காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்

நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு நல்வழி காட்டும் முத்துமாரியம்மன்

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 1960களில்தான் உருவானது. இக்கோவில் திருவிழா காலங்களில், மதுரை சித்திரை திருவிழாவில் கூடும் கூட்டத்தோடு ஒப்பிடும் வகையில், ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். திருவிழாக்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்பது சிறப்பம்சமாகும். கிறித்துவர்களும், இசுலாமியர்களும்கூட இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்

கோவில் உருவான பின்னணி

1956ம் ஆண்டில் இந்த ஊருக்கு வந்த ஒரு சிறுமி திடீரென மக்களின் குறைகளை தீர்க்க அம்மன் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள் இதை சில நாத்திகவாதிகள் எதிர்த்தனர்.இந்தசிறுமிக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டது.இருந்தாலும் அந்த சிறுமி அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. திடீரென சின்னம்மை நோய் பெரியம்மை நோயாக மாறியது. சிறுமி இறக்கும் தருவாயில்கூட அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. சிறுமி இறக்கும் தருவாயில் அவரை கேலிசெய்த ஒரு நபர் மிகுந்த கஷ்டத்துடன் வந்தார். தீராநோயுடன் வந்த நபரிடம் சிறுமி சொன்னாள். உன் வீட்டின் கிணற்றடியில் வடமேற்கில் ஒரு தக்காளிசெடி உள்ளது. அதில் ஒரு தக்காளி பழத்தை எனக்கு கொண்டு வந்து தா என சொன்னாள்

வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் வீட்டில் தக்காளி செடியே இல்லையே என்று சொன்னார். நான் சொன்ன இடத்தில் சென்று பார் இருக்கும் என்றாள்.உடனே அந்த நபர் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்ணுக்கே தெரியாத அளவிற்க்கு சிறு தக்காளி செடி முளைத்திருந்தது அதில் ஒரே ஒரு தக்காளிபழம் இருந்தது.அந்த நபருக்கு ஒரே ஆச்சரியம். பழத்தை எடுத்து கொண்டு சிறுமியிடம் சென்று கொடுத்தார். அந்த நபருக்கு ஓரிரு நாட்களில் அவருக்கு இருந்த நோய் முற்றிலும் குணமானது. அந்த சிறுமிக்கு பெரியம்மை முற்றியது இறக்கும் தருவாயில் ஊர் மக்களை அழைத்த சிறுமி, நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் அம்மனுக்கு ஒரு புது ஆலயம் எழுப்புங்கள். உங்களது அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நான் உங்களை காப்பேன் என்றாள். அதன் படியே கோவில் எழுப்பபட்டது.இந்த ஊரில் மிக சக்திவாய்ந்த அம்மனாக முத்துமாரியம்மன் இருக்கிறாள். வருடத்தின் பல நாட்கள் இந்த அம்மனுக்கு குளிர்ச்சி சார்ந்த அபிசேகங்களே நடைபெறுவதால் இந்த அம்மனுக்கு சீதளா தேவி என்ற பெயரும் உண்டு.

கருவறையில் அம்மன் நின்ற நிலையிலும், அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது அம்மன் தலையும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

இந்த அம்மனை நம்பிகையுடன் வழிபடுபவர்களுக்கு நிச்சயம் நல்ல வழியை ஏற்படுத்தி கொடுக்கிறாள் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு இக்கோவிலுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டமே சாட்சியாகும்.

இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கின்றனர். முத்துமாரி அம்மனுக்கு, தாவிவரும் வேல்போட்டு, காவடியும் பால்குடமும், முளைப்பாரி மதுக்குடமும், தீச்சட்டி பூமிதியும், நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.

 
Previous
Previous

கோவை, ஒத்தக்கால் மண்டபம் நவகோடி நாராயணப்பெருமாள் கோவில்

Next
Next

திருவாரூர் ஐநூற்று விநாயகர் கோவில்