபர் மிகுந்த கஷ்டத்துடன் வந்தார். தீராநோயுடன் வந்த நபரிடம் சிறுமி சொன்னாள். உன் வீட்டின் கிணற்றடியில் வடமேற்கில் ஒரு தக்காளிசெடி உள்ளது. அதில் ஒரு தக்காளி பழத்தை எனக்கு கொண்டு வந்து தா என சொன்னாள்

வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் வீட்டில் தக்காளி செடியே இல்லையே என்று சொன்னார். நான் சொன்ன இடத்தில் சென்று பார் இருக்கும் என்றாள்.உடனே அந்த நபர் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்ணுக்கே தெரியாத அளவிற்க்கு சிறு தக்காளி செடி முளைத்திருந்தது அதில் ஒரே ஒரு தக்காளிபழம் இருந்தது.அந்த நபருக்கு ஒரே ஆச்சரியம். பழத்தை எடுத்து கொண்டு சிறுமியிடம் சென்று கொடுத்தார். அந்த நபருக்கு ஓரிரு நாட்களில் அவருக்கு இருந்த நோய் முற்றிலும் குணமானது. அந்த சிறுமிக்கு பெரியம்மை முற்றியது இறக்கும் தருவாயில் ஊர் மக்களை அழைத்த சிறுமி, நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் அம்மனுக்கு ஒரு புது ஆலயம் எழுப்புங்கள். உங்களது அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நான் உங்களை காப்பேன் என்றாள். அதன் படியே கோவில் எழுப்பபட்டது.இந்த ஊரில் மிக சக்திவாய்ந்த அம்மனாக முத்துமாரியம்மன் இருக்கிறாள். வருடத்தின் பல நாட்கள் இந்த அம்மனுக்கு குளிர்ச்சி சார்ந்த அபிசேகங்களே நடைபெறுவதால் இந்த அம்மனுக்கு சீதளா தேவி என்ற பெயரும் உண்டு.

கருவறையில் அம்மன் நின்ற நிலையிலும், அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது அம்மன் தலையும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

இந்த அம்மனை நம்பிகையுடன் வழிபடுபவர்களுக்கு நிச்சயம் நல்ல வழியை ஏற்படுத்தி கொடுக்கிறாள் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு இக்கோவிலுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டமே சாட்சியாகும்.

இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கின்றனர். முத்துமாரி அம்மனுக்கு, தாவிவரும் வேல்போட்டு, காவடியும் பால்குடமும், முளைப்பாரி மதுக்குடமும், தீச்சட்டி பூமிதியும், நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.

Read More
திண்டுக்கல் அபிராமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திண்டுக்கல் அபிராமி கோவில்

இரண்டு மூலவர் சன்னதிகள் கொண்ட கோவில்

திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அபிராமி கோவில். பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் பழைய காலத்து பெயர். இதற்கு திண்டீச்சுரம் என்ற பெயரும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.

பொதுவாக கோவில்களில் ஒரு மூலவர் சன்னதிதான் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில், இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இரண்டு இறைவன்களின் திருநாமம் காளகத்தீசுவரர் , பத்மகிரீசுவரர். அம்பிகைகளின் திருநாமம் ஞானம்பிகை, அபிராமியம்பிகை.

ஆரம்பத்தில் இங்குள்ள மலையில் பத்மகிரீஸ்வரர் கோவில் இருந்தது. விழாக்காலங்களில் அடிவாரத்திற்கு சுவாமி வருவார். இதற்காக தற்போதைய அபிராமியம்மன் கோயில் இருக்குமிடத்தில், ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட அச்சுத தேவராயர், காளஹஸ்தியில் அருளும் காளஹஸ்தீசுவரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரை தன் இருப்பிடத்தில் வழிபட எண்ணிய அவர், 1538ல் இம்மண்டபத்தில் காளஹஸ்தீசுவரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்தார். 1788ல் அன்னியர்கள் இப்பகுதியில் இருந்தபோது, மலை மீதிருந்த பத்மகிரீசுவரர், அபிராமி அம்பிகையை இம்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் இந்த மண்டபமே கோவிலாகக் கட்டப்பட்டது. தற்போது இங்கு இரண்டு சிவன், இரண்டு அம்பிகையர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

சிவத்தலம் என்றாலும் இங்கு அம்பிகையே பிரதானம் பெற்றிருக்கிறாள். இப்பகுதியில் 'அபிராமி கோயில்' என்றால்தான் தெரியும். இவளது உண்மையான பெயர், 'அபிராமா அம்பிகை' என்பதாகும். அபிராமம் என்றால் அழகு என்று பொருள். இப்பெயரே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என்ற பெயர் மந்திர அட்சரத்துடன் அமைந்ததாகும். இப்பெயரைச் சொல்லி அம்பிகையை வழிபடும்போது, அம்பாளுக்குரிய அத்தனை மந்திரங்களையும் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.

பிரார்த்தனை

ராகு, கேது தோஷம் நீங்க, செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

Read More
மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி கோவில்

மூலவர் அம்பிகை அர்த்தநாரீசுவரியாக எழுந்தருளியிருக்கும் அபூர்வ தோற்றம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கிழக்கே அரை கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளி கோவில். இக்கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாகும். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன்கள் ஆனந்தசௌபாக்கிய சுந்தரி, உஜ்ஜைனி காளியம்மன் ஆகியோர் ஆவார்.

சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீசுவர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூசைகள் நடக்கவேண்டும் எனக் கேட்டதன் விளைவாக, மாகாளிக்குடியில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் அம்பிகை ஆனந்த சௌபாக்கிய சுந்தரியாக எழுந்தருளினாள்.

பொதுவாக அர்த்தநாரீசுவர கோலத்தில், சிவபெருமான் வலதுபுறமும், பார்வதிதேவி இடதுபுறமும் காட்சியளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், பார்வதிதேவி வலதுபுறமும் சிவபெருமான் அவருக்கு இடதுபுறமும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். ஆனந்த சௌபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை 'ஆனந்த சௌபாக்கிய சுந்தரி' என்கிறார்கள்.

விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட உஜ்ஜயினி காளியம்மன்

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன்மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட உஜ்ஜயினி காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு இத்தலத்தில் கோவில் கட்டி வழிபட்டார்.

இத்தலத்தில், விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்திற்கும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனுக்கும் சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது.

பிரார்த்தனை

பௌர்ணமி, அஷ்டமி, அமாவாசை ஆகிய தினங்களில் இங்குள்ள சக்தி தீர்த்தத்தில் குளித்து உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டு வந்தால் நினைத்தக் காரியங்கள் கைக்கூடும் என்று வரலாறு கூறுகிறது. அஷ்டமி நாளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டு மேன்மை அடைந்து வெற்றிப் பெற்றவர்கள் ஏராளம்.

சண்டிஹோமம் வேள்வித்தீயில் தோன்றிய மாகாளியம்மன்

இக்கோவிலின் கும்பாபிஷேகம் இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. அதன்பின்னர் நாற்பத்தி எட்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று, இறுதியாக சண்டிஹோமம் 16.03.2023 அன்று நடைபெற்றது. அன்று, சண்டிஹோமம் வேள்வித்தீயில் மாகாளியம்மன் தோன்றியது, அப்பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

Read More
திருமங்கலக்குடி  மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் கோவில்

மஞ்சள் சரடு கையில் ஏந்தி மாங்கல்ய பாக்கியம் அருளும் மங்களாம்பிகை

கும்பகோணத்தில் - மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருமங்கலகுடி. இறைவன் திருநாமம் பிராணநாதேஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளிய மங்களாம்பிகை

முதலாம் குலோத்துங்கச் சோழனிடம் மந்திரியாக இருந்தவர் அலைவாணர். இவர் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, மன்னனின் அனுமதியைப் பெறாமல், திருமங்கலக்குடியில் சிவன் கோவிலைக் கட்டினார். இதை அறிந்த மன்னன், மந்திரியை சிறைபிடித்து, சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். தன்னை சிரச்சேதம் செய்தாலும், உடலை திருமங்கலக்குடியிலேயே தகனம் செய்யும்படி மன்னனுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார், அலைவாணர். அதன்படி சிரச்சேதம் செய்யப்பட்ட அவரது உடல், திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மந்திரியின் மனைவி, தன் கணவர் கட்டமைத்த கோவிலில் வீற்றிருக்கும் அன்னையிடம் சென்று, தன் கணவரின் உயிரைத் திரும்பத் தருமாறு வேண்டினாள். அந்த நேரத்தில் அம்மன் கரு வறையில் இருந்து, 'உன் வேண்டுதல் பலிக்கும்' என்று அசரீரி கேட்டது. அதன்படியே மந்திரியின் தலை ஒன்றிணைந்து, உயிர் வரப் பெற்றார். உயிர்பெற்றதும் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். மந்திரிக்கு உயிர் அளித்த காரணத்தால், இறைவன்- பிராணநாதேஸ்வரர் என்று திருநாமம் பெற்றார். மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளியதால், அம்பாள்- மங்காளம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.

தீர்க்க சுமங்கலியாக வாழ வரமருளும் மங்களாம்பிகை

அம்பாள் மங்களாம்பிகை தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இந்த அம்பிகை மிகச் சிறந்த வரப்பிரசாதியாக திகழ்கிறாள். அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஜாதகங்களில் சொல்லப்படும் தோஷங்களில் கடுமையானது மாங்கல்ய தோஷம். அந்த தோஷத்தைப் போக்கி வளமான வாழ்வை அளிப்பவர் இந்த மங்களாம்பிகை. அம்பிகையை தீபங்கள் ஏற்றி வழிபடுவது, 11 ஞாயிற்றுக் கிழமை வழிபடுவது, ஏழு வெள்ளிக்கிழமை வழிபடுவது என்று பலப்பல பிரார்த்தனை முறைகள் உள்ளன. எந்த வகையான வழிபாடு மேற்கொண்டாலும் அதற்கான பலன் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மங்களாம்பிகையின் நவராத்திரி அலங்காரம்

நவராத்திரியின்போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள்செய்வார்கள். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் மங்களாம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி அம்மன் திக்விஜயம்

மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக ஐதீகம். மதுரை சித்திரை திருவிழாவில் எட்டாவது நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. மறுநாள், ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மனின் திக்விஜயம் நடைபெறுகிறது. பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் "மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் கிடையாது.

பட்டாபிஷேகதிற்குப் பிறகு, மீனாட்சி அம்மன் மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார். கையில் வில்லும் அம்பும் ஏந்தி, பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார். பல நாடுகளையும் தனது குடையின் கீழ் கொண்டு வந்தார். திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வென்றாள். பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.

இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திக்விஜயம் 01.05.2023 திங்கட்கிழமையன்றும், மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 02.05.2023 செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறுகிறது.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் எட்டாவது நாள் நிகழ்ச்சியாக, மதுரையின் ராணியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படும்.

பாண்டிய மன்னன் மலையத்துவஜன் - காஞ்சனமாலை தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினர். அந்த யாகத்தீக்குள்ளிருந்து மூன்று வயதுச் சிறுமியாக பார்வதி தேவி, மீனாட்சி உருவில் நடந்து வந்து காஞ்சனமாலையின் மடியில் அமர்ந்து அம்மா என்று அழைத்தாள். இக்குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். மலையத்துவஜன் பாண்டியன், தடாதகைக்கு வில் பயிற்சி, வாள் பயிற்சி கற்றுக்கொடுத்து வீர பெண்மணியாக வளர்த்தார். வீரமிக்க பெண்ணாக வளர்ந்த தடாதகைக்கு பட்டத்தரசியாக மணி மகுடம் சூட்டப்பட்டது. மகுடாபிஷேகம் செய்யும் போது, பாண்டியர்களின் வெற்றி மலரான வேப்பம்பூ மாலையை அணிவிப்பது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மனுக்கு சித்திரை திருநாள் நடைபெறும் பத்து நாட்களும் விதம் விதமான நகைகளை அணிவித்து அழகு பார்ப்பார்கள். அதுவும் பட்டாபிஷேகத்தன்று கொஞ்சம் கூடுதல் நகைகளால், அலங்கார ரூபினியாய் காட்சி தருவார். அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். வெள்ளி சிம்மாசனத்தில் அலங்காரமாக பட்டத்தரசியாக மீனாட்சி அம்மனுக்கு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தாலான செங்கோல் வழங்கப்பட்டு, வேப்பம்பூ மாலை அணிவித்து மதுரையின் ராணியாக பட்டாபிஷேகம் நடத்தப்படும். ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கிய கிரீடத்தை சூடிக்கொண்டு பட்டத்தரசியாக ஜொலிக்கும் மீனாட்சியைக் காண கண் கோடி வேண்டும். ஆண்டுக்கு ஓரு நாள் மட்டுமே,மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் முடிந்த நாளில் வேப்பம்பூ மாலை அணிந்து வீதி உலா வருவார்.

மதுரையின் பட்டத்தரசியாய் முடிசூடிய மீனாட்சியின் ஆட்சி ஆவணி மாதம் வரை நான்கு மாதங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். அதன் பின்னர் ஆண்டின் எட்டு மாதங்கள் சுந்தரேசுவரர் மதுரையை ஆட்சி செய்வார்.

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 30.04.20203, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது.

Read More
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

நித்தியகல்யாணியாக மடிசார் புடவையுடன் காட்சி தரும் அம்பாள்

திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். ஏழு முனிவர்கள் வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார், ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி.

அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந்திருக்கிறாள். எப்போதும், மடிசார் புடவையுடன், நித்திய கல்யாணியாக காட்சி தருகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள்.

மகாலட்சுமி தாயார், இங்கு இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டாள் என்கிறது தல புராணம். எனவே இந்தத் தலத்துக்கு வந்து, சப்தரிஷீஸ்வரரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

இங்கு, அம்பாள், சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், துர்கை முதலானோருக்கு புடவை சார்த்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். கடன் முதலான தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள்.

Read More
அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்

நூறு கண்கள் கொண்ட துர்க்காதேவி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள அம்மன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில். இத்தலம், முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். பிரம்மராயன் கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது.

இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால், இத்தலத்து புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.

அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோவிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோவிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது.

இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

நினைத்த காரியம் நிறைவேற, சகல சௌபாக்கியங்களும் கிட்ட துர்க்கைக்கு திரிசதி அர்ச்சனை

அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.

பிரார்த்தனை

துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். செவ்வாய், அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி, நவராத்திரி தினங்களில் கோயிலை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை, ராகுகேது தோஷங்கள் நிவர்த்தியாகும். செல்வஅபிவிருத்திக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை, குழந்தை பாக்கியம் கிடைக்க திங்கள்கிழமை, பிணி அகல, வழக்குகளில் வெற்றி பெற, பகை நீங்க, வேலைவாய்ப்பு கிடைக்க செவ்வாய்க்கிழமை ராகுகாலம், ஆயுள் பலம் பெற சனிக்கிழமைகளில் துர்கா பரமேஸ்வரியை வணங்கி வரலாம். திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Read More
கொழுமம் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொழுமம் மாரியம்மன் கோவில்

சிவலிங்க வடிவில் காட்சி தரும் மாரியம்மன்

பழனியில் இருந்து 20 கி.மீ துாரத்திலுள்ள கொழுமம் என்ற ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி கொழுமம் என்று பெயர் பெற்றது.

அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், மாரியம்மன் கிழக்கு நோக்கி, சுயம்புத் திருமேனியுடன் வீற்றிருக்கிறாள். இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மன், தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் உள்ளது. இந்த மூலவரைப் பார்க்கும்போது, அம்மனுக்குரிய எந்தவித அம்சமும் தெரியாது. இருப்பினும் கூட இந்த லிங்கத்தை, அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த மாரியம்மன் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து, இந்த ஊரை காப்பாற்றுவதால் கோட்டை மாரி என்றும் அழைக்கப்படுகிறாள்.

இக்கோவிலில் தரப்படும் தீர்த்தம், அம்மை நோய், கண் நோய் முதலிய நோய்களை தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி தரும் மீனாட்சி அம்மன்

மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள். முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும் அம்பிகையை வணங்கிய பின்னரே இறைவனை வணங்கி வருகின்றனர்.

மதுரையில் மீனாட்சி அம்மன் தினமும் எட்டு விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். அதனால், அம்பிகை தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.

அவை

1. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி

2. ப்ராத சந்தியில் – பாலா

3. 6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி

4. 12 – 15 நாழிகை வரையில் – கெளரி

5. மத்யானத்தில் – சியாமளா

6. சாயரக்ஷையில் – மாதங்கி

7. அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

8. பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

மீனாட்சி அம்மனுக்கு ஐந்து கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். ஒரேநாளில் புவனேஸ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

குழந்தை வரம் வேண்டுவோர் அன்னை மீனாட்சியைக் காலை வேளையில் பாலசுந்தரியாகக் காட்சி கொடுக்கும் கோலத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.

வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம்

Read More
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

குளிர்ச்சியான நெற்றிக்கண் உடைய அம்பிகை

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் மதுரபாஷிணி. தமிழில் 'யாழினும் மென் மொழியம்மை' என்று புகழப்படுகிறார். தெற்குமுகம் பார்த்த சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன், மதுரபாஷிணி அம்மன் வீற்றிருக்கிறார். பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படை, இந்த அம்பிகைதான்.

சிவபெருமானுக்கு வெப்பத்தை வெளிப்படுத்தும் நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷிணிக்கு, சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது.

இங்கு அம்பிகை ஸ்ரீசக்கரம் தாங்கி ஆதி அம்பிகையாகவும், மஞ்சுளாவாணியாகவும் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அருள்கிறாள்.இத்தல அம்பிகையை, மனிதனுக்கு தேவையான 34 சௌபாக்கியங்களையும் தரும் தேவியாக கண்டு, அகத்தியர் ஸ்ரீரதாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார்.

பேச்சு குறைபாட்டை தீர்க்கும் அபிஷேகத் தேன்

மதுரபாஷிணி அம்மன், கல்விக்கு அரசியாக இருந்து அருளுவதால், சக்தி பீடங்களில் இத்தலம் வித்யா பீடமாகக் கருதப்படுகின்றது. அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியதாகும். அபிஷேகத் தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது. இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளவர்களும், நா குழறுபவர்களும், இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, அம்பிகையை உள்ளம் உருக வழிபட்டு, அபிஷேகத் தேனை தினமும் பக்தியுடன் சுவைத்தால் குறைகள் தீரும்.

திருமணத் தடை நீக்கும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை

இங்கு வெள்ளிக்கிழமைதோறும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இந்த பூஜையை நடத்தினால், திருமணத் தடை நீங்கும். வியாபாரம் பெருகுவதுடன் கலை, கல்வி, ஞானம் சிறக்கும்

Read More
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கையை ஏற்கும் அம்பிகை

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. கருவறையில் அம்பிகை பாலாம்பிகை தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.

அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். பெண்கள், வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இந்த துவாரபாலகியர்க்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

பார்வதி தேவி அன்னம் வடிவெடுத்து சிவ பூஜை செய்த தலம் இது. அதனால் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள தீர்த்தம் அன்னமாம் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் நல்ல வரன் வேண்டி தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் நம்பிக்கை.

குழந்தைகளின் பாலாரிஷ்டத்தை நீக்கும் பாலாம்பிகை

பால் குடிக்காமல் சதா அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் உள்ளதாகச் சொல்வார்கள். காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள், இங்குள்ள அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளித்தால் பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.

Read More