
திருவையாறு ஐயாறப்பர் கோவில்
குகனுக்காக, வில்லும் அம்பும் ஏந்தி ராமராக காட்சியளித்த முருகப்பெருமான்
தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாறப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி.
இக்கோவிலில் அமைந்துள்ள வேலவன் கோட்டம் என்ற சன்னதியில் முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி, தனுசு சுப்பிரமணியயராக வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இப்படி இவர் ராமர் போல், வில்லும் அம்பும் ஏந்தி காட்சி அளிப்பதற்கு, இராமாயண காலத்து நிகழ்ச்சி ஒன்றுதான் காரணம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், அங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியை ஆளத் துவங்கினார். அப்போது தன்னுடைய சொந்த ஊரான சிருங்கிபேரபுரத்தில் தங்கி இருந்த குகனுக்கு, ராமருடைய பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராமரைக் காண வேண்டும் என்று முருகரிடம் குகன் பிரார்த்திக்க, முருகர் கோதண்ட ராமனாகவும், வள்ளி சீதையாகவும், தெய்வயானை லட்சுமணராகவும் காட்சி கொடுத்தனராம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
நவ நரசிம்மர் அருளும் தட்சிண அகோபிலம்
திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் தலம்
ஐந்து பெருமாள் எழுந்தருளி இருக்கும் பஞ்ச திருப்பதி தலம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 15 கி.மீ, தூரத்தில் அமைந்திருக்கிறது அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தட்சிண அகோபிலம் என்று சொல்லப்படும் இந்த நவநரசிம்ம தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி அவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட புராணத்தில் இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.
அவணியாபுரம் பஞ்ச திருப்பதி என போற்றப்படுகிறது. பிருகு முனிவருக்கு அருள் செய்ய, பெருமாள் அவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் கோலத்தில் இங்கு எழுந்தருளி அருள் புரிந்தார்.
இக்கோவில் சன்னதிகள் மலையில் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும், ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜபெருமாளும், ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர்.
கீழே குகை போன்ற கர்ப்பகிரகத்தில் லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம், சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம் அமைந்திருக்கின்றது. இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்தபிறகு, தட்சிணப் பகுதியில் இந்த மலைக் குகையில்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் பெருமாள். அவரே இப்போது மூலவராக உள்ளார். புராண காலத்தில் இந்தத் தலத்தில் ஸ்ரீநரசிம்மர் உக்கிரமாக இருந்தார். அவரின் சினத்தைக் குளிர்விக்க பிரம்மா இங்கே யாகம் செய்தார். அப்போது, யாகத் தீயால் பெருமாளின் திருமுகம் பின்னமானது. இதனால் பதறிப்போன திருமகள், நரசிம்மரின் திருமுகத்தை தான் ஏற்று பெருமாளின் மடியில் அமர்ந்து அருள் செய்யத் தொடங்கினாள். பெருமாளுக்காக, அவரின் முதல் அடியாரான கருடாழ்வாரும் சிம்ம முகம் தாங்கி சேவை புரிந்தார்.
லட்சுமி நரசிம்மர் கர்ப்பகிரகத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், 'தட்சிண அகோபிலம்' என்று போற்றப்படுகிறது.
பிரார்த்தனை
இந்தக் கோவிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒட்டிய வயிறுடன் காட்சி தரும் விநாயகர்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். இத்தலத்திற்கு திருமெய்ஞானம் என்ற பெயரும் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை.
பிரணவ விநாயகர்
பொதுவாக விநாயகப் பெருமான் பெரிய வயிறுடன் தான் தோற்றமளிப்பார். ஔவையார் தனது விநாயகர் அகவலில் விநாயகப் பெருமானின் தோற்றத்தை விவரிக்கையில் 'பேழை வயிறு' என்று அவருடைய பெருத்த வயிற்றை குறிப்பிட்டு இருப்பார். ஆனால் இக்கோவிலில் விநாயகர், ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, 'பிரணவ விநாயகர்' என்று அழைக்கிறார்கள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை இத்தலத்தில் உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருக்கின்றது. படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் விநாயகர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

நாம மலை சீனிவாசப் பெருமாள் கோவில்
பூஜையின்போது திருமுகம் வியர்க்கும் பெருமாள்
சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் பெருமாள்
திருப்பதி ஏழுமலையான் தினமும் உறங்கி ஓய்வெடுக்க வரும் தலம்
சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் சீனிவாசப் பெருமாள், நின்ற கோலத்தில் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் நிறைய
திருப்பணிகள் செய்திருக்கிறார். மலை அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை, பக்தர்கள் நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.
இக்கோவிலில் பூஜையின்போது மூலவர் சீனிவாசப் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பது ஒரு அதிசயமான காட்சியாகும். மேலும் பெருமாள் இங்கு தரிசிக்கும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டுவதும் ஒரு ஆச்சரிய நிகழ்வாக இருக்கின்றது. மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தினமும் தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பக்தரின் வேண்டுதலுக்கு ஏற்ப பால் திரிந்து தயிராகும் அதிசயம்
ஒருமுறை இந்தக் கோவிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், 'ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை' என்றாராம். பக்தர்கள், அந்தக் குறையைக் களையும் விதமாக, ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டுதலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்து போனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர்.
திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்
பயத்தை நீக்கி, மனதில் துணிச்சலைத் தரும் கம்பகரேசுவரர்
கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. கம்பகம் என்றால் நடுக்கம் என்று அர்த்தம். நடுக்கத்தை ஏற்படுத்தும் பயத்தை போக்கும் ஈசன் என்பதால் இந்த தலத்து சிவபெருமானுக்கு கம்பகரேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இது தேவார வைப்புத் தலமாகும். பட்டுக்கும் பெயர் பெற்ற ஊர் இது.
சரபேசுவரருக்கான பிரதான தலம்
அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேசுவரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. சிவன், விஷ்ணு, காளி(பிரத்யங்காரா தேவி), துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம் தான் சரபேசுவரர். நான்கு பெரிய தெய்வங்களும் ஒன்றாக இருப்பதால் நான்கும் சேர்ந்த அருள் கிடைக்கிறது. இத்தலத்தில் சரபேசுவரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணு, தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்து, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்க ஆணையிட்டார்.
வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேசுவரர் என்ற பெயரில் கோவில் கொண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேசுவரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேசுவரர் திருக்கோவிலில் உள்ள சரபேசுவரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேசுவரர் தான். இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும். கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும்.
செவ்வரளிப்பூ, மரிக்கொழுந்து, வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நேர்த்திகடனாக உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சரபேசருக்கு தயிர் அபிசேகம்(வியாதி நீக்கம்) பால் அபிசேகம்(ஆயுள் விருத்தி) ஆகியவை செய்வதும் பக்தர்களது நேர்த்திகடனாக உள்ளது.

ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவில்
மேற்கூரையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பு
திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் ஆரண்ய சுத்தரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் ஒரு பீடத்தின் மீதோ அல்லது தனி சன்னதியிலோ எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவிலில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே ஒன்பது கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் அபூர்வ பஞசநதன நடராஜர்
இக்கோவிலில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞசநதன கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி அமைந்துள்ளது. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த பஞசநதனநடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

அய்யன்பேட்டை சுந்தரேசுவரர் கோவில்
சிவபெருமான் கையில் தராசுடனும், அம்பிகை கையில் படியுடனும் வணிக வியாபாரிகளாக காட்சி தரும் தலம்
கும்பகோணம் - பூந்தோட்டம் வழித்தடத்தில் மருதுவாஞ்சேரி என்ற கிராமத்தில் இருந்து இரண்டு கி மீ தொலைவில் உள்ளது அய்யன்பேட்டை. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. இக்கோவிலில், சிவபெருமானின் உற்சவமூர்த்தி கையில் தராசு பிடித்த கோலத்திலும், அன்னை பார்வதி கையில் அரிசி அளக்கும் படியுடனும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இப்படி இறைவனும், இறைவியும் வணிக வியாபாரிகளாக காட்சி தருவது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும். கையில் தராசுடன் திகழும் இறைவனின் திருநாமம் செட்டியப்பர். அரிசி அளக்கும் படியுடன் இருக்கும், அம்பிகையின் திருநாமம் படியளந்த நாயகி.
இப்படி சிவபெருமானும், பார்வதியும் வணிக வியாபாரிகளாக காட்சி தருவதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
நாயன்மார்களான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் ஒரு சமயம் திருவீழிமிழலைக்கு தங்கள் அடியார் கூட்டத்துடன் வந்து தங்கி இருந்து சைவத் தொண்டு ஆற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கடுமையான வறட்சி ஏற்பட்டது. உணவுப் பற்றாக்குறையால் மக்கள் பட்டினியாக இருந்தனர். இதனால் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்கள் அடியவர் கூட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் உணவு பஞ்சத்தை சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவர்களை ஆசிர்வதித்து, தினமும் இரண்டு பொற்காசுகளை திருவீழிமிழலை கோவிலில் அவர்களுக்குக் கிடைக்கும்படி வழங்கினார். ஆனால் அந்த தங்க நாணயங்களை கொடுத்து, எங்கு சென்று உணவு பொருட்களை வாங்குவது என்று தெரியவில்லை. அப்போது, சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, அய்யன்பேட்டை என்ற இடத்தில் இருந்து உணவுப் பொருட்களை வாங்குங்கள், ஆண்டார்பந்தியில் உணவு படையுங்கள் என்று அறிவுறுத்தினார். அய்யன்பேட்டையை அடைந்த நாயன்மார்கள், சிவபெருமானும், பார்வதி தேவியும் அங்கு வியாபாரம் செய்வதைக் கண்டு வியந்தனர். மளிகை பொருட்களை விற்பதற்காக சிவபெருமான் கையில் தராசுடனும், அம்மன் அரிசியை அளக்கும் படியுடனும் காட்சியளித்தார்கள். எனவே இக்கோவிலின் இறைவன் செட்டியப்பர் என்றும், மீனாட்சி அம்மன் படியளந்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
வியாபாரத்தில் வெற்றி பெற வழிபட வேண்டிய கோவில்
புதிதாய் வியாபாரம் தொடங்குவோர், தொழில் செய்வோர், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் ,வறுமையில் சுழல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தொழில் சிறக்கும், செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அட்சய திரிதியை, மாதாந்திர பரணி நட்சத்திர நாட்கள், சித்திரை பரணி நட்சத்திர நாள், வரலக்ஷ்மி விரதம், வெள்ளி கிழமைகளில் வந்து முறைப்படி வழிபட வியாபாரத்தில் , வெற்றி பெற்று வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்கிறார்கள்.
திருவீழிமிழலையில் பெற்ற படிக்காசினை மாற்றி பொருட்கள் வாங்கிய இடம் அய்யன் பேட்டை. இந்த நிகழ்வை ஆண்டுதோறும் ஐதீக விழாவாக, சித்திரை பரணி நட்சத்திர நாளன்று 'வியாபார விழா' என்னும் பெயரில் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். வணிகத்தைப் போற்றும் திருவிழா, தமிழகத்திலேயே இங்கு மட்டுமே நடைபெறுகிறது. அந்நாளில் ஏராளமான வணிகர்கள் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது வியாபாரத் தலம் என்பதால் பெரும்பாலும் கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் வந்து வணங்குகிறார்கள்.
தொழில் முன்னேற்றம் இல்லாதவர்கள், எதனை தொட்டாலும் நஷ்டம் காண்பவர்கள் மற்றும் அனைத்து விதமான நஷ்டங்களும் தீர இத்தல வழிபாடு கைகொடுக்கும்.
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்
சிவபெருமான் அப்பர், சம்பந்தருக்கு படிக்காசு அளித்த தலம்
கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில், தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. தல விருட்சம் வீழிச் செடி. அதனால் தான் திருவீழிமிழலை என்று தலத்துக்குப் பெயர்.
மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார். வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி, வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்குப் பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரர்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல தலங்களையும் பணிந்து பாடி, பின் திருவீழிமிழலையை அடைந்து இறைவனைப் பணிந்து, இன்னிசைப் பாமாலைகள் சூட்டி இன்புற்றனர். இருவரும் தினமும், ஐந்நூற்று மறையவர்களுக்கும், மற்ற அடியார்களுக்கும் உணவு படைத்து வந்தனர். சம்பந்தரும், அப்பரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்), மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன. அப்பொழுது நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. தங்களுடன் இருக்கும் அடியாருக்கு உணவு படைப்பது எப்படி என்று இருவரும் கவலை உற்றனர். அச்சமயம் வீழிமிழலைப் பெருமான் இருவருடைய கனவிலும் தோன்றி, உங்களை வழிபடும் அடியவர்களுக்காக, தினந்தோறும் உங்கள் இருவருக்கும் ஒவ்வொரு பொற்காசு தருகின்றோம். அதைக் கொண்டு நீங்கள் உங்கள் அடியவர்களுக்கு உணவு படைக்கலாம் என்று கூறி மறைந்தார்.
கனவு நீங்கி, பெருமான் கருணையை வியந்த அவர்கள் மறுநாள் காலையில் திருவீழிமிழலை கோவிலுக்கு சென்றனர். கிழக்கு பீடத்தில் ஒரு பொற்காசு காணப்பட்டது. அதை சம்பந்தர் எடுத்துக்கொண்டார். வலம் வரும்போது மேற்கு பீடத்தில் ஒரு காசு இருப்பதைக் கண்டு, அதை அப்பர் பெருமான் எடுத்துக்கொண்டார். தங்கள் மடத்துப் பணியாளர்களிடம் அக்காசுகளைக் கொடுத்து, வேண்டிய பண்டங்களை வாங்கி அடியவர்களுக்கு உணவு அளித்திடுங்கள் என்றார்கள். அவர்களும் வேண்டியவற்றை வாங்கி, இரண்டு மடத்து அடியவர்களுக்கும் உணவு படைத்தார்கள்.
சில நாட்கள் சென்றன. திருநாவுக்கரசர் திருமடத்தில் அடியவர்கள் சரியான நேரத்திற்கு உணவருந்துவதையும், தமது திருமடத்தில் காலதாமதமாக அடியவர்கள் உணவருந்துவதையும் ஞானசம்பந்தர் உணர்ந்து, சமையல் பணியாளர்களை நோக்கி, 'உணவு படைப்பதில் ஏன் காலதாமதம்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், சிவபெருமான் கொடுத்த பொற்காசை கடைவீதிக்குக் கொண்டுசென்றால், நாவுக்கரசர் பெறும் காசுக்கு உடனே பொருட்கள் கொடுக்கிறார்கள். நாவுக்கரசருக்கு கிடைக்கும் காசு நல்ல காசாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் பெற்று வரும் காசு மாற்று குறைந்த காசாக இருக்கின்றது. அதனால் நீங்கள் பெற்ற பொற்காசு கொடுத்து நாங்கள் பண்டம் வாங்க சென்றால், நம்முடைய காசுக்கு வட்டங் (தரகு, கமிஷன்) கேட்டு தீர்த்து, பின்புதான் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். அதனால் தான் காலதாமதம் என்று கூறினர். மறுதினம் திருவீழிமிழலை கோவிலுக்குச் சென்ற சம்பந்தர்,
"வாசிதீரவே காசுநல்குவீர்
மாசின் மிழலையீர், ஏசலில்லையே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே''
என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். பின்னர் சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கும் நற்காசு வழங்கினார். அதுமுதல் காலத்தோடு அவருடைய அடியவர்களுக்கும் உணவு படைத்தார்கள். பின்பு மழை பெய்து எங்கும் செழித்து விளைபொருட்கள் மிகுந்தன. நாட்டில் பஞ்சம் அகன்றது.
இரண்டாம் கோபுரத்தைக் கடந்தவுடன் வெளித் திருச்சுற்றில் கிழக்கே, சம்பந்தருக்கு இறைவன் படிக்காசு அளித்த பலிபீடமும்; மேற்கே திருநாவுக்கரசருக்கு படிக்காசு வழங்கிய பலிபீடமும்; அருகில் படிக்காசு விநாயகரையும், அப்பர், திருஞானசம்பந்தர் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்
பாதாளத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி
கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில் தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. சிவபெருமான் காத்தியாயன முனிவருக்கு மகளாக பிறந்த பார்வதி தேவியை திருமணம் புரிந்த தலம் இது. காத்தியாயன முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க கருவறையில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பு. திருமணப் பரிகாரத் தலங்களில் முக்கியமான தலம். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
இத்தலத்து இறைவனின் உற்சவ மூர்த்தி காசி யாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளைக் கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் வீற்றிருக்கும் தலங்கள் பல உண்டு. அங்கு மூலவரோ, உற்சவரோ மட்டுமே கல்யாண கோலத்தில் இருப்பர். மூலமூர்த்தி, உற்சவமூர்த்தி என இருவருமே திருமணக் கோலத்தில் விளங்கும் தலம் திருவீழிமிழலை ஒன்றே ஆகும்.
இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. திருமணத்தில் இரண்டு கால்களை முக்கியமாகச் சொல்வர். அரசனுடைய ஆணையை சாட்சியாக வைத்து திருமணம் நடக்கிறது என்ற பொருளில் ஒரு மரக் கொம்பினை நடுவர். மணமேடையில் இருக்கும் அந்தக் கொம்பு அரசாணைக்கால் எனப்படும். திருவீழிமிழலை கர்ப்பக்கிரக வாயிலில் அரசாணைக்கால் இருக்கிறது. இந்த அமைப்பு வேறெங்கும் இல்லாத விசேஷ அமைப்பாகும். மகாமண்டபம் திருமணமண்டபம் போல், பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
இக்கோவிலில் இறைவன் எழுந்தருளி இருக்கும் கருவறை மண்டபத்திற்கு செல்ல நாம் 15 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். பொதுவாக சிவாலயத்தில், நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை தரை மட்டத்தில் அமைந்திருக்கும். ஆனால் இக் கோவிலிலோ பாதாளத்தில் நந்தி அமைந்துள்ளது. முழு கோவிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இப்படிப்பட்ட பாதாள நந்தியை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
திருமண தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்
திருமண தடை உள்ளவர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோவில் இது. இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட பின் தொடர்ந்து 45 நாட்கள், தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும்,
தேவந்திராணி நமஸ்துப்யம்
தேவந்திரப்ரிய பாமினி
விவாஹ பாக்யமாரோக்யம்
என்று துவங்கும் சுலோகத்தைப் பாராயணம் செய்யவேண்டும். தினமும் காலையில் மட்டுமின்றி, மாலையிலும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்.
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
முருகனின் சிவபூஜைக்கு இடையூறு வராமல் காத்த அஞ்சுவட்டத்தம்மன்
நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை.
முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், 'பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில், சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.
அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன், நான்கு திசைகள் மற்றும் ஐந்தாவது திக்கான ஆகாயத்தில் இருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே இந்த அம்பிகைக்கு ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமம் உண்டு.
கீவளூர் காளி எனப்படும் அஞ்சு வட்டத்தம்மண் மிக உக்கிரமானவள். சோழர்கள் போருக்கு செல்லும முன்னர் இந்த கீவளூர் காளியை வழிபாட்டு செல்வார்கள் என்று வரலாறு சொல்கிறது. அஞ்சு வட்டத்து அம்மையின் சன்னிதி முதல் பிரகாரத்தில் முருகன் சன்னிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கிறது. அஞ்சு வட்டத்தம்மண் சுதைவடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி,கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து,9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து,குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வர நம்மை பீடித்த நோய்கள்,தீராதநோய்கள், தரித்திரம், வறுமை,ஏவல்,பில்லி, சூன்யம், மாந்திரீகம் என அத்தனை பீடைகளும், தீவினைகளும், தோஷங்களும் விலகி ஓடும். பித்ரு தோஷம்,குலதெய்வ சாபம் விலகும். தொடுவதால்,காற்றுமூலம் பரவுவதால் என பரவும் தொற்றுக் கிருமிகளையும்,தொட்டு தொடரும்,பற்றிப்படரும் தொற்றுநோய்களையும் அடியோடு துடைத்தெறியும் வல்லமைபடைத்தவள் அஞ்சுவட்டத்து அம்மன்.

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
மூலவர் சிவபெருமானை திருமால் வணங்கி நிற்கும் அபூர்வ காட்சி
காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால், இத்தலம் 'திருமாற்பேறு' என்றானது. அதுவே மருவி நாளடைவில் திருமால்பூர் என்றானது.
திருமால், சிவபெருமானிடமிருந்து சக்கராயுதம் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்து, சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி ருத்ராட்சம் அணிந்து, அம்பிகை பூஜித்த ஈசனை முறைப்படி பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு, ஆயிரம் நாமங்கள் சொல்லி ஈசனை அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூஜையின்போது, ஈசனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்தது..வழிபாட்டில் குறையேற்படலாகாது என்றெண்ணி, தன் கண்ணைப் பறித்து, கண் மலரால் ஈசனை வழிபாடு செய்தார். திருமாலின் ஆழ்ந்த பக்திக்கு ஈசன் உளம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார். தனக்கு காட்சி தந்த சிவபெருமானை மும்முறை வலம்வந்து வணங்கினார் திருமால். பின்னர் ஈசன் திருமாலைப் பார்த்து, 'நாராயணரே! தாமரை மலருக்காக உம் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால், உள்ளம் மகிழ்ந்து உமக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி நீ தாமரைக்கண்ணன், பதுமாஷன் என்று பெயர்பெற்று விளங்குவாய். நீ பேறு பெற்றதால், இத்தலம் உன் திருப்பெயரால் 'திருமாற்பேறு' என விளங்கப் பெறும். இச்சக்கரத்தால் வெல்லற்கரிய பகைவரையும் வெல்க' என்று கூறி சுதர்சன சக்கரம் வழங்கி ஆசீர்வதித்தார்.
பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம்
மூவருக்கு தீபாராதனை காட்டியபின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பாகும். திருமால் பூஜித்த காரணத்தால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாற்றப்படுகிறது. இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் என்பது வியப்புக்குரியதாகும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
அனுமனை விழுங்கிய முதலை சிற்பம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷமாகவும் விளங்குகின்றது. இக்கோவிலில் இருக்கும் மண்டபத் தூண்கள், சிற்பங்கள், வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள் நம் முன்னோர்கள் சிற்பக் கலையில் அடைந்திருந்த மகோன்னத நிலையையும், பெருமையையும் உணர்த்துகின்றது.
இக்கோவில் சேசராயர் மண்டபத்தில் பல அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்மண்டபத்து தூண் ஒன்றில், முதலை ஒன்று அனுமனை விழுங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சுவாரசியமான, ஒரு ராமாயண நிகழ்ச்சி உள்ளது
ராமாயணத்தில், ராவணன் மகனான இந்திரஜித்துக்கும், லட்சுமணனுக்கும் இடையே போர் நடந்தது இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் வட்சுமணன் மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவரான சுசேனர் இமயமலையில் விளையும் சஞ்சீவினி என்னும் மூலிகையை கொண்டு வந்தால் குணப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். உடனடியாக இமயமலைக்கு விரைந்தார் அனுமன். இதையறிந்த ராவணன், தடைகளை ஏற்படுத்த அவற்றை அனுமன் முறியடித்தார். இமயமலைக்கு காலநேமி என்னும் அசுரனை அனுப்பினான் இந்திரஜித். காலநேமி மாரீசனின் மகன் ஆவார். சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அனுமன் அடைந்த போது, அங்கு முனிவர் வடிவில் நின்றிருந்தான் காலநேமி. முனிவரைக் கண்ட அனுமன் வணங்க, அருகில் இருந்த குளத்தைக் காட்டி, இதில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். உன் எண்ணம் ஈடேறும் என்றான். அனுமன் நீராடிய போது காலநேமியால் ஏவப்பட்ட மாய முதலை அவரை விழுங்கியது. அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு அனுமன் வெளியேறினார். அத்த முதலை ஒரு தேவனாக மாறியது. "என் பெயர் தான்யமாகி. சாபத்தால் முதலையாக குளத்தில் இருந்தேன். உங்களால் சாப விமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன். முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து, காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன், அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் சேசராயர் மண்டபத்தில் உள்ள தாணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் தன் மனைவியருடன் காட்சி தரும் சூரிய பகவானின் அபூர்வ கோலம்
சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் குறுங்காலீஸ்வரர். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலம் இது.
பொதுவாக சிவன் கோயில்களில் சூரியன் நடுவிலும், சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களும் அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்களின் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கின்றது. சதுர மேடையில் தாமரையை ஓத்தவடியில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . தாமரை நடுவில் சூரிய பகவான் தன் இரு மனைவியர்கள் உஷா மற்றும் பிரத்யுஷா உடன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் எழுந்தருளி இருக்கிறார் . அவரது தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளை பிடித்தபடி சாரதியாய் இருக்கிறரர். இவர்களைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் அமைந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நவக்கிரக அமைப்பை நாம் மற்ற தலங்களில் காண்பது அரிது.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்
ராமாயண காலத்தோடு தொடர்புடைய கோவில்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். கருவறையில் முத்துமாலை அம்மன் நான்கு திருக்கரங்களோடு, கையில் கிளி ஏந்தியபடி காட்சி தருகிறாள்.
மிகவும் பழமையான இக்கோவில் ராமாயண காலத்தோடு தொடர்புடையது. ராவணன், சீதாதேவியை சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் 'குரங்கணி' எனப் பெயர் பெற்றது.
சீதாதேவி தான் சென்ற வழியை ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள். புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு முத்துமாலையம்மன் என்று பெயரிட்டனர்.
ஆங்கிலேய அதிகாரி கூப்பிட்ட குரலுக்கு பதில் அளித்த முத்துமாலை அம்மன்
ஆங்கிலேய அதிகாரி கோவிலுக்கு தந்த இரண்டு மண் குதிரைகள்
பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த நவாப், தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், ஆங்கிலேய அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு ஆங்கிலேய அதிகாரி இக்கோவிலுக்கு குதிரையில் வந்தார். கோவில் சுற்றுச்சுவரை இடிக்க முயற்சித்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்தவகள் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி 'இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன். அது பதில் சப்தம் தருமா? என கேட்க, அதற்கு அவர்கள் 'நிச்சயம் தரும்' என்றனர்.
ஆங்கிலேய அதிகாரி,'முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்' என மூன்று முறை கூப்பிட்டார். 'என்ன?' என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, இரண்டு மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.
இக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனி பெருந்திருவிழாவின் போது, வானில் கருடன் வட்டமிடும் அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில்
ஆறு சீடர்களுடன் காட்சி தரும் ராஜயோக தட்சிணாமூர்த்தி
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ.. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்ட நாயகி.
இக்கோவிலில் சுவாமி சன்னதியின் சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார் பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் "ராஜயோக தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.
உயர்ந்த பொறுப்பில் இருந்து பதவி இழந்தவர்கள், நியாயமாக செயல்பட்டும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் ஆரண்யேஸ்வரருக்கும். தட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து வழிபடுகிறார்கள் இதனால் இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோட்டைப்பட்டி சென்றாயப் பெருமாள் கோவில்
சின்னஞ்சிறு பாலகனாக, தாடி மீசையுடன் காட்சி தரும் பெருமாள்
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில், 500 படிகள் கொண்ட மலையின்மீது அமைந்திருக்கிறது சென்றாயப் பெருமாள் கோவில். இக்கோவிலில் சின்னஞ்சிறு பாலகனாக, அதே நேரம் முறுக்கு மீசையும் தாடியுமாகப் பெருமாள், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். தாடி மீசையுடன் இருக்கும் பெருமாளுக்கு சங்கும் சக்கரமும் இல்லை. ஆனால் அவருக்கு, சங்கும், சக்கரமும் ஏந்திய திருப்பதி வேங்கடாசலபதி போன்று அலங்காரம் செய்யப்படுகிறது.
பெருமாள் தாடி மீசையுடன் காட்சி தருவதற்கான காரணம்
பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் கிருஷ்ணதேவராயர் வம்சத்தை சேர்ந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார். அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பாலகன் பால் அருந்திக் கொண்டு இருந்தான்.
இயற்கைக்கு மாறாக நடைபெற்ற அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போனார் சென்னம நாயக்கர். அவருக்கு, தான் சென்றாயப் பெருமாளே என்பதை உணர்த்தி, அங்கேயே கோவில் கொள்ள விரும்புவதாகவும், அவரும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுமே தனக்குப் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறினான் அந்த பாலகன்.
வம்சமே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சென்னம நாயக்கருக்கு, இறைவனின் அருளால் ஒன்றல்ல, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பிள்ளையே கோவிலில் பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவர். குழந்தை வடிவில் வந்து, சென்னம நாயக்கருக்கு அருள்புரிந்த இறைவன், அவர்களின் அடையாளமான தாடி மீசையுடனே காட்சி தருகின்றார்.
இக்கோவிலில், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பங்குனித் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, மூலவரே உற்சவராக வீதி உலா வருகிறார். மேலும், பெருமாள் குழந்தைத் திருவுருவம் ஏற்றிருப்பதால், கிருஷ்ண ஜயந்தி இங்கு மிகவும் விசேஷம். ஓணம் பண்டிகையன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலையை இவருக்கு அணிவிக்கிறார்கள்.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, குடும்பம் தழைக்க பெருமாளிடம் மக்கள் வேண்டிக்கொள்கின்றனர். சென்றாயர் சன்னதிக்கு வலப்புறம், சுவாமி பசுவிடம் பால் குடித்த இடத்தில் சித்திர ரத மண்டபத்தில் கிருஷ்ண மேடை என்ற பெயர் கொண்ட ஒரு மேடை உள்ளது பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த மேடையின் இரு மூலைகளில் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர் சற்று நேரத்தில் அவர்களது இரு கைகளும் ஒன்றாக கூடிவிடும். இதை, அச்செயல் நடக்க சுவாமி தரும் உத்தரவாகவே கருதுகின்றனர்.

கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில்
கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலம்
மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ்ப்பெரும்பள்ளம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இறைவியின் திருநாமம் சௌந்தர்யநாயகி. நவக்கிரக தலங்களில் இது, கேது தோஷ நிவர்த்திக்கான தலமாக விளங்குகின்றது. இறைவன் நாகநாதசுவாமி கிழக்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.
கேது பகவான் தனி சந்நிதியில் மேற்கு நோக்கி, பாம்பு தலையுடனும் மனித உடலுடனும் இரு கைகளையும் கூப்பி சிவன் சந்நிதியை நோக்கி வணங்கியபடி உள்ளார். ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் கீழப்பெரும்பள்ளம். கேதுவின் நிறம் சிவப்பு என்பதால், இவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபட வேண்டும். மேலும், கொள்ளு சாதம் படைத்து வழிபட வேண்டும். படைத்த கொள்ளு சாதத்தை இங்கேயே வரும் பக்தர்களுக்கு விநியோகித்து விட வேண்டும். வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. ஜாதகத்தின்படி கேது தசை மற்றும் கேது புத்தி நடைபெறும் காலங்களில் இத்தலம் வந்து கேதுவுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம். இத்தலத்தில் கேதுவே பிரதானமாதலால், இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது.
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம் செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து செல்கின்றனர்.
இத்தலம், கேது தோஷ நிவர்த்தி தலமாகவும், கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு, மூலவரையும் அம்பாளையும் வழிபட்டு, 7 முறை வலம் வந்து, கேது பகவானுக்கு பரிகார பூஜை மேற்கொண்டால் கேது தோஷ், நாக தோஷ நிவர்த்தி கிட்டுகிறது. நரம்பு மண்டல நோய் உள்பட பல்வேறு நோய்களும் விலகுகின்றன. நாக தோஷம் உள்ளவர்கள் கோயிலின் எதிரே உள்ள அரசும், வேம்பும் உள்ள மேடையில் நாக பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர்.
கேது தோஷ பரிகாரத்தில் பங்கேற்பவர்களுக்குக் கோவில் பிரசாதமாக விபூதி, குங்குமத்துடன் உலர் பொடி ஒன்றும் வழங்கப்படுகிறது. பரிகாரம் செய்து கொள்வோர் தொடர்ந்து 7 நாள்கள் கோயில் விபூதி, குங்குமத்தை பக்தி சிரத்தையுடன் தரித்துக் கொண்டு, பிரசாதத்துடன் அளிக்கப்பட்ட உலர் பொடியை உண்ண வேண்டும். 7-ஆம் நாளின் நிறைவில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, தேங்காய் (சிதறு காய்) உடைத்து வழிபாட்டை நிறைவு செய்தால், கேது தோஷ பரிகாரம் நிவர்த்தியாவது உறுதி என்பது இத்தல ஐதீகம்.
தாமல் வராகீசுவரர் கோவில்
பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்த அபூர்வ சிவலிங்கத் திருமேனி
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இறைவனின் திருநாமம் வராகீசுவரர், இறைவியின் திருநாமம் கௌரி அம்பாள். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சில சிவத்தலங்களை பெருமாள் தசாவதார கோலத்தில் வழிபட்டுள்ளார். அதில் இத்தலம் பெருமாள் வராக மூர்த்தி கோலத்தில் வழிபட்ட தலமாகும். இத்தலத்து சிவலிங்கத் திருமேனியில் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து. கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து. அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. வராக அவதாரம் எடுத்த திருமாலுடன் மோதிய போது, சிவபெருமானின் திருமேனியில் சங்கு, சக்கரங்கள் பதிந்தன. அதனால் தான் இக்கோவில் சிவலிங்கத் திருமேனியில் சங்கு சக்கரம் பதிந்த அடையாளங்கள் உள்ளன.
இக்கோவிலில் அஷ்ட பைரவர்களும் தூண்களில் எழுந்தருளி உள்ளது தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபட்டால் பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடை விலகும்.
இக்கோவில் காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குகின்றது, அதனால் ராகு கேது தோஷ நிவர்த்திக்கான பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன.

திருமண்டங்குடி திருபுவனேசுவரர் கோவில்
பெண்களின் வீரத்தை போற்றும் அபூர்வ சிற்பங்கள்
கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் திருபுவனேசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலம் இது.
பொதுவாக பல பழமையான கோவில்களில், ஆண்களின் வீரச் செயலை போற்றும் வகையிலான சிற்பங்கள் ஏராளமாக இருப்பதை காணலாம். ஆனால், இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோமுகத்தில் ( அபிஷேகத் தீர்த்தம் வெளி வரும் பாதையில்) வேறு எந்த கோவிலிலும் இல்லாத, பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான காட்சிகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு உள்ள சிற்பங்களில பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள். வனப்பகுதியில் நடக்கும் வீரமிக்க நிகழ்ச்சிகளை விவரிக்கும் வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. யாளி (பழங்கால விலங்கு) ஒன்று யானையை துரத்த, அந்த யானையோ ஒரு குதிரையை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அக்குதிரைமீது வீரன் ஒருவன் அமர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளை வேட்டையாட வந்த ஒருவர் மரத்தின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே தீரமிக்க ஒரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப் பன்றி ஒன்றை கழுத்துப் பகுதியில் குத்தி வீழ்த்தும் காட்சி மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நளின உடல் கொண்ட பெண்களின் பரத நாட்டிய அடவுகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இக்கோமுகத்தில் உள்ளன. சங்கநாதம் ஒலிக்கும் சிவ கணங்கள் சிற்பங்கள் வரிசையாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பெண்களின் கலை நயத்தையும், வீரத்தையும் அக்காலத்தில் எந்த அளவுக்கு போற்றியிருந்தால் ஒரு சிவாலயத்தின் கருவறை கோமுகியில், மக்கள் வழிபடுமிடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது.

ஆவூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
கருவறை விமானத்து கலசம் கருங்கல்லால் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பு
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள கிராமம் ஆவூர். இங்குள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் பழமை மிக்கது. தேவலோகப் பசுவான காமதேனு தனது பெண் நந்தினியுடன் இத்திருத்தலத்தில் தங்கி இங்கு எழுந்தருளி அற்புத சேவை சாதிக்கும் ஸ்ரீ லஷ்மிநாராயணப் பெருமாளைக் குறித்து நீண்ட காலம் தவம் இயற்றியதால், இத்தலத்திற்கு 'ஆ'வூர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது எனத் தல வரலாறு கூறுகிறது. 'ஆ'என்றால் 'பசு' என்று பொருள். கருவறையில் லட்சுமி நாராயணப் பெருமாள் தனது இடது கரத்தால் தாயாரை அரவணைத்து, வலது கரத்தால் பக்தர்களுக்கு அபயம் அருள் பாலிக்கிறார். பொதுவாக கோவில் கருவறை விமானத்தின் கலசங்கள் தாமிரம், தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவில் கருவறை விமான கலசம் கருங்கல்லால் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இத்தகைய அமைப்பை நாம் காண்பது அரிது.
வரப்பிரசாதியான ஜெயவீர ஆஞ்சநேயர்
மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமாகப் பூஜிக்கப்படும் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர், புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின மன்னராக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாக இருந்த அவதார புருஷர் ஆவார். பீஜப்பூர், கோல்கொண்டா, அஹமது நகர் ஆகிய மூன்று கல்தான்களுக்கும். விஜயநகர சாம்ராஜ்யத்திற்கும் நடந்த மிகப் பெரிய போரில், சூழ்ச்சிகளால் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. பின்னர் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர் பாரத தேசம் முழுவதும் பயணித்து 700க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் விக்ரகங்களை பிரதிட்டை செய்தார். அவர் பிரதிட்டை செய்தது தான் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர். சுமார் நான்கரை அடி உயரம் கொண்ட இந்த ஜெயவீர ஆஞ்சநேயர் வாலில் மணி கட்டிய கோலத்தில், தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். வலது கரம் பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாகவும், இடது கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்திக் காட்சியளிக்கிறார். பகைவர்களால் ஸ்ரீ அனுமனின் சிலா திருமேனிக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த மணியில் அதர்வண வேத மந்திரம் பிரயோகத்தையும் செய்தருளியுள்ளார் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர்.
பொதுவாக வாலில் மணி கட்டிய அனுமனை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். தெற்கு நோக்கியபடி வீற்றிருக்கும் இந்த அனுமனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. விரும்பிய வரங்களை தரும் சிறந்த வரப்பிரசாதியாக இவர் திகழ்கின்றார்.