திருவண்ணாமலை: அருணாச்சலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை: அருணாச்சலேசுவரர் கோவில்

மரண பயத்தை போக்கும் காலபைரவர்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் காலபைரவர் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த காலபைரவர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி கபால மாலைடன் காட்சி அளிக்கிறார். சிவபெருமானின் 64 திருமேனிகளுள் ஒருவரான பைரவர், சனி பகவானின் குருவாகவும், 12 ராசிகள், 8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் மற்றும் காலத்தையும் கட்டுப்படுத்துபவராக விளங்குபவர்.

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு செய்யப்படும் பூஜைகள் சிறப்பு வாய்ந்தது என்றாலும், செவ்வாய்கிழமை வருகிற அஷ்டமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காலபைரவருக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, சந்தனம், தேன், விபூதி, இளநீர் உள்ளிட்டவைகளை கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து காலபைரவருக்கு வடைமாலை மற்றும் முந்திரி மாலை அணிவிக்கப்படும்

தேய்பிறை அஷ்டமி அபிஷேகத்தின் போது கால பைரவரின் பாதத்தில் வைத்த பச்சையை கட்டினால் கண் திருஷ்டி விலகும், எதிரிகளால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாக்கும், பைரவர் ரட்சை அணியும் மக்களுக்கு செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். காலபைரவருக்கு பக்தர்கள் பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றியும், தேங்காய் மூடியில் விளக்கேற்றியும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு மரண பயத்தை போக்கும். ஆபத்திலிருந்து காக்கும், தீராத நோய், கடன் தீர்க்கும்.

Read More
திருவண்ணாமலை  பூதநாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில்

பால பருவத்து கிருஷ்ணன், பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் அபூர்வ தோற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ளது பூதநாராயணப் பெருமாள் கோவில். கருவறையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் பால பருவத்து கிருஷ்ணராக இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்திருப்பது தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

வாசுதேவர், தேவகிக்கு எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். அக்குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கம்சன் அதனைக் கொல்லப் பல வழிகளில் முயற்சித்தான். பூதகி எனும் அரக்கியை அழைத்து, குழந்தையை கொல்லுமாறு கட்டளையிட்டான். அதன்படி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பூதகி கிருஷ்ணனைத் தனியாக அழைத்துப் பாலூட்டினாள். வந்திருப்பது யாரென்பதை அறிந்து கொண்ட மாயக்கண்ணன் பூதகியின் விஷப்பாலை அருந்துவது போல் பாவித்து, அவளைக் கொன்றான். பின்பொரு சமயம் அரக்கியை வதஞ்செய்த கிருஷ்ணாவதாரக் கோலத்தைத் தனக்கு காட்டியருளுமாறு பிருகு முனிவர், திருமாலிடம் வேண்டினார். அவ்வேண்டுதளுக்குச் செவி சாய்த்து, திருமால் திருவண்ணாமலையில் பூதநாரயணப் பெருமாளாகக் காட்சியளித்து அர்ச்சாரூபமாய் எழுந்தருளினார். காலமாற்றத்தால் அப்பெருமாளை மணல் மூடிற்று. வெகு நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு முனிவரின் கனவில் திருமால் தோன்றி, அருகில் உள்ள மணல் புற்றை முழுவதுமாக அகற்றுகையில், திருமாலின் அர்ச்சாரூபம் அங்கு உள்ளதைக் கண்டு, அதை கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து வணங்கி வரலாயினர்

பிரார்த்தனை

இந்த ஆலய இறைவனை வேண்டிக்கொண்டால், அறிவும், ஞானமும் கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு உள்ள தீராத நோய், கண் திருஷ்டி போன்றவை அகலும். குணமுள்ள குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

அருணாசலேசுவரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திருவிழா

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று, திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதாக ஐதீகம். எனவேதான் எல்லா வைணவத் தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல், அன்று அனைத்து வைணவத் தலங்களிலும் திறக்கப்படும்.

பஞ்சபூத சிவாலயங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடத்தப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறப்புக்குரிய சாவியை, கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமிகள் சன்னதியில் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்துவார்கள். பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிறகு அந்த சாவி மேளம் தாளம் முழுங்க எடுத்து வரப்படும். அந்த சாவியை கொண்டு சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பியபடி சொர்க்கவாசலை கடந்து செல்வார்கள்.

தமிழ்நாட்டில், அருணாசலேசுவரர் கோவில் தவிர வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய சொர்க்க வாசல் திறப்பு திருவிழா நடப்பதில்லை.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை கோவிலின் சிறப்புகள்

திருவண்ணாமலைக் கோவில், மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று. இறைவன் திருநாமம் அருணாசலேசுவரர். இறைவியின் திருநாமம் உண்ணாமுலையாள். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மலையே சிவலிங்கமாக உள்ளது எனபது நம்பிக்கை.'அருணம்' என்றால் 'சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு'. 'அசலம்' என்றால் 'மலை'. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு 'அருணாச்சலம்' என்று பெயர் ஏற்பட்டது. பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாகும். இக்கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் நாம் காணலாம்.

பார்வதிக்கு சிவபெருமான் தன் இடப்பாகம் அளித்த தலம்

சிவனை நோக்கி தவமிருந்த பார்வதிக்கு தன் இடப்பாகம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய், கருவறையின் பின் புறம் அமர்ந்தார்.

நினைத்தாலே முக்தி தரும் தலம்

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. முதலில் குறிப்பிட்ட நான்கு தலங்களின் மூலம் முக்தி அடைவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பதால், அது எல்லோருக்கும் சாத்தியப்படும் ஒன்றாகும்.

திருவெம்பாவை, திருப்புகழ் போன்ற பக்தி நூல்கள் இயற்றப்பட்ட தலம்

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

பழமையான மலை

திருவண்ணாமலையில் இருக்கும் மலை 260 கோடி ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இந்த மலையானது கிருதா யுகத்தில் நெருப்பு மலையாக இருந்தது, திரேதா யுகத்தில் மாணிக்க மலையாக இருந்தது, துவாபர யுகத்தில் தங்க மலையாக இருந்தது. தற்போது கலி யுகத்தில் கல் மலையாக இருக்கின்றது என்பது சைவர்களின் நம்பிக்கை. மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில், பால் பிரண்டன் எனும் பிரிட்டனைச் சேர்ந்த தத்துவஞானி மற்றும் ஆய்வாளார் 'லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலையின் அமைப்பு

திருவண்ணாமலையை கீழ்த்திசையிலிருந்து பார்த்தால் ஏக மலையாகத் (ஒன்றாக) தெரியும். மலை சுற்றும் வழியில் நின்று பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்த நாரீஸ்வர தத்துவத்தைக் குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன், பிரம்மா, திருமால் மூவரையும் குறிக்கும்.

கோவில் அமைப்பு

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இவ்வாலயத்தின் ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை உள்ளன. திருவண்ணாமலை ராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது.

பௌர்ணமி கிரிவலம்

சித்தர்களில் ஆதிசித்தனாகிய சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் சித்தர்கள் அருவமாக வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு பௌர்ணமி இரவன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது கிபி 1240ல் இங்கு கிரிவலம் செல்ல ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்து பணி செய்தார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து, அண்ணாமலையரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து வணங்குபவர்களுக்கு குல சாபங்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா

ஆடிப்பூரத்தன்று மாலை. ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.

திட்டிவாசல் வழியே வெளிவரும் உற்சவமூர்த்திகள்

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவரும் நடைமுறை இவ்வாலயத்தில் மட்டும்தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

திருவண்ணாமலை மகா தீபம்

திருவண்ணாமலையில் பத்துநாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். சிவனுக்குரிய மகா தீப விழாவை உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. பத்தாம் நாள் திருவண்ணாமலை மீது ஏற்றும் தீபம், மகா தீபமாகும். திருவண்ணாமலை கார்த்திகை தீப நாள் அன்று அதிகாலை 4 மணி அளவில் மலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றும் விழா நடைபெறும். மகா தீபம் ஏற்ற 3000 கிலோ பசு நெய், 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடாத்துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும். இந்த தீபத்தின் ஒளியை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாழும் மக்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவானவன், அவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதை இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம் ஆகும். இந்த கார்த்திகை தீப தரிசனத்தை காண்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும், அண்ணாமலையார் மற்றும் இங்கு அருவமாக வாழும் சித்தர்களின் ஆசிகளால் நிறைவேறும்.

அண்ணாமலை மகா தீப தரிசன பலன்

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும், தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும் அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.

மகா தீபத்தை தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கீடா: பதங்கா: மச காச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா த்ருஷ்ட் வா ப்ரதீபம் நச ஜன்ம பாகின. பவந்தி நித்யம் ச்வ பசா ஹி விப்ரா

இந்த மகாதீப ஒளிக்காட்சியைக் காணும் மக்கள் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

பங்குனி உத்திரத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும் அதிசயம்!

பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தெய்வத் திருமணங்களை கண்டு வழிபட்டால், நமது திருமண வாழ்க்கை இனிமை நிறைந்ததாக மாறும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

பொதுவாக பங்குனி உத்திரம் தினத்தன்று ஒவ்வொரு கோவிலிலும் ஒரே ஒரு தடவைதான், அதுவும் உற்சவருக்குத்தான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் பங்குனி உத்திரம் தினத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு உற்சவரான பெரிய நாயகருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே பின்பற்றப்படும் அதிசயமான நடைமுறையாகும். தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவதில்லை. குறிப்பாக மூலவருக்கு எந்த ஆலயத்திலும் திருக்கல்யாணம் நடத்த மாட்டார்கள்.

பொதுவாக எல்லா கோவில்களிலும் பங்குனி உத்திர திருமண விழா ஒரே நாளில் நடந்து முடிந்து விடும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மொத்தம் ஆறு நாட்கள் இந்த திருமண விழா நடைபெறும். நமது கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து திருமண சடங்குகளும் செய்யப்படும். மாலை மாற்றுவது, நலங்கு வைப்பது, பூப்பந்து வீசி விளையாடுவது, மரு வீட்டுக்கு செல்வது, மீண்டும் தாய் வீட்டில் இருந்து வருவது, நலங்கு ஊஞ்சல் உற்சவம், பாலிகை விடுதல் என்று முழுமையான திருமண விழாவாக அந்த அண்ணாமலையார் கல்யாண உற்சவம் நடைபெறும்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

வள்ளாள மகாராஜாவிற்கு 680 ஆண்டுகளாக திதி கொடுத்து வரும் அண்ணாமலையார்

ஹொய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னன் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா ( கி.பி.1291-1343) . நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாளன் சிறந்த சிவபக்தர். அண்ணாமலையார் ஆலயத்துக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுரத்தை தனது ஆட்சிக்காலத்தில் நிர்மாணித்தார். கி.பி 16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அருணாச்சல புராணத்தில் இவரது சரித்திரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வள்ளாள மகாராஜாவிற்கு ஒரு பெரிய மனக்குறை இருந்தது. தான் கொஞ்சி மகிழவும், தனக்குப் பின் நாட்டை ஆளவும் ஒரு வாரிசு இல்லையே என்பதுதான் அது. ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அண்ணாமலையார், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சடங்குகளை செய்வேன் என்றார்.

கி.பி.1343ம் ஆண்டு தைப்பூசத்தன்று அண்ணாமலையார், திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோயிலுக்கு திரும்பிச் செல்லும் போது, பள்ளிகொண்டாபட்டு போர்க்களத்தில் வள்ளாள மகாராஜா வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு அண்ணாமலையார் மேளதாளங்கள் இன்றி, அமைதியாக கிரியை நடக்கும் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்குச் சென்று சடங்குகளை செய்து முடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை, அண்ணாமலையார், ஒவ்வொரு ஆண்டும் மகாராஜா உயிர் நீத்த 30ம் நாளான மாசி மகம் தினத்தன்று பள்ளிகொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.

மாசிமகத்தன்று, அண்ணாமலையார் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்கு வருவார். அங்கு வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு 'சம்மந்தனூர்' என்ற பெயர் ஏற்பட்டது.

அரசனுக்குப் பிறகு இளவரசன் பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற மரபின்படி மறுநாள் அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையாருக்கு அரசராக முடி சூட்டப்படும் விழா நடத்தப்படடும்.

உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது.

Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் திருவூடல் திருவிழா முதல், மறுநாள் நடைபெறும் மறுவூடல் திருவிழா வரை காணும் தம்பதியர்களின் வாழ்வில் பிரச்சனைகள் வராது. குடும்ப ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால்தான் 'திருவூடல் கண்டால் மறுவூடல்இல்லை? என்ற சொல் வழக்கில் வந்தது.

பிருங்கி முனிவர் என்பவர் தீவிர பக்தர். சிவபெருமானைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டார். ஒருமுறை சிவபெருமானை வழிபடுவதற்காக பிருங்கி முனிவர் கைலாயத்திற்கு சென்றார்.அப்போது சிவபெருமானின் அருகில் பார்வதியும் அமர்ந்து இருந்தார். இதைக்கண்ட பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் வணங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வண்டு வடிவம் எடுத்து, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையில் புகுந்து மூன்று முறை சிவனை மட்டும் வலம் வந்தார். இதைக் கண்டு கோபமுற்ற பார்வதி தேவி என்னை கண்டு வணங்க பிரியமில்லாத உனக்கு, உடல் இயக்கத்திற்கு தேவையான, நான் அளிக்கும் சக்தி மட்டும் எதற்கு? அதை என்னிடம் திருப்பி கொடுத்துவிடு என்றார். பிருங்கி முனிவரும் தன் உடல் சக்தியை பார்வதி தேவியிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். சக்தி இழந்து நின்ற பிருங்கி முனிவரிடம் சிவபெருமான், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் தனக்கு மோட்சத்தை அருளுமாறு வேண்டினார்.

சிவபெருமான் அந்த வரத்தை பிருங்கி முனிவருக்கு கொடுக்க முற்பட்டபோது, பார்வதிதேவி அதனை தடுத்தார். ஆனால் சிவபெருமான் பிருங்கி முனிவருக்கு வரத்தை அளிக்க எண்ணினார். இதனால் சிவபெருமான் மீது பார்வதிதேவிக்கு ஊடல் ஏற்பட்டது. அதனால் அவர் சிவபெருமானைப் பிரிந்து ஆலயத்துக்குள் வந்து கதவை பூட்டிக் கொண்டார். சிவபெருமான் முதலில் பக்தனுக்கு வரத்தை அளித்துவிட்டு பின்னர் பார்வதி தேவியை சமாதானம் செய்யலாம் என்று எண்ணினார்.அதன்படி அன்றிரவு ஓரிடத்தில் தனியாக தங்கிய சிவபெருமான் மறுநாள் காலையில் பிருங்கி முனிவருக்கு வரத்தை அளித்தார். பின்னர் மாலையில் பார்வதிதேவியை சந்தித்து அவரது ஊடலை போக்கினார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் மாட்டுப்பொங்கலன்று திருவூடல் திருவிழா என்று நடத்தப்படுகிறது.

அன்று காலை இறைவனும், இறைவியும் மாடவீதிகளை மூன்று முறை வலம் வருவார் கள். அன்று மாலை திருவண்ணாமலை திருவூடல் தெருவில், சிவனும், பார்வ தியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படும். ஊடல் அதிகமானதும் அம்பாள் கோவிலுக்குள் சென்று விடுவார். அவரது சன்னிதி கதவுகள் மூடப்படும். இதையடுத்து அம்மனை, ஈசன் சமாதானம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அவர் சமாதானம் ஆகாததால் அண்ணாமலையார், அன்று இரவு அருகில் உள்ள குளன் கோவிலில் சென்று தங்குவார். மறுநாள் காலையில், அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது. ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே அண்ணாமலையார், தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் நடைபெறும். அதில் ஒன்று, திருவூடல் திருவிழா அன்று நடைபெறும் கிரிவலம் ஆகும். மாலையில் அண்ணாமலையார் ஆலயம் திரும்பி , அங்கு உண்ணாமுலையம்மனை சமரசம் செய்து ஊடலைத் தீர்த்தார். இறுதியில் அண்ணாமலையாரும். உண்ணாமுலையம்ம னும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இப்படி காட்சி தருவதை மறுவூடல்' என்பர்கள்,

கணவன் மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த திருவூடல் திருவிழா, வேறு எந்த சிவாலயத்திலும் வெகுவிமரிசையாக நடைபெறுவதில்லை.

Read More
அருணாசலேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

அருணாசலேசுவரர் கோவில்

யானைதிறைக் கொண்ட விநாயகர்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். கோபுரத்து இளையனார் சன்னதிக்கு அருகில் சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் யானைதிறைக் கொண்ட விநாயகர் அருள்பாலித்து வருகிறார். இவருக்கு இந்தப் பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.

ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.

அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.

Read More
அருணாசலேசுவரர் கோவில்

அருணாசலேசுவரர் கோவில்

செந்தூர விநாயகர்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் பல விநாயகர் சன்னதிகள அமைந்துள்ளன. அவற்றில் பிரதானமாக விளங்குபவர் சம்பந்த விநாயகர்.

இவர் கொடி மரம் அருகே தனிச் சந்நதியில் சுமார் 6 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. பொதுவாக ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எநத கோவிலிலும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

விநாயகருக்கு செந்தூரம் பூசுவதின் பின்னணிக் கதை

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அம்மளைக் கட்டுப்படுத்தி பலரையும் கொடுமை செய்தான்.

இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். அதை நினைவு படுத்தும் வகையில், சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இத்தல விநாயகருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்

Read More
இடுக்கு பிள்ளையார் கோவில்
விநாயகர் Alaya Thuligal விநாயகர் Alaya Thuligal

இடுக்கு பிள்ளையார் கோவில்

தவழ்ந்து சென்று தரிசிக்க வேண்டிய பிள்ளையார்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தை தாண்டியதும், வலது பக்கத்தில் இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது.

இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள், படுத்த நிலையில் ஊர்ந்தபடி உடலை குறுக்கி கொண்டுதான் நுழைந்து வெளியே வரமுடியும். கோயிலில் பின் வாசல் வழியாக ஒருக்களித்துப் படுத்தவாறு உள்ளே நுழைய வேண்டும். மெதுவாக கையை ஊன்றி நகர்ந்து நகர்ந்து முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இதனால் பெண்களுக்கு கர்ப்பபை கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும்.

இந்த இடுக்கு பிள்ளையாருக்குள் இடைக்காட்டு சித்தர் மூன்று யந்திரங்களை பதித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த யந்திரங்கள் தரும் அதிர்வு காரணமாகத்தான் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர.

Read More
அருணாசலேஸ்வரர் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

அருணாசலேஸ்வரர் கோவில்

விநாயகப் பெருமானி ன் முதல்படை வீடு

திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர்:

விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர், பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் கிழக்கு இராஜகோபுரத்திற்குள்ளேயே அல்லல்போம் விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த வினைதீர்க்கும் விநாயகர், தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இவர், நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து, நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம்.

Read More
அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்

பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக அவர்களிடம்,வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள். உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜகோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச்சொன்னான்.அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான். முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.

Read More
அருணாச்சலேஸ்வரர் கோயில்

அருணாச்சலேஸ்வரர் கோயில்

வீதி உலாவின் போது ராஜகோபுரத்தை தவிர்க்கும் இறைவன்

பொதுவாக ஆலயங்களில் வீதி உலா நடக்கும் பொழுது. சுவாமி ஆலயத்தின் பிரதான ராஜகோபுரத்தின் வழியாகத்தான் வெளியே வருவார். ஆனால் பஞ்சபூத தலங்களில், அக்னித் தலமான திருவண்ணாமலையில், சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார். இந்த நடைமுறை வேறு எந்த ஆலயங்களிலும் கடைடிக்கப்படுவதில்லை

Read More
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்

பெருமாள் பாதணிகள்

ஸ்ரீவில்லிப்புக்தூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள திருவண்ணாமலை என்னும் ஊரில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.இவர் ஆண்டாளை திருமணம் செய்வதற்காக திருப்பதியிலிருந்து வந்து இங்கு எழுந்தருளியிருக்கிறார்.இவர் திருப்பதி பெருமாள் போலவே தோற்றமளிக்கிறார்.

இப்பெருமாளுக்கு நேர்த்திக் கடனாக மிகப் பெரிய தோல் பாதணிகள் செய்து வந்து கோவில் பிரகாரத்தில் வைக்கிறார்கள்.சில நாட்களில் இப்பாதணிகள் பயன்படுத்தப்பட்டதைப் போல தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன.பெருமாளே இப்பாதணிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.அதனால் இவற்றைத் தங்கள் தலையிலும் உடம்பிலும் ஒற்றிக் கொள்கிறார்கள்.

Read More