சின்னசெவலை காளி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சின்னசெவலை காளி கோவில்

கம்பர் வழிபட்ட காளி கோவில்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் என்ற தேவார தலத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சின்னசெவலை என்ற கிராமம். இக்கிராமத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காளி கோவில். இக்கோவில் திருவெண்ணெய்நல்லூர், சின்னசெவலை கிராம எல்லையில் வயல்களின் நடுவில் அமைந்துள்ளது.

அன்னை காளி நான்கரை அடி உயரம் கொண்டு, நின்ற கோலத்தில் எட்டு கரங்களோடு பலகைக் கல்லில் உருவான புடைப்பு சிற்பமாக காட்சி தருகிறாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த காளிதேவியை சுற்றி விநாயகர், முருகன் சந்நிதிகள், இரு நாகப்புற்றுகள் அமைந்துள்ளன. பொதுவாக காளி, துர்க்கை ஆகிய தெய்வங்கள் வடக்கு நோக்கி காட்சி தருவதே வழக்கம். ஆனால், இத்தலத்து காளி கிழக்கு முகமாய் திருவெண்ணெய்நல்லூர் தலத்தை நோக்கியபடி காட்சி தருகிறாள்.

கம்பர் பிறந்த ஊர் சோழநாட்டின் திருவழுந்தூர் என்றாலும், சோழ மன்னர் ஆதரிக்காத நிலையில் நடுநாடு வந்த கம்பரை ஆதரித்து அரவணைத்தவர்.

திருவெண்ணைநல்லூர் கிராமத்தை சேர்ந்த சடையப்ப வள்ளல். சடையப்ப வள்ளல் தினமும் அதிகாலையில் எழுந்து தனது வயல்வெளிகளைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அப்போது வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ள காளிகாம்பாளை வழிபடுவார். ஒரு நாள் சடையப்ப வள்ளலும், கம்பரும் இந்த காளியை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, வால்மீகியால் எழுதப்பட்ட ராமரின் கதையை தமிழில் எழுதும்படி கம்பரை, சடையப்ப வள்ளல் கேட்டுள்ளார். அப்போது 'ஸ்ரீமத் நாராயணனுடைய அவதாரமாகிய ராமபிரானின் சரித்திரத்தை, அவரது தங்கையான இந்த காளியினுடைய ஆலயத்தில் இப்போதே பூஜை போட்டு தொடங்கி வையுங்கள்' என்று சடையப்ப வள்ளலைக் கம்பர் கேட்டாராம். இதனைத் தொடர்ந்து சடையப்ப வள்ளல் முன்னாலேயே ராமாயண காப்பியத்தை எழுத ஆரம்பித்துள்ளார் கம்பர் என்று புராணங்களில் கூறப்படுகிறது. கம்பரின் எழுத்தாற்றலுக்கு பேருதவி புரிந்த தெய்வமாகவும், விருப்பமான வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள் அன்னை காளி. இவள் அளித்த ஞானத்தாலேயே கம்பரும் ராமாயணத்தை இயற்றினார்.

கம்பர் வழிபட்ட காளி கோவில் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து செல்கின்றனர். இக்கோவில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

Read More
தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

வெண்கல சத்தம் எழுப்பும், காந்தக் கல்லாலான சோடச லிங்கம்

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தென்பொன்பரப்பி என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் சொர்ணபுரீசுவரர். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ஒரு காலத்தில் இந்த ஊரில் செல்வம் கொழித்து, பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால், இந்த ஊருக்கு பொன்பரப்பி என்று பெயர் ஏற்பட்டது. இதனால் தான், இத்தலத்து இறைவனுக்கு சொர்ணபுரீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இத்தலத்து இறைவன், சித்தர்களின் தலைமை குருவாகக் கருதப்படும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீகாகபுஜண்டர் சிவதரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டதாகவும், அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களை கொண்ட சோடச லிங்கமாக காட்சி தந்ததாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்து சிவலிங்கத் திருமேனி, காந்தத் தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கமாகும். சுமார் 5.5 அடி உயரத்திற்கு விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. பல சிவாலயங்களில் சோடச லிங்கம் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்.

தன்னை வணங்கும் பக்தர்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்ற பொருளிலேயே இங்குள்ள இறைவன் சோடச லிங்கமாக காட்சிதருகிறார்.

சொர்ணபுரீஸ்வரரின் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ள காந்தக்கல்லானது, நவபாஷாணத்திற்கு ஒப்பானதாகும். இந்த கல்லை கைகளினால் தட்டிப் பார்த்தால் வெண்கலச் சத்தம் எழுவதும், இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இந்த கோயிலானது வாயு தலத்திற்கு இணையானதாக இருப்பதால், இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபமானது, துடித்துக் கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டரின் நாடிச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.

பிரதோஷ வழிபாடு, தேன் அபிஷேக மகிமைகள்

திருமணத்தடையின் காரணமாக நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், 16 பிரதோஷ தினங்களில் தொடர்ந்து ஈசனை தரிசித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திரதோஷம் உள்ளவர்கள் மற்றும் பலவித கிரக தோஷங்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மனபாரம் உள்ளவர்கள், நிலத்தகராறு, பில்லிசூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சொர்ணபுரீஸ்வரரை தொடர்ந்து பிரதோஷ காலங்களில் வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு, கைவிட்டுப் போன சொத்துக்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தேன் அபிஷேகம் செய்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

செவ்வாய், வெள்ளி ஞாயிறு, ராகு காலங்களும் மற்றும் திங்கட்கிழமை, பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களும், தேன் அபிஷேகம் செய்ய உகந்த நாட்களாகும். தோஷமுடையவர்கள் தேன் அபிஷேகம் செய்த தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

Read More
தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

இளம் கன்றாகத் தோற்றமளிக்கும் பால நந்தீசுவரர்

பால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாகும் அதிசயம்

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தென்பொன்பரப்பி என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் சொர்ணபுரீசுவரர். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இத்தலத்து இறைவன் ஸ்ரீகாகஜண்ட சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீகாகபுஜண்ட சித்தருக்கு பிரதோஷ காலத்தில் இறைவன் காட்சி கொடுத்ததால், இவ்வாலயம் பிரதோஷ ஆலயமாக அமையப் பெற்றுள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள நந்தியானவர், மிகவும் இளைய கன்றுக்குட்டியின் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், முகமோ அல்லது தலையோ ஏதேனும் ஒரு பக்கமாக சாய்ந்தது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இங்குள்ள நந்தியானது, இளங்கன்றாக இருப்பதால் இவருக்கு பால நந்தி என்று பெயர். இவர் பால நந்தியாக இருப்பதால், பிரதோஷ காலங்களில் கொம்புகள் இடையூறின்றி நேரடியாக நாம் சொர்ணபுரீசுவரரை தரிசிக்க முடியும்.

ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குளி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கரப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவது ஒரு அற்புதமான காட்சியாகும்.

இங்குள்ள பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால், நீலநிறமாக மாறிக் காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை:

விவசாயம் செழிக்கவும், கடன் தொல்லை நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், ராகு கேது உள்ளவர்கள், களத்திரதோஷம், கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று ராகு கால வேளையில் பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

Read More
நாகந்தூர்  பட்டாபிராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாகந்தூர் பட்டாபிராமர் கோவில்

ராமர் தங்கிய ஊர்களில், அவர் மிகவும் விரும்பிய இடம்

இராமர், லட்சுமணன் வில்லில் மணி கட்டியிருக்கும் அரிய காட்சி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி. மீ., தூரத்தில், நாகந்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பட்டாபிராமர் கோவில் .இராமர் ராவண வதத்தை முடித்துக் கொண்டு சீதா தேவியுடன் அயோத்திக்கு திரும்புகையில் பல இடங்களில் தங்கி பயணித்தார். அப்படி அவர்கள் தங்கிய ஊர்களில் இத்தலமும் ஒன்று. இங்கு தங்கி இருந்தபோது, இத்தலத்தின் இயற்கை அழகில் ராமர் மிகவும் மனம் லயித்து போனார். .சீதா தேவியிடம், தங்கிய இடங்களிலே 'நான் உகந்த ஊர்’ இது என்றார். ராமர் குறிப்பிட்டதே பின்னாளில் .நாகந்தூர் என மாறியது. மேலும் இக்கோவில் கருவறையில் ராமர் அயோத்தியில் பட்டாபிஷேகத்தின் போது எந்த வகையில் காட்சி தந்தாரோ, அதே நிலையில் இங்கும் காட்சி தருகிறார். மேலும், வேறெங்கும் இல்லாதவாறு இராமர், லட்சுமணன் வில்லில் மணி வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும்.

பிரார்த்தனை

இக்கோவிலின் முக்கிய சிறப்பாக இருப்பது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட்டால், ஓரிரு வாரங்களிலேயே அவர்களது கிரக தோஷம் விலகுகிறது. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரும், இக்கோவிலில் வழிபட்டால் முன்னேற்றம் காணலாம்.

Read More
மரக்காணம் வரதராஜப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மரக்காணம் வரதராஜப் பெருமாள் கோவில்

திருமண தடை நீக்கும் ஶ்ரீவரதராஜப் பெருமாள் - ஶ்ரீபெருந்தேவித் தாயார்

சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இத்தலத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி தாயார், பூதேவி தாயார் சமேதராக காட்சி அளிக்கிறார். தாயார் திருநாமம் ஶ்ரீபெருந்தேவி.

திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை பயபக்தியுடன் வேண்டி வணங்கினால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளிலும், உத்திர நட்சத்திர நாள்களிலும் ஶ்ரீபெருந்தேவித் தாயாரை மனமுருக அா்ச்சனை செய்து பிராா்த்தித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல் திருமணம் நடந்த பின்னர் கணவன்மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து இருந்தாலும் அவர்கள் இங்கு வந்து பூஜை செய்து வணங்கினால், பிரச்னைகள் அனைத்தும் உடனடியாக தீர்ந்து மீண்டும் சமாதானம் அடைவார்கள்.

மழலைப் பேறு அருளும் நவநீதகிருஷ்ணன்

திருமணமாகி நீண்ட நாள் மழலைப் பேறு வாய்க்காத மங்கையருக்கு இத்தலத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுகின்றது. இக்கோவிலில் சுமார் ஆறு அங்குலம் அளவுள்ள நவநீதகிருஷ்ணன் விக்கிரகம் உள்ளது. மழலைப் பேறு வேண்டும் மங்கையா், கோவில் அா்ச்சகாிடம் இந்த விக்ரகத்தைப் பெற்று தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து சுவாமிக்கு அா்ச்சனை செய்து வழிபட்ட பின்னா் அா்ச்சகாிடம் மீண்டும் இந்த விக்ரகத்தை ஒப்படைக்கின்றனா். இந்த பிராா்த்தனையின் பலனாக பலருக்கு, மழலைப் பேறு ஏற்பட்டிருக்கின்றது.

Read More
அன்னியூர் இராமநாதீசுவரர் கோவில்

அன்னியூர் இராமநாதீசுவரர் கோவில்

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்

விழுப்புரத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அன்னியூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது இராமநாதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.

பொதுவாக சிவாலயங்களில் சனி பகவான், நவக் கிரகங்களோடு சேர்ந்தோ அல்லது தனிச் சன்னதியிலோ காக்கை வாகனத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிவார். ஆனால் இத்தலத்தில் நவகிரகங்களோடு எழுந்தருளி இருக்கும் சங்கடம் தீர்க்கும் சனி பகவான் சற்று வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் தனது வாகனமான காக்கையின் மீது வலது காலை ஊன்றி எழுந்து புறப்படும் கோலத்தில் அருளுகிறார். அதாவது தன்னை சரணடைந்து, வேண்டி அழைக்கும் பக்தர்களுக்கு உடனே புறப்பட்டு வந்து உதவத் தயாராக இருக்கிறேன்' என்பதே அந்த திருக்கோலத்தின் அடையாளம். சனிபகவானின் இந்த அற்புதமான கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிப்பது அரிது.

Read More
கல்பட்டு சனீஸ்வரன் கோவில்

கல்பட்டு சனீஸ்வரன் கோவில்

21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் சனி பகவான்

விழுப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் கல்பட்டு என்ற ஊரில் அமைந்துள்ள தனிக்கோவிலில், மூலவராக சனி பகவான், வேறெங்கும் இல்லாத வண்ணம் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். நான்கு திருக்கரத்துடன், கரங்களில் சூலம், கத்தி, வில் மற்றும் அம்பு தாங்கி, வலது காலை காகத்தின் மீது ஊன்றி நின்ற வண்ணம் காட்சி தருகிறார். மேலும் இவர் யோகநிலையில் இருப்பது இன்னும் சிறப்பான விஷேசமாகும்.

சனி பகவானின் வலது காலில் உள்ள ஊனத்தால் அவரால் வேகமாக நடக்க இயலாது எனவே தான் மந்தன் என்ற திருநாமம் கொண்டார். இதை உணர்த்தும் வகையில் வலது கால் சற்று சிறியதாகவும் இடக்கால் நீண்டு இருக்கும் வண்ணம் மூலவர் விக்கிரகம் அமைந்துள்ளது.

ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

மாசி அமாவாசை மயானக் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்கு திசையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு பல ஆலயங்கள் உள்ளன என்றாலும், அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். இக்கோவிலில் மாசி மாத அமாவாசையன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்தி பெற்றது. மயானக் கொள்ளை விழா நடக்கும்போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்பணிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.

மயானக் கொள்ளை விழா உருவான பின்னணி வரலாறு

பிரம்மன் தனக்கு ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் அகந்தை கொண்டான். எனவே பிரம்மனின் ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவபெருமான். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவபெருமானே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள, அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரம்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரம்ம கபாலம் விழுங்கிவிடும்.

பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த பரமேஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி பரமேஸ்வரி,பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் மேல்மலையனூரில், மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.வந்து அமர்ந்தாள் . மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவபெருமானுக்கு உணவு சமைத்தாள். பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூறையாக வீசினாள். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.

ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் உணவை சூரை இடும் நாளே 'மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை, விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு. அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்ட மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றால் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

பிரார்த்தனை

கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

Read More
பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்

பத்ம பீடத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கையின் அபூர்வ கோலம்

விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருநாமம் திருமூலநாதர் . இறைவியின் திருநாமம் அபிராமி அம்மை.

கி.பி. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை, பராந்தகச் சோழன் கட்டியதாக கல்வவெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. மேலும் ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன், குலோத்துங்கன் ஆகியோரது கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகிறது. இக்கோவிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அதனால், இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ், மரபுச் சின்னமாக உள்ளது..

பொதுவாக சிவாலயங்களில் துர்கை அம்மன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற வண்ணம் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கை, மகிஷனற்று பத்ம பீடத்தில் நின்றவண்ணம், பின்னிரு கரங்களில் எறிநிலை சக்கரமும், சங்குமேந்தி முன்னிடக்கரம் தொடையிலிருத்தி வலது கரத்தில் அருள் புரியும் கோலத்தில் காட்சி தருகிறாள். இது விஷ்ணு துர்க்கையின் ஓர் அபூர்வ தோற்றமாகும்

Read More
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில்

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில்

ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்

விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநாவலூர். இறைவன் திருநாமம் பக்தஜனேஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி அம்மை.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி ஆல மரத்தின் கீழ், அமர்ந்த நிலையில்தான் காட்சிகொடுப்பார். கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக விளங்குவதால் குருதட்சிணாமூர்த்தி என்று அழைக்கபடுவார். மேலும் படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமாரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் ஞானம் போதிக்கும் நிலையில், சின் முத்திரை தரித்த கோலத்தில் அவர் காட்சி கொடுப்பார்.

ஆனால், இக்கோவில் சன்னதியில் கோஷ்ட மூர்த்தியாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் ரிஷபத்தின் முன் நின்ற கோலத்தில், வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு அதிசயத்தக்கது. வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாதது.

சுந்தரர் பூராட நட்சத்திரத்தில் இங்கே இருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றுகொண்டார் என சொல்லப்படுகிறது. இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். எனவே இவரை பூராட நட்சத்திர அன்பர்கள் வழிபட்டால், அவர்களுக்கு நன்மை உண்டாகும்.

Read More
பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்
விநாயகர், vinayakar, Vinayagar Alaya Thuligal விநாயகர், vinayakar, Vinayagar Alaya Thuligal

பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்

மான், மழு ஏந்திய விநாயகர்

விழுப்புரம் - திருச்சி செல்லும் சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது திருமூலநாதர் கோவில். இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. இக்கோவிலின் அர்த்த மண்டப தென்புறக் கோட்டத்தில், தன் திருக்கரங்களில் மான், மழு ஏந்தியபடி தலை ஒருபுறமாக திரும்பிப் பார்க்கும் கோலத்தில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக மான், மழு ஏந்தியபடி சிவபெருமான்தான் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு மான், மழு ஏந்தியபடி விநாயகர் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும். அதேபோல் தட்சிணாமூர்த்தி பகவான் வலது காலை தொங்க விட்டும், இடது காலை வலது காலின் மீது தூக்கி வைத்தும் , சின்முத்திரை காட்டியபடி, சற்றுச் சாய்வாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இவரது இந்தக் கோலம் தனிச் சிறப்புடையதாகும்.

கருவறையின் மேற்குப் பக்க சுவரில் ஒரு அளவு கோல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 365 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த அளவையானது, சோழர்களின் ஆட்சி காலத்தில் நில அளவைக்காகப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. கோவிலில், முதலாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதி ராஜன், குலோத்துங்கன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக ராஜராஜனின் அண்ணனான ஆதித்த கரிகாலனின் கல்வெட்டும் இங்குள்ளது, அரிய தகவலாகும்.

Read More
எமதண்டீஸ்வர சுவாமி  கோவில்

எமதண்டீஸ்வர சுவாமி கோவில்

பிரதோஷ நாளில் மூச்சு விடும் நந்தி

திண்டிவனம்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.

இக்கோவிலில், மூலவரான எமதண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். செவ்வக வடிவ ஆவூடையாரில், இங்கு மூலவராக ஈசன் எழுந்தருளியிருப்பது அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. மூலவர் கருவறையினுள்ளே, பூசனைகள் செய்யும் போது, யாரோ நீரினுள்ளிருந்து வித்தியாசமான மூச்சு விடும் ஒலியைப் போல, ஓர் ஒலியை மக்கள் கேட்டுள்ளார்கள்.

பிரதோஷ நாளில் இக்கோவில் நந்தி விடும் மூச்சுக் காற்றுக் கேட்பதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள். அதை நீருபிக்கும் விதமாக நந்தியின் நாசித துவாரங்கள் அமைந்திருப்பதை

அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பிரதோஷ அபிஷேகத்தின்போது காற்றுக் குமிழ்கள் நந்தியின் நாசித் துவாரத்திலிருந்து வெளியேறுவதையும் குறிப்பிடுகிறார்கள்.

இந்தத் தலத்தில் திருமணம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இது தவிர சஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், போன்றவை இங்குச் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.

இத்தலத்து சிவன் கால அனுக்கிரக மூர்த்தி ஆதலால் காலசர்ப்ப பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.

Read More
எமதண்டீஸ்வர சுவாமி  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

எமதண்டீஸ்வர சுவாமி கோவில்

தினம் தினம் தன் முக பாவனையை மாற்றிக் கொள்ளும் திரிபுரசுந்தரி அம்மன்

விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டம், ஆலகிராமம் கிராமத்தில் அமைந்துள்ளது எமதண்டீஸ்வர சுவாமி கோவில். இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம்- விழுப்புரம் இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், தெற்கு நோக்கிய கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சி தருகிறார். இந்த அம்மன் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருவது வியப்புக்குரிய அம்சமாகும். திரிபுரசுந்தரி அம்மன் வாரத்தில் ஏழு தினங்களிலும் ஏழு விதமான முகபாவங்களோடு காட்சி கொடுப்பார். இவ்வாலய அம்பாள் ஞாயிற்றுக்கிழமை குழந்தை முகம் கொண்டும், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் புன்சிரிப்புடனும், செவ்வாய், புதன்கிழமைகளில் கோப முகத்துடனும், வியாழன், சனிக்கிழமைகளில் யோக, தியான நிலையிலும் காட்சிதருவது சிறப்பு. ஏழு வாரங்கள் அவரவர் ராசிக்கேற்ற வண்ணத்துணிகளில் நெய்தீபமேற்றி, அம்பாளை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

Read More
சந்திரமவுலீஸ்வரர் கோவில்
Amman, அம்மன் Alaya Thuligal Amman, அம்மன் Alaya Thuligal

சந்திரமவுலீஸ்வரர் கோவில்

திருவக்கரை வக்ரகாளியம்மன்

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது வக்ரகாளியம்மன் சந்நிதி.

பொதுவாக காளி கோவில், ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து, வித்தியாசமானதாக உள்ளது.

வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்டு பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் அணிந்திருக்கிறாள்.

காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள்.

வக்கிரகாளி தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள். அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றியபடியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும்.

வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜப் பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை, வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.

சம்காரம் பண்ணியதால் வக்ரகாளி ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் என்பது ஐதீகம்.

பவுர்ணமி இரவு, அமாவாசை நண்பகல் ஜோதி தரிசனம்

பவுர்ணமி இரவு 12 மணிக்கும் அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேஷம் ஆகும்.

Read More
வீரட்டேசுவரர் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

வீரட்டேசுவரர் கோவில்

அவ்வையாரை தன் தும்பிக்கையால் கைலாயத்திற்கு தூக்கிவிட்ட விநாயகர்

விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கோயிலூர். இறைவன் திருநாமம் வீரட்டேசுவரர். இறைவி பெரியநாயகி. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் பெரிய யானை கணபதி குறித்து தமிழ் மூதாட்டி அவ்வையார் சீதக் களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார்.

சுந்தரர், சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வையார் இந்த தலத்து விநாயகர் பெரிய யானை கணபதியை பூஜை செய்து கொண்டிருந்தார். .தானும் கயிலை செல்ல எண்ணி அவசரம், அவசரமாக பூஜை செய்தார்..உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் கபை எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி அவ்வையார் பூஜை செய்த பிறகு, விநாயகர் விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கைலாயத்தில் சேர்த்துவிட்டார். இவ்விநாயகர், விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.

Read More
பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்

நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ள தலம்

பொதுவாக நரசிம்மர் கோவிலில், உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால், விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி இருக்கிறார்கள்.இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால், பெருமாள் இங்கு மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.

Read More
பொய்யாமொழி பிள்ளையார் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

பொய்யாமொழி பிள்ளையார் கோவில்

லிங்கத்தில் காட்சி தரும் விநாயகர்

திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் உள்ள தலம் தீவனூர். இங்கு கோயில் கொண்டிருக்கும் பொய்யாமொழி பிள்ளையார் லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். அதனால் இவருக்கு கணபதி லிங்கம் என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர்களில் இவரும் ஒருவர.பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவருக்கு மூன்று வாகனங்கள் இருக்கின்றன. லிங்க ரூபத்தில் இருப்பதால் நந்தி ஒரு வாகனம், வழக்கமான மூஞ்சூறு இரண்டாவது வாகனமாகவும், யானை தலையர் என்பதால் யானை மூன்றாவது வாகனமாகவும் உள்ளன. விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வழிபடுகின்றனர். இத்தலத்தோடு தொடர்புடைய அதிசய நிகழ்ச்சிகள் ஏராளம். அவற்றில் சில

கொம்பு முளைத்த தேங்காய்

ஒருசமயம் இக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த பக்தர் ஒருவர், மரக்காணத்தில் இருந்த தென்னந்தோப்பில் பொய்யாமொழி பிள்ளையாருக்கு உடைக்க என்று ஒரு தேங்காய் கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த தோப்புக்காரர்கள் 'பிள்ளையாருக்குத் தேங்காய் கொடுக்காவிட்டால் அவற்றுக்கு என்ன கொம்பா முளைத்துவிடும்' என்று பரிகாசம் செய்து அனுப்பிவிட்டனர். மறுநாளே தோப்பில் இருந்த எல்லாத் தேங்காய்களுக்கும் தும்பிக்கை போன்ற கொம்பு நிஜமாகவே முளைத்துவிட்டதாம். இதனால் பயந்துபோன தோப்பின் சொந்தக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வேண்டி வணங்கித் தேங்காய்களை வழிபாட்டுக்குக் கொடுத்தார்களாம். கொம்பு முளைத்த தேங்காய்களில் ஒரு குலை இன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது.

மிளகு உளுந்தாகிய அதிசயம்

மிளகு வணிகர் ஒருவர், பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இக்கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில் நிர்வாகிகள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், 'மூட்டையில் உளுந்துதான் இருக்கிறது. என்னிடம் மிளகு இல்லை' என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னபடியே மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாகி விட்டது.

Read More