திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்

திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்

திருமழப்பாடி நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம்

திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமழப்பாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இரண்டு அம்பிகைகள் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை ஆவர். இந்த ஆலயத்தில் நடைபெறும் நந்தி திருமணம் மிக விசேஷமானது.

நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. அதாவது திருமழப்பாடி கோவிலில், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று நடைபெறும் நந்தி திருக்கல்யாணத்தைப் பார்ப்பவர்களுக்கு முந்தி திருமணம் ஆகும் என்பது தான் இதன் பொருள். அதன்படி திருமழப்பாடி நந்தி திருக்கல்யாணம் பார்த்தால், அடுத்த ஆண்டு நந்தி கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமண வரம் வேண்டுவோருக்குத் திருமணம் நடந்து முடியும் என்கின்றனர்.

சிலாத முனிவர் என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமான், 'நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்' என்று அருளினார். சிலாத முனிவர், பெட்டகத்தில் கண்டெடுத்த அந்தக் குழந்தைக்கு 'செப்பேசன்' என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.

செப்பேசன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து துயருற்றார். இதையறிந்த செப்பேசன், திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், திருக் கயிலையின் தலைவாயிலைக் காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.

இதையடுத்து , சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் , தவம் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவையாற்றில் இருந்து நந்தியம்பெருமான், வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக திருவையாற்றில் இருந்து ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த ஆண்டு நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம், 30.3.2023 வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

Read More
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்

மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்

ஆஞ்சநேயர் வீணையை இசைத்து சிவபெருமானை வழிபட்ட தலம்

சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் மப்பேடு. இறைவனின் திருநாமம் சிங்கீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பகுஜாம்பாள்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, தன் உண்மையான ரூபத்தை மீண்டும் பெற இங்கு வந்து சிவனை வழிபட்டார். பெண் வடிவில் திருமால் வழிபட்டதால், (மால் - திருமால்; பேடு - பெண்), `மால் பேடு' என்றும், மீண்டும் சுய உருவம் பெற்றதால் (மெய் உருக் கொண்டதால்) `மெய்ப்பேடு' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் சிவபெருமான் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். தன் இசையில் கவனம் செலுத்திய அவரால், ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயல வில்லை. இந்தக் குறை தீர, மப்பேடு திருத் தலத்தில் சிங்கிக்குத் திருநடனக் காட்சியைக் காட்டினாராம் ஈசன். ஆகவே அவருக்கு இத்தலத்தில், சிங்கீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமைந்திருக் கும் ஒரு சிறிய மாடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சீதையைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது வழி தெரியா மல் தவித்ததாகவும், பின்னர் இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வீரபாலீஸ்வரரை, வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைத்து வழிபட்டதாகவும், இறைவனின் அருளால் இலங்கைக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் சந்தியா காலத்தில் ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வந்து வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத்துறையில் பெயரும் புகழும் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வீரபாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பு அமர்ந்து பயிற்சி செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

இக்கோவில், கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் நவ வியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷக் காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.

மூல நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவில்

அருள்மிகு சிங்கீஸ்வரர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயிலாக விளங்குகிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையவும் தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

Read More
எட்டுக்குடி  சுப்பிரமணியசுவாமி கோயில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்

தரிசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப குழந்தையாய், இளைஞனாய்,முதியவராய் காட்சி தரும் முருகன்

திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே அமைந்துள்ள முருகன் தலம் எட்டுக்குடி. எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர் என்பதால் எட்டுக்குடி என்ற பெயர் வந்தது.முருகனின் அறுபடை கோவில்கள் தவிர, புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இங்கு முருகன், வள்ளி தெய்வானை உடன் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவர் அமர்ந்திருக்கும் மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது ஆச்சரியமும் , அதிசயமுமான விஷயம் ஆகும். பொரவாச்சேரி மற்றும் எண்கண் முருகன் தலங்களிலும் இதேபோன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை நாம் தரிசிக்கலாம். அற்புத அழகுடன் கூடிய இந்த மூன்று முருகன் சிலைகளையும் வடித்தவர் ஒரே சிற்பிதான்.

இந்த கோவிலில், முருகன் தன்னை தரிசிக்கும் பக்தர்களின் மனநிலைக்கேற்ப மூன்று விதமான கோலங்களில் காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமி திருவிழா

இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாலை தொடங்கும் இந்த அபிஷேகம் , மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். சித்ரா பௌர்ணமி திருவிழாவில் 25 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.

பிரார்த்தனை

குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

குடும்ப சமேதராக அருள் பாலிக்கும் அனுக்கிரக சனி பகவான்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சமேதராக தனது மனைவியர் மந்தா, ஜேஷ்டா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் சனிபகவான் சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இங்கு அவர் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால், 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால், சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம், அவரின் அருளைப் பெறலாம் என்கிறது தல புராணம்.

பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சனிபகவான்

இவரை நினைத்து மாதந்தோறும் அமாவாசை தினங்களில் காகத்துக்கு அல்லது இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் தரித்திரம் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்கிறார்கள்.

குறிப்பாக, பூச நட்சத்திரக்காரர்கள் வணங்கிய வேண்டிய திருத்தலம் என்றும் பூச மருங்கர் எனும் சித்தர் வழிபட்ட தலம் இது என்றும் சொல்கிறது தல புராண மகிமை. எனவே, மாதந்தோறும் பூச நட்சத்திர் நாளில், தைப் பூச நாளில் வந்து வேண்டிக்கொள்ளலாம்.

Read More
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கையை ஏற்கும் அம்பிகை

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. கருவறையில் அம்பிகை பாலாம்பிகை தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.

அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். பெண்கள், வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இந்த துவாரபாலகியர்க்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

பார்வதி தேவி அன்னம் வடிவெடுத்து சிவ பூஜை செய்த தலம் இது. அதனால் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள தீர்த்தம் அன்னமாம் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் நல்ல வரன் வேண்டி தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் நம்பிக்கை.

குழந்தைகளின் பாலாரிஷ்டத்தை நீக்கும் பாலாம்பிகை

பால் குடிக்காமல் சதா அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் உள்ளதாகச் சொல்வார்கள். காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள், இங்குள்ள அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளித்தால் பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.

Read More
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்

கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் வீணாதர தட்சிணாமூர்த்தி

திருச்சிக்கு அருகே, தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி.

சுவாமி சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் நின்ற கோலத்தில் 'வீணாதர தட்சிணாமூர்த்தி' காட்சி தருகிறார். இவர் கரங்களில் ஏந்தியிருப்பது 'திகி சண்டளா வீணை' என்பதால், 'திகி சண்டளா வீணாதர தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். இப்படி நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியை காண்பது மிக அரிது. இவருடைய வீணையின் இசைக்கேற்ப, இவருக்கு அருகில் ஒரு பூத கணம் உடுக்கை அடித்துக் கொண்டும், ஒரு பெண்மணி தாளம் போட்டுக் கொண்டும் காட்சி தருகிறார்கள்.

இவர் கண்களுக்கு ஒளி தரும் நரம்புகளைக் காக்கக் கூடியவர். எனவே, கண் பிரச்னை உள்ளவர்கள், இங்கே வந்து இந்த வீணாதர தட்சிணாமூர்த்தியை தரிசித்து மனதாரப் பிரார்த்தித்தாலே போதும். பார்வை பிரகாசமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தச் சந்நிதியில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் விசேஷமானவை. உயர்கல்வி, குடும்ப நலன், மருத்துவச் சிகிச்சை போன்ற வேண்டுதல்களுக்காக, இத்தினங்களில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

Read More
திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்

தினம் இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் கிருஷ்ணர் கோவில்

கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவார்ப்பு எனும் ஊரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில், தினமும் 23 மணி நேரம் 58 நிமிடங்கள் திறந்து இருக்கும். அதாவது இந்த கோயில் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படுகின்றது என்பது ஒரு அதிசயமாகும்.

எப்பொழுதும் பசியுடன் இருக்கும் கிருஷ்ணர்

இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசித்து இருப்பதால், ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடங்கள் தவிர இந்த கோவில் மூடப்படுவதில்லை. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே, இக்கோவிலில் எழுந்து அருளி இருக்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.

மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேலையில் கையில் கோடாரி ஏந்தியபடி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால், கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி தந்திரியிடம் கொடுக்கப்படுகிறது.

கிரகணத்தின் போதும் மூடப்படாத கோவில்

இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது ​​ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீஆதிசங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து கிரகணத்தின் போதும், இக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை, வெறும் 2 நிமிடங்கள்தான்.

அதேபோல், இந்த கோவிலில் பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் இரவு 11.58 மணிக்கு பூசாரி சத்தமாக, "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் இக்கோவில் பிரசாதம் சுவைத்தால், அதன்பிறகு நீங்கள் பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சனை இருக்காதாம்.

Read More
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் தேவாரத் தலம்

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் யாழினும் மென்மொழியம்மை.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வார்கள். ஆனால், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் எல்லா அமாவாசை நாட்களிலும், அன்னாபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
சுப்புலாபுரம் கால தேவி நேர கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சுப்புலாபுரம் கால தேவி நேர கோவில்

இரவில் மட்டுமே திறந்திருக்கும் அதிசய அம்மன் கோவில்

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள எம்.சுப்புலாபுரம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது சிலார்பட்டி கிராமம். இக் கிராமத்தில் அமைந்துள்ளது கால தேவி நேர கோவில்.

பொதுவாக கோவில்கள் காலையிலிருந்து நண்பகல் வரையிலும் பின்னர் மாலையில் இருந்து முன்னிரவு வரைக்கும் திறந்திருக்கும். ஆனால் கால தேவி நேர கோவில், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக உள்ளது. அதேபோல், கிரகண நேரத்தில்கூட, இக்கோவில் மூடப்படுவதில்லை என்பது ஒரு ஆச்சரியமான நடைமுறையாகும்.

இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் சன்னதி கிடையாது. காலதேவி அம்மன் எண்கோண வடிவ கருவறையில், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ, காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி அம்மன்

இந்த கால தேவி அம்மன், இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் உள்ள கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார்.இக்கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோவிலில் மாலை ஆறு மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, கால சக்கரத்தில் நின்று பிரார்த்தனை செய்தால், தங்களது வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

Read More
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

நந்தி பகவான் தனது மனைவியுடன் காட்சிதரும் தேவார வைப்புத் தலம்

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில். இறைவனின் திருநாமம் ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி.

இக்கோவிலின் நுழைவு வாசல் அருகில் உள்ள சுவற்றில், நந்தி பகவான் தனது மனைவி சுயம்பிரபாதேவி என்கின்ற சுயசாம்பிகையுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருவது, எந்த தலத்திலும் காணமுடியாத ஒரு அரிய காட்சியாகும். இத்தலத்து நந்தி பகவான், கருட பகவானின் ஆணவத்தை அழிப்பதற்காக, தன் மூச்சுக் காற்றினால் அவரை பூமிக்குள் அழுத்தி புதைத்தார். அதனால், மற்ற தலங்களில் தலையை சாய்த்து அமர்ந்திருப்பது போல் இல்லாமல், இத்தலத்து நந்தி பகவான் தலையை நேராக நிமிர்த்தி,நாசி புடைக்க உக்கிர கோலத்துடன் காட்சி தருகிறார்.

தீராத நோய்களைத் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

இக்கோவிலில் 16 பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,கிரக சஞ்சார பாதிப்புகள் முதலியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
ஆவூர் வரதராஜப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆவூர் வரதராஜப் பெருமாள் கோவில்

பெருமாளுக்கு அருகில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் அபூர்வ கருட பகவான்

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவூர் தலத்தில் அமைந்திருக்கின்றது குகை வரதராஜர் கோயில். இந்த குடைவரை கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது.

பொதுவாக பெருமாள் கோவில்களில் கருட பகவான் பெருமாளுக்கு எதிரே தனிச்சன்னதியில் நின்றபடி அஞ்சலி முத்திரையுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் கருட பகவான், மூலவர் வரதராஜப் பெருமாளின் அருகில் கருடாசன நிலையில் இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும்.

மூலவர் வரதராஜ பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவருக்கு வலது பக்கத்தில் கருட பகவான் தனது இரண்டு சிறகுகளையும் விரித்த நிலையில், வலது காலை மடித்து முழங்காலை செவ்வகப் பீடம் மீது இருத்தி, இடது காலை மடித்து பாதங்களை பீடம் மீது ஊன்றி, கருடாசன நிலையில், திருமாலை நோக்கித் திரும்பியுள்ளார்.

கருட பகவான் தலையில் மகுடம் தரித்து, இரு காதுகளிலும் மகர குண்டலங்கள் அணிந்து, வாயின் வலது ஓரம் ஒரு கோரைப்பல் தெரிய, வலதுதோளின் மீது ஒரு சிறிய நாகம் படமெடுத்திருக்க. மார்பில் முப்புரிநூல், கழுத்தில் மணி ஆரங்கள். தோள்வளை, கை வளைகள் முதலியவை அணிந்து காட்சி தருகிறார்.

Read More
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்

சிறுமி வடிவில் இருபது கைகளுடனும், சிரித்த முகத்துடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை அம்மன்

இராஜராஜ சோழன் மகனான இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கிய தலம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இத்தலத்தில் அமைந்திருக்கிறது அவன் நிறுவிய பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர் கோவில். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில், கும்பகோணத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.

இராஜேந்திர சோழன், தான் வெற்றி பெற்ற தேசங்களில் இருந்து கொண்டு வந்த பல அற்புத சிற்பங்களை இக்கோவிலில் நிறுவியுள்ளான். சாளுக்கிய தேசத்தை வென்றதின் நினைவுச் சின்னமாக கொண்டு வரப்பட்ட இருபது கைகள் கொண்ட துர்க்கை அம்மன், ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

இந்த துர்க்கை அம்மன், சிரித்த முத்துடன் இருபது கரங்களில், பதினெட்டில் ஆயுதங்களை ஏந்தியபடி, மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில், ஒன்பது வயது சிறுமியின் வடிவத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள். துர்க்கை அம்மன் என்றாலே நம் எல்லோருக்கும் உக்கிரமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இத்தலத்தில் துர்க்கை அம்மன், சிறுமி வடிவில் சிரித்த முகத்துடன் அருள்பாலிப்பதால் இவளை பக்தர்கள், 'மங்கள சண்டி' என்று அழைக்கின்றனர். சண்டி என்பதற்கு துர்க்கை எனப் பொருள். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.

துர்க்கை அம்மனுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது. ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர்தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது. திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர்.அதேபோல, ஒற்றைக் கல்லாலான நவக்கிரக வடிவமைப்பும் சிறப்பானது. சூரியனை தாமரை வடிவில் சித்திரித்து, சுற்றிலும் மற்ற கிரகங்கள் எழுந்தருளியிருக்கும் வடிவ அமைப்பானது இந்தியாவில் வேறெங்கும் இல்லை. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி மண்டப அமைப்பு உள்ளது.

Read More
திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில்

சிங்க வாகனத்தில் அமர்ந்து அருள்புரியும் பஞ்சமுக விநாயகர்

சென்னை மாநகரத்தின் திருவொற்றியூர் பகுதியில், தட்சிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி மூலவராக,வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் பஞ்சமுக விநாயகர், ஆறடி உயரத்தில் தனிச் சன்னதியில் சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார்.

ஐந்து முக விநாயகருக்கு ஹேரம்ப விநாயகர் என்று பெயர். ஹேரம்ப விநாயகர் என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஹேரம்ப என்றால் சிங்கம் என்றும் எளியவர்க்கு அருள் புரிபவர் என்றும் பொருள் கொள்ளலாம். நம் பிரார்த்தனைகள் விரைவாக நிறைவேறிட சிங்கத்தின் மீது அமர்ந்த விநாயகரை வழிபட வேண்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இத்தலத்து ஹேரம்ப விநாயகரது ஐந்து முகங்களும் ஒரே திசையை நோக்கி வரிசையாக அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இவர் பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி, எட்டு திசைகளையும் பரிபாலிக்கிறார். இவர் கரங்களில் உள்ள பாசம், தந்தம், அட்சமாலை, மாவெட்டி, உலக்கை, கோடாரி, மோதகம், கனி ஆகிய எட்டும் எட்டு திசைகளை பரிபாலிப்பதாக ஐதீகம்.

இவருக்கு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

Read More
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அபூர்வ பைரவர்

திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.

காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். அதனால் காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது.

பொதுவாக சிவாலயங்களில் பைரவர் நின்ற நிலையில் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். ஆனால் இத்தலத்தில் பைரவர், யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, யோக பைரவராக ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார். .நாய் வாகனமும் இவருக்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் வழங்கும் பைரவர்

இத்தல பைரவரை, பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால் மிகுந்த செல்வம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வன்னி' இலைகளைக் கொண்டு யோக பைரவருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. பூஜைக்கு பயன்படுத்தப்படும் வன்னி இலைகளால் தயாரிக்கப்படும் பொடியை தினமும் உட்கொண்டால் நரம்பு கோளாறுகள் மற்றும் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். யோக பைரவரை இங்கு வழிபட்டு வந்தால், ஒருவரை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும். 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் 'சிவப்பு அரளி' பூக்களைக் கொண்டு பூஜைகள் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அமாவாசை தினங்களில் தயிர் சாதம், தேங்காய் சாதம், தேன் ஆகியவற்றைச் சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் தனது செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறவும், வியாபாரத்தில் லாபம் பெறவும் உதவுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள, ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் பருப்பு மற்றும் நெய்யால் செய்யப்பட்ட வடை படைத்து, பூஜை செய்யப்படுகிறது.

Read More
திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில்

ஆடு, மயில் வாகனங்களுடன் காட்சியளிக்கும் அபூர்வ முருகன்

சிவகங்கையில் இருந்து சுமார் 21 கி. மீ தொலைவில் இருக்கிறது திருமலை. இங்கு சுமார் 200 அடி உயர மலை மீது, மலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இறைவனின் திருநாமம் மலைக்கொழுந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாகம்பிரியாள். சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோவில், முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.

இத்தலத்தில் குடவரை முருகன் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வலப்புறம் சாய்ந்த நிலையில் காணப்படும் இத்தல முருகப்பெருமான், கீழ் ஆடை மட்டுமே அணிந்துள்ளார். ஆடையின் மேல் கட்டப்பட்டுள்ள மேகலையின் நுனிப் பகுதி, முருகனின் இடப்புறமாகத் தொங்கி பீடத்தினைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இவர் அணிந்திருக்கும் முப்புரிநூல் வலது கையின் மேல் செல்கிறது. முருகனுக்கு வலது பக்கத்தில் உள்ள குறளன்,‌ முருகனின்‌ தலைக்கு மேலே நீண்ட குடையைக் குறுக்காகப் பிடித்துள்ளான்‌. அவனுக்குப்‌ பின்புறம்‌ கொடிமரத்தொன்றின்‌ மீது சேவல்‌ நின்றவாறு உள்ளது. முருகனுக்கு இடப்பக்கம்‌ பணிவுடன்‌ கைகளைக்‌ சுட்டியவாறு நின்ற நிலையில்‌ துறவி ஒருவர் காணப்படுகிறார். முருகனின் காலடியில் இடப்புறம் ‌ஆடும்‌, வலப்புறம்‌ மயிலும்‌ எதிரெதிரே இருக்கின்றன.

இத்தலத்து துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்தபடி எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.

இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

Read More
மதுரை முக்தீஸ்வரர் கோவில்

மதுரை முக்தீஸ்வரர் கோவில்

ஆண்டிற்கு இரண்டு முறை சூரிய பூஜை நடக்கும் திருவிளையாடல் தலம்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலின் அருகில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதவல்லி தாயார். சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், முக்தீஸ்வரர் கோவில்.

இந்திரனின் ஐராவத யானைக்கு சாபவிமோசனம் அளித்த திருவிளையாடல்

இந்திரனின் வாகனம், 'ஐராவதம்' என்ற வெள்ளை நிறம் கொண்ட யானையாகும். ஒரு சமயம், துர்வாசக முனிவர், சிவபெருமானை பூஜை செய்து கொண்டுவந்திருந்த தாமரை மலரை இந்திரனிடம் தந்தார். அதனை வாங்கிய இந்திரன் சிவபெருமானின் பூசை மலரினை ஐராவதம் மத்தகத்தில் வைத்தார். அதனை எனனவென்று அறியாத ஐராவதம், அம்மலரை காலில் இட்டு அழித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசக முனிவர் ஐராவதத்தினை பூமியில் பிறக்கும் படி சாபமிட்டார். அதனால் பூமியில் அவதரித்த ஐராவதம், மற்ற யானைகளின் நிறத்தினை அடைந்து இந்திரன் உருவாக்கிய மதுரை கோயிலில் சிவலிங்கத்தினை வழிபட்டு வந்தது. பின்னர் சிவபெருமான் அருளால் சாபவிமோசனம் பெற்றது. ஆனால் ஐராவதத்திற்கோ, மதுரை மதுரையம்பதி விட்டு பிரிந்து செல்ல மணம் இல்லை. அதனால் சிவபெருமானிடம் தங்கள் கருவறை விமானத்தை தாங்கும் யானைகளில் தானும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்தது. ஆனால் சிவபெருமான், இந்திரன் என்னுடைய பக்தன். நீ அவனை சுமப்பது என்னை சுமப்பதற்கு ஒப்பானது. அதனால் நீ தேவலோகம் சென்று விடு என்று பணித்தார்.

இந்திரன் சிவபெருமானிடம், யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தான் எழுப்பிய மதுரை சொக்கநாதர் கோவில் விமானம், தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், ஐராவதம் தன்னைத் தாங்குவது போல் அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதர் கருவறை விமானத்தை தாங்கி இருப்பதை இப்போதும் நாம் காணலாம்.

இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய பகவானின் பூஜை

சூரியக் கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று குறிப்பிடுவார்கள். சூரிய பூஜை பல ஆலயங்களில் நிகழ்ந்தாலும், அவை குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டுமே நிகழும். ஆனால் இங்கோ, ஒவ்வொரு மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், அதாவது 10 ம் தேதி முதல் 21 தேதி வரையிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 19 முதல் 30 ம் தேதி வரையிலும், காலையில் இந்த அற்புதம் நிகழும்.

காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள், கருவறைக்குள் ஊடுருவுகின்றன.முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும். சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின் போது கோவில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படும்.இந்த நிகழ்வு இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

மொத்தம் 24 நாள்கள் நடக்கும் இந்த அற்புத தரிசனத்தைக் கண்டால் நம் மனதின் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் சூரிய பகவானே இங்கு முக்தீஸ்வரரைத் தன் கதிர்க் கரங்களால் தழுவி வழிபடுவதால் இந்த ஈசனை வணங்கினால் சூரியன் பலமில்லாத ஜாதகக் காரர்கள் சகல நன்மைகளையும் பெறமுடியும். மேலும் சூரியனே ஜாதக அடிப்படையில் ஆத்மகாரகன். அவன் பணிந்து கொள்ளும் இந்த முக்தீஸ்வரரை, நாமும் பணிந்துகொண்டால் நம் வினைப்பயன்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

Read More
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்

மயிலாப்பூர் தலத்தின் எல்லை காளி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்கே வெகு அருகாமையில் அமைந்துள்ளது, மயிலாப்பூரின் எல்லை காவல் தெய்வமாக விளங்கும் கோலவிழி அம்மன் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.மயிலாப்பூர் தலத்தில், பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. 'பத்ர' என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள்.

கருவறையில் வடக்கு திசை நோக்கி, கோலவிழி அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.இந்த அம்மனின் தனிச்சிறப்பே அவளின் கோலவிழிகள்தான். அவளின் கண்களைப் பார்த்தாலே நம்முள் பரவசம் ஏற்படும். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அம்மன் காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த கோவிலை, பத்ரகாளி அம்மன் கோவில் என்றும் சொல்வார்கள்.

மயிலையின் காவல் தெய்வம்

கோல விழியம்மன் மயிலாப்பூர் தலத்தின் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம்மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழாவானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்தி மூவர் நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.

முக்கிய திருவிழாக்கள்

மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா, சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் பத்தாம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும்.

பிரார்த்தனைகள்

27 நட்சத்திரக்காரர்களும் இங்கு பிரதட்சணம் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும். . 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இதனால் இத்தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.

இந்த அன்னை குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீக்கும் அற்புத அன்னையாக விளங்குகிறாள். நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது. இந்த அம்மனுக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். இதைத்தவிர மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, முத்தங்கி என விதம்விதமான அலங்காரங்களும் செய்கிறார்கள்.

Read More
சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

கையில் பாம்பை ஏந்தியவாறு காட்சி தரும் சர்ப்ப விநாயகர்

தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவன் சங்கரலிங்கசுவாமி. இறைவி கோமதி அம்மன்.

இக்கோவிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் 6 அடி உயர திருமேனியுடன் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து காட்சியளிக்கிறார். தனது இடது கையால் சர்ப்பத்தின் தலையை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோவிலின் ஐதீகம். இந்த சர்ப்ப விநாயகரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க, இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர். இவரை வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்மர் கோவில்

லட்சுமி நரசிம்மர் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ தோற்றம்

தெலுங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், யாதகிரிகுட்டா என்ற ஊரில் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் கோவில். ஐதராபாத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பொதுவாக நரசிம்மர் அமர்ந்த கோலத்தில்தான் காட்சியளிப்பார். அவர் யோக நரசிம்மராக எழுந்தருளி இருக்கும் போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் இருப்பார். உக்கிர நரசிம்மராகவோ அல்லது லட்சுமி நரசிம்மராகவோ எழுந்தருளி இருக்கும் போது ஒரு காலை தொங்கவிட்டும், மற்றொரு காலை மடித்த நிலையிலும் இருப்பார். லட்சுமி நரசிம்மர் கோலத்தில் அவர் லட்சுமிதேவியை தன்னுடைய மடியில் இருத்தி வைத்திருப்பார்.

ஆனால் இத்தலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். லட்சுமிதேவியானவர், நரசிம்மப் பெருமாளின் இடது பக்கத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இப்படி நின்ற நிலையில் எழுந்தருளியிருக்கும் லட்சுமி நரசிம்ம பெருமாளை நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.

Read More
பாமணி நாகநாத சுவாமி கோவில்

பாமணி நாகநாத சுவாமி கோவில்

நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.

இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.

சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

Read More