
பல்லடம் அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழம் வைத்து வேண்டுதல் வைக்கும் பெண் பக்தர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் நகரில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில், அப்பகுதி பெண்களிடையே மிகவும் பிரசித்தம். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் பெண்கள்.இக்கோவிலில் மஞ்சள் மற்றும் குங்குமம் வாசனை எப்பொழுதும் நிறைந்திருக்கும்.
பெண்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை, தங்கள் பிரார்த்தனையை வேண்டிக் கொண்டு, அம்மனின் பாதத்தில் வைத்துவிட்டு தங்கள் புடவை தலைப்பை அம்மனின் பாதத்தருகில் பிடிப்பார்கள். புடவையில் பழம் உருண்டு விழுந்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
கேட்டை நட்சத்திர பரிகாரத்தலம்
இந்தக் கோவில் கேட்டை நட்சத்திர பரிகாரத்தலமாக விளங்குகின்றது. அதனால் இக்கோவிலுக்கு பூராடம் கேட்டை கோவில் என்ற பெயரும் உண்டு.
ஜென்ம நட்சத்திரம் கேட்டை நட்சத்திரமாக இருப்பவர்கள், வருடத்திற்கு இரண்டு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இரண்டரை மணி நேரம் கோவிலில் அல்லது கோவில் வளாகத்தில் இருக்க வேண்டும்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மாசி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில், பெரியவர்கள், கைகுழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில்
பேரழகும், கம்பீரமும் மிக்க பிரம்மாண்டமான அதிகார நந்தி சேவை
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது ஆதிபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. முற்காலத்தில் நெசவாளர்கள் இப்பகுதியில் அதிகம் இருந்ததால் 'சென்னை தறிப் பேட்டை' என்று அழைக்கப்பட்டு பின்னர் 'சிந்தாதிரிப்பேட்டை' ஆனது. 1743- இல் கிழக்கிந்திய கம்பெனியில் துபாஷாக பணியாற்றிய ஆதியப்ப நாராயண செட்டி என்பவரால் இங்கு ஆதிபுரீஸ்வரர், ஆதி கேசவ பெருமாள், ஆதி விநாயகர் ஆகிய ஆலயங்கள் கட்டப்பட்டன.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின்போது மூன்றாம் நாள் நடைபெறும் அதிகார நந்தி சேவை உலகப் பிரசித்தி பெற்றது. அதுபோல சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் நடைபெறும் அதிகார நந்தி வாகன ஊர்வலம் ஆசியாவிலேயே மிகப் பெரியது.
ஆதிபுரீஸ்வரர் கோவில் அதிகார நந்தி வாகனத்தின் பிரம்மாண்டமும், கம்பீரமும், அழகும் பார்ப்பவரை மயக்க வைக்கும். அழகிய வேலைப்பாடு மிளிரும் இந்த அதிகார நந்தி வாகனத்தை 1901 ஆம் ஆண்டு இக்கோவிலுக்குச் செய்தளித்தவர், தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தந்தையான பொன்னுசாமி கிராமணி என்பவர். அதிகார நந்தி தேவர் மட்டும் 6 அடி உயரம், நந்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் திருக்கயிலாய மலை 3 அடி உயரம், அதன் கீழ் இருக்கும் சட்டம் 3 அடி உயரம் என, மொத்தம் 12 அடி இந்த வாகனத்தின் உயரமாக தற்போது உள்ளது. முன்பு இந்த வாகனம்.கீழ் சட்டத்திற்கும் கீழே வைப்பதற்கு, 3 அடி உயரமுள்ள மற்றொரு சட்டம் இருந்தது. அதையும் சேர்த்தால் மிக அதிக உயரமாக வாகனம் இருக்கும் என்பதால், அந்த உயரத்திற்கு இப்போது வீதியில் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு, உயரம் குறைக்கப்பட்டு விட்டதாம்.
கலையழகு மிளிரும் நந்தி தேவரின் ஒவ்வொரு அங்கமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைகளும், தொடைகளும், கால்களும் கட்டுமஸ்தாக உருவாக்கப்பட்டுள்ளன. இடை சுருங்கி, அடிவயிறு குவிந்திருப்பது ஒரு யோகியின் நிலையைக் காட்டுகிறது. முன்னிரு கரங்களும் இறைவனின் பாதங்களைத் தாங்கும் நிலையில் இருக்க, பின்னிரு கரங்களில், மானும், மழுவும் ஏந்தியுள்ளார். நேராக இல்லாமல் ஒயிலாக சாய்ந்திருப்பது போல இருப்பதே ஒரு தனி அழகு ஆகும் அவரது மேனி முழுவதும் ஆபரணங்கள் தனித் தனியாக தெரியும் படி அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தலையலங்காரமும், தோளில் வாகுவளையங்களும், மார்பின் மாலைகளும், கரங்களில் கங்கணமும், காலில் சிலம்பும் மிகவும் கலை நயத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளன. இவரது தாமரை மாலையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
வாகனத்தின் உச்சி முதல் பாதம் வரை ஆங்காங்கே உள்ள கம்பிகளில், மொத்தம் 63 வகையான பொம்மைகள் பொருத்தப்படுகின்றன. மூன்று அடுக்குகளாக இந்த பொம்மைகளை அமைத்துள்ளனர். முழு முதற்க் கடவுள் விநாயகர், மும்மூர்த்திகளான பிரம்மா, ஸ்ரீ மஹா விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் கண்டு களித்த பதஞ்சலி, புலிக்கால் முனிவர் இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும்,, பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன. கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என, பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளன. அனைத்து பொம்மைகளும் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளது ஒரு தனி அழகு.
அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன. கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன. நான்கு பக்கமும் நான்கு துவார பாலகர்கள், கந்தருவி பொம்மைகள் அலங்கரிக்கின்றன,

நந்திதேவரின் சிறப்புகள்
நந்தியம் பெருமானின் சிறப்புகள்
சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு. நந்தி என்ற சொல்லுக்கு 'ஆனந்தமாக இருப்பவன்' என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால், சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில், அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.
நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும். பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுகிறார். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும். சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும். நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
நந்திதேவரின் சிறப்புத் தோற்றங்கள்
சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். இக்கோவில் வடக்கு கோபுர வாசலில் அதிகார நந்திதேவர், மனித முகத்துடன் தனது துணைவியாருடன் எழுந்தருளி உள்ளார்.
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அர்த்த மண்டபத்தில் அதிகார நந்தி கூப்பிய கரத்துடன் உடைவாளுடன் உள்ளார்.
நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
திருமழபாடியில் உள்ள நந்திதேவர் மனித முகம் கொண்டவர்.
செய்யாறு வேதபுரீசுவரர் ஆலயத்தில் நந்தி, நேர் திசையில் ஈசுவரனை நோக்காமல் எதிர் திசையில் பிரதான வாயில் கோபுரத்தை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.
திருவையாறிலும், திருமழபாடியிலும் நந்திகேசுவரரின் செப்புத் திருவுருவங்கள் உள்ளன.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உற்சவ நந்திகேசவர், இரு கரங்கள் கூப்பியும், இரு கரங்களில் மான், மழுவுடனும் காட்சி தருகிறார். இரு கரங்களில் உள்ள மானையும், மழுவையும் மறைத்துப் பார்த்தால்அனுமன் போன்ற தோற்றத்தை அளிக்கிறார்.
கும்பகோணத்திற்கு அருகில் கொருக்கை என்ற ஊரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவசக்தி சந்நதியின் முன் இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ நாளில் இரு நந்திகளுக்கும் சேர்ந்தாற்போல நிலக்கடலை, முந்திரிப் பருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் உள்ள நந்தி மிகப் பெரியது. வெள்ளைக் கல்லாலான இவரை மாகாளை என்று அழைக்கின்றனர்.
நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது.
நந்தி தேவரை வழிபட்டால் கிடைக்கும் நற்பலன்கள்
நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும், நல்லொழுக்கமும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்
முருகப்பெருமானின் முன்பு சிவலிங்கம் இருக்கும் திருப்புகழ் தலம்
சென்னையில் பிரசித்தி பெற்ற திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை . நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலம் இது. சிவலிங்கத்தின் பின்னால் ஈசனும் அம்பாளும் திருமணக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
முருகப் பெருமான், ஈசனை வழிபட்டு தனது தவறுக்குப் பரிகாரம் தேடிய தலம்
முருகப் பெருமான், பாலமுருகனாகத் திருவிளையாடிய போது, திருக்கயிலாயத்துக்குச் சென்ற பிரம்மாவிடம், பிரணவப் பொருள் கேட்க, அதற்கு பிரம்மா விடை அளிக்காததால், அவரை சிறையில் இட்டார். அவரைச் சிறையிலிட்ட குற்றத்துக்காக முருகப் பெருமான் சிவனாரை வழிபட முடிவு செய்தார். இத்தலத்திற்கு வந்து வேதபுரீஸ்வரை வழிபட்டார். பின்னர், அவருக்கு அருகில், மரகதலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்குக் கிழக்கில் மந்தாகினி தீர்த்தத்தையும், மேற்கில் தமது கூர்வேலால் வேலாயுத கூபத்தையும் (கிணறு) ஏற்படுத்தினார். மரகதலிங்கம், கந்தன் ஸ்தாபித்தது என்பதால் ''ஸ்கந்த லிங்கம்" ஆனது. இப்படி முருகப்பெருமானின் முன்பு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்திருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். திங்கட்கிழமைகளில் வேலாயுத கூபத்தில் நீராடி, முருகரையும் வேதவனநாதரையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்று தலபுராணம் விவரிக்கிறது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
விஷம் தீண்டா பதி
திருமால் இத்தலத்துக்கு அருகில் உள்ள கண்ணபாளையம் என்ற இடத்தில் சிவபெருமானை பூஜித்து தான் இழந்த சக்கராயுதத்தை திரும்ப பெற்றார். இதனைப் பார்த்து அதிசயித்த ஆதிசேஷன், 'இனி இந்த திருத்தலத்தில், யாரைப் பாம்பு கடித்தாலும் அவர் மீது விஷம் அணுக விட மாட்டேன். வேறெந்த விஷப் பூச்சி கடித்தாலும் அப்படியே' என்றாராம். எனவேதான், திருவேற்காடு 'விஷம் தீண்டா பதி' ஆகி விட்டது. இங்கு பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை
பிரார்த்தனை
இங்கு சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி அம்மன் தனக்கு கேட்டு வாங்கிய மூக்குத்தியும், புல்லாக்கும்
திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி பகுதியில் பனையேறி ஒருவன் இருந்தான். அவன் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள். இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.
இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு. தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை. 7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும், நாம் உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் அம்மனின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது. அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே அரண்மனைக்கு கொண்டு சென்றான். அதை மகாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு, அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான்.
அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் வந்து மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே! அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள். திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது.
நம்பூதிரிகள் கூறியதை கேட்ட மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால், கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும்.

பொன்மார் தியாக வினோதப் பெருமாள் கோவில்
பொன்மார் பெருமாள் சக்கரத்தை பிரயோகிக்கும் நிலையில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ கோலம்
சென்னை மேடவாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில், 9 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மார் கிராமத்தில் அமைந்துள்ளது தொலைவில் தியாக வினோதப் பெருமாள் கோவில். இத்தலம் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விஜயநகர மன்னர்களின் காலத்தில் இவ்வூரானது 'ஜெயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர் கோட்டத்து கால்வாய் நாட்டு தியாக வினோத நல்லூரான பொன்மாறு' என்று வழங்கப்பட்டதாக, கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இத்தலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் பெரியதிருவடி எனும் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது சிறப்பானது.
கருவறையை அடைய 10 படிக்கட்டுகளைக் கடக்க வேண்டும். கருவறையில் தியாக வினோதப் பெருமாள் பெருமாள், சதுர்புஜனாக தனது திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் தாங்கி, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார். பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரமானது பிரயோக நிலையில் உள்ளது. இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கின்றது.
முன்பொரு காலத்தில் அம்பரீஷன் என்ற மன்னன் தீவிர பெருமாள் பக்தனாக இருந்தான். இவர் ஏகாதசி விரதத்தை தன் உயிர் போலக் கருதி தவறாமல் கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை அவர் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்த சமயத்தில், துர்வாசரின் கோபத்திற்கு ஆளானார். துர்வாசர் அம்பரீஷனை அழிக்க பூதம் ஒன்றை ஏவினார். அக்கணமே தன் பக்தனைக் காக்க திருமால் தன் பிரயோக சக்கரத்தை ஏவ, அந்த சக்கரம் பூதத்தை அழித்து, பின்னர் துர்வாசரைத் துரத்தத் தொடங்கியது. தன் உயிரைக் காத்துக் கொள்ள துர்வாசர், திருமாலிடம் சரணடைந்தார். ஆனால் திருமாலோ, அம்பரீஷனிடம் சரணடையச் சொல்ல, அதன்படியே அம்பரீஷ மன்னனிடம் சென்று, தன்னை மன்னித்துவிடும்படி துர்வாசர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சீறி வந்த பிரயோக சக்கரம், தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு பெருமாளின் திருக்கரங்களைச் சென்றடைந்தது. தன் பக்தர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் விதமாகத்தான், பெருமாளின் சக்கரம் பிரயோக நிலையில் இருப்பதாக ஐதீகம்.
கருடாழ்வார் சங்கு, சக்கரம், சர்ப்பம் ஏந்தி இருக்கும் அரிய காட்சி
இத்தலத்தில் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தல பெருமாளை வழிபடுபவர்களுக்கு, துன்பங்கள் உடனடியாக விலகும். திருமணத் தடை அகலும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

காரடையான் நோன்பு
கணவரின் ஆயுள் விருத்திக்காக சுமங்கலிகள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு (சாவித்திரி விரதம்)
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் காரடையான் நோன்பு, அனைத்து சுமங்கலி பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்று கூறுவர். எமதருமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை எப்படிக் காப்பாற்றினாள் என்பது தொடர்பான பண்டிகை இது. இந்த சுமங்கலி நோன்பு தென் இந்தியர்கள் மட்டுமல்ல வட இந்தியர்களாலும் சுக்கிரனின் பலம் நிறைந்த வைகாசி மாதத்தில் பௌர்னமி திதியன்று சுக்கிர வாரத்தில் "வட சாவித்திரி விரதம்" என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பின் தத்துவம்
கார் என்றால் இருள். இருள் சூழ்ந்திருக்கும் எமப்பட்டினத்தை அடையாதவன் கார்- அடையான் என்று கூறப்பட்டது. இந்த விரதத்தை சுமங்கலிகள் அனுஷ்டித்தால் அவர்களுடைய கணவன்மார்கள் எமப்பட்டினத்தை அடையார் என்பதே இந்த காரடையான் நோன்பின் பெயர் வரக்காரணமாகும்.
மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்து கொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
காரடையான் நோன்பிருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி
மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் ஒரே மகள் சாவித்திரி, வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.
சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார்.
சாவித்திரி சமயோசிதமாக, என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.
அன்னை காமாட்சி தேவியை நினைத்து நோன்பிருந்து, தனது கணவர் சத்யவானின் உயிரை, எமதர்ம ராஜாவிடம் போராடி சாவித்திரி மீட்டு கொண்டு வந்த தினமே காரடையான் நோன்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பு முறை
கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். விரதம் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள காமாட்சி அம்பாளின் படம் அல்லது ஏதாவது அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு இலை போட்டு அதன் மீது வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, பூஜை ஆகிய தாம்பூல பொருட்களை வைக்க வேண்டும். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக, நோன்பின் போது சுமங்கலிகள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேக விட்டு கலந்து, கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் .
'உருக்காத வெண்ணையும், ஓரடையும் நான் படைத்தேன். ஒருக்காலும் என் கணவன் பிரியாதிருக்க வேண்டும்' என்று சொல்லிக்கொண்டே மணமான பெண்கள் நோன்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டும் .

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்
எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவக் கோவில்
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தானில் அமைந்துள்ளது ஜெனகை மாரியம்மன் கோவில். மதுரையைப்போல இவ்வூரையும் கோவில் நகரம் என அழைக்கின்றனர். இந்த மாரியம்மனை ஜனக மகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த மாரியம்மன் 'ஜனகை மாரி' என்றழைக்கப்பட்டு பின்னர், 'ஜெனகை மாரி' என்று பெயர் பெற்றாள்.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கருவறையில் ஜெனகை மாரியம்மன் இரண்டடி உயர திருமேனியுடன் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் சந்தனமாரியம்மன் ஆக்ரோஷமாக நின்ற நிலையில் எழுந்தருளி இருக்கிறார். சொல்லி வரம் கொடுப்பாள் சோழவந் தான் ஜெனகை மாரி என்பது இவ்வூர் மக்களின் வேதச் சொல் ஆகும். இப்பகுதியில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜெனகைமாரி என பெயர் வைத்திருப்பார்கள்
இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குல தெய்வமாக உள்ளார். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ கோவில் இது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும், அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும். அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம். குழந்தை பாக்கியம். திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, கோவிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம். குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோவிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய வேண்டிக் கொண்டவர்கள் தானியங்களை கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர்.
திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழும் அதிசய நிகழ்ச்சி
இக்கோவிலில் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறுவது ஒரு தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடுதல் திருவிழாவின் முடிவில், மழை தூரல் விழுவது இத்தலத்தில் இன்றளவும் நடக்கும் அதிசய நிகழ்ச்சியாகும்.

சிவபுரி உச்சிநாதர் கோவில்
குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டப்படும் தேவாரத்தலம்
சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் தேவாரத்தலம் சிவபுரி உச்சிநாதர் கோவில். இறைவியின் திருநாமம் கனகாம்பிகை என்ற உச்சிநாயகி. ஒரு காலத்தில் நெல் வயல்கள் சூழ்ந்து இருந்ததால் இத்தலத்திற்கு திருநெல்வேலியில் என்ற பெயரும் உண்டு. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம் என்பதால் கருவறையில் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
இத்தல இறைவனுக்கு மத்யானேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான ஞானக்குழந்தை திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் சீர்காழிக்கு அருகில் இருந்த ஆச்சாள்புரத்தில் நடைபெற இருந்தது. அப்போது திருமண ஏற்பாடுகளுக்காக, திருஞானசம்பந்தரும் அவரது உறவினர்களும் ஒரு குழுவாக ஆச்சள்புரம் நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது நல்ல மதிய வேளை. சம்பந்தரின் திருமணத்திற்கு வந்தவர்கள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த சிவபெருமான், கோவில் பணியாளர் வடிவில் வந்து, வந்திருந்த அனைவருக்கும் உணவளித்தார்.
திருஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது பார்வதிதேவி ஞானப்பால் ஊட்டினார். அவரது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிவபெருமான் மதிய உணவு படைத்தார். வந்து உணவளித்தது இறைவன் தான் என்பதை அறிந்த சம்பந்தர், மதிய வேளையில் தோன்றியதால் உச்சிநாதர் என்று அழைத்து போற்றினார். அதனாலேயே இக்கோவில் மூலவருக்கு உச்சிநாதர், மத்தியானேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
இதனால், இந்த கோவிலில் குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டும் வைபவம் நடைபெறுவது விஷேசமாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து குழந்தைக்கு முதல் உணவு ஊட்டுகின்றனர். இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
திருமணம் விரைவில் கைகூட இங்கு வழிபடுகிறார்கள்.

காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில்
காலசர்ப்ப தோஷம் நீங்க தரப்படும் தீர்த்தப் பிரசாதம்
சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது அனந்தீஸ்வரர் கோவில் . இறைவியின் திருநாமம் சவுந்தரநாயகி. இக்கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் தன் கையில் பாம்பை பிடித்தபடி காட்சி அளிக்கிறார். இத்தலத்து இறைவனை அஷ்டநாகங்களும், அதன் தலைவனான அனந்தனின் தலைமையில் வழிபட்டு பேறு பெற்றுள்ளன. அதனால் தான் இத்தல இறைவனுக்கு அனந்தீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. எனவே இத்தல இறைவனை வழிபட்டால், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் ஆகியவை நீங்கும். காலசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும். அம்பாள் சவந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ, பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம்.
தீராத நோயால் அவதிப்படுபவர்களும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்களும் சுவாமி, அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் குணம ஆவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் வரவாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன.

துத்திப்பட்டு பிந்து மாதவர் கோவில்
பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை மார்க்கத்தில், ஆம்பூர் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் கோவில். தாயார் திருநாமம் ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார். கருவறையில் ஆறடி உயர திருமேனியுடன் பிந்து மாதவப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கதாயுதத்தை கையில் பிடித்தபடி அருள்பாலிக்கிறார். அவருடைய நான்கு கரங்களில், மேல் இரு கரங்கள் சங்கும், சக்கரமும் தாங்கி இருக்கின்றன. கீழ் இடது கரம் கதாயுதத்தை ஏந்தியுள்ளது. கீழ் வலதுகரம் அபய முத்திரையை அளிக்கிறது.
பஞ்ச மாதவ தலங்கள்
மாதவனைக் காண்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட இவ்வுலகில் ஐந்து மாதவப் பெருமாள்களை ஐந்து திவ்ய திருத்தலங்களில் ஸ்தாபித்தான்.
முதலில் வடநாட்டில் அலகாபாத் நகரின் பிரயாகையில் வேணி மாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பித்தாபுரத்தில் குந்தி மாதவரையும், மூன்றாவதாக தமிழகத்தில் ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும், நான்காவதாக கேரளம் திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும், ஐந்தாவதாக ராமேசுவரத்தில் சேது மாதவரையும் ஸ்தாபித்து, வழிபட்டு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி அடைந்தான் என்பது ஐதீகம். அதோடு, இந்த பஞ்ச மாதவப் பெருமாள் கோவில்களுக்கு யாரெல்லாம் தலயாத்திரை செல்கிறார்களோ, அவர்களின் எல்லாவித பாப, சாப தோஷங்களும் நீங்க வேண்டுமென பெருமாளிடம் வேண்டிக்கொண்டான். அதற்கு பெருமாளும் அருள் பாலித்தார்.
மாங்கல்ய தோஷம், நாகதோஷம் நீக்கும் தலம்
வாழ்நாளில் ஒரு முறை பஞ்ச மாதவப் பெருமாள் தலங்களை தரிசனம் செய்தாலே, செய்தவர்களுக்கு சொர்க்கமும், மோட்சமும் நிச்சயம் கிட்டும் என்பது புராண வரலாறு. புத்திர பாக்யம் இல்லாதவர்கள் விரதம் இருந்து இந்த மாதவர்களில் யாரையாவது ஒரு வரை தரிசனம் செய்தால் புத்திர பாக்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் அமாவாசை, பௌர்ணமி, சனிக்கிழமை, ரோகிணி- திருவோணம் -சுவாதி நட்சத்திரங்கள் ,பிரதி மாத ஏகாதசி திதிகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள். இத் திருதலத்தில் உள்ள நாக கன்னிகைகளுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்து, ஐந்தாவது வெள்ளிக்கிழமை மாங்கல்யம் சாத்தி வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் நாக கன்னிகைக்கு நெய் தீபம் ஏற்றி, ஏழுமுறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். பின் பிந்து மாதவரை சென்று வணங்கினால் தோஷம் நீங்கி விடும்.

சிவராத்திரியின் சிறப்புகள்
சிவபெருமானுக்குப் பிரியமுள்ள சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் இரண்டு சிவராத்திரிகள் வரும். தேய்பிறையில் ஒரு சிவராத்திரியும், வளர்பிறையில் ஒரு சிவராத்திரியுமாக வருடத்திற்கு 24 சிவராத்திரிகள் வரும். ஆனால் மாசி மாதம் தேய்பிறையில் வருகின்ற சிவராத்திரி தான் சிறப்புமிக்க சிவராத்திரி என்பதால், அதையே மகாசிவராத்திரி என்று கொண்டாடப்படுகின்றது.
ஒரு சமயம் கைலாய மலையில் சிவபெருமானிடம் உரையாடிக் கொண்டிருந்த பார்வதிதேவி, ‘தங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது?’ என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான். ‘தேவி! மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளன்று, நீ எம்மை இரவு வேளையில் நான்கு ஜாம வேளையிலும் கண் விழித்திருந்து, உபவாசத்துடன் என்னை பூஜித்து வழிபட்டாய். அந்த நாளே எனக்கு மிகவும் பிரியமான நாள்’ என்றார். இதை கேட்டு மகிழ்ந்த பார்வதிதேவி, 'அப்படி என்றால் அந்த நாளில் தங்களை வழிபடும் எல்லோருக்கும், இப்பிறவியில் செல்வமும், மறு பிறவியில் சொர்க்கமும், இறுதியில் நற்கதியும் தாங்கள் அருள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாள். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி விரதம்
மகா சிவராத்திரி அன்று வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம உச்சரித்து பூஜிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாலங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால், கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கள வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில்
குதிரை முகம் கொண்ட அபூர்வ நந்தி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி- சேத்துபட்டு வழியில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பங்கஜவல்லி. துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.
இத்தலத்து நந்தி குதிரை முகத்துடன் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது. ஒரு சமயம் இந்திரன் தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். ஆனால் இறைவன் அவனுக்கு காட்சி தரவில்லை. சிவபெருமான் அசரீரி மூலமாக இந்திரனை கெங்காபுரம், விருபாட்சிபுரம் , கோனைப்புதூர் முதலிய தலங்களில் வழிபட்டு, பின்னர் இத்தலத்தில் பூஜை செய்தால் காட்சி கிடைக்கும் என்று அருளினார். இந்திரனும், அவ்வாறே செய்தான்.
சிவபெருமானும் இந்திரனுக்கு காட்சி தருவதற்காக ரிஷபத்தின் மேல் ஏறிக்கொண்டு கிளம்பினார். கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டதால், இந்த ரிஷபம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை அழைத்து செல்லுமா என்றும், அதே நேரம் இதுவே ஒரு குதிரையாக இருந்தால் நாம் விரைவில் இந்திரனுக்கு காட்சி தரலாமே என்றும் எண்ணினார். இது ரிஷபத்திற்கு தெரிந்து ஈசன் நம்மைப் பற்றி இப்படி நினைத்துவிட்டாரே என்று எண்ணி ஈசனின் எண்ணப்படி குதிரை முகத்துடன் வடிவெடுத்து, சிவபெருமானை குறிப்பிட்ட காலத்திற்குள் அழைத்து சென்று அவரது எண்ணத்தை பூர்த்தி செய்தது. எனவே தான் இத்தலத்தில் குதிரை வடிவுடன் கூடிய நந்தி அமைந்துள்ளது. இப்படி நந்தி குதிரை முகத்துடன் இருப்பது ஒரு அரிதான காட்சியாகும்.
துலாபாரம் காணிக்கை செலுத்தப்படும் ஒரே சிவாலயம்
பொதுவாக சிவன் கோயில்களில் துலாபாரம் காணிக்கை செலுத்தும் வழக்கம் கிடையாது ஆனால் இத்தலத்தில் துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் ஒரு தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
தலத்து இறைவன் சிறந்த வரப்பிரசாதி. இத்தலத்தில் வழிபட்டு திருமணத்தடை நீங்க பெற்றவர்களும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களும் அதிகம். இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி ஸ்ரீ சந்தான கோபால யாகமும் , திருமண தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வர கலா பார்வதி யாகமும் நடைபெறுகின்றது.

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்
இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிக்கும் அபூர்வ மூல கருடன்
காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான கோவில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை தாயார்.. இங்கு வழிபடுதல், திருமலையில் வழிபடுவதற்கு சமம் என்பதால் இத்தலம் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தில் இராமாநுஜர் ஆராதித்த பெருமாள் விக்கிரம், திருப்பதியிலிருந்து கொண்டு வந்த ஸ்ரீசடாரி, திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஆலபத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அக்னி ஆகிய மூன்றும் இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ளன.
அனைத்து வைணவ ஆலயங்களிலும் வெளிப் பிரகார மதில் சுவர்களின் மூலையில் சிறகுகளை விரித்த நிலையில் அமர்ந்த கோலக் கருடனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். திருக்கோவிலைக் கருட பகவான் காவல் காப்பதாக ஐதீகம். இத்தலத்தின் ஈசானிய மூலையில் எழுந்தருளியுள்ள கருடன் விசேஷமாக ஆராதிக்கப்படுகின்றார். திருமதில் சுவரில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால் இவர் 'மூலைக் கருடன், மூல கருடன், மதில் கருடன்' என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். இவர் கோபுரத்துடன் கூடிய தனி சந்நிதியில், இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி மாத மஹா சுவாதி அதி விசேஷம்.
மூல கருடனுக்கு சுவர் மீது சிதறு தேங்காய்களை உடைக்கும் வித்தியாசமான நடைமுறை
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை தரையில் உடைப்பதில்லை. வானில் வீசி உடைப்பது போலச் சுவர் மீது உயர வீசி உடைக்கின்றார். இவரைத் தரிசித்து வழிபட்டால், ஏவல் பில்லி சூனியம், மன வியாதி அகலும். சத்ருபயம் நீங்கி வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். பெரும்பாலான எல்லாக் காணிக்கைகளும் இந்த மூலக் கருடனுக்கே செலுத்தப்படுகிறது.

சூலக்கல் மாரியம்மன் கோவில்
கண்நோயை தீர்க்கும் மாரியம்மனின் அபிஷேக தீர்த்தம்
பொள்ளாச்சியில் இருந்து 11கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில். சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது. கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோவில்களில், சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று.
கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும், இடது கைகளில் சூலமும், கபாலமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். சூலக்கல் மாரியம்மன் வடக்கு நோக்கி அருள் புரிவதால், 'வடக்கு வாயிற் செல்வி' எனவும் அழைக்கப்படுகிறார்.
பிரார்த்தனை
சூலக்கல் மாரியம்மன், அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர். குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறது.

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட, உயிரோட்டமுள்ள அபூர்வ சிற்பங்கள்
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
தாயார் சன்னதியின் முன் உள்ள மண்டபத்தில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக்கலைக் கூடமாக திகழ்கின்றது. இங்குள்ள தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, மன்மதன், கார்த்தவீரியார்ஜூனன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூணில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். சிற்பங்களில் தெரியும் நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம், இமைகள் என்று ஒவ்வொரு அங்கமும் சிற்பங்களில் மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால் இந்த சிற்பங்கள் கல்லினால் செதுக்கப்பட்ட வையா அல்லது உயிரோட்டமுள்ள உருவங்களா என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும். இரண்டு இசைத் தூண்களையும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.

மதுரை புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவில்
இரட்டை நாய் வாகனங்களுடன் இருக்கும் அபூர்வ பைரவர்
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ளது புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவில். இறைவி மீனாட்சி அம்மன் சொக்கநாதர் சன்னதிக்கு வலதுபுறம் எழுந்தருளி உள்ளார். சிவபெருமாளின்64 திருவிளையாடல்களில் ஒன்றான, ஏழை மூதாட்டி வந்தியம்மைக்கு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட தலம் இது. மூதாட்டி வந்தியம்மைக்கும் தனி சன்னதி உள்ளது. ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் இங்கு புட்டு திருவிழா நடைபெறும். அன்றுமட்டுமே இங்கு புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்கோவிலில் இரட்டை கால பைரவர் அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவர் ஒரு நாய் வாகளத்துடனோ அல்லது நாய வாகனம் இல்லாமலோ அருள்பாலிப்பார். சில தலங்களில் இரண்டு,மூன்று மற்றும் எட்டு பைரவர் கூட இருப்பதுண்டு. ஆனால் இங்குள்ள பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பது சிறப்பு. இதனால் இவர் இரட்டை கால பைரவர் என அழைககப்படுகிறார்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வறுமை நீங்கி செல்வம் பெருக, இழந்த பொருள்களையும், செல்வத்தையும் மீண்டும் பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் தீர இரட்டை கால பைரவரை பிரார்த்தனை செய்கிறார்கள்.

கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்
ஆறடி உயர திருமேனியுடன், கண்களில், ஒளிர் விடும் பிரகாசத்துடன் தோற்றமளிக்கும் ஆஞ்சநேயர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில். . இராமர் இத்தலத்தில் யாகம் செய்ததால், இத்தலத்தில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் போன்ற திருமண் கிடைக்கிறது. இக்கோவிலில் தனிச் சன்னதியில் ஆறடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், ஒளிர் விடும் பிரகாசம், தரிசிப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும்.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.
பிரார்த்தனை
சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.

நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில்
யோகநிலையில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்
திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தலம் நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. சுகப் பிரம்மரிஷி வழிபட்ட தலம் இது.
இக்கோவிலில் 64 சிவ மூர்த்தங்களில் ஒன்றான யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருக்கிறார். பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார்.
பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். ஆனால் சனகாதி முனிவர்களுக்கு மனம் ஒருமுகப்படாததால் தெளிவு ஏற்படவில்லை.இதனால் சிவபெருமான் தாமே யோக நிலையில் அமா்ந்து மெளனத்தின் மூலமாக ஞானமும் நிஷ்டையும் கைகூடும் தன்மையை போதித்து அருளினாா். சிவபெருமானின் இத்திருக் கோலத்தை 'யோக தட்சிணாமூா்த்தி' என்று புராணங்கள் போற்றுகின்றன. யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது. இரு பாதங்களையும் குத்திட்டு, குறுக்காக வைத்து, யோகபட்டயம் தரித்து, முன் இரண்டு கரங்களையும் முழங்கால்கள் மீது நீட்டி, பின் இரண்டு திருக்கரங்களில் அட்சய மாலை மற்றும் கமண்டலம் ஏந்தி காட்சி தருகிறார்.
செவ்வாய் தோஷம் தீர்க்கும் யோக தட்சிணாமூர்த்தி
இந்த யோக தட்சிணாமூர்த்தியை இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். கல்வியில் மேன்மை பெறலாம்.