
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் கபினி ஆற்றின் கரையில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் அமைந்துள்ளது நஞ்சுண்டேஸ்வரர் கோவில் . இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.
அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை தணிக்க தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இத்திருத்தலத்தில் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து 'சுகண்டித சர்க்கரை' என்ற பெயரில் பிரசாதமாக, சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்து, பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நோய்களை குணப்படுத்தும் சக்தியானது இந்த சுகண்டித சர்க்கரைக்கு உள்ளதால் இந்த சிவபெருமானை 'ராஜ வைத்தியர்' என்ற மற்றொரு பெயர் கொண்டும் அழைக்கிறார்கள்.
இத்தலம் மைசூர் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது.

தலத்தின் தனிச்சிறப்பு
திருமண தடை நீக்கும் 'மாப்பிள்ளைசாமி' தலங்கள்
மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள திருமணஞ்சேரி , கோனேரிராஜபுரம், திருவீழிமிழலை ஆகிய மூன்று சிவத்தலங்களிலும் உள்ள இறைவனை 'மாப்பிள்ளைசாமி' என்று அழைக்கின்றனர். இவற்றில் அருள் புரியும் இறைவனையும் அம்பாளையும் ஒரே நாளில் தரிசித்தால் தடைப்பட்ட திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ். புதூரில் இறங்கி கோனேரிராஜபுரம் செல்ல வேண்டும். பிறகு மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து, திருவீழிமிழலைக்குச் செல்ல வேண்டும். நிறையாக கும்பகோணம் மயிலாடுதுறை பாதையில் குத்தாலத்தில் இறங்கி, அங்கிருந்து திருமணஞ்சேரிக்குச் சென்று தரிசித்து வர வேண்டும்.

கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோவில்
வெள்ளை ஆடை அணிந்த சனிபகவான்
திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். இறைவன் திருநாமம் உமா மஹேஸ்வரர், பூமீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேகசௌந்தரி.
இக்கோவிலில் சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும். சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
மனிதரைப் போல ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அம்சங்கள் உடைய நடராஜர்
https://www.alayathuligal.com/blog/y4hp9sx9mja22exzhw7rmkdrdc4wk3

தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்
நவக்கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி
தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள தாருகாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது மத்தியஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் மத்தியஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.
இக்கோவிலிலுள்ள தட்சிணாமூர்த்தி, தனது காலடியில் ஒன்பது நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. நவக்கிரக பீடத்தில் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.
சத்ரு சம்ஹார பைரவர்
இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை 'சத்ரு சம்ஹார பைரவர்' என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும்.

வில்வவனேஸ்வரர் கோயில்
திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஓடம் செலுத்திய தேவாரத் தலம்
கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத் தலம், திருக்கொள்ளம்புதூர் . கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ.. சென்றால் இத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் வில்வாரண்யேஸ்வரர். இறைவி சௌந்தரநாயகி. இத்தலத்தில் திருஞானசம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார். இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது.
பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த திருஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு.
ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் ஓடத்திருவிழா
ந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றன ர்.ஐந்து நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் காணலாம்.
சித்த சுவாதீனம் உள்ளவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் பாதத்தில் நீராடி வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர்.

தலத்தின் தனிச்சிறப்பு
முக்தி தரும் தலங்கள்
வைணவ மார்க்கத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருவடியை அடைய 108 திருப்பதிகள் உள்ளன. அது போலவே சைவ மார்க்கத்தில் சிவபெருமானின் திருவடியை அடைய சில சிவாலயங்கள் உள்ளன. நாம் பூமியில் பிறந்து, இல்லற வாழ்வில் ஈடுபட்டு பின்பு, முக்தி என்னும் இறைவனின் திருவடியை அடைய வேண்டும் என்பது இந்து சமயச் சான்றோர்களின் வாக்காகும். அவ்வாறு நாம் பிறப்பு என்னும் பற்றறுத்து, முக்தி என்னும் வீடுபேறு நிலையை அடைவதற்கான தலங்களை இங்கே பார்க்கலாம்.
பிறக்க முக்தி-திருவாரூர்
திருவாரூர் நகரில் ஒருவர் பிறந்துவிட்டாலே முக்தியடைந்து விடலாம் என்ற சிறப்பு கொண்ட தலமாக உள்ளது. இந்தத் திருவாரூர் மண்ணில் ஒரு ஜீவன் பிறந்தாலே நிச்சயமாக அந்த ஜீவனுக்கு முக்தி கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு.
வாழ்ந்தால் முக்தி-காஞ்சிபுரம்
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல், திரும்பும் திசையெல்லாம் கோவில்களாகவே காட்சியளிப்பதால், கோவில்கள் நகரம் என்று காஞ்சிபுரம் அழைக்கப்படுகிறது. நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்று மகாகவி காளிதாசர் பாடியிருக்கிறார். இன்னும் எவ்வளவோ சிறப்புகள் காஞ்சி மாநகருக்கு உள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் வாய்ந்த காஞ்சியில் வாழ்ந்தாலே ஒரு ஜீவனுக்கு நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
தரிசிக்க முக்தி- சிதம்பரம்
பஞ்ச பூத திருத்தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்ச சபைகளில் பொன் சபையாகவும் விளங்குவது சிதம்பரம். தில்லை நடராஜர் கோயில். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பாலயம் என்று திருமந்திரம் அருளிய திருமூலதேவர் சொன்னதைப் போல் மனித உடம்பும், கோயிலும் ஒன்றே என்பதை காட்சிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நம்முடைய உடம்பானது, அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து வகையான கோசங்களைக் கொண்டது. அதை உணர்த்தும் விதத்தில் இக்கோயிலும் ஐந்து திருச்சுற்றுக்களை கொண்டுள்ளது. நவீன விஞ்ஞானத்தின் அத்தனை ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து தரிசித்த உடனேயே முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கையாகும்.
நினைக்க முக்தி- திருவண்ணாமலை
படைப்பு கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது, சிவபெருமான், தானே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என்பதை அனைவருக்கும் உணர்த்தவேண்டி நெருப்பு பிளம்பாக தோன்றி காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை ஆகும். பஞ்சபூத தலங்களில் தேயு என்னும் நெருப்பு தலமாக விளங்குகிறது. சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக மலை உருவில் காட்சியளிக்கும் இங்கு ஏராளமான சித்தர்கள் இன்றைக்கும் அரூபமாக மலையை வலம் வருவதாக நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தல இறைவனை தரிசிக்க நாம் இங்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை. அண்ணாமலைக்கு அரோகரா என்று இருக்கும் இடத்தில் இருந்து பக்திப் பெருக்கோடு வேண்டிக் கொண்டாலே நமக்கு முக்தி கிடைக்கும் என்வது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
தீர்த்தமாட முக்தி- திருமறைக்காடு
வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கதவினை திருநாவுக்கரசர் பதிகம் பாடி திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அடைக்கப்படவும் பெருமை பெற்ற தலமாகும். இவ்வூரின் இன்றைய பெயர் வேதாரண்யம் என்பதாகும். இங்குள்ள தீர்த்தம் வேத தீர்த்தம் ஆகும். நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து காரணத்தால் இத்தல இறைவனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும் தீர்த்தத்திற்கு வேத தீர்த்தம் என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே, இங்கு வந்து இத்தீர்த்தத்தில் நீராடினாலே நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
சொன்னால் முக்தி- திருவாலவாய்
மதுரை நகரின் மற்றொரு பெயர் திருவாலவாய் ஆகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் ஒரே நகரம் இதுதான். மதுரை மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது அன்னை மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் ஆலயம். அன்னை மீனாட்சியம்மனை இங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார மக்கள் அனைவரும் தங்களின் அன்னையாகவே கருதி வழிபட்டு வருகின்றனர். , இங்கு வந்து இக்கோயிலில் உள்ள தல மரத்தை 108 முறை வலம் வந்து, திருவாலவாய சுவாமியை மனதில் நினைத்து மனமுருகி வேண்டினால் மரண பயம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
கேட்க முக்தி- அவினாசி
தேவரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு சிவாலயங்களில் முக்கியமான தலம் அவினாசி அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயம். அவிநாசி என்பதற்கு என்றும் அழியாத என்று பொருள். இத்தல இறைவனை மனமுருகி வேண்டிக் கேட்டால் நாம் கேட்கும் வரத்தை தருவார் என்பது ஐதீகம். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை மனமுருகி வேண்டி கேட்க, அதனால் மனம் உருகிய இறைவன், முதலை விழுங்கிய சிறுவனை மீட்டுக் கொடுத்த தலம் ஆகும். எமன் வாயில் சென்றவனைக் கூட இத்தல இறைவன் மீட்டுத் தருவார் என்பதால், நாம் கேட்கும் வரத்தை அளிக்கும் முக்தி தலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இறக்க முக்தி – வாரணாசி
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டது, காசி என்னும் வாரணாசி நகரம். இந்நகரத்தை சிவபெருமானே உருவாக்கினார் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கையாகும். வருணா-ஆசி என்னும் இரண்டு நதிகள் சங்கமமாகும் இடம் என்பதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. காசி என்றால் ஒளி என்று அர்த்தம். நாம் வாழும் போது மட்டுமில்லாமல் நாம் இறந்த பின்னும் பிறவா நிலை என்னும் முக்தியை அளிக்கும் நகரமாக அமைந்துள்ளது. காசியில் இறந்தால் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். அதனால் இங்கு இறக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும்போது சிவபெருமானே அவற்றின் காதுகளில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

மங்கள சனீஸ்வரர் கோவில் (என்ற) சங்கர நாராயணர் கோவில்
சனீஸ்வர வாசல்
திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் காரையூர். இறைவன் திருநாமம் சங்கர நாராயணர். இறைவி நாராயணி அம்பாள். மந்தன், சாயாபுத்திரன், நீலன், காரி என்ற பெயர்களைக் கொண்ட சனிபகவான் இந்த ஸ்தலத்தில் தங்கியதால் காரையூர் என்ற காரணப்பெயருடன் மக்களது சொல்வழக்கில் அழைக்கப்படுகிறது.
கும்பகோணத்திற்கு வரும்போது காவிரி, அரசலாறு, வெட்டாறு என இரண்டாகப் பிரிந்து பாய்கிறது. இதில் வெட்டாறு, திருவாரூர் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கங்கனாஞ்சேரி என்ற ஊரில் வடக்கிலிருந்து தெற்காக வளைந்தோடுகிறது. விருத்தம் என்ற சொல்லுக்கு வட்டம், வளைப்பது என்று பொருள். இத்தலத்தில் சூரியமைந்தனாகிய சனிபகவானது அபூர்வமான கானகப்பகுதியை, வளைத்தபடி வருவதால் 'விருத்த கங்கா' என்று பெயர் பெறுகிறது.
ஒருமுறை, நளமகாராஜனைப் பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கிப் புறப்பட்டார் சனி பகவான். திருநள்ளாறை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில், இருள்கவியத் தொடங்கி விட்டது. எனவே, சனி பகவானின் காக வாகனத்துக்குப் பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேனும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே, அந்த இடத்திலேயே தரையிறங்கினார் சனிபகவான்.
இரவில் அங்கு தங்கியிருந்தவர் காலையில் எழுந்தபோது, கோயிலின் எதிரில் விருத்தகங்கா பாய்வதைக் கண்டார். தனது வாகனத்துடன் அதில் நீராடி, அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருந்த சங்கரநாராயணரையும் நாராயணி அம்பாளையும் வழிபட்டு மகிழ்ந்தார். இங்ஙனம், சனி பகவான் தங்கி வழி பட்டதால், 'சனீஸ்வர வாசல்' என்ற திருப் பெயர் கிடைத்தது. சிவபெருமான் என்ற மங்களனை, சனிபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் அவருக்கு மங்கள சனீஸ்வரன் என்ற பெயர் ஏற்பட்டது.
விதியையும் மாற்றும் சனீஸ்வரர்
நவக்கிரகங்களோடு நிற்கும்போது மேற்கு முகம் பார்த்தவராக அருள்தரும் சனி, இத்தலத்தில் கிழக்குமுகமாக நின்று, நதியில் நீராடி வருவோருக்கு மங்களகரமான பார்வையைத் தருகிறார் என்கிறது தலவரலாறு. தொழில், வியாபார முயற்சிகளில் தடைகள் இருப்பின் ஞாயிறு மற்றும் அமாவாசை தினங்களில் வந்து விருத்த கங்காவில் நீராடி நீலக்கரை வேஷ்டி தானம் செய்து சனீஸ்வரனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையை நீலமலரால் செய்து எள் சோறு, வெண்பொங்கல் படைத்திட நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
மாங்கல்ய தோஷ நிவர்த்தி தலம்
சனிக்கிழமை அல்லது ஜென்ம நட்சத்திர திருநாளில் காலையில் இந்த திருத்தலத்துக்கு வந்து, நல்லெண்ணெய் தேய்த்து 'விருத்தகங்கா’ நதியில் நீராடி, நீல வண்ண கரை இடப்பட்ட வஸ்திரத்தை வேதம் அறிந்தவருக்கு தானம் செய்வதுடன், நீல மலரால் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, எள் அன்னம் படைத்து, சனி கவசம் மற்றும் ஷோடச நாம துதி படித்து வழிபடுவதால், மாங்கல்ய தோஷங்கள் விலகும்.
சனி தோஷம் நீக்கும் தலம்
பொதுவாக, மனிதர்களின் ஆயுள்காலத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்று முறை சனிபகவான் வந்து செல்வார். அவர் அமர்கின்ற இடத்தின்படி ஆயுள் நீட்டிப்பைத் தருவார் என ஞானநூல்கள் தெரிவிக் கின்றன. ஒருவேளை, சனியின் பாதிப்பால் ஆயுள் பலத்தில் பங்கம் இருந்தால், இந்தத் தலத் துக்கு வந்து, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து, எள் முடிப்பு தீபம் ஏற்றி, சனிக் கவசமும், ஷோடச நாமாவளியும் படித்து வணங்குதல் வேண்டும். இதனால் ஆயுள் பலம் நீடிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
Comments (0)Newest First

கைலாசநாதர் கோவில்
நந்திமீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி
மதுரையில் இருந்து 33 கி.மீ. தூரத்திலும் உசிலம்பட்டியில் இருந்து 15 கி.மீ. தூரத்திலும் உள்ள தலம் திடியன்மலை. இறைவன் திருநாமம் கைலாசநாதர் . இறைவி பெரிய நாயகி.
இத்தலம்1000 வருடத்திற்கு மேல் பழைமையானது. இந்தக் கோவில் 'தென்திருவண்ணாமலை' என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை போய் கிரிவலம் வர முடியாதவர்கள், இங்கு கிரிவலம் வந்தால் திருவண்ணாமலையில் செய்த புண்ணியம் கிடைக்குமாம்.
காயத்ரி மந்திரத்துக்கு மூல வடிவம் கொடுத்த ஞானகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் தலங்களில் முக்கியமான தலமாக இத்தலம் திகழ்கிறது.
பொதுவாக தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்களுடன் காட்சி கொடுப்பார். ஆனால், இந்தத் தலத்தில் 14 சித்தர்களுடன் நந்திவாகனத்தில் வீராசனத்துடன் (யோகம்) தரிசனம் தருவது மிகவும் விஷேசம். மற்றொரு இவருடைய விக்கிரகம் சிறப்பு காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது.
தட்சிணாமூர்த்தி லோக குருவாக அமர்ந்து சித்தர்களுக்கு உபதேசிக்கும் தலமாதலால் இது குருபரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 14 வாரங்கள் விளக்கு ஏற்றி வழிபட தோஷங்கள் விலகித் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், செல்வம் சேரவும் , நேரம் சரியில்லை என்று புலம்புபவர்களும் , எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டவர்களும் ,கிரஹ தோஷங்கள் உள்ளவர்களும் வணங்க வேண்டிய தெய்வம் திடியன்மலை தக்ஷிணாமூர்த்தி.
Comments (0)Newest First

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்தில் தெரியும் வேங்கை வடிவம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது திருவேங்கைவாசல். திருவேங்கைபதி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக வியாக்ரபுரீசுவரர் உள்ளார். வியாக்ரம் என்றால் புலி என்று பொருளாகும். மூலவர் திருவேங்கைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் பெயர் அருள்மிகு பிரகதாம்பாள். தமிழில் பெரியநாயகி.
மூலவர் வேங்கைவன நாதர் சிறிய சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அர்ச்சகர் காட்டும் தீபராதனை ஒளியில் கூர்ந்து பார்த்தால் அதில் இறைவனின் வேங்கை வடிவத்தைக் கண்டு பிரமிப்படையலாம். சிவலிங்கத்தின் மேல் பகுதியில் வட்டமான இரண்டு வேங்கைக் கண்களையும், ஆக்ரோஷமாய்த் திறந்துள்ள வேங்கையின் வாய்ப்பகுதியையும் கண்டு ஆனந்தித்து அருள் பெறலாம்.
தல வரலாறு
ஒரு சமயம் தெய்வப் பசுவான காமதேனு, தேவேந்திரனின் சாபத்தினால், பூமியில் வந்து சாதாரணமான பசுவாகப் பிறப்பெடுத்தது. அதை மாமுனிவர் வசிட்டர் அன்போடு பேணிப் பாதுகாத்து வந்தார்.
ஒரு நாள் மாமுனி வசிட்டரை வணங்கிய பசு தன்னடைய சாப விமோசனத்துக்கு ஏதேனும் வழியுண்டா என்று கூறி அருளுமாறு வேண்டி நின்றது. மாமுனி வசிட்டர் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழ மரங்கள் அடர்ந்த காடு ஒன்றில் கபிலர் என்னும் முனிவர் தவம் இயற்றுகிறார், நீ அவரைச் சென்றடைந்தால் உன் சாபம் நீங்கும்,
அவ்வாறே பசுவும் வகுளாரண்யத்தை அடைந்து கபில முனிவரிடம் சென்று வணங்கித் தன்னுடைய வரலாற்றைச் சொன்னது. பசுவின் கதையைக் கேட்டு மனமிரங்கிய கபில முனிவர் அந்த மகிழவனத்தில் ஒரு சிவாலயம் இருப்பதாகவும் அதில் வகுளவனேசுவரர் என்கிற திருநாமத்தோடு மகாதேவர் அருள்பாலித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி தினமும் நீ கங்கை நீரால் வகுளவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் உன் சாபம் அகலும் என்று வழி காட்டினார்.
அவ்வாறே தினமும் கங்கை நீரைக் தன்னுடைய காதுகளில் ஏந்திக்கொண்டு மகிழவனக் கடவுளுக்குப் புனித நீராட்டிக் கொணடிருந்தது பசு. இந்நிலையில் அது ஒரு கன்றையும் ஈன்று பாலூட்டிக் கொண்டிருந்தது. வழக்கமான இறைவன் பணியில் காதுகளில் கங்கை நீரோடு ஒருநாள் அது மகிழ வனத்துக்கு வரும் வழியில் ஒரு வேங்கைப்புலி வழிமறித்தது. உடனே அதைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளவும் முயன்றது வேங்கை. வேங்கையிடம் மன்றாடியது பசு. என்னை விட்டு விடு, நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீர் சுமந்து வந்து கொண்டிருக்கிறேன். என்னை இப்போது விட்டுவிடு. அபிஷேகம் முடித்துவிட்டு என்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிப் பசியாற்றிவிட்டுத் தவறாமல் உனக்கு இரையாக வந்து விடுகிறேன் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டது.
சிவபிரானுக்கு அபிஷேகப் பிரியர் என்கிற திருநாமம் உண்டு. தனக்கு தினமும் கங்கை நீரால் திருமுழுக்காட்டி வரும் பசுவின் பக்தியில் மனம் பறிகொடுத்த சிவபெருமான் - வகுளவனேசுவரர். அதை மேலும் சோதித்து முக்தியளிப்பதற்காகவே வேங்கை வடிவெடுத்து வந்திருந்தார். வழிமறித்தார். பசுவின் விருப்பத்தை ஏற்று உடனே அதற்கு வழிவிட்டது வேங்கை. சொன்ன சொல் தவறாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டுத் தன்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிவிட்டு வேங்கையின் முன்னால் இரையாக நின்றது பசு. பசுவின் வாக்கு தவறாத பண்பால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் ரிஷப ஆரூடராகத் தம் தேவியோடு காட்சியளித்து அந்தக் காமதேனுப் பசுவுக்கு நற்கதி அருளினார்.
வேங்கையாக உருமாறி சிவபெருமான் பசுவை வழிமறித்த இடம் திருவேங்கை வாசல் என வழங்கப் படுகிறது, பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
சன்னதிகள் எதிர் எதிரே அமைந்திருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு
https://www.alayathuligal.com/blog/9mhr7kt2lf8z7mfs6y9gk4fb7ffnjc
தவக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான்
https://www.alayathuligal.com/blog/s2ymrhrk486l63psxj8et4h3g9f699

மாயூரநாதர் கோவில்
காவிரி துலா ஸ்நானம்
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பென்றால் ஐப்பசி மாதத்தினை துலா விஷூ புண்ணிய காலமாக சொல்கிறார்கள். இந்த துலா விஷூ புண்ணிய காலத்தில் தேவர்களின் இரவும் பகலும் சரிசமமாக இருப்பதால், இந்த நாட்களில் காவிரி ஆற்றில் ஸ்நானம் செய்வது மிக புனிதமாகக் கருதப்படுகிறது.
புண்ணிய நதிகளானன கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதால் தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான, மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஓவ்வொரு நாளும். ஒவ்வொரு நதியாக நீராடி தங்கள் பாவச்சுமைகளை நீக்கிப் புனிதம் பெறுலாம் என்று அருளினார். அதன்படி ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன. அவர்களுடன் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, வக்ஷ்மி, கெளரி, சப்தமாதர்கள் போனறோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர். அதனால் இந்த மாதத்தில் மட்டும் அனைத்து நதிகளும் இங்கு வருவதால் நாம் காவிரியில் ஸ்நானம் செய்வதால் அனைத்து நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். ஆகவே ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடைதாகும்.
இந்த துலா ஸ்நானம் என்பது மயிலாடுதுறையில் காவிரி நதியில் துலாகட்டம் என்ற படித்துறையில் ஒவ்வொரு வருடமும் மயூரநாதஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வள்ளலார் கோயில். திருஇந்தளூர் பரிமளரெங்கநாதஸ்வாமி ஆகிய தெய்வங்களும் எழுந்தருளுகிறார்கள் . தமிழ் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. கடை முழுக்கு, ஐப்பசி மாதக் கடைசி நாள் முடிகிறது.
முடவன் முழுக்கு
ஓர் அங்கஹீனன் (முடவன்) மயிலாடுதுறையை நோக்கி இங்குள்ள காவிரியில் துலா ஸ்நானம் செய்ய வந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. அந்த முடவன் சிவபெருமானிடம் வேண்டினான். அவனுடைய குறையைப் போக்க, 'கார்த்திகை 1ஆம் தேதி அன்றும் இதே பலன் உனக்கு கிட்டும். ஸ்நானம் செய்' என அருளினார். இந்த நாளே முடவன் முழுக்கு என பெயர் பெற்றது.
காவிரி துலா ஸ்நான பலன்
இத்துடன் மொத்தம் 14 உலகங்களிலுமுள்ள அறுபத்தி ஆறாயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஸ்ரீ கிருஷணனின் ஆணைக்கிணங்க, இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்த மாதம் முழுவதிலும் இங்கே இருக்கிறார்கள் என்று அக்னி புராணம் கூறுகிறது. மிக முக்கியமாக, மக மாதத்தில் ப்ரயாகையிலும் (அலஹாபாத்), அர்த்தோதய புண்ணியகாலத்தில் சேதுவிலும் நீராடினால் கிடைக்கும் பலனைவிட இந்த துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வதால் மனிதன் செய்யும் பெறும் தவறுகளும் நீங்கப்பெறுகின்றன.
காவிரி துலா ஸ்நான காணொளிக் காட்சி
https://www.youtube.com/watch?v=Xov1u2MCxks

தலத்தின் தனிச்சிறப்பு
காசிக்கு சமமான சிவ தலஙகள்
இந்துக்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க நினைப்பது காசி விஸ்வநாதர் கோவில்தான். அதிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் தங்களின் இறுதிக்காலத்தை காசிக்கு சென்று இக்கோவிலில் குடிகொண்டுள்ள சிவபெருமானை தரிசித்து கங்கைக் கரையிலேயே தங்களின் இறுதி நாட்களை முடித்துக்கொள்ள ஆசைப்படுவதுண்டு. தமிழகத்திலும் காசிக்கு நிகரான கோவில்கள் உள்ளன.
"ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம் சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ ஷேத்திர ஸமான ஷட்" என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகமும் உண்டு. அதன்படி திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) என்ற இந்த ஏழு சிவன் கோவில்களும் காசிக்கு சமமான கோவில்களாகும். இங்கு சென்று வழிபட்டால், காசிக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

அமிர்தகடேசுவரர் கோவில்
சிவபெருமான் ஒவ்வொருநாளும் நவக்கிரகங்களுக்குரிய வஸ்திரம் அணியும் தேவாரத் தலம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகாவில், வடவாற்றின் கரையில் உள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இத்தலம் செட்டிதாங்கல் வழியாக எய்யலூர், ஆயங்குடி, முட்டம் செல்லும் சாலையில் ஆறாவது கி.மீட்டரில் உள்ளது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.
அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும், தங்களுக்கான நாளில் இங்கு சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவபெருமான் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். அதனால் இந்த ஈசனுக்கு ஞாயிறு-சிவப்பு, திங்கள்-வெள்ளை, செவ்வாய்-சிவப்பு, புதன்-பச்சை, வியாழன்-மஞ்சள், வெள்ளி-வெள்ளை, சனி-நீலம் என ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகத்துக்குரிய வண்ண ஆடை அணிவிக்கப்படுகிறது.
எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. மேலும் இத்தலத்தில் அங்காரகன் வழிபட்டதால், இத்தலம் செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகின்றது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி
https://www.alayathuligal.com/blog/8jbwz76aeb7drsnd59bggnn7emjd59
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்
https://www.alayathuligal.com/blog/xjneb5f8s4fffahndmmwkzp2ex4lxe
தினம் முப்பெருந்தேவியாக அருள் பாலிக்கும் அம்பிகை
https://www.alayathuligal.com/blog/dmgrwag3jxzb57ged3gwfc4l5et5wk

எறும்பீசுவரர் கோவில்
தேவர்கள் எறும்பு வடிவில் வழிபட்ட தேவாரத் தலம்
திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர். இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி.
புற்று மண்ணால் ஆன சுயம்பு நாதரான இறைவன் எறும்பீஸ்வரர், வடக்கில் தலை சாய்ந்த நிலையில் வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார்.
தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். அவர் 'தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப்(திருவெறும்பூர்) சிவபெருமானை வழிபடுவாயாக, அப்போது சூரனை அழிக்க ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்' என்று ஆலோசனை கூறினார்.
அதன்படி தான் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவன் விருப்பப்படி கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர். எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினையும் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் சிவபெருமான் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்கு அருள் வழங்கினார்.

எமதண்டீஸ்வர சுவாமி கோவில்
பிரதோஷ நாளில் மூச்சு விடும் நந்தி
திண்டிவனம்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
இக்கோவிலில், மூலவரான எமதண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். செவ்வக வடிவ ஆவூடையாரில், இங்கு மூலவராக ஈசன் எழுந்தருளியிருப்பது அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. மூலவர் கருவறையினுள்ளே, பூசனைகள் செய்யும் போது, யாரோ நீரினுள்ளிருந்து வித்தியாசமான மூச்சு விடும் ஒலியைப் போல, ஓர் ஒலியை மக்கள் கேட்டுள்ளார்கள்.
பிரதோஷ நாளில் இக்கோவில் நந்தி விடும் மூச்சுக் காற்றுக் கேட்பதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள். அதை நீருபிக்கும் விதமாக நந்தியின் நாசித துவாரங்கள் அமைந்திருப்பதை
அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பிரதோஷ அபிஷேகத்தின்போது காற்றுக் குமிழ்கள் நந்தியின் நாசித் துவாரத்திலிருந்து வெளியேறுவதையும் குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தலத்தில் திருமணம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இது தவிர சஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், போன்றவை இங்குச் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.
இத்தலத்து சிவன் கால அனுக்கிரக மூர்த்தி ஆதலால் காலசர்ப்ப பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.
சிவகுருநாதசுவாமி கோவில்
காலடியில் ராகுவுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்
கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையிலிருந்து சிவபுரி கிளைப் பாதையில், 2 கி. மீ. சென்றால் தேவாரத் தலமான சிவபுரத்தை அடையலாம். இறைவன் திருநாமம் சிவகுருநாதசுவாமி. இறைவியின் திருநாமம் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி.
இத்தலத்தில், பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.
பொதுவாக சிவாலயங்களில், சுற்று சுவற்றில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் காலடியில் முயலகன் மட்டுமின்றி ராகுவும் இருப்பது ஒரு விசேடமான அம்சமாகும். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும்.

சிவசைலநாதர் கோவில்
சடைமுடியோடு காட்சியளிக்கும் சிவபெருமான்
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலமான சிவசைலத்தில் அமைந்துள்ளது சிவசைலநாதர் கோவில். இக்கோவிலின் புராணப் பெயர் 'அத்தீச்சுவரம்' ஆகும்.இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். இப்படி கருவறையின் மூன்று சுற்று சுவர்களிலும் சாளரம் உள்ள சிவாவயத்தை காண்பது அரிது.
சிவசைலம் திருக்கோவிலை கட்டியவன் சுதர்சன பாண்டிய மன்னன். பிற்காலத்தில் ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க சுதர்சன பாண்டிய மன்னன் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார். மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, என்ன அதிசயம் சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம். இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான்.
இங்குள்ள இறைவன் சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம்.

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
சன்னதிகள் எதிர் எதிரே அமைந்திருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.
இக்கோவிலில் தெய்வ சன்னதிகள், வேறு எந்த தலத்திலும் நாம் காண இயலாத வகையில் அமைந்திருப்பது, கோவில் வடிவமைப்பில் ஒர் அபூர்வமாகும். இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.
பொதுவாக எல்லா கோவில்களிலும் மூலவரை வணங்கிய பின்தான் பரிவார தேவதைகளை வணங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் முதலில் அம்பாள், பின்பு நவ விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ராஜகணபதி, கஜலட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரை வணங்கிய பிறகு கடைசியாக மூலவரான வியாக்ரபுரீஸ்வரரை வணங்கும்படியாக கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

யந்திர சனீஸ்வரர் கோவில்
லிங்க வடிவில் காட்சி தரும் யந்திர சனீஸ்வரர்
நவகிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சனி பகவான் சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று பிறந்தார். இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சந்தவாசல் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்குப்பம் ஊருக்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். கோயில் சுருவறையில், வேறெங்கும் காண இயலாத வகையில், லிங்க வடிவில் சனீஸ்வரன் காட்சியளிப்பது இந்த கோயிலின் தனிச் சிறப்பு
மூலவர் சனீஸ்வரரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடிவில் காட்சி தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகின்றனர். ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார் என்பதும் அந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. யந்திர சனீஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநேயர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகத்தின் உருவம் உள்ளது.
சனீஸ்வரரின் மார்பு பகுதியில் அறுகோண யந்திரமும், நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.
பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கி இருக்கின்ற நிலையில் இங்கு மட்டும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கி திறநத வெளியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
யந்திர சனீஸ்வரர் கோவில் வரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சம்புவராய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. சம்புவராய மன்னரின் படைத்தளபதி ஒருவர் இந்த வழியாக சென்றபோது விபத்தில் பலத்த காயமடைந்தார். சனிதோஷம் இருப்பதால் இந்த விபந்து ஏற்பட்டதாகவும் அதன் பாதிப்பில் இருந்து விலகிட இந்த இடத்தில் சனீஸ்வரர் சிலையை மூல மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டும்படி படை தளபதிக்கு அசரீரி கூறியது. அதையடுத்து மன்னரின் அனுமதியுடன் லிங்க வடிவில்,மூல மந்திரத்துடன் சனீஸ்வரர் சிலையை தளபதி பிரதிஷ்டை செய்தார்.
நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கண்டுபிடிப்பு
சனி பகவானின் சிறப்பு குறித்து நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கூறுகையில் சனி கிரகத்தின் வடதுருவமும், யந்திர சனீஸ்வரரின் மூல மந்திர பிரதிஷ்டையும் நேர்கோட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்
சனி தோஷ நிவர்த்தி தலம்
கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமமும், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம். இத்தோஷம் உடையவர்கள் இவரை வழிபடுவதால் நிவாரணம் பெறலாம்.
புதிய தொழில் தொடங்குபவர்கள்,நீதிமன்ற வழக்குகளால் அவதிப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள் ஆகியோர் இக்கோவிலுக்கு வந்து அதன் ஆவணங்களை யந்திர சனீஸ்வரரின் மடியில் வைத்து வணங்குவது சிறப்பாகும். மேலும் கடன் பிரச்சனை, குழந்தைப்பேறு, பில்லி சூனியம் போக்குதல், விவசாயம் ஆகியவற்றுக்கும் இவரை வணங்கினால் நல்லபலன்கள் கிடைக்கும்.
வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஏரிக்குப்பம் கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடுகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவானை வணங்கி அவரது அருள் பெற்று தோஷம் நீங்கிச் செல்கிறார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோவில்
எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி
பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.
சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.
பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லாலோ அல்லது வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒன்றாக சேர்ந்திருக்கும் அபூர்வக் கோலம்
சேலம்-மேட்டூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் தாரமங்கலம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.
இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும். அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார். பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.
இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.