திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

வள்ளாள மகாராஜாவிற்கு 680 ஆண்டுகளாக திதி கொடுத்து வரும் அண்ணாமலையார்

ஹொய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னன் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா ( கி.பி.1291-1343) . நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாளன் சிறந்த சிவபக்தர். அண்ணாமலையார் ஆலயத்துக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுரத்தை தனது ஆட்சிக்காலத்தில் நிர்மாணித்தார். கி.பி 16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அருணாச்சல புராணத்தில் இவரது சரித்திரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வள்ளாள மகாராஜாவிற்கு ஒரு பெரிய மனக்குறை இருந்தது. தான் கொஞ்சி மகிழவும், தனக்குப் பின் நாட்டை ஆளவும் ஒரு வாரிசு இல்லையே என்பதுதான் அது. ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அண்ணாமலையார், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சடங்குகளை செய்வேன் என்றார்.

கி.பி.1343ம் ஆண்டு தைப்பூசத்தன்று அண்ணாமலையார், திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோயிலுக்கு திரும்பிச் செல்லும் போது, பள்ளிகொண்டாபட்டு போர்க்களத்தில் வள்ளாள மகாராஜா வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு அண்ணாமலையார் மேளதாளங்கள் இன்றி, அமைதியாக கிரியை நடக்கும் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்குச் சென்று சடங்குகளை செய்து முடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை, அண்ணாமலையார், ஒவ்வொரு ஆண்டும் மகாராஜா உயிர் நீத்த 30ம் நாளான மாசி மகம் தினத்தன்று பள்ளிகொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.

மாசிமகத்தன்று, அண்ணாமலையார் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்கு வருவார். அங்கு வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு 'சம்மந்தனூர்' என்ற பெயர் ஏற்பட்டது.

அரசனுக்குப் பிறகு இளவரசன் பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற மரபின்படி மறுநாள் அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையாருக்கு அரசராக முடி சூட்டப்படும் விழா நடத்தப்படடும்.

உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது.

Read More
திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்

மாசி பௌர்ணமியன்று தீர்த்த நீராடும் அம்பிகை

சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள்.

கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் மாசி பௌர்ணமியின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி பௌர்ணமியன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கின்றது. முற்காலத்தில் இக்கோவிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே, அவருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வயிற்றுவலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக் கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை மாசி பௌர்ணமியன்று ,அவளது பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.

Read More
மாசி மகத்தின் சிறப்புகள்

மாசி மகத்தின் சிறப்புகள்

மாசிமக தீர்த்தமாடலின் சிறப்பு

மாசி மாதம் முழுவதும் 'கடலாடும் மாதம்' என்றும், 'தீர்த்தமாடும் மாதம்' என்றும் சொல்வார்கள். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக கருதப்படுகிறது.

மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது.

மாசிமக தீர்த்தமாடல் பற்றிய புராணக்கதை

ஒருசமயம் வருண பகவானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அதனால் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். வருணன் கட்டுண்டு கிடந்ததால் உலகத்தில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. வருண பகவான் சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும். இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.

திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.

சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி பௌர்ணமியில்தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன.

பார்வதி தேவி, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான். மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும். துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

மாசிமகம் பித்ரு தோஷம் மற்றும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

Read More
பாமணி நாகநாத சுவாமி கோவில்

பாமணி நாகநாத சுவாமி கோவில்

மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷன் காட்சியளிக்கும் அபூர்வத் தலம்

மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.

இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர் என்றாலும் அவருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலத்து இறைவன் மீது பாம்புகள் அடிக்கடி ஊர்ந்ததால் இவருக்கு பாம்பை மேலே அணிந்து கொள்பவர் என்ற பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரும் உண்டு. அதனால் இந்தத் தலத்துக்கு பாம்பணி என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் பாமணி என்று மருவிற்று.

ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயரும் உண்டு. ஆதிசேஷன் இத்தலத்திற்கு வந்தபோது தலம் எங்கும் சிவலிங்கமாய் தெரிந்ததால், கால் தரையில் படாமல் இறைவனை தொட்டு வணங்குவதற்காக இடுப்பிற்கு கீழே பாம்பு ரூபமாயும், மேலே மனித ரூபமாயும் இருந்து வணங்கினார். பாம்பு உருவாக்கிய லிங்கம் என்பதால், அது புற்றுவடிவாக அமைந்தது.

கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலம்

மனித முகம், பாம்பு உடலுடன் காட்சியளிக்கும் ஆதிசேஷனுக்கு, இத்தலத்தில் தனி சன்னதி இருப்பது சிறப்பாகும். அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

Read More
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்

கல் நந்தி புல் தின்ற அதிசயம் நிகழ்ந்த தேவாரத்தலம்

கும்பகோணத்திற்குக் கிழக்கே, கல்லணை- பூம்புகார் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கஞ்சனூர். இறைவன் திருநாமம் அக்கினீஸ்வரர் . இறைவியின் திருநாமம் கற்பகாம்பிகை.

முன்னொரு காலத்தில், தேவசம்பு என்ற முதியவர் தனது பசுவிற்காக மிகவும் கனமான புல்லுக்கட்டை தலையில் சுமந்தபடி சென்றார். அப்போது நிலைதடுமாறி புல்லுக்கட்டை தவறவிட்டார். அது அருகில் நின்ற கன்றின் மீது விழுந்து அழுத்த, அந்தக் கன்று உயிரிழந்தது. கன்றின் உயிரைப் பறித்ததால் ஏற்பட்ட பாவம் அகல வேண்டும் என்றால், முதியவர் காசிக்குப் போய் நீராட வேண்டும் என்று சில வேத விற்பன்னர்கள் கூறினர்.

தேவசம்பு, அவ்வூரில் பிரசித்தி பெற்று விளங்கிய சிவஞானியார், ஹரதத்தர் என்பவரை அணுகினார்ர். ஆனால் ஹரதத்தரோ, 'அவ்வாறு நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் சிவனையே சிந்திக்கும் பக்தியுடையவர். நடந்தது உங்களை அறியாமல் நடந்த பிழை. அது பாவத்தில் சேராது. வேண்டுமென்றால் அதை சோதித்து பார்த்து விடலாம். அக்னீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள கல் நந்திக்குப் புல் கொடுங்கள். அது புல்லை ஏற்றுக்கொண்டு தின்றால் உங்களுக்கு தோஷமில்லை' கூறினார்.

இதையடுத்து கஞ்சனூரில் ஓடும் காவிரியில் மூழ்கிய முதியவர், இறைவனையும், இறைவியையும் வழிபட்டு விட்டு, அவர்களுக்கு எதிரே இருந்த கல் நந்திக்கு புல் கொடுத்தார். அது தலையைத் திரும்பி புல்லை வாங்கித் தின்றது. ஊர் மக்கள் அனைவரும் அதிசயித்துப்போனார்கள். இப்போதும், திருக்கஞ்சனூர் கோவிலில் தலையைத் திருப்பிய நிலையில் அமர்ந்திருக்கும் நந்தியை நாம் காணலாம். இந்த நந்தி புல் உண்டதால் அதன் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை.

Read More
சித்தாத்தூர் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சித்தாத்தூர் மாரியம்மன் கோவில்

சிரசு வடிவில் மூன்று அம்மன்கள் எழுந்தருளியிருக்கும் தலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சித்தாத்தூர் மாரியம்மன் கோவில். ஊருக்கு வெளியே வயல்வெளிகளின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கருவறையில், மாரியம்மன் சுதை வடிவில் அமர்ந்து இருக்கின்றாள். அவளுக்கு கீழே சிரசு வடிவில் மூன்று அம்மன்கள் வீற்றிருக்கின்றார்கள். இவற்றில் வலப்புறம் இருப்பவள் வயல்வெளியில் கிடைத்த அம்மனாகும். பார்வதிதேவியின் சொரூபமாக அருள்பாலிக்கும் இந்த மாரியம்மன் கோவிலில், சித்தர்கள் பலர் இன்றும் இரவில் வந்து அம்மனை வழிபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த அம்மனுக்கு எட்டியம்மன் என்ற பெயரும் உண்டு.

தல வரலாறு

திருவண்ணாமலை மாவட்டம் அம்மன் கோவில்களில், படவேடு ரேணுகாம்பாள் மிகவும் பிரசித்தி பெற்றவள். அந்த அம்மனின் அம்சமாக சித்தாத்தூர் மாரியம்மன் கருதப்படுகின்றாள். சித்தர்களின் பூமியாக கருதப்படும் இந்த சித்தாத்தூரில், ஒரு சமயம் அன்னை ரேணுகா தேவி கோயில் கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் இங்கே நாகமாக உலவித் திரிந்தாள். ஒரு நாள் நாகமாக சுற்றி வந்த அம்பிகையின் நாவில் முள் தைத்துவிட்டது. அப்போது வாழைப்பந்தல் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு பெரியவர் பனை மரத்தடியில் தன் மாட்டை கட்டி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த நாகம்,'நானே அன்னை ரேணுகாதேவி. நாக வடிவில் வந்து இருக்கின்றேன். என் நாவில் முள் தைத்துவிட்டது. அதை எடுத்து விடுவாயா?'என்று கேட்க, உடனே அந்தப் பெரியவர் எந்தத் தயக்கமோ, பயமோ இல்லாமல் அந்த நாகத்தின் நாவில் இருந்த முள்ளை எடுத்துவிட்டார். படமெடுத்து ஆடிய அந்த நாகம், அவருடைய வம்சத்தையே தான் காத்தருள்வதாக வாக்களித்துவிட்டு மறைந்தது. பின்னர் அந்தப் பெரியவர் குடும்பத்தோடு இங்கே வந்து வாழ ஆரம்பித்தார். நாக உருவில் முதலில் இங்கே வாழ்ந்த அன்னை ரேணுகா தேவி, பல காலத்துக்கு முன்பே கற்சிலையாக மண்ணுள் புதையுண்டு கிடந்தாள். வயலில் ஏர் உழும்போது ஏர் கலப்பையில் தட்டுப்பட்டு, வெளியே கொண்டுவரப்பட்டாள். பெங்களூரில் வசிக்கும் அந்தப் பெரியவரின் வம்சாவளியினர் இன்றும் இங்கு வரும்போது அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, குறைவின்றி வாழ்கின்றனர்.

பக்தர்கள் கனவில் பாம்பாகத் தோன்றும் மாரியம்மன்

இந்த அன்னை பக்தர்கள் கனவில் தோன்றி பொங்கல் வழிபாடு செய்யும்படி அறிவுறுத்துவாளாம். அதை மறந்து விட்டால் பாம்பாகத் தோன்றி நினைவு படுத்துவாளாம். உடனே அவர்கள் சித்தாத்தூர் வந்து, அன்னையை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுவார்களாம். இது இன்றும் நடைமுறையில் நடக்கின்றது. தமிழகமெங்கும் பலருக்கும் குலதெய்வமாக இந்த அன்னை திகழ்கின்றாள். இந்த அம்மனின் அருள் செயலால் தங்கள் வாழ்வில் அற்புதங்களையும், திருப்பங்களையும் சந்தித்த பக்தர்கள் ஏராளம்.

பௌர்ணமிதோறும் இங்கு அம்மனுக்கு சிறப்பு யாகங்கள் நடத்தி அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விமரிசையாக திருவிழா எடுக்கின்றனர்.

Read More
திருப்புடைமருதூர்  நாறும்பூநாதர் கோவில்

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்

இரண்டு கால்களையும் மடக்கி தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அரிய கோலம்

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் நாறும்பூநாதர். இறைவியின் திருநாமம் கோமதி.

மருத மரத்தை தலவிருட்சமாக கொண்ட தலங்கள், 'அர்ச்சுன தலங்கள்' என்றழைக்கப்படும். 'அர்ச்சுனம்' என்றால் 'மருதமரம்' என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் 'தலையார்ச்சுனம்' என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், 'இடையார்ச்சுனம்' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் 'கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது.

பொதுவாக, சிவாலயங்களில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, இடது காலை மடித்தும் வலது காலை முயலகன் மேல் ஊன்றியும், அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

Read More
பெரும்பேடு வேங்கடேசப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பெரும்பேடு வேங்கடேசப் பெருமாள் கோவில்

ஒரே கருவறையில் இரண்டு பெருமாள்கள் அருள் பாலிக்கும் அபூர்வ தலம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பெரும்பேடு கிராமம். இக்கிராமத்தில் உள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலில், ஒரே கருவறையில் இரண்டு மூலவர்கள் எழுந்தருளியிருப்பது வேறு எந்த பெருமாள் கோவிலிலும் காணமுடியாத அதிசயமாகும். இத்தலத்தில் பெருமாள், வேங்கடேசப் பெருமாள் மற்றும் ஆதிபஞ்சாயுதபாணி என்ற இரண்டு ரூபத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

முற்காலத்தில் இப்பகுதியில் அமணாசுரன் மற்றும் அமண அரக்கி என்ற இரு அரக்க சகோதர, சகோதரியர் மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தி வந்தார்கள். இதனால் பல துன்பங்களை அனுபவித்த இப்பகுதி மக்கள், பெருமாளை வேண்டி தங்களைக் காத்தருளுமாறு வேண்டினர். பக்தர்களைக் காக்க முடிவு செய்த பெருமாள் பஞ்சாயுதபாணியாக வடிவெடுத்து வந்து, அரக்கனையும் அரக்கியையும் வதம் செய்து இப்பகுதி மக்களைக் காத்தருளினார். அதோடு, பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி, இத்தலத்திலேயே ஆதிபஞ்சாயுதபாணியாக அருளத் தொடங்கினார்.

சங்கு எனும் பாஞ்சஜன்யம், சக்கரம் எனும் சுதர்சனம், கதை எனும் கௌமோதகி, வில் எனும் சாரங்கம் மற்றும் வாள் எனும் நந்தகம் முதலான பஞ்சாயுதங்கள், அதாவது ஐந்து ஆயுதங்கள் எப்போதும் பெருமாளுடனே இருப்பதாக ஐதீகம். திருமாலின் ஆயிரம் திருநாமங்களில், 'பஞ்சாயுதபாணி' என்பதும் ஒன்றாகும். இத்தலத்தில் பஞ்சாயுதங்கள் பெருமாளை வலம் வருவதாக ஐதீகம். இத்தலத்தில், பெருமாளின் திருக்கரத்தில் காணப்படும் சக்கரம் சற்றே வித்தியாசமாக, பிரயோக நிலையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

கருவறையில் வேங்கடேசப் பெருமாள் சதுர்புஜராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, சேவை சாதிக்கிறார். பெருமாளின் மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் விளங்க, கீழிரு கரங்களில் வலது திருக்கரம் அபய நிலையிலும், இடது திருக்கரத்தினை தொடை மீது வைத்தும் காட்சி தருகிறார்.

வேங்கடேசப் பெருமாளை வணங்கினால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பதும், பஞ்சாயுதபாணி பெருமாளை வணங்கினால் மனதிலுள்ள பயம் அனைத்தும் அகலும் என்பதும் ஐதீகம்.

Read More
மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்

அறுபடை வீடுகளுக்கும் முந்தைய முருகன் தலம்

கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் மேற்கே 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புகழ் தலம் செஞ்சேரிமலை.

முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் உபதேசித்த தலம் ஒன்று உண்டு. அத்தலம்தான் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சேரிமலை.

சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவபெருமான் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்த திருத்தலம் இது என்பதால், முருகன் தலங்களில் மிகவும் பழமையானது என்னும் தனிச்சிறப்புடையது இத்தலம். அறுபடை வீடுகளுக்கும் முந்தையது.

சேவற்கொடியோன் கையில் சேவல் ஏந்தியிருக்கும் சிறப்பு

கருவறையில் தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார். வலது பக்கத்தில் இருக்கும் கடைசி கையில் பாம்பையும், இடது பக்கத்தில் இருக்கும் மேல் கையில் சேவலையும் வைத்திருக்கிறார். இடது கையில் சேவலே ஒரு போர்க் கருவி போல ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பாகும். பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் 'எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்' என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.

தல வரலாறு

சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானைத் தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அதனால் அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி, பார்வதிதேவி சிவபெருமானிடம் வேண்டினார்.

சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து,'குமரா! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவபெருமானின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க, 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.

பல ஆண்டு காலம் தவம் செய்த குமரனின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவர் முன் தோன்றினார். பின்னர் தன் மகனுக்கு, எதிரிகளை அழிக்க வல்ல மந்திரமான சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கற்று தேர்ந்ததால் மந்திர வேலாயுதசாமி என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானுடன், மலை என்பதன் பதமான கிரியும் இணைந்ததால் மந்திரகிரி' வேலாயுத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

பிரார்த்தனை

இங்குள்ள தலவிருட்சமான கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து முருகப்பெருமான் சன்னதியில் தீபம் ஏற்றி வேண்டினால் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள் நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு முதலிய நற்பலன்களை அடையலாம். மேலும், ஜாதக ரீதியான தோஷங்கள், கிரக தோஷம், மனநோய் மற்றும் தீய சக்தி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.

Read More
திருமயம் கோட்டை பைரவர் கோவில்

திருமயம் கோட்டை பைரவர் கோவில்

வடக்குப் பார்த்தபடி எழுந்தருளியிருக்கும் அபூர்வ பைரவர்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமயம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கோட்டை பைரவர் கோவில். இக்கோவில் 350 ஆண்டுகள் பழமையான திருமயம் கோட்டையின் வடபுற சுவற்றில் அமைந்துள்ளது.இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி, தனிக் கோவில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும். மேலும், கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக கோட்டை பைரவர் விளங்குகிறார். சகல தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது.

கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவார். இக்கோவில், விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு தலம் ஆகும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவரைக்கு அபிஷேகம், வடைமாலை, சந்தனகாப்பு செய்து, நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும். மற்றும் பிதுர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம் பழமாலை சூட்டி, எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதுர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

இப்பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனகாப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளிமாலை நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். எல்லா பரிகாரங்களுக்கும் நெயதீபமும், மிளகு தீபமும் பொதுவானது, இவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால், நன்மை கோடி வந்து சேரும்.

Read More
செட்டிகுளம்  பால தண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

செட்டிகுளம் பால தண்டாயுதபாணி கோவில்

கையில் கரும்புடன் காட்சி தரும் முருகப்பெருமானின் அபூர்வ கோலம்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட்டிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலும் பெரம்பலூருக்கு தெற்கே சுமார் 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது செட்டிகுளம். இந்த ஊரில் உள்ள மலையின் மீது அமைந்திருக்கிறது பால தண்டாயுதபாணி கோவில். பொதிகை மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் இத்தலத்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் வளையல் விற்கும் செட்டியாராக காட்சி தந்தார். அதனால் இத்தலத்திற்கு செட்டியார் குளம் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்திற்கு வடபழநிமலை என்ற பெயரும் உண்டு.

பொதுவாக தண்டாயுதபாணி சுவாமி கோலத்தில் கையில் தண்டத்துடன் காட்சி தரும் முருகப்பெருமான், இத்தலத்தில், தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி தருகிறார். இது நாம் வேறு எந்த முருகன் தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். மேலும் இவர் மொட்டை தலையாக இல்லாமல் உச்சிக்குடுமியுடன் காட்சியளிப்பது மற்றுமொரு சிறப்பாகும்.

தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருகப்பெருமானுக்கு, தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி அன்னை காமாட்சியம்மன் ஆசி வழங்கினார். அன்று முதல் இத்தலத்தில் கரும்பு ஏந்திய ஏந்திய கோலத்தில் நமக்கு அருள்பாலித்து வருகிறார். அதனாலேயே இத்தலத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், காமாட்சியம்மன் கையில் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.

மழலைப் பேறு வேண்டி கரும்பு தொட்டில் பிரார்த்தனை

மழலைப் பேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தலத்து முருகனை பற்றி பாடியுள்ளார்.

Read More
இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில்

இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில்

சனி பகவானை வலம் வந்து வணங்கக்கூடிய சிறப்பு பரிகாரத் தலம்

தென்காசியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தூர் மதுநாதீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மதுநாதீசுவரர். இறைவியின் திருநாமம் அறம்வளர்த்த நாயகி.

பொதுவாக சிவாலயங்களில் சனி பகவானுக்கு தனி சன்னதி இருந்தாலும் அவை கோயில் பிரகாரத்தை ஒட்டி

இருப்பதால் நாம் வலம் வந்து சனி பகவானை வழிபட முடியாது. ஆனால் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் சனிபகவானை நாம் வலம் வந்து வழிபட முடியும். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் அவர் கைகளை அபயஹஸ்த நிலையில் வைத்து எழுந்தருளி இருப்பதால், சனி சம்பந்தப்பட்ட எந்த வித தோஷமும் இங்கு வந்து வணங்கினால் விலகிப்போகும்.

அவர் இங்கு பொங்கு சனியாக அருள்பாலிப்பதால், இது ஒரு சனி பரிகாரத் தலமுமாகவும் திகழ்கின்றது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி நடைபெறுபவர்கள் இங்குவந்து மதுநாதீசுவரையும், சனீஸ்வரரையும் வழிபாடு செய்தால், இன்னல்கள் நீங்கி இனிய வாழ்வு பெறலாம்.

சர்க்கரை வியாதியை குணமாக்கும் தலம்

சனி பகவானுக்கு தண்மை (குளிர்ச்சி) என்ற காரகத்துவமும் உண்டு. நீர்க்கிரகமான சனியை இலத்தூரில் வழிபட்டால் சர்க்கரை வியாதி பறந்தே போய்விடும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை.

Read More
சோட்டானிக்கரை பகவதி அம்மன்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்

முப்பெரும் தேவியராக காட்சி தரும் பகவதி அம்மன்

கேரள ‎மாநிலம், எர்ணாகுளம் என்ற இடத்திலிருந்து ‎ 16 கி.மீ.தொலைவில் இருக்கிறது புகழ்பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். பகவதி அம்மனின் வலது புறம் உள்ள மகாவிஷ்ணுவை, 'அம்பே நாராயணா..தேவி நாராயணா..லஷ்மி நாராயாணா..பத்ரி நாராயணா' என அழைத்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் துர்க்கா தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் லட்சுமி தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

இந்த ஆலயத்தில் அம்பாள் ‘பந்தீரடி’ எனப்படும் காலை பூஜையின் போது மிகுந்த சக்தியுடன் திகழ்கிறாள். இந்தப் பூஜை முடிந்தே, பகவதி அம்மன் மூகாம்பிகையாகக் கொல்லூர் செல்வதாக ஐதீகம். அதனாலேயே மூகாம்பிகை கோவில் நடை திறக்கும் முன்னரே, பகவதி அம்மன் கோவிலின் நடை திறக்கப்பட்டுவிடும். முதலில் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன், பின்னர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாக ஐதீகம். இந்த காலை பூஜையின் போதே கெட்ட ஆவிகள் பிடித்தவர்கள், மனநோய் பிடித்தவர்கள் அன்னையின் அருளால் குணமடைகிறார்கள். இந்த ஆலயத்தில் நெய் பாயாசம் நைவேத்தியம் பெருமை பெற்றது.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, நல்ல கணவர் கிடைக்க, குழந்தை வரம் கிடைக்க பகவதி அம்மனை தேடி பல பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.

மாசி மாதத்தில் நடைபெறும் ஆராட்டுவிழாவும், நவராத்திரி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

Read More
வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்

வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்

9 அடி உயர திருமேனியுடன் மூலவராக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி

தேனி - மதுரை வழியில் 1 கி.மீ. தொலைவிலிருக்கும் அரண்மனைப்புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. பயணித்தால் வேதபுரியை அடையலாம். முற்காலங்களில் வேதியர்கள் அதிகம் வாழ்ந்து வந்த போது எப்போதும் வேத பாராயணங்கள் நடைபெற்றதால் இந்த ஊருக்கு வேதபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

இக்கோயிலின் பிரதான மூலவர் நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தி ஆவார். இவர் இங்கு பிராக்ஞா தட்சிணாமூர்த்தி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் பாண்டிய மன்னர்களுக்கு பிறகு இப்பகுதியை ஆட்சி புரிந்த அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி, 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

கருவறையின் விமானத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன.இக்கோயிலில் பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கும் விதி பின்பற்றப்படுகிறது. மேலும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைக்கு பதிலாக, அதை பொட்டலமாக சமர்ப்பிக்கும் படி பக்தர்கள் கோயில் நிர்வாகத்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இக்கோவிலில் வியாழக்கிழமையன்று திருமண வரம், பிள்ளை வரம் ஆகியவற்றை வேண்டுபவர்களுக்கு அவை நிச்சயம் கிடைக்கும் என்றும், குழந்தைகள் கல்வி கலைகளில் சிறக்க, விரும்பிய காரியங்கள் நடக்க இங்கு வழிபட்டால் அது உறுதியாக கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில்

வெறும் தரையில் சயனித்த கோலத்தில் காட்சி தரும் திவ்ய தேச பெருமாள்

சென்னையில் இருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ள, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம் தலசயனப் பெருமாள் கோவில். மூலவர் தலசயனப் பெருமாள். தாயார் திருநாமம் நிலமங்கை.

பொதுவாக சயனித்த கோலத்தில் காட்சி தரும் பெருமாள் பாம்பணை மீது படுத்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பூரம், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

மானிடராக பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முன்னோர் சாபம், முனிவர் சாபம், விலங்குகள் சாபம் மற்றும் கடன் தொல்லைகள் நீங்கும்.

இத்தல தலசயனப் பெருமாளையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபட நற்பலன்கள் கிட்டும்.

Read More
திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகன்- தெய்வானை நிச்சயதார்த்த தலம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில். முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர,முருகனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.

தல வரலாறு

சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் மீன் உருவம் எடுத்து ஒளிந்தான். சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குராமரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் 'திருக்குராவடி' என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்.

இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்தி லும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும்.

நிச்சயதார்த்த தலம்

முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது.

ராகு தோஷ நிவர்த்தி தலம்

முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம்

 https://www.alayathuligal.com/blog/57mj4d6yd6s4ygtkd7gb42mffkhwtd

Read More
திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்

திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்

வில்வ அர்ச்சனை நோய்க்கு மருந்தாகும் தேவாரத்தலம்

சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். 'கலி' (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், 'திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள். தலவிருட்சம் வில்வமரம். மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

பராசர முனிவர், உதிரன் என்னும் அசுரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. 'இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

Read More
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

மாசி அமாவாசை மயானக் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்கு திசையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு பல ஆலயங்கள் உள்ளன என்றாலும், அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். இக்கோவிலில் மாசி மாத அமாவாசையன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்தி பெற்றது. மயானக் கொள்ளை விழா நடக்கும்போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்பணிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.

மயானக் கொள்ளை விழா உருவான பின்னணி வரலாறு

பிரம்மன் தனக்கு ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் அகந்தை கொண்டான். எனவே பிரம்மனின் ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவபெருமான். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவபெருமானே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள, அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரம்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரம்ம கபாலம் விழுங்கிவிடும்.

பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த பரமேஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி பரமேஸ்வரி,பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் மேல்மலையனூரில், மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.வந்து அமர்ந்தாள் . மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவபெருமானுக்கு உணவு சமைத்தாள். பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூறையாக வீசினாள். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.

ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் உணவை சூரை இடும் நாளே 'மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை, விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு. அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்ட மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றால் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

பிரார்த்தனை

கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

Read More
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலம்

ஒருமுறை வழிபட்டாலே கோடிமுறை வழிபட்ட பலனைத் தரும் தலம்

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலங்கள் திருவைகாவூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், ஓமாம்புலியூர் கோகர்ணம், ஸ்ரீசைலம் ஆகியவை ஆகும். காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, காளஹஸ்தி, காஞ்சி போன்ற தலங்களில் உள்ள கோவில்கள் சிவபெருமானின் உடலாகவும், திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில் அவரின் இருதயம் ஆகவும் விளங்குகின்றது. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கும் முந்தையது. இறைவனின் திருநாமம் ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி.

ஒரு சமயம் தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் திருமேனியில் இருந்து ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர்க்க சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமான், அவர்கள் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவபூஜை செய்தால் பாவம் விலகும் என்று அருளினார். ஒரு கோடி ருத்திரர்களும் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவலிங்கம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். பூஜையின் முடிவில் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார்.கோடிருத்திரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவனின் திருநாமம் ருத்ரகோடீஸ்வரர் எனவும், தலம் ருத்ர கோடி தலம் எனவும் ஆயிற்று.

நாம் இத்தலத்தில் ஒரு முறை தானம் செய்தாலும், ஜெபம் செய்தாலும் அது கோடி முறை செய்ததற்கு ஈடான பலனைத் தரும். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி வழிபாடு செய்த தலம் என்பதால், சிவராத்திரியன்று இங்கு வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம்.

Read More
வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் கோவில்

சிவபெருமானை போல் நெற்றிக்கண் உடைய அம்பாள்

வேலூர்- சென்னை நெடுஞ்சாலையில் , 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 17 கி.மீ., தொலைவில் உள்ளது வளையாத்தூர். இறைவன் திருநாமம் வளவநாதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இறைவன், மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதால்,, அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. முற்காலத்தில் இப்பகுதியில்,விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் அவருக்கு 'வளவநாதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.

கோவிலில் நுழைந்ததும் நாம், நின்ற நிலையில், நான்கு கைகளுடன் எழுந்தருளியிருக்கும் பெரியநாயகி அம்பாளை, தரிசிக்கலாம். இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது.சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை, இக்கோயிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் இவளுக்கு பூஜையும் உண்டு. இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த அம்பாள் மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அம்பாளுக்கு சிவராத்திரியன்று சிறப்பு பூஜை

பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் இருப்பதால், இவளை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இரவில் பூஜை செய்கிறார்கள். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறையாகும்.

கிரக தோஷ நிவர்த்தி தலம்

வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

இத்தலத்தில் முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. மேலும், இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளதுமேலும் ஒரு தனிச் சிறப்பாகும்.

Read More