பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்

மான், மழு ஏந்திய விநாயகர்

விழுப்புரம் - திருச்சி செல்லும் சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது திருமூலநாதர் கோவில். இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. இக்கோவிலின் அர்த்த மண்டப தென்புறக் கோட்டத்தில், தன் திருக்கரங்களில் மான், மழு ஏந்தியபடி தலை ஒருபுறமாக திரும்பிப் பார்க்கும் கோலத்தில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக மான், மழு ஏந்தியபடி சிவபெருமான்தான் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு மான், மழு ஏந்தியபடி விநாயகர் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும். அதேபோல் தட்சிணாமூர்த்தி பகவான் வலது காலை தொங்க விட்டும், இடது காலை வலது காலின் மீது தூக்கி வைத்தும் , சின்முத்திரை காட்டியபடி, சற்றுச் சாய்வாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இவரது இந்தக் கோலம் தனிச் சிறப்புடையதாகும்.

கருவறையின் மேற்குப் பக்க சுவரில் ஒரு அளவு கோல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 365 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த அளவையானது, சோழர்களின் ஆட்சி காலத்தில் நில அளவைக்காகப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. கோவிலில், முதலாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதி ராஜன், குலோத்துங்கன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக ராஜராஜனின் அண்ணனான ஆதித்த கரிகாலனின் கல்வெட்டும் இங்குள்ளது, அரிய தகவலாகும்.

 
Previous
Previous

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

Next
Next

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்