கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில்

திருமண வரம் வேண்டி அம்பிகைக்கு சாற்றப்படும் கண்ணாடி வளையல் மாலை

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில். திவ்ய தேசமான கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இத்தலம். இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவில் தொண்டை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கு இணையானது.

இத்தலத்து காமாட்சி அம்மன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் வலது கரத்தில் தாமரை மலரையும், மேல் இடது கரத்தில் அங்குசத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.

தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று வேண்டும் கன்னிப் பெண்களுக்கு, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் கருணை உள்ளம் கொண்ட தாயாக விளங்குகின்றாள் இத்தலத்து காமாட்சி அம்மன். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்று இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தங்கள் வேண்டுதலின் போது, அவர்கள் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அம்பிகையின் கழுத்தில் அணிவித்து வணங்குகிறார்கள். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கின்றனர். அவர்கள் கண்ணாடி வளையல் மாலை அணிவித்த 90 நாட்களுக்குள், அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி என்கிறார்கள் இத்தலத்து பக்தர்கள்.

குழந்தை பாக்கியம்

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகின்றது.

Read More
 பாபநாசம் ராமலிங்கசுவாமி  கோவில்

பாபநாசம் ராமலிங்கசுவாமி கோவில்

108 சிவலிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் தலம்

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ. தொலைவில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ளது ராமலிங்கசுவாமி கோவில். இறைவன் திருநாமம் ராமலிங்கசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி. ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த ராமலிங்கர். அதனாலேயே, ராமேசுவரம் போல் இங்கேயும் ராமலிங்கர் என்கிற பெயருடன் அருள்பாலிக்கிறார் சிவபிரான். ராமபிரானின் பாவம் நீங்கப் பெற்றதால் இத்தலத்திற்கு 'பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேசுவரம் என்ற பெயரும் உண்டு.

பொதுவாக சிவன் கோவில்களில் கருவறையில் ஒரு சிவலிங்கத்தை நாம் தரிசிக்க முடியும். ஒரு சில சிவாலயங்களில், பிரகாரத்திலும் மேலும் சில சிவலிங்கங்களை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில் மூலவர் ராமலிங்க சுவாமியின் வலப்புறம் உள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் மூன்று நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக 106 லிங்கங்கள் உள்ளன. இப்படி நீண்ட வரிசையில் அமைந்திருக்கும் சிவலிங்கங்களை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. 108 வது சிவலிங்கமான அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் மூலஸ்தான லிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாங்களே பூ தூவி வணங்கலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.

இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேசுவரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச் செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் 'ராமலிங்கசுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் 'அனுமந்தலிங்கம்' என்ற பெயரில் உள்ளது. ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேசுவரம் கோவில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னதி விமானம் காசி விசுவநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேசுவரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடுகின்றனர்.

பிரார்த்தனை

குடும்ப தோஷம், தொழிலில் தேக்கம், சுபகாரியத் தடைகள் உள்ளிட்ட கவலைகள் எதுவானாலும் அவற்றுக்கான பரிகாரமாக ஒரே வழிமுறை தான் இங்கு அனுசரிக்கப்படுகிறது. அதாவது இந்த ஆலயத்தை முழுமையாக 108 முறை வலம் வந்து வழிபடுவது தான்.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

நவக்கிரகங்கள் இல்லாத தஞ்சைப் பெரிய கோவில்

மாமன்னன் ராஜராஜ சோழன், 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் திராவிட கட்டிடக் கலையின் சிறப்புகளை உலகிற்கு உணர்த்தும் வரலாற்றுச் சின்னமாக திகழ்கின்றது. பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பல சிறப்பு அம்சங்கள் இக்கோவிலில் உள்ளன.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள், ஒரு பீடத்திலோ அல்லது தனி சன்னதியிலோ எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், பிற கோவில்களைப் போல் நவக்கிரகங்கள் அவைகளின் உருவில் இல்லாமல், கோயிலின் மேல் புற வட பகுதியில் லிங்க வடிவிலேயே காட்சி தருகின்றன. தமிழ்நாட்டில் கிரகங்கள் லிங்க வடிவில் காட்சி அளிப்பது இக்கோயிலில் மட்டுமே. மக்கள் தங்கள் குறைகளைக் களைய நவக்கிரகங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை இங்கு நவ லிங்கங்களுக்கு செய்து வழிபடுகின்றனர்.

Read More
தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்

தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்

சிற்பிகளின் கனவு என்று கருதப்படும் கோவில்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் ஒரு அரிய விருந்தாகும் ஐராவதேசுவரர் கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோவிலே ஐராவதேசுவரர் கோவிலாகும். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்குகின்றது.

நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்

தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியது தான், இக்கோவில். இருப்பினும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், வெண்கல வார்ப்பு இவையனைத்தும் இந்த கோவில் சோழ வம்சத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என எல்லாவகை அளவுகளிலும் சிற்பங்களைக் கொண்ட அதிசய கோவில் இது. சோழர்களின் போர் முறை, சிற்பம், ஆடல், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானவியல், ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் என அனைத்தையும் சிற்பங்களாக தன்னுள் வைத்திருக்கும் பிரமாண்ட ஆலயம் இது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோவில் இது.

இக்கோவிலை, கோவில் என்று சொல்வதை விட சிற்பக் கலைக்கூடம் என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோவில் இது. சிற்பிகள் தங்கள் திறமை முழுவதையும் காண்பித்து இந்த கோவில் தலத்தின் உள்ளும், புறமும் நிறைய சிற்பங்கள் படைத்துள்ளனர். தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோவில் கொண்டுள்ளது.

இசைப் படிகள்

நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சப்த ஸ்வரங்களை எழுப்பும் இந்த படிகள் மட்டுமின்றி, அங்கு இருக்கும் தூண்களும் தட்டும் போது, சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. இத்தூண்கள் வெவ்வேறு கனங்களில் இருக்கின்றன.

யானைகளும், குதிரைகளும் இழுத்துச் செல்லும் தேர் போன்ற மண்டபம்

ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும், குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில், யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

மற்ற கோவில்களில் காணப்படாத ஒரு சில சிற்பங்கள் இங்கு வடிவமைக்க பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோவில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

வெளிச் சுவர் சிற்பங்கள்

கோவிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவன், குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் ஆகும்.

வல்லுனர்களால், 'சிற்பிகளின் கனவு' என்று கருதப்படும் இந்த கோவில், சிற்பக் கலைஞர்களுக்கும், சிற்பக் கலை ரசிகர்களுக்கும் ஒரு அரிய விருந்தாகும்.

Read More
தென்குடி திட்டை  நவநீத கிருஷ்ணன்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில்

அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் செந்தூர நிறத்திற்கு மாறும் அபூர்வ ஆஞ்சநேயர்

தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில். இக்கோவில், தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் (குரு பரிகார தலம்) அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ராம பக்த காரிய ஆஞ்சநேயர், மிகவும் பிரசித்தி பெற்றவர். இத் தலத்தில், வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு இவர் காட்சி தருகின்றார். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் செந்தூர நிறத்திற்கு மாறுவதை காணலாம். அப்போது அவர் முகத்தில் ஓடும் நரம்புகளையும் நாம் தெள்ளத்தெளிவாக தரிசிக்க முடியும்.

வேண்டும் வரம் உடனடியாக அருளும் ஆஞ்சநேயர்

மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு, இந்த ஆஞ்சநேயரின் சன்னதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள், இனிதே நிறைவேறும். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நீண்ட நாட்களாக,நிறைவேறாமல் தடைபட்டு வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது. கோவிலில் நுழையும்போதே, ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்தி விடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.

Read More
காவலூர் சண்முகசுப்பிரமணியசுவாமி  கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

காவலூர் சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில்

திருச்செந்தூருக்கு இணையான திருப்புகழ் தலம்

தஞ்சாவூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில், பெருமாக்கநல்லூர் அருகே உள்ள காவலூர் கிராமத்தில் அமைந்துள்ளது சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான முருகன் கோவில்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர் இக்கோவில் முருகன் மீது திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு அருகில் ஓடும் வெட்டாறு, தெற்கில் இருந்து வடக்கு திசை நோக்கிப் பாய்வதால், உத்திர வாஹினி என்று கருதப்படுகிறது. எனவே இத்தலம் காசிக்குச் சமமாக கருதப்படுகிறது. அதனால் காசிக்குப் போக வேண்டாம், காவலூர் சென்றாலே போதும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

இந்தக் கோவில் மாடக்கோவில் வகையைச் சேர்ந்ததாகும். கோவிலை அடைவதற்கு 12 படிக்கட்டுகள் உள்ளன. இந்த 12 படிகள் 12 ராசிகளைக் குறிக்கும். கருவறையில் ஆறு முகங்களுடன் 12 கைகளுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக மயில் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள முருகன், திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார்.

பிரார்த்தனை

செவ்வாய் தோஷம் நீங்கவும், திருமண தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செவ்வாய் கிரகத்துக்கான தெய்வமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். திருக்கருகாவூர் கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் இக்கோவிலின் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். காசிக்கு இணையான தலம் என்பதால், இக்கோவில் பித்ரு தோஷ நிவர்த்திக்கும் புகழ்பெற்றது.

Read More
கும்பகோணம் ஏகாம்பரேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கும்பகோணம் ஏகாம்பரேசுவரர் கோவில்

சுமங்கலிகள் தங்கள் தாலியை அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் கோவில்

கும்பகோணம் நாகேஸ்வரன் கீழவீதியில் அமைந்துள்ளது ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. அம்பிகை ருத்திராம்சம் பொருந்தியவள் என்பதால், அம்பிகைக்கு முன் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கின்றது.

இக்கோவிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கிருக்கும் காளிகா பரமேஸ்வரி சன்னதியிலேயே கூட்டம் அலைமோதுகிறது.சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. கருவறையில், அசுரனை வதம் செய்யும் கோலத்தில் எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ காளியாக கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கிறாள். கத்தி, கேடயம் ஆகியவை கைகளில் உள்ளன. இந்த அம்மனுக்குத்தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் ராகு கால நேரத்தில் பரமேஸ்வரி அன்னைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரார்த்தனை

ராகு கால காளிகா பரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைய, கன்னிகா பரமேஸ்வரியை வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய்களால் அவதிப்படும் தங்கள் கணவர் குணமாக வேண்டும் என்று பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள். தங்கள் கணவர் குணமானபின், தாங்கள் வேண்டியபடி தங்கள் கழுத்திலுள்ள மாங்கல்ய நாணில் உள்ள தாலியையே கழற்றி உண்டியலில் போட்டு நன்றிக் கடன் செலுத்துகின்றனர். இப்படி தாலியையே அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் பழக்கம் இந்த கோவிலில்தான் இருக்கின்றது. குழந்தை பேறு வேண்டும் பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் வெள்ளியில் செய்த சிறிய தொட்டிலை உண்டியலில் செலுத்தி தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

Read More
தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோவில்

சக்கரத்தாழ்வார் மூலவராக எழுந்தருளி இருக்கும் அபூர்வக் கோவில்

தஞ்சை பெரிய கோவிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை மதன கோபாலப் பெருமாள் கோவில் என்றும்அழைப்பார்கள். எந்த ஒரு பெருமாள் கோவிலிலும் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் மூலவராக சக்கரத்தாழ்வார், சுதர்சன வல்லி, விஜயவல்லி என்ற இரு தாயார்களுடன் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் நரசிம்மர் இடம்பெற்றிருப்பார். ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார் மூலவராக அமைந்துள்ளதால், நரசிம்மர் அதில் இடம் பெறாமல், கோவில் ராஜ கோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடது புறத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக அமர்ந்துள்ளனர். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும் நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மூன்று சக்கரத்தாழ்வார்கள்

இந்த கோவிலில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த கோவிலில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் எழுந்தருளுவார்.

பிரார்த்தனை

இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் எனக் கருதப்படுகிறது. மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான 'ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நமஹ' என்ற காயத்ரி மந்திரத்தை, ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.

சக்கரத்தாழ்வாரைத் தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றும் அல்லது 9 வியாழக்கிழமைகள் அல்லது 9 சனிக்கிழமைகளில் 9 அகல் தீபம் ஏற்றி, 9 முறை வலம் வந்து சிலப்பு மலர்களால் மாலை சூட்டி, கற்கண்டு, உலர்ந்த திராட்சைகளை நிவேதனமாக வைத்து அரச்சனைகள் செய்து வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது இக்கோயிலின் ஐதீகம்.

முற்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் ஏற்படும் கெடுதிகள் யாவும் நீங்கும். நவக்கிரகத் தோஷப் போகும். திருமணத் தடைகள் விலகும்.

இவர், கல்வி தொடர்பான தடைகளை நீக்கிச் சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். மனச் சஞ்சலம், சித்தப் பிரமை, பேய் பிசாசு, பில்லி சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளிலிருந்து விடுபட செய்வார்.

Read More
தஞ்சாவூர் கோடியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தஞ்சாவூர் கோடியம்மன் கோவில்

சிவபெருமானை தன் தலையில் சூடியிருக்கும் கோடியம்மன்

தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோடியம்மன் கோவில். தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள்.

முன்னொரு காலத்தில், தற்போது கோடியம்மன் கோவில் இருக்கும் பகுதியானது தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. சிவபெருமானை வழிபட்ட தஞ்சன் என்ற அரக்கன் அவரிடம் பல வரங்களைப் பெற்றான். பின்னர் தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் முறையிட்டனர். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக ( (பவளம் – சிவப்பு நிறம்) மாறினாள். தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் காளியின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள். தஞ்சன் தான் இறக்கும் தருவாயில் தன் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று வரம் பெற்றான். அதன்படியே தஞ்சபுரி என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தஞ்சாவூர் என்றானது.

சிவனின் பிரதிநிதியாக வந்து அசுரனை அழித்ததால், கோடியம்மன் சிவபெருமானையே தனது தலையில் சுமந்து கொண்டாள். சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது போல, இந்த அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே இக்கோவிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரார்த்தனை

குழந்தைச் செல்வம் கிட்டவும், செய்வினை நீங்கவும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

காளியாட்டத் திருவிழா

மாசி கடைசி வாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்டத் திருவிழா என்கிறார்கள். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம். தஞ்சாவூர் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளன.

Read More
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ அர்த்தநாரீசுவரர்

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரரின் திருமேனி அற்புதமான கலையம்சம் கொண்டது. அர்த்தநாரீசுவரர் என்ற பெயரின் அர்த்தம் 'அரை பெண்ணாக இருக்கும் இறைவன்' என்பதாகும். அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு அமைந்த கோலம் தான் அர்த்தநாரீசுவரர். சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவமாகும்.

இக்கோவிலில் உள்ள அர்த்தநாரீசுவரர், மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோன்று நின்ற கோலத்தில் அல்லாமல் ரிஷபத்தின் மீது ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானது. ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு எந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சிக் கொடுக்கும் தோற்றமானது, அற்புதமான ஒன்றாகும். அர்த்தநாரீசுவரரின் இந்தத் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
தஞ்சை 24 பெருமாள்கள் கருட சேவை
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தஞ்சை 24 பெருமாள்கள் கருட சேவை

தஞ்சை வைகாசி திருவோண 24 பெருமாள்கள் கருட சேவை விழா

தஞ்சாவூர் மற்றும் அந்த ஊரைச் சுற்றிலும் சுமார் 24 பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் 24 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த கருடசேவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

தஞ்சை கொடிமரத்து மூலைக்கு அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலில் எழுந்தருளுவார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள், ஸ்ரீநரசிம்மர், மணிகுன்றப்பெருமாள், ஸ்ரீவேளூர் வரதராஜப்பெருமாள், ஸ்ரீகல்யாண வெங்கடேசர், கரந்தை ஸ்ரீயாதவக் கண்ணன், கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு ராஜவீதி ஸ்ரீகலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத் தெரு பஜார் ஸ்ரீராமசுவாமி, எல்லையம்மன் கோயில் தெரு ஸ்ரீஜனார்த்தனர், கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், மேலராஜவீதி ஸ்ரீவிஜயராமர், ஸ்ரீநவநீதகிருஷ்ணர், சகாநாயக்கன் தெரு ஸ்ரீபூலோகக் கிருஷ்ணர், மாச்சாவடி நவநீதகிருஷ்ணர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி, சுக்காந்திடல் ஸ்ரீலக்ஷ்மி நாராயணபெருமாள், கரந்தை வாணியத் தெரு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், கொல்லுப்பேட்டைத் தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆகிய கோயில்களில் இருந்து 24 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.

நவநீத சேவை

கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இதில் 15 பெருமாள்கள் கையில் வெண்ணை குடத்துடன், நவநீத அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.

Read More
மகாலிங்கேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

மகாலிங்கேசுவரர் கோவில்

தலைமைச் சிவாச்சாரியாராகத் திகழும் ஆண்ட விநாயகர்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர்.

மூலவர் மகாலிங்கப் பெருமான் சன்னிதிக்கு தென்பகுதியில் ஆண்ட விநாயகர் சன்னிதி உள்ளது. இவர் வடக்கு திசை நோக்கி, மகாலிங்கப் பெருமானைப் பூஜிக்கும் நிலையில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார்.

இவர் தேவகணங்கள் கொண்டு வந்து கொடுக்கும் பூஜைப் பொருட்களைக் வைத்து, பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானைப் பூஜித்து வருகிறார். மேலும் இந்த இடத்தில் இருந்து தனது அருட்சக்தியால், பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான், 'ஆண்ட விநாயகர்' என்னும் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.

இந்த ஆண்ட விநாயகர்தான் தினம் ஆறு காலம் மகாலிங்கப் பெருமானை அர்ச்சித்து பூஜை செய்து வருகிறார். எனவே இத்தலத்து தலைமைச் சிவாச்சாரியாராக, இவர் கருதப்படுகிறார். மற்ற சிவாச்சாரியார்கள் எல்லாம் இவருடைய உதவியாளர்களாகவே கருதப்படுகின்றனர்.

பொதுவாக சிவாலயங்களில், சிவாச்சாரியார், தான் முதலில் ஸ்நானம் செய்துவிட்டு, அதன் பிறகு இறைவனுக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனைகளைச் செய்வார். மேலும் சிவாலயங்களில் விநாயகருக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனை ஆன பிறகுதான் அவையெல்லாம் சுவாமிக்கு நடைபெறும். ஆனால் இத்தலத்தில் ஆண்ட விநாயகருக்கு முதலில் அபிஷேகம் மட்டும் நடைபெறும். இது சிவாச்சாரியார் பூஜை செய்வதற்கு முன் செய்யும் ஸநானத்திற்கு ஒப்பானது. அதன் பின்னர் கோவில் சிவாச்சாரியார் ஆண்ட விநாயகரின் கைகளில் இருக்கும் தர்ப்பையைப் பெற்றுக் கொண்டு, சுவாமி சன்னதிக்குச் சென்று ஆண்ட விநாயகர் சார்பாக சுவாமிக்கு அபிக்ஷேகம், நைவேத்தியம், தீபாராதனை செய்வார். இவ்விநாயகர் தன் கைகளில் பாசாங்குசத்திற்குப் பதிலாக தர்ப்பை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகம விதிப்படி, சுலாமிக்குச் செய்த நைவேத்தியத்தின் ஒரு பகுதி சிவாச்சாரியருக்கு உரியதாகவும், அவருக்கு உணவாகவும் ஆகிறது. அதன்படியே மகாலிங்கப் பெருமானுக்கு சமர்பிக்கப்பட்ட நைவேத்தியத்தின் ஒரு பகுதி ஆண்ட விநாயகருக்கு நைவேத்தியமாகிறது.

ஆண்ட விநாயகரின் தலைமைச் சிவாச்சாரியார் என்ற பொறுப்பிற்கு ஏற்ப, கோவில் திருவிழாக்களின் கொடியேற்றத்தின்போது முதல் கொடியேற்றம் அவர் உற்சவ மூர்த்தியின் முன்னிலையில் நடைபெறுகிறது. அதுபோல, சந்திரசேகர், சுப்பிரமணியர் முதலியோரின் வீதிப்புறப்பாட்டின்போதும் இவர் உடன் செல்வார்.

Read More
கஜேந்திரவரதன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கஜேந்திரவரதன் கோவில்

இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்த திவ்ய தேசம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் கபிஸ்தலம். இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்தது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

Read More
எழுத்தறிநாதர் கோவில்

எழுத்தறிநாதர் கோவில்

கல்வியில் முதன்மை பெறச் செய்யும் தேவாரத்தலம்

கும்பகோணத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தேவாரத்தலம், இன்னம்பூர். இங்குள்ள சிவனின் திரு நாமம் எழுத்தறிநாதர். சரிவரப் பேச முடியாதவர்கள், பாடுவதற்கு நல்ல குரல் வளம் வேண்டுவோர் இத்தலத்திர்கு வந்து இறைவன் எழுத்தறிநாதரை தரிசனம் செய்கிறார்கள். கோயில் அர்ச்சகர் தேனை பூவால் தொட்டு நாக்கில் தடவுகிறார். தேன் நாம் கொண்டு செல்ல வேண்டும். எழுத்தறிநாதரின் அருளால் நலம் அடைந்து, நல்ல குரல் வளம் பேச்சு வளம் பெற்றுச் செல்கின்றனர்.தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் அகத்திய முனிவர். அவருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Read More
யோகநந்தீசுவரர் கோவில்

யோகநந்தீசுவரர் கோவில்

நந்திதேவர், கொடிமரம் வித்தியாசமான நிலையில் அமைந்திருக்கும் தேவாரத்தலம்

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் திருவிசநல்லூர். இறைவன் பெயர் யோகநந்தீசுவரர். இவர் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் இவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன. பொதுவாக எல்லா கோவில்களிலும் ராஜகோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்தவுடன் முதலில் கொடி மரம் இருக்கும். பின்னர் பலிபீடம், நந்தி அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில், நந்தி முதலில் இருக்கும். மேலும் நந்தி தேவர் ஒரு கால் எடுத்து எழுந்த பாவனையிலும், திரும்பி வாசலைப் பார்த்த நிலையிலும் இருப்பார்.ஒரு சமயம் பெரும் பாவங்கள் செய்த ஒருவன், தன் விதிப்படி மரணிக்க வேண்டிய தினத்தன்று, இக்கோவில் வாசலில் நின்று இறைவனை அழைத்தான்.அப்போது சிவபெருமான் நந்திதேவரிடம் வாசலில் நிற்பது யார் என்று கேட்டார். நந்திதேவர் வாசலை நோக்கி திரும்பி வந்தவனை பார்த்தார். அன்று பிரதோஷ தினமாக இருந்ததாலும், நந்திதேவர் பார்வை பட்டதாலும் உடனே அவன் பாவங்கள் தொலைந்தன.அதே சமயம் விதிப்படி அந்த மனிதனின் உயிரை பறிக்க எமன் வந்தான். நந்திதேவர் எமனை கொடிமரத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தி சண்டையிட்டு வெளியேற்றினார். இதனால்தான் நந்திதேவர் இக்கோவிலில், வேறு எந்த தலத்திலும் காணமுடியாத, மாறுபட்ட நிலையில் அமைந்திருக்கிறார்.

ரிஷப ராசிக்காரரர்களின் பரிகார தலம்

இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப ராசிக்காரரர்களின் (கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம்) பரிகார தலமாக விளங்குகிறது. இவரை பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபடுவது சிறப்பு.

சூரிய ஒளி கடிகாரம்

கோவிலின் அம்மன் சன்னதிக்கு எதிரில், சுமார் 700 ஆண்டுகள் பழைமையான சோழர் கால சூரியஒளி கடிகாரம் அமைந்துள்ளது. இச்சுவர்க் கடிகாரம் சூரிய ஒளி முள்ளின் மீது ஏற்படுத்தும் நிழலின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சூரியனின் இயக்க அடிப்படையில் கணக்கிட்டு இக்கடிகாரம் நேரத்தை காட்டுகின்றது. கிரானைட் கல்லில் அரைக்கோள வடிவில் dial pad செதுக்கப்பட்டுள்ளது. நடுவில் பித்தளையால் செய்யப்பட்ட ஆணி செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் நிழல் இந்த ஆணியில் பட்டு நிழல் எந்த புள்ளியில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும்.

.கார்த்திகை மாத அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கும் அதிசயம்

இத்தலத்தில் சுமார் 370 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள். சிறந்த சிவபக்தர். இவர் கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர். இன்றளவும், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் வாழ்ந்த வீட்டின் கிணற்றில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை பொங்கி எழுந்தருளுகிறாள். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆச்சரியமான நிகழ்வுக்கு பின்னால் இறையருளின் மகத்துவம் இருக்கின்றது. ஸ்ரீதர அய்யாவாள் தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு உணவளிப்பதற்காக அந்தணர்களை எதிர்பார்த்து தன் வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து பசியால் துடிப்பதாக சொன்னார். உடனே அந்தணர்கள் உண்பதற்காக வைத்திருந்த உணவை அந்த தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார். சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை அய்யாவாள் மீறியதால், அந்தணர்கள் வெகுண்டனர் ஸ்ரீதர அய்யாவாள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக கங்கையில் நீராடி விட்டு வந்தால்தான் அவர்களால் திதி கொடுக்க முடியும் என்றனர். சிவபக்தரான ஸ்ரீதர அய்யாவாள் இறைவனைமனம் உருக வேண்டி, கிணற்றடியில் நின்றபடி கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கிணற்றில் கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி, வழிந்து, அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர். இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, அய்யாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

Read More