திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

வள்ளாள மகாராஜாவிற்கு 680 ஆண்டுகளாக திதி கொடுத்து வரும் அண்ணாமலையார்

ஹொய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னன் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா ( கி.பி.1291-1343) . நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாளன் சிறந்த சிவபக்தர். அண்ணாமலையார் ஆலயத்துக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுரத்தை தனது ஆட்சிக்காலத்தில் நிர்மாணித்தார். கி.பி 16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அருணாச்சல புராணத்தில் இவரது சரித்திரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வள்ளாள மகாராஜாவிற்கு ஒரு பெரிய மனக்குறை இருந்தது. தான் கொஞ்சி மகிழவும், தனக்குப் பின் நாட்டை ஆளவும் ஒரு வாரிசு இல்லையே என்பதுதான் அது. ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அண்ணாமலையார், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சடங்குகளை செய்வேன் என்றார்.

கி.பி.1343ம் ஆண்டு தைப்பூசத்தன்று அண்ணாமலையார், திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோயிலுக்கு திரும்பிச் செல்லும் போது, பள்ளிகொண்டாபட்டு போர்க்களத்தில் வள்ளாள மகாராஜா வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு அண்ணாமலையார் மேளதாளங்கள் இன்றி, அமைதியாக கிரியை நடக்கும் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்குச் சென்று சடங்குகளை செய்து முடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை, அண்ணாமலையார், ஒவ்வொரு ஆண்டும் மகாராஜா உயிர் நீத்த 30ம் நாளான மாசி மகம் தினத்தன்று பள்ளிகொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.

மாசிமகத்தன்று, அண்ணாமலையார் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரைக்கு வருவார். அங்கு வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு 'சம்மந்தனூர்' என்ற பெயர் ஏற்பட்டது.

அரசனுக்குப் பிறகு இளவரசன் பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற மரபின்படி மறுநாள் அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையாருக்கு அரசராக முடி சூட்டப்படும் விழா நடத்தப்படடும்.

உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது.

வல்லாள மகாராஜா கோபுரம்

வல்லாள மகாராஜா

அண்ணாமலையார், வல்லாள மகாராஜாவுக்கு தீர்த்தவாரி செய்து, திதி கொடுக்கும் காட்சி (பள்ளிகொண்டாபட்டு கிராமம்)

Previous
Previous

பாமணி நாகநாத சுவாமி கோவில்

Next
Next

திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்