ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் கோவில்
இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய பெருமாள்
பெருமாள் விழாக்களின்போதுதான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார்.ஆனால் மூலவர் புருஷோத்தம பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார்.இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு. புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ள தலம்
பொதுவாக நரசிம்மர் கோவிலில், உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால், விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி இருக்கிறார்கள்.இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால், பெருமாள் இங்கு மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.
ஆதிஜெகநாத பெருமாள் கோவில்
ராமபிரான் சயன கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
ராமநாதபுரத்துக்குத் தென்கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. இத்தலத்து பெருமாளின் திருநாமம் ஆதிஜெகநாத பெருமாள். தாயார் திருநாமம் கல்யாணவல்லி.
இக்கோவில் மிகவும் புராதனமானது. ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம் இது.
ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகின்றது. மூலவர் ஆதிஜெகநாத பெருமாள் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் (ராமபிரான்) சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும்.
சீதையை மீட்க இலங்கை செல்லவிருந்த ராமபிரான், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, ராமபிரான் புல்லையே தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால், இது திருப்புல்லணை என அழைக்கப்பட்டது. இங்கு ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால், ராமருடன் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை; அனுமன் மட்டும் உள்ளார். கருவறை சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த காட்சியில் சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்., விபீஷணன் ராமபிரானிடம் இவ்வூரில்தான் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.
புண்டரீகாட்சன் கோவில்
இரண்டு வாசல்கள் கொண்ட திவ்ய தேசம்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில் .இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பொதுவாகவே பெருமாளைத் தரிசித்துவிட்டு அதன் பின்னரே தாயாரின் சந்நிதிக்குச் செல்வது போல் ஆலயங்களின் அமைப்பு இருக்கும். வழிபாடுகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால், திருவெள்ளறையில் நாச்சியாரை முதலில் தரிசித்த பின்னரே பெருமாளைத் தரிசிக்கும்படியான அமைப்பு உள்ளது. அதேபோல், திருவிழாக்களின்போது திருப்பல்லக்கில் பவனி வரும் வைபவத்தில், தாயார் பல்லக்கில் முன்னே செல்வார். பிறகு தாயாரை அடியொற்றி பெருமாள் பின் தொடர்ந்து செல்வார். இது வேறு எந்தத் தலத்திலும் காணக்கிடைக்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வைகுண்டநாதர் கோவில்
வைகுண்டநாதர் கோவில்
ஆதிசேஷன் பெருமாளுக்கு குடைபிடிக்கும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில், நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டத்தில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இது ஒரு அரிதான காட்சியாகும். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள், இந்த இரண்டு நாட்களிலும் மூலவர் வைகுண்ட நாதர் திருமேனி மீது சூரிய கதிர்கள், கோபுரம் வழியாக பொன்னொளி பரப்புவதைக் காணலாம். மூலவரின் திருமேனியில் தங்க கவசம் சாற்றப்பட்டு, சூரியக்கதிரில் பெருமாள் தகதகவென ஒளி வீசுவார். இந்த காட்சி சூரியனே பெருமாளை தரிசித்து அபிஷேகம் செய்வது போலிருக்கும்.திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. .
சாரங்கபாணி கோவில்
பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பெருமாள்
ஒருசமயம் கும்பகோணத்தில் லட்சுமி நாராயணசாமி என்னும் பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் கும்பகோணம் சாரங்கபாணி மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.இவர்தான் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோபுரத்தைக் கட்டியவர்.ஒரு தீபாவளியன்று லட்சுமி நாராயணசாமி பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்கு ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், அதை பக்தர்கள் பார்க்க முடியாது.
கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
பெருமாளுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும் திவ்யதேசம்
சிறுபுலியூர் என்னும் சோழநாட்டு திவ்ய தேசம் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொல்லுமாங்குடி என்னும் இடத்தில் இருந்து, கிழக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரமாகும்.அதனால் இத்தலத்துப் பெருமாளுக்கும் தாயாருக்கும் வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பானதாகும்.
வேதநாராயண பெருமாள் கோவில்
வேதங்களை தலையணையாக வைத்து படுத்திருக்கும் பெருமாள்
திருச்சி முசிறி சாலையில், தொட்டியத்திற்கு அருகில் (திருச்சியில் இருந்து 52 கிலோ மீட்டர்) அமைந்துள்ளது வேதநாராயணபுரம்.இத்தலத்தில் இருக்கும், வேதநாராயண பெருமாள் கோவிலில், ஸ்ரீவேதநாராயண பெருமாள்,நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் இருக்கிறார்கள். கீழே பிரகலாதன் இருக்கிறார்.
பிரகலாதன் இரணிய வதம் முடிந்ததும், பெருமாளிடம் அவரின் சாந்த ரூப தரிசனம் காண வேண்டும் எனப் பிரார்த்தித்தார். பெருமாள் அதைப் பிரகலாதனுக்கு திருநாராயணபுரத்தில் காண்பிப்பதாக வரமளித்தார். அதனால்தான், மூலவர் பெருமாளின் கீழே, பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் காட்சித் தருகிறார்.
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில்
கோலவில்லி ராமர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய கருடாழ்வார்
கும்பகோணம்-அணைக்கரை சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் வெள்ளியங்குடி. கோலவில்லி ராமர் கோவில். நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தலப் பெருமானை தவமிருந்து வழிபட்டமையால், இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தை நிர்மாணித்த அசுர குல சிற்பி மயன், திருமால் தனக்கு இத்தலத்தில் ராமராக காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். திருமாலும் அவன் விருப்பத்திற்காக, தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை, கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக, வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார். அதனால்தான், இந்த ஆலயத்தில் கருடாழ்வார் தன் நான்கு கரங்களுள், இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தருகிறார். இத்தகைய கருடாழ்வாரின் காட்சி வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லை. சுக்கிரன் திருமாலை வழிபட்டு கண் பார்வை பெற்ற தலம், எனவே வெள்ளியங்குடி கோலவில்லி ராமரை வழிபட்டால் கண் நோய், சுக்கிர தோஷம் நீங்கி சுகமான வாழ்வு உண்டாகும்.
இங்கு, கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்துள்ளது, மற்றொரு ஆச்சரியமாகும். ஆண்டுக்கு ஒரு முறை குலை தள்ளுவதும் பல வருடங்களாக நிகழ்ந்து வருகிறது.
நின்ற நாராயணன் கோயில்
அமிர்த கலசத்துடனும் பாம்புடனும் காட்சி தரும் கருட ஆழ்வார்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் தலத்தில், கருடாழ்வாா் தனது வலது திருக்கையில் அமிா்தகலசத்துடனும், இடது திருக் கையில் வாசுகி நாகத்துடனும், இரண்டு கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி ஹஸ்தத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவது மிக மிக அரிதான தரிசனமாகும். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தின் சிறப்பு. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை
இத்தலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆதிகேசவ பெருமாள் கோயில்
நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திவ்யதேசமான திருவட்டாறு அமைந்துள்ளது.
பொதுவாக ஆலயங்களில் மூலவர் உள்ள கருவறைக்கு ஒரு வாசல் தான் இருக்கும். ஆனால் திருவட்டாறில், சயனக்கோலத்திலுள்ள ஆதிகேசவ பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம்.
ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதரின் பாதணிகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை பாதணிகள் மாற்றப்படுகின்றன. இந்த பாதணிகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டிலிருந்து மூன்று அடி நீளம் உள்ளது. இவை சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று இருக்கும். இந்த பாதணிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரத்யேகமாகச் செய்யப்படுகின்றன. வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடம், செய்யக் கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாதணிகளைச் செய்வார்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய பாதணிகளை ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகள் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும். இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, ஸ்ரீ ரங்கநாதர் பாதணிகள் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரத்தில் தூணில் மாட்டி வைக்கப்படும்.ஸ்ரீரங்கம் கோவில் சென்றால்,,இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
பக்தவத்சல பெருமாள் கோவில்
தாயார் சன்னதியில் அமைந்திருக்கும் தேன்கூடு
திருவாரூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருக்கண்ணமங்கை. இத்தலத்து தாயார், கண்ணமங்கை நாயகி சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
பெருமாளையும் தாயாரையும் கல்யாண கோலத்திலேயே தரிசிக்க வேண்டுமென்று, இத்தலத்திற்கு வந்த தேவர்களும் மகரிஷிகளும் விரும்பியதால், அவர்கள் தேனீக்கள் வடிவில் இங்கே தங்கியிருக்கிறார்கள் என்று தல புராணம் கூறுகிறது.
அழகிய மணவாளர் கோவில்
தாயார் மட்டும் பரமபதவாசல் கடக்கும் திவ்ய தேசம்
பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், திருச்சியில் இருக்கும் திவ்ய தேசமான உறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயிலில், தாயார் கமலவல்லி மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது இல்லை.
இக்கோவில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விழாக்களையொட்டி நடக்கிறது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, மாசியில் வரும் ஏகாதசியன்று தாயார் கமலவல்லி சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.
சாரங்கபாணி கோவில்
பெருமாள் வில்லுடன் இருக்கும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில்,பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், சார்ங்கபாணி என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது.
வேணுகோபாலசுவாமி கோயில்
குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார். சுமாா் 6 அடி உயரத்தில், இருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இருக்கரங்களில் புல்லாங்குழல் பற்றி, வலது திருப்பாதத்தை சற்றே மடித்து, ஒய்யாரமாகக் காட்சி தரும் ஶ்ரீவேணுகோபாலனின் எழிற் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்..மூங்கிலால் வேயப்பட்டதைப் போன்ற அழகிய புல்லாங்குழலில் வேணுகோபாலன் தன் விரல்களை லாவகமாக அதன் துளைகளில் பதித்து, கன்னங்கள் குவிய தன் திருப்பவளச் செவ்வாயால் குழலூதும் பேரழகுக் காட்சியைக் காண இரு கண்கள் போதாது.
வல்வில்ராமன் கோயில்
சயன கோலத்தில் ராமர் காட்சி தரும் திவ்ய தேசம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருப்புள்ளம்பூதங்குடி. மூலவர் வல்வில்ராமன். பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு என்னும் கழுகு, இராவணனை எதிர்த்து போரிட்டு உயிர் துறந்தது. சீதையைத் தேடிக் கொண்டு வந்த இராமபிரான், ஜடாயுவிற்கு இறுதிக் கடன்களைச் செய்தமையால் இத்தலம் 'புள்ளம்பூதங்குடி' (புள் - பறவை) என்று அழைக்கப்படுகிறது. இராமபிரான், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தபிறகு, சிரமப் பரிகாரத்திற்காக இத்தலத்தில் சயனித்திருந்ததால் 'சிரமப்பரிகார பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். அதனால் பெருமாளுக்கு அம்பு, வில் போன்ற ஆயுதங்கள் இல்லை.
கோபாலகிருஷ்ணன் கோயில்
தேவலோக பாரிஜாத பூச்செடி நடப்பட்ட திவ்ய தேசம்
சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூரின் 11 திவ்யதேசங்களில் ஒன்று திருக்காவளம்பாடி காவளம் என்றால் பூஞ்சோலை என்று அர்த்தம். மூலவர்:கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) பாமா, ருக்மணியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி, கிருஷ்ணனால் பூலோகத்தில் நடப்பட்ட இடம் தான் திருக்காவளம்பாடி