அருணாச்சலேஸ்வரர் கோயில்
வீதி உலாவின் போது ராஜகோபுரத்தை தவிர்க்கும் இறைவன்
பொதுவாக ஆலயங்களில் வீதி உலா நடக்கும் பொழுது. சுவாமி ஆலயத்தின் பிரதான ராஜகோபுரத்தின் வழியாகத்தான் வெளியே வருவார். ஆனால் பஞ்சபூத தலங்களில், அக்னித் தலமான திருவண்ணாமலையில், சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார். இந்த நடைமுறை வேறு எந்த ஆலயங்களிலும் கடைடிக்கப்படுவதில்லை
திருக்காமீசுவரர் கோவில்
சுகப்பிரசவம் அருளும் பிரசவ நந்தி
புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என பெருமை கொண்டது வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள சுகப்பிரசவ நந்தி ஆகும். அம்மன் சன்னிதியை(வடக்கு திசை) நோக்கியவாறு இந்தப் பிரசவ நந்தி அமைந்துள்ளது. சுகப்பிரசவம் விரும்பும் எவரும், இங்கு வந்து, மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பிரசவ நந்தியை அம்மன் பார்க்கும் தென்திசை நோக்கி(அதாவது நந்தியின் இயல்பு திசைக்கு எதிர் திசையில்)திருப்பி வைத்துவிட வேண்டும். பிரசவ நந்தியின் அருளால் நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். அதன்பிறகு, குழந்தையும், தாயும் இவ்வாலயம் வந்து பிரசவ நந்திக்கு சிறிய அளவில் அபிஷேகம் செய்து, அந்த நந்தியை, அம்மனை நோக்கிய வடக்கு திசையில், அதாவது அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி வைத்துவிட வேண்டும். இதுவே சுகப்பிரசவத்திற்கான பரிகாரமும், நன்றிக்கடனும், ஆகும்.
அரசலீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்திற்கு தலைப்பாகை அணிவித்துப் பூஜை செய்யும் தேவாரத்தலம்
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலமாகும்.இறைவன் பெயர் அரசலீஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.
பலாசவனேஸ்வரர் கோவில்
பலாப்பழம் போன்ற திருமேனியை உடைய சிவலிங்கம்
தஞ்சை மாவட்டம் திருச்சேறை அருகே உள்ளது நாலூர். இத்தலத்து இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. இத்தலம் தேவார வைப்புத்தலமாகும். தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.
அர்த்தநாரீஸ்வரர் கோவில்
இனிப்பு,புளிப்பு என இரட்டை சுவையுடன் விளங்கும் தலவிருட்சம்
தென்காசிக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூர்.அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கிறார்கள், புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு சிந்தை மரம் என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள, மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நீலகண்டேஸ்வரர் கோயில்
அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்
தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள சிவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு பிரத்யேகமாக அபிஷேகம் நடக்கிறது. தினமும் பாத்திரம் பாத்திரதமாக எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அவ்வளவு எண்ணெயையும் இங்குள்ள சிவ லிங்கம் தன்னுள்ளே உறிஞ்சிக்கொள்கிறது. அடுத்தநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவ லிங்கத்தை பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது. சிவபெருமான் அருந்திய ஆலகால விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி இருப்பதால்,அந்த விஷத்தன்மையை குறைக்கவே இவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்
ரிஷபேஸ்வரர் கோவில்
தங்க நிறமாக மாறும் நந்தி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊரில், ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாம் நாள் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது, சூரிய ஒளிக்கதிர்கள் இராஜ கோபுரத்தின் மேல் பட்டு நந்தியின் மேல் விழும். அப்படி சூரிய ஒளி விழும் சில நிமிடங்கள், நந்தி தங்க நிறமாக மாறி காட்சியளிக்கும்.
கடம்பவனேசுவரர் கோயில்
கருவறையில் சிவபெருமானுடன் காட்சி தரும் சப்த கன்னியர்கள்
பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோவில்களில் உபசன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்குத் தனியாக கோவில் அமைந்திருக்கும். ஆனால், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், சப்த கன்னியர்கள் மூலவர் கடம்பவனநாதரின் பின்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இதுபோல மூலஸ்தானத்தில் சப்த கன்னியர்கள் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு வேறு எங்கும் காண முடியாது.
நெடுங்களநாதர் கோயில்
சூரியனை நோக்கி திரும்பியிருக்கும் எட்டு கிரகங்கள்
சிவாலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் இருக்கும் பீடத்தில் சூரியன் நடுவில் இருப்பார். அவரை சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் வெவ்வேறு திசைகளை நோக்கிய வண்ணம் இருப்பார்கள். ஆனால் திருச்சியை அடுத்த தேவாரப்பாடல் பெற்ற திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஆலயத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் தன் இரு தேவியருடன் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மற்ற எட்டு கிரகங்கள், சூரியனை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். இப்படி சூரியனை நோக்கி உள்முகமாக திரும்பி இருப்பது ஒரு அரிதான அமைப்பாகும்.
துளஸீஸ்வரர் கோயில்
துளசி தீர்த்தப் பிரசாதம் தரும் சிவாலயம்
தாம்பரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கப் பெருமாள் கோவில் என்ற ஊருக்கருகில் கொளத்தூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது. இங்கு துளஸீஸ்வரர் திருக்கோவில் எனும் சிவாலயம் உள்ளது. அகத்திய முனிவர் கயிலாயததிலிருந்து தென்பகுதிக்கு செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் துளசி செடிகள் நிறைந்த வனமாக காட்சியளித்த இத்தவத்திற்கு வந்தார். அவர் சிவ வழிபாட்டிற்காக ஏதாவது சிவாலயம் இருக்கின்றதா என்று இத்தலத்தில் தேடினார். அப்போது ‘அகத்தியரே என்னைத் தேடி அலைய வேண்டாம். நான் துளசி செடிகள் சூழ இங்குதான் மறைந்து இருக்கின்றேன்’ என்று அசரீரி ஒலித்தது. அகத்தியர் அசரீரி வந்த திசையில் சென்று பார்த்தபோது, அங்கே சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அகத்தியர் அந்த சிவலிங்கத்திற்கு துளசியை சூட்டி துளசியாலேயே அர்ச்சனை செய்தார். அதனால் இத்தலத்தில் இன்றும், துளஸீஸ்வரரை துளசியால் அர்ச்சித்து துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ரவீஸ்வரர் கோயில்
சூரிய ஒளிக்கதிர்கள் மூன்று வேளையும் சிவலிங்கத்தை தழுவும் ஆலயம்
சென்னை வியாசர்பாடியிலுள்ள ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ரவீஸ்வரர் ஆலயத்தில், காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தைத் தழுவும். சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது மாலை போல விழுகின்றன.
தில்லை நடராசர் கோயில்
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் ஒருசேர தரிசிக்கக் கூடிய தலம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில், மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்து அருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரையும், நாம் ஒரே இடத்தில் நின்றபடியே தரிசிக்க முடியும். இந்த மாதிரி அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் இல்லை. இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகவும், திவ்ய தேசமாகவும் விளங்குவது மற்றுமொரு தனிச்சிறப்பாகும். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற மற்றுமொரு ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜன் பெருமாள் சன்னதியும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் சன்னதியும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் ஆகும்
ஐயாறப்பர் கோவில்
திருவையாறு ஐயாரப்பன் கோவில் தட்சிணாமூர்த்தியின் தனிச் சிறப்பு
திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். இவரது மேல்நோக்கிய வலது கரத்தில் கபாலமும், இடது கரத்தில் சூலமும் தாங்கி இருக்கிறார். கீழ்நோக்கிய வலது கரத்தில், சின்முத்திரை, இடது கரத்தில் சிவஞானபோதம் காணப்படுகின்றது. இந்த தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் ஆமை இருக்கின்றது. திருவடியானது ஆமையை மிதித்திருப்பது புலன் அடக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
தாணுமாலயன் கோயில்
இந்திரன் நள்ளிரவில் பூஜை செய்யும் ஆலயம்
நாகர்கோவில் அருகிலுள்ள சுசீந்திரத்தில் அருளும் தாணுமாலயன் ஆலயத்தில், தினமும் நள்ளிரவு இந்திரன் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அதனால் இக்கோவிலில் முதல் நாள் மாலை பூஜை செய்யும் அர்ச்சகரை, மறுநாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை. இக்கோவிலில் அர்ச்சகர்களை நியமிக்கும்போதே, தாங்கள் மூலவர் சன்னதியில் கண்ட காட்சிகளை வெளியில்சொல்லக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்களிடம் வாங்கிக் கொள்கிறார்கள்.
மகாலிங்கேஸ்வரர்_கோயில்
கரத்துடன் கூடிய அதிசய சிவலிங்கம்
கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்து மூலவரின் சிவலிங்க திருமேனியிலிருந்து வலது கரம் வெளியில் வந்து ஆசி தரும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றது. இது ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்று நீருபணம் செய்தபோது,அதை ஆமோதிக்கும் வகையில் சிவபெருமான் தன் வலது கரத்தை நீட்டி ஆசி வழங்கியதைக் குறிப்பிடுவதாக உள்ளது.
வாலீஸ்வரர் கோயில்
கோலியனூர் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தூரத்திலுள்ள கோலியனூர் என்ற ஊரிலுள்ளது வாலீஸ்வரர் ஆலயம்.வாலி வழிபட்ட சிறப்புடையது இத்தலம்.இந்த ஆலயம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனால் எழுப்பப்பட்டு பின்னர் ராஜ ராஜ சோழனால் விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆலயத்து இறைவனை துளசியாலும் வில்வத்தாலும் சேர்த்து அர்ச்சனை செய்தால் சகல துன்பங்களும் விலகும் என்பது இத்தலத்து சிறப்பாகும்.
செந்நெறியப்பர் கோயில்
மூன்று துர்க்கை சன்னிதிகள் உள்ள தேவாரத்தலம்
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற திருச்சேறை திருத்தலம்.இத்தலத்தில்,வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை,விஷ்ணு,துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கைகளையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
காயாரோகணேசுவரர் கோயில்
நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் விசேடப் பார்வை
நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் பார்வை இரண்டு திசைகளை நோக்கியுள்ளது.வலது கண் அம்பாளைப் பார்ப்பது போலவும் இடது கண் சிவனைப் பார்ப்பது போலவும் இருக்கின்றது.இந்த நந்திக்கு அருகம்புல் சாற்றி,சிவன்,அம்பாள் மற்றும் நந்தி என மூவருக்கும் தேன் அபிக்ஷேகம் செய்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
வீழிநாதேஸ்வரர் கோயில்
திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு
பூந்தோட்டம் அருகிலுள்ள திருவீழிமிழிலை என்ற ஊரிலுள்ள திருவீழிமிழிலைநாதர் சிவாலயத்திலுள்ள மகாமண்டபத்து படிகள் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன.மகாமண்டபத்தின் கிழக்குப்புறத்தில் வாரத்தைக் குறிக்கும் விதமாக ஏழு படிக்கட்டுகளும்,தென்புறத்தில் மாதத்தைக் குறிக்கும் விதமாக பன்னிரெண்டு படிக்கட்டுகளும், வடக்குப்புறத்தில் நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக ஒன்பது படிக்கட்டுகளும் இருப்பது ஓர் விசேடமான அமைப்பாகும்.
பாடலீஸ்வரர் கோவில்
சிவன் சன்னதியில் பள்ளியறை
அனைத்து சிவ ஆலயங்களிலும், அம்பாள் சன்னதியில்தான பள்ளியறை அமைந்திருக்கும். ஆனால் தேவாரப் பாடல் பெற்ற திருப்பாதிரிப்புலியூர் (கடலூ்ர்) சிவாலயத்தில் பள்ளியறை சிவன் சன்னதியில் உள்ளது, இங்கு மற்ற ஆலயங்களைப் போல சுவாமி அம்மனின் சன்னதியிலுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கு பதிலாக, அம்மன் தானே சிவன் சன்னதியி லுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.